தினை அதிரசம்

20150915_161044

எங்கள் ஊரில் அதிரசம் இல்லாமல் தீபாவளி இருக்காது. அதிலும் தினை அதிரசம்தான் செய்வார்கள். அப்போதெல்லாம் இதை செய்வது மிகப் பெரிய வேலை. இப்போதுபோல் தோல் நீக்கிய தினை கிடைக்காது.

பம்ப்செட் இல்லாதவர்கள், தங்கள் நிலத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால் சும்மா மானாவாரியாக தினையை விதைத்து அறுவடை செய்திருப்பார்கள். தீபாவளி சமயத்தில் அதிரசம் செய்யவேண்டி அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவர்கள் வீட்டை நோக்கிப் படையெடுப்பார்கள்.

அதை வாங்கிவந்து உரலில் போட்டு மாங்குமாங்குனு குத்தி தோலை நீக்கி, (இதற்கு ஏழு தோல் இருக்குமாம், சொல்லுவாங்க) ஊறவச்சு, பிறகு குத்தி குத்தி சலித்து மாவாக்கி, வெல்லபாகு வச்சு கிண்டி, அதிரசம் செய்வாங்க.

தினையை நாங்களும் குத்தியே தீருவோம்னு நானும் என் தம்பியும் விழுந்து & புரண்டு அழுததையெல்லாம் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

அரிசி போல் இல்லாமல் தினையில் செய்யும்போது கொஞ்சம் சாஃப்டா, பொலபொலனு இருக்கும். இதுல செஞ்சாதான் தீபாவளி தீபாவளியா தெரியும்.

நாட்கள் செல்லச்செல்ல எல்லோரது வீட்டுக்கும் வந்த மருமகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக தினையிலிருந்து அரிசிக்குத் தாவிவிட்டனர்.

சின்ன வயசுல தினையைப் பார்த்ததோடு சரி, மறந்தே போயிட்டேன். இங்கு வந்த புதுசுல இந்த ஊர் கடையில் தானியங்கள் இருக்கும் பகுதியில் தினை மாதிரியே ஒன்று இருக்கவும் வாங்கி வந்து அதிரசம் சுட்டுப் பார்த்தேன், வரவில்லை. பிறகுதான் தெரிந்தது அது கஸ்கஸ் என்று :)))) இந்த பெயரில் இப்படி ஒன்று இருப்பதே அப்போதுதான் தெரியும் !

20150918_142039

நீண்ட நாட்களாகவே சிறுதானியங்களைத் தேடிக்கொண்டே இருந்தேன். இப்போது இங்குள்ள ஒரு கடையில் எல்லா சிறுதானியங்களும் கிடைக்கிறது. அதில் தினை இருக்கவும் வாங்கிவந்து அதிரசம் சுட்டுப் பார்த்தேன், நன்றாக வந்துள்ளது. நீங்களும் ஒன்று எடுத்து சாப்பிட்டுப் பாருங்க !

20150915_163204

தேவையானவை:

தினை _ 2 கப்

வெல்லம்_ சுமார் 2 கப் அல்லது வெல்லத்தின் இனிப்புக்கேற்ப‌

ஏலக்காய் _1

உப்பு _ துளிக்கும் குறைவாக. ருசியைக்கூட்ட போடுகிறோம். விருப்பமில்லை என்றாலும் பரவாயில்லை.

எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

மாவு தயாரிப்பது, செய்முறை எல்லாமும் அரிசிமாவு அதிரசம் மாதிரியேதான்.

தினையை நன்றாகக் கழுவி ஊற வைக்கவும்.

ஊறியதும் நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு ஈர மாவாக மைய பொடித்துக்கொள்ளவும். இப்போதே ஏலக்காயையும் சேர்த்து பொடித்துக்கொள்ளலாம்.

ஒரு கெட்டியான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.

வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு & மண் போக வடிகட்டியில் வடிகட்டி மீண்டும் பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும்.

வெல்லம் கொதித்து கெட்டிப் பாகாக வரும்போது ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் விட்டு, ஒரு துளி பாகை அதில் விட்டு கையால் உருட்டினால் கரையாமல் கெட்டியாக உருட்ட‌  வர‌வேண்டும்.

அந்த நேரத்தில் அப்பாகை எடுத்து தினை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டிக்காம்பால் அல்லது மத்தின் அடிப்பகுதியால் விடாமல் கிண்ட வேண்டும். ஊற்றும்போது கவனம் தேவை.

பாகின் சூட்டிலேயே மாவு வெந்துவிடும்.

கை விடாமல் நன்றாகக் கிண்டி ஆறியதும் மூடி வைத்து, அடுத்த நாளோ, இல்லை அதற்கும் அடுத்த நாளோ அதிரசங்களைச் சுடலாம். அன்றேகூட செய்யலாம். எங்க அம்மா மாவு கிண்டி வைத்து அதிரசம் சுட ஒரு வாரமாவது ஆகும், அதற்குள் பாதி மாவைக் காலி பண்ணிடுவோம் 🙂

எண்ணெயை அடுப்பில் ஏற்றி காய வைக்கவும்.

20150915_161616

ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் அல்லது பேப்பர் டவலில் சிறு உருண்டை அளவிற்கு மாவை எடுத்து படத்தில் உள்ளதுபோல் தட்டிக்கொண்டு எண்ணெய் காய்ந்ததும் போட்டு பொரித்தெடுக்கவும்.

எண்ணெய் ரொம்பவும் சூடாக இருக்கக் கூடாது. தீயுமே தவிர உள்மாவு வேகாது. எண்ணெய் குலோப் ஜாமூன் சுடும் பதமாக இருக்கலாம்.

எடுத்தபின் ஒரு தட்டில் வைத்து அடிப்பக்கம் தட்டையான ஒரு கிண்ணத்தால் அழுத்தினால் உப்பியிருக்கும் அதிரசம் தட்டையாகிவிடும்.

எல்லா மாவையும் இப்படியே செய்ய வேண்டியதுதான்.

20150915_163847

பிறகென்ன, ஆறியதும் எடுத்து சாப்பிட்டு விடுவதோ அல்லது எடுத்து வைத்து பிறகு சாப்பிடுவதோ எல்லாமும் உங்கள் கைகளில்.

ஈஸி சர்க்கரை அதிரசம்

20141226_132223

உங்களுக்குத்தான், எடுத்துக்கோங்க !

ஈஸி அதிரசம்னா பச்சரிசி இல்லாமலோ !!!! , அல்லது சர்க்கரை இல்லாமலோ !!!! இப்படித்தானே எண்ணத் தோன்றும். இவை எல்லாமே உண்டுங்க. ஆனால் முக்கியமான ஒண்ணு, அதாங்க நாமெல்லாம் பார்த்து பயப்படுவோமே, சில சமயங்களில் வரும், பல சமயங்களில் சொதப்புமே, அது அது அதேதான். பாகு காய்ச்ச வேண்டிய அவசிய‌ல்லை. அப்பாடா, இப்போ நிம்மதி பெருமூச்சு விட்டாச்சா ! இனி அடிக்கடி அதிரசம் செய்து சுவைக்கலாம், வாங்க‌ !!

தேவையானவை:

பச்சரிசி _ ஒரு அளவு
சர்க்கரை _ பாதி அளவு
ஏலக்காய் _ ஒன்றிரண்டு
உப்பு _ கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு துளியூண்டு

20141226_124022

நான் எடுத்த அளாவு

செய்முறை :

பச்சரிசியை நன்றாகக் கழுவிவிட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.

ஊறிய பிறகு தண்ணீர் முழுவதையும் சுத்தமாக வடித்துவிடவும். அரிசியில் தண்ணீர் துளியும் இருக்க வேண்டாம்.

பிறகு அரிசியை மிக்ஸியில் போட்டு அதனுடன் ஏலக்காயையும் போட்டு ஈர மாவாக இடித்துக்கொள்ளவும். சமயங்களில் கடைசியில் ஏலக்காயை சேர்க்க மறந்துவிடுவதால் இந்த ஐடியா. புட்டு, இடியாப்பம் என எல்லாவற்றுக்கும் இப்படியே இடித்துக்கொள்கிறேன்.

மாவை ஒரு எவர்சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் சர்க்கரையையும், உப்பையும் போட்டு கை விடாமல் ஒரு கரண்டியால் நன்றாகக் கலந்து மூடி வைக்கவும்.

அடுத்த நாள் மாவை கையால் நன்றாகக் கிளறிவிட்டு பிசையவும். அதிரசம் செய்யும் பதத்திற்கு மாவு வந்துவிடும். ஈர மாவுடன் சர்க்கரை சேர்ந்து சிறிது நீர் விட்டுக்கொண்டு பதமாக இருக்கும்.

அப்படி ஈரம் பத்தவில்லை எனில் அரை ஸ்பூன் அளவிற்கு சுடுதண்ணீர் தெளித்து பிசையவும். டபக்கென நீறை ஊற்றிவிட வேண்டாம். பார்த்து தேவையானால் மட்டுமே சேர்க்கவும்.

பாகு காய்ச்சுவது, பாகு பதம் பார்ப்பது என பிரச்சினையில்லாமல் அதிரச மாவு தயார்.

IMG_5406

வாணலில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி காயவைக்கவும். வடை போடும் அளவிற்கெல்லாம் எண்ணெய் ரொம்பவும் சூடாகக் கூடாது.

சிறு உருண்டை அளவிற்கு மாவை எடுத்து உள்ளங்கைகளில் வைத்து அழுத்தாமல் உருண்டையாக்கி ஒரு ப்ளாஸ்டிக் அல்லது வாழையிலையில் வைத்துத் தட்டவும். இந்த மாவு எவ்வளவு மெல்லியதாக வேண்டுமானாலும் தட்ட வருகிறது.

20141226_130350

எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு, (நன்றாக பூரிபோல் இரண்டு பக்கமும் உப்பிக்கொண்டு வரும்) ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பிப்போட்டு மறுபக்கமும் சிவந்ததும்(சர்க்கரை சேர்ப்பதால் அந்தளவிற்கு சிவக்காது) எடுத்து அடிப்பக்கம் தட்டையான ஒரு தட்டில் போட்டு அடிப்பக்கம் தட்டையான ஒரு கிண்ணத்தால் அதிரசத்தை அழுத்தவும்.

மீதமான எண்ணெய் வெளியேறிவிடும். இந்த மாவு எண்ணெய் குடிக்கவில்லை. இருந்தாலும் அழுத்தினால்தான் எல்லாம் ஒன்றுபோல் அழகாக இருக்கும்.

செய்து சாப்பிட்டுப் பார்த்து, வந்து சொல்லுங்க !

அதிரசம், இனிப்பு வகைகள் இல் பதிவிடப்பட்டது . 14 Comments »

அதிரசம்

தேவையான பொருள்கள்:

1.பச்சரிசி- 2 கப்
2.வெல்லம்-  1  1/2 கப்
3.ஏலக்காய்-2
4.உப்பு- 1/4 சிட்டிகை (விருப்பமானால்)

செய்முறை:

பச்சரிசியை தண்ணீரில் நனைத்து சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.பிறகு வடிகட்டி தண்ணீர் வற்றியதும் மிக்ஸியில் போட்டு ஈர மாவாக இடித்துக்கொள்ளவும்.பிறகு வெல்லத்தை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி சூடுபடுத்தவேண்டும்.வெல்லம் கரைந்து நுரைத்து வரும்.தீயை மிதமாக வைக்கவேண்டும்.இல்லை என்றால் வெல்லம் தீய்ந்து விடும். ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு,ஒரு சிறு கரண்டியால் பாகை எடுத்து ஒரு சொட்டு தண்ணீரில் விட்டு விரல்களால் உருட்டிப் பார்க்க வேண்டும்.விரலில் ஒட்டாமல் உருட்ட வந்தால் அதுதான் கெட்டிப் பதம். அப்போது பாகை அடுப்பில் இருந்து இறக்கி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மத்தின் அடிப்பகுதியால் நன்கு கிளர வேண்டும். கூடவே பொடித்து வைத்துள்ள ஏலம், உப்பு இவற்றையும் சேர்த்துக் கிளற வேண்டும்.இந்த மாவை நன்றாக ஆறிய பிறகு ஒரு மூடியைப்போட்டு இறுக்கமாக மூடி வைக்கவேண்டும்.

மறுநாள் வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி  மிதமாக சூடுபடுத்த வேண்டும். மாவை மீண்டும் ந்ன்றாகக் கிளறி ஒரு சிறு எலுமிச்சை அளவு எடுத்து கைகளில் வைத்து உருண்டையாக்கி வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து வட்டமாகத் தட்டவும்.இதுபோல் அனைத்து மாவையும் தட்டிக்கொண்டு எண்ணெயில் போட்டு இரு புறமும் லேசாக சிவந்ததும் எடுத்து விடவும். பாகு நல்ல பதமாக இருந்தால் அதிரசம் நன்றாக உப்பி வரும். அதிரசத்தை எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் ஒரு தட்டில் போட்டு அடி தட்டையாக உள்ள மற்றொரு தட்டால் அமுக்கி விடவும். நன்றாக ஆறிய பிறகு சுத்தமான டப்பாவில் எடுத்து வைக்கவும். இது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

குறிப்பு:
உப்பு சேர்ப்பது ருசியை அதிகப்படுத்துவதற்குத்தான். மேலும் 1 கப் வெல்லத்திற்கு 1/4 கப் தண்ணீர் போதும்.