எங்கள் வீட்டு கொல்லியில் அப்போது சிறியதும்,பெரியதுமாக இரண்டு எலுமிச்சை மரங்கள் இருந்தன.நிறைய காய்கள் காய்க்கும்.பழங்களை பறித்து வந்து ஊறுகாய் போடுவாங்க,அக்கம்பக்கம்,எதிர்த்தவீடு என எல்லோருக்கும் கொடுப்பாங்க. கிராமத்தில் பெரும்பாலும் எல்லாப் பொருள்களையும் இப்படித்தான் பறிமாறிக் கொள்வார்கள்.
யாரும் யாரிடமும் காசு கொடுத்து வாங்குவது கிடையாது.யார் வீட்டில் என்ன அறுவடை என்றாலும் உறவுகள், தெரிந்தவர்கள் (ஊர் முழுவதுமே தெரிந்தவர்கள்தான்) என எல்லோருக்கும் கொடுத்தனுப்புவார்கள்.இப்போது இதெல்லாம் இருக்கிற மாதிரி தெரியவில்லை.
எங்கள் ஊரில் பங்குனி உத்திரம் சிறப்பாக,வெகு விமரிசையாக நடைபெறும். நல்ல வெயில் நேரத்தில் காவடி எடுத்து வருவார்கள்.அந்த சமயம் எங்கள் வீட்டில் நிறைய எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து பானகம் செய்து இரண்டுமூன்று பெரியபெரிய அண்டாக்களில் ஊற்றி வைத்து காவடி எடுத்து வருகிற எல்லோருக்கும் கொடுப்பாங்க.அதென்னமோ அன்றுமட்டும் எனக்கு அந்த பானகம் சூப்பர் சுவையாக இருப்பதுபோல் தெரியும்.
நான் எப்போது பானகம் செய்தாலும் இந்த நினைவு வராமல் போகாது. இவை ஆரம்பப் பள்ளி நாட்கள்தான் என்றாலும் இன்னும் பசுமை மாறாமல் இருப்பதுதான் அதன் சிறப்பு.
இன்று இவர் லன்சுக்கு வெளியில் (பிடிக்காமல்தான், வேறு வழியில்லை) சாப்பிடப் போயிருக்கிறார்.நானும் பொண்ணும் மட்டுமே வீட்டில். சாப்பாட்டு வேளையெல்லாம் தலைகீழாகிவிட்டது. இந்த மதிய நேரத்தில் பானகம் போட்டு குடிச்சாச்சு. ம்ம்ம்..சாப்பாடு?…இரண்டு மணிக்குமேல் ஆப்பம் & தேங்கய்ப்பால். மாலைதான் ஃபுல் மீல்ஸ். அதுவரை எஞ்ஜாய் சித்ரா!
நினைவுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு பானகம் செய்வதைப் பார்ப்போமே! படத்திலுள்ள பழத்தில் அந்தளவிற்கு புளிப்பு இருக்காது.எனவே ஒரு பழத்தில் இரண்டு க்ளாஸ் பானகம் செய்தேன்.நம்ம ஊர் பழம் என்றால் புளிப்பு அதிகமாக இருக்கும்.அதனால் புளிப்புக்குத் தகுந்தாற்போல் வெல்லம் & தண்ணீரின் அளவைக் கூட்டிக்கொள்ளவும்.
நான் சேர்த்திருப்பது வெள்ளை வெல்லம் என்பதால் பானகத்தின் நிறம் ப்ரௌன் நிறத்தில் இல்லாமல் கம்மியாக உள்ளது.சாதாரண வெல்லம் அல்லது பனை வெல்லம் சேர்த்தால் சூப்பர் நிறத்தில் இருக்கும்.
தேவையானவை:
எலுமிச்சம் பழம்_ 1
வெல்லம் / பனை வெல்லம் _ ஒரு துண்டு
தண்ணீர்_ இரண்டு டம்ளர் அளவிற்கு
சுக்குத்தூள்_ ஒரு துளிக்கும் குறைவாக
ஏலக்காய் தூள்_ துளிக்கும் குறைவாக
உப்பு _ துளிக்கும் குறைவாக (சும்மா பெயருக்குத்தான், சுவைக்கூட்ட)
செய்முறை:
எலுமிச்சம் பழத்தை விதைகள்,திப்பி இல்லாதவாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும்.
வெல்லத்தைப் பொடித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்து கல், மண் இல்லாமல் வடிகட்டிக்கொள்ளவும்.
இந்த வெல்லத் தண்ணீரில் சுக்குத்தூள்,ஏலத்தூள்,உப்பு,எலுமிச்சை சாறு விட்டு காஃபி ஆத்துவதுபோல் ஆத்தி இரண்டு டம்ளர்களில் ஊற்றி சுவைத்து குடிக்க வேண்டியதுதான்.
வெயிலுக்கு சுகமாக இருக்கும்.
3:05 பிப இல் ஜூலை 2, 2013
Superb! Enjoy the day Chitra Akka! Will come back in the evening! 🙂
10:10 முப இல் ஜூலை 3, 2013
நன்றி மகி,நேற்று ஜாலியாதான் போச்சு.
12:19 பிப இல் ஜூலை 4, 2013
சமையல் இல்லன்னாலே அது ஒரு சந்தோஷம்தான்! 🙂 பானகம் பார்க்கவே நல்லா இருக்கு. என்னிடம் சுக்குப் பொடி இல்லை, அது இல்லாம செய்தா எப்படி இருக்கும் சித்ராக்கா? இப்பல்லாம் ரெசிப்பிகளைப் பார்க்கும்போது டிரை பண்ணனும்னு நினைக்கிறேன்……..ன்ன்ன்…ன்! ஆனா செய்யறதுக்கு முடியறதே இல்லை! யாராச்சும் செஞ்சு குடுத்தா ஒரு கை பார்த்துருவேன்! 😉
7:50 பிப இல் ஜூலை 4, 2013
ஆமால்ல! சில நாட்கள்ல ரொம்பவே போரடிக்குது.வெளியில வாங்கவே கூடாதுன்னு சபதம் எல்லாம் போட்டுட்டு அன்று மாலையே வாங்கிவிடுவதுனு வாரத்துல ரெண்டுநாட்கள் இப்படித்தான் போகுது.
சுக்குபொடி,ஏலக்காய் இல்லாட்டியும் பரவால்ல ஒன்றும் தெரியாது.இதன் வாசனையெல்லாம் வராத அளவுக்குதான் நான் போடுவேன்.போட்டேன் எனத் தெரிந்தால் இவங்க குடிக்கமாட்டாங்க.பனைவெல்லம் இருந்தா போடுங்க,இன்னும் நல்லாருக்கும்.
“யாராச்சும் செஞ்சு குடுத்தா ஒரு கை பார்த்துருவேன்”___கேட்டுட வேண்டியதுதானே.காஃபி எல்லாம் போடத் தெரிஞ்சவங்களுக்கு (உதவி:அரட்டை) இதெல்லாம் சும்மா மகி.இனியும் வெயிட் பண்ணாம ஒரு கை பார்த்துடுங்க.
7:36 பிப இல் ஜூலை 2, 2013
இனிய நினைவுகளுடன் சுவையான பானகம்… வாழ்த்துக்கள்… நன்றி…
10:11 முப இல் ஜூலை 3, 2013
வருகைக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
8:23 பிப இல் ஜூலை 2, 2013
உங்கள் பானகம் எனக்கும் இனிய பழைய நினைவுகளை மலர்வித்தது .
நன்றி சித்ரா.
10:12 முப இல் ஜூலை 3, 2013
பானகத்தில் உங்களுக்கும் மலரும் நினைவுகளா!அப்படின்னா ஒரு பதிவில் உங்கள் நினைவுகளையும் எழுதிடுங்க.நன்றிங்க.
3:38 முப இல் ஜூலை 3, 2013
thank you mam, your receipe is very very tasty. paneer & peas very nice. i want chiken & mutton biriyani receipe and measurements.
10:29 முப இல் ஜூலை 3, 2013
pushpavani,
உங்களின் முதல் வருகைக்கு நன்றிங்க.சிக்கன் பிரியாணி இங்க இருக்கு. ஆனால் மட்டன் பிரியாணி இப்போது சமைப்பதில்லை.மீண்டும் நன்றிங்க.
2:02 பிப இல் ஜூலை 6, 2013
//“யாராச்சும் செஞ்சு குடுத்தா ஒரு கை பார்த்துருவேன்”___கேட்டுட வேண்டியதுதானே.காஃபி எல்லாம் போடத் தெரிஞ்சவங்களுக்கு (உதவி:அரட்டை) இதெல்லாம் சும்மா மகி.இனியும் வெயிட் பண்ணாம ஒரு கை பார்த்துடுங்க.// ஹ்ஹாஹா! 😀 சூப்பர் ஐடியா! லெமன் ஜூஸ் எல்லாம் நல்லாவே செய்வார் சித்ராக்கா, ஆனா பானகத்தில வெல்லத்தை கரைச்சு வடிகட்டி…இப்படி நிறைய க்ரிட்டிகல் டாஸ்க்ஸ் இருக்கே! 😉 எதுக்கும் ரிக்வஸ்ட் போட்டுப் பார்க்கிறேன். தேங்க் யூ! 🙂
3:24 பிப இல் ஜூலை 8, 2013
இந்நேரம் பானகத்தை ஒருகை பார்த்திருப்பீங்க என்ற நம்பிக்கையில் சித்ரா.
1:24 முப இல் ஜூலை 8, 2013
பானகம் ரொம்ப சுவை, சித்ரா.
எங்கள் ஊரில் ஸ்ரீராம நவமி அன்று ஒவ்வொரு தெரு முனையிலும் பானகமும், நீர் மோரும் கொடுப்பார்கள், நீங்கள் சொன்னதுபோல பெரிய பெரிய அண்டாக்களில் வைத்திருப்பார்கள். கொஞ்சம் கூட வெட்கப்படாமல் போய் சாப்பிட்டுவிட்டு வருவேன். இங்கு வந்த புதிதில் இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம்!
விளாம்பழம், கிர்ணி பழம் ஆகியவைகளையும் நன்கு மசித்து இந்தப் பானகத்தில் சேர்ப்பார்கள். ஐயோ! இப்பவே மறுபடி சாப்பிட வேண்டும்போல இருக்கு.
உங்களுடைய பானகம் செய்முறை படித்தவுடன் பழைய நினைவுகள்.
இங்கு கூட நாம் நாட்டு சர்க்கரை என்று சொல்வோமே அதுபோல இருக்கும் தூள் வெல்லம் சேர்க்கிறார்கள். ரொம்ப ருசி!
3:39 பிப இல் ஜூலை 8, 2013
பெருமாள் கோயில் பிரசாதம்போல (சொல்லுவாங்க, நான் சாப்பிட்டதில்லை) விசேக்ஷங்களில் அதற்கென்று செய்யும்போது பிரத்தியேக சுவை வந்துவிடும் போல.
இங்கு கிர்ணி பழம் நிறைய கிடைக்கும்.விளாம்பழம் கிடைக்காது.அடுத்த தடவ செய்யும்போது கிர்ணியையும் சேர்த்து செய்கிறேன்.
“கொஞ்சம் கூட வெட்கப்படாமல் போய் சாப்பிட்டுவிட்டு வருவேன்”____ நானும் இப்படித்தான்.எங்கள் தெருவில் உள்ள அம்மனுக்கு கொழுக்கட்டை,புட்டு, சுண்டல் படையல் செய்து எல்லோருக்கும் கொடுப்பார்கள்.அந்த சமயம் கோவிலில் இருந்தால் நானும் வாங்கி சாப்பிட்டு விட்டுத்தான் வருவேன்.அதன் சுவை அலாதியானது.
நான் எங்கம்மாவிடம் வந்து சொன்னால் ‘ஒன்னுரெண்டு கொடுத்தால் அப்படித்தான் தெரியும்,வீட்டில் நிறைய இருந்தால் பிடிக்காது’ன்னு.பிறகு அவங்களே சொல்லுவாங்க,’சாமிக்கு செய்யும்போது சுவை கூடும்’னு.
1:12 முப இல் ஜூலை 12, 2013
குறைந்த வயிற்றிற்கு, கொள்ளும்,பலாக்காயும், நிறைந்த வயிற்றிற்கு,நீர்மோரும் பானகமும் என்று வசனம் உண்டு. ஸுமங்கலிப் ப்ரார்த்தனைகளின் போது, சாப்பிட்டு முடித்த பின்னர்
நீர்மோரும்,பானகமும் யாவருக்கும் கொடுப்பார்கள்.
எவ்வளவு ஹெவியான சாப்பாடானால்க் கூட ஜீரணித்துவிடும் சக்தி
பானகத்திற்கு உண்டு.
ஷீரடி ஸாயிபாபாவிற்கு வியாழக்கிழமைகளில் பானகம் நிவேதநம் என்று ஸாயங்காலம், பிள்ளைகளைக் கூப்பிட்டுக் கொடுப்பார்கள்
அக்ஷயதிருதயை,ராமநவமி, இதெல்லாம் பானக நாட்களே.
ஏலக்காய்,சுக்கு மணத்துடன் எலுமிச்சை வாஸனையுடன் பானகம்
படுஜோர். நன்ராக குடித்தாகிவிட்டது.அன்புடன்
7:46 பிப இல் ஜூலை 12, 2013
காமாக்ஷிமா,
பழமொழி நல்லாருக்கு.பானகம் செய்ய வேண்டிய நாட்களை உங்கள் பின்னூட்டத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்.மனதளவில் குடித்துப் பார்த்து,பாராட்டும் தெரிவித்ததற்கு நன்றிமா.அன்புடன் சித்ரா.
10:13 பிப இல் பிப்ரவரி 24, 2014
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்… நன்றி…
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : கல்யாணம் ஆகாதவர்களுக்கான பதிவு!
9:26 முப இல் பிப்ரவரி 25, 2014
பானகத்தை வலைசரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு வாழ்த்துக்கள் சித்ரா. ரொம்ப லேட்டாக வாழ்த்து சொல்கிறேன் . மன்னித்துக் கொள்ளுங்கள் சித்ரா.
6:35 பிப இல் பிப்ரவரி 25, 2014
ஓ, அப்படியா ! இதோ போய் பார்க்கிறேன். மன்னிப்பெல்லாம் எதற்குங்க. தெரியப்படுத்தியதற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
5:31 முப இல் திசெம்பர் 8, 2015
நன்றி… பானக செய்முறைக்கும் இனிய சுவைக்கும்