இக்குழம்பை வெறும் உருண்டைகள் மட்டுமே சேர்த்து செய்வார்கள்.நான் ஒரு கைப்பிடி பச்சைப் பட்டாணியை சேர்த்து செய்துள்ளேன்.சுவையில் வித்தியாசம் ஏதும் தெரியவில்லை.
வெறும் துவரம்பருப்பிலோ அல்லது கடலைப் பருப்பிலோ அல்லது இரண்டும் சேர்த்தோ செய்யலாம்.
உருண்டைகளை எண்ணெயில் பொரித்து சேர்த்தால் கொஞ்சம் soft ஆக இருக்கும்.எண்ணெயில் பொரித்த குழம்பை கீழே சேர்த்துள்ளேன்.
ஆவியில் வேக வைத்து சேர்த்தால் கொஞ்சம் hard ஆக இருக்கும்.
உருண்டை செய்யத் தேவையானவை:
துவரம் பருப்பு_1/2 கப்
காய்ந்த மிளகாய்_1 (அ) 2
பூண்டு_ஒரு பல்
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு
செய்முறை:
துவரம் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு ஊற வைக்கவும்.குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊறவேண்டும்.
நன்றாக ஊறிய பிறகு தண்ணீர் இல்லாமல் வடித்துவிட்டு அதனுடன் மிளகாய்,பூண்டு,பெருஞ்சீரகம் சேர்த்து மிக்ஸியில் போட்டு வடைக்கு அரைப்பதுபோல் அரைக்கவும்.
பிறகு மாவை வழித்து அதனுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்துப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து அதில் இந்த உருண்டைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.(வடை சுடுவதுபோல்)
அல்லது பொரிப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைப்பதானால், இட்லிப் பாத்திரத்தில் உருண்டைகளை வைத்து இட்லி அவிப்பதுபோல் அவித்தெடுக்கவும்.
குழம்பு செய்யத் தேவையானவை:
சின்ன வெங்காயம்_10
தக்காளி_2
பச்சைப் பட்டாணி_ஒரு கைப்பிடி
இஞ்சி_சிறிது
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
தேங்காய் பத்தை_2
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
சீரகம்
முந்திரி_5
செய்முறை:
முதல் நாளிரவே பட்டாணியை ஊறவைத்துவிடவும்.
வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,தக்காளி இவற்றில் பாதியைப் போட்டு வதக்கி,ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு,வெங்காயம்,இஞ்சிபூண்டு,தக்காளி,பச்சைப் பட்டாணி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள வெங்காயம்,தக்காளி கலவையை சேர்த்து வதக்கவும்.
இவை நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி,போதுமானத் தண்ணீர் சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் உருண்டைகளை சேர்த்து,அடுப்பை மிதமானத் தீயில் வைக்கவும்.
உருண்டைகள் ஏற்கனவே வெந்திருப்பதால் உடைந்து போகாது.
மசாலா எல்லாம் கலந்து நன்றாகக் கொதித்தபின் தேங்காயை அரைத்து ஊற்றவும்.
அடுத்து ஒரு கொதி வந்ததும் கொத்துமல்லி இலை,எலுமிச்சை சாறு விட்டு இறக்கவும்.
இது சாதம்,சப்பாத்தி,நாண் இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.
மறுமொழி இடுக