பருப்புடன் கீரையின் சுவையைப் போலவே புளியுடன் சேர்த்து செய்யும்போதும் சுவையாகவே இருக்கும்.
கொல்லியில் இருந்து எடுத்து வரும் கலவைக் கீரையில் இதுவும் ஒரு பங்கு இருக்கும். கலவை கீரையை புளி சேர்த்துதான் கடைவார்கள். முன்னெல்லாம் கிராமத்தில் பருப்பு வாங்க முடியாததாலோ என்னவோ, முருங்கை போன்ற ஒரு சிலவற்றைத் தவிர எந்தக் கீரையாக இருந்தாலும் இப்படித்தான் செய்வார்கள்.
அதைப் போலவேதான் இதையும் செய்தேன், சூப்பராகவே இருந்தது.
சேர்க்க வேண்டிய பொருட்களைக் கொடுத்துள்ளேன். அளவுகளை எல்லாம் உங்கள் சுவைக்கேற்ப கூட்டிக் குறைத்து சேர்த்துக்கொள்ளவும்.
தேவையானவை:
பருப்பு கீரை _ சிறு கட்டு
சின்ன வெங்காயம் _ 5
தக்காளி _ 1
முழு பூண்டு _1
புளி _ சிறு கோலி அளவு
பச்சை மிளகாய் _ 1
தாளிக்க :
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு _ நான்கைந்து
சீரகம்
காய்ந்தமிளகாய் _ 1
பெருங்காயம்
செய்முறை :
கீரையை ஆய்ந்து நீரில் அலசி எடுத்து வைக்கவும்.
ஒரு கனமான சட்டியில் 1/2 கப் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி கொதி வந்ததும் வெங்காயம், தக்காளி, இரண்டு பூண்டுப்பல், பச்சை மிளகாய், புளி இவற்றையெல்லாம் போட்டு மீண்டும் கொதி வந்ததும் கீரையைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
கீரை சீக்கிரமே வெந்துவிடும். குழைய வேண்டாம்.
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளித்து, எண்ணெய் நீங்கலாக மீதியைக் கீரையில் கொட்டவும்.
அந்த மீதமான எண்ணெயில் மீதமுள்ள பூண்டு பொடியாகவோ அல்லது தட்டிப்போட்டோ நன்றாக வதக்கிக் கீரையில் கொட்டி ஆறியதும் மிக்ஸியில் போட்டு மைய மசிக்காமல் ஓரளவுக்கு மசித்துக்கொள்ளவும்.
சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். துவையல் மாதிரி தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.