தேவையானப் பொருள்கள்:
ரவை_ஒரு கப்
சேமியா_2 கப்
சின்ன வெங்காயம்_7 லிருந்து 10 க்குள்
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1 (சிறியது)
இஞ்சி_ஒரு சிறு துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
கறிவேப்பிலை
செய்முறை:
பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
கேரட்டை சிறுசிறு நீளத்துண்டுகளாகவும்,வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும்,மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு ரவையைக் கொட்டி சூடு வர வறுத்து தனியாக வைக்கவும்.எண்ணெய் விடுவது ரவையைத் தண்ணீரில் கொட்டிக் கிளறும்போது கட்டி தட்டாமல் இருக்கத்தான்.
அடுத்து அதே வாணலியில் சேமியாவைப்போட்டு சிறிது சூடு வர வறுத்துக்கொண்டு,இதையும் தனியாக வைக்கவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் வதக்கவும்.அடுத்து இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.அடுத்து கேரட்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டேகால் பங்கு என தண்ணீர் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் போட்டு கொதி வரும் வரை மூடி வைகவும்.
கொதி வந்ததும் சேமியாவைப் போட்டுக் கிளறவும்.அது பாதி வெந்து வரும்போது ரவையை சிறிது சிறிதாகக் கொட்டி whisk ஆல் விடாமல் கிண்ட வேண்டும்.அப்போதுதான் கட்டித் தட்டாமல் வரும்.எல்லா ரவையையும் கொட்டிக் கிளறிய பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி இறக்கவும்.
சேமியா பாதி வெந்த பிறகுதான் ரவையைச் சேர்க்க வேண்டும்.இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் ரவை வெந்து சேமியா வேகாமல் போகும்.
உப்புமா வகைகளுக்கேயுரிய தேங்காய் சட்னிதான் இதற்கும் பொருத்தமாக இருக்கும்.
மறுமொழி இடுக