பூண்டு ஊறுகாய் / Garlic pickle

 

20150724_164154

உங்கள் விருப்பம்போல், அவரவர் சுவைக்கு ஏற்ப அளவுகளைக்  கூட்டியும் குறைத்தும் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

தேவையானவை:

பூண்டு _ ஒரு கிண்ணம் (இதை மூன்று பங்காகப் பிரித்துக்கொள்ளவும், மூன்றில் இரண்டு பங்கு அரைக்க & ஒரு பங்கு ஊறுகாயில் முழுதாக சேர்க்க)
புளி _ பெரிய கோலி அளவு
கடுகு _ ஒரு டீஸ்பூன்
வெந்தயம் _ ஒரு டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் _ தேவைக்கு
பெருங்காயத்தூள்
உப்பு
நல்லெண்ணெய் _ தேவைக்கு ஏற்ப. கொஞ்சம் அதிகமாக சேர்த்தாலும் சுவை அதற்கு ஏற்றார்போல் கூடுதலாகவே இருக்கும்.

செய்முறை:

20150722_164106

பூண்டிதழ்களைத் தோலிரித்து நுனியை நறுக்கிவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

பூண்டு அதிகமாக இருந்து உரிக்கவும் கஷ்டமாக இருந்தால் பூண்டிதழ்களை ஒரு எவர்சில்வர் தட்டில் பரப்பிவிட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்தால் எளிதாக உரித்துவிடலாம்.

20150722_171410

வெறும் வாணலியை அடுப்பிலேற்றி கடுகு, வெந்தயம் இரண்டையும் தனித்தனியாக கொஞ்சம் கவனமாகத் தீய்ந்து விடாமல் வறுத்துக்கொள்ளவும். தீய்ந்தால் ? …… ஊறுகாய் கசக்கும், அவ்வளவே !! தீய விட்டுடுவோமா என்ன 🙂

20150722_172040

இவை ஆறியதும் கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.

20150722_172624

புளி & இரண்டு பங்கு பூண்டு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

20150722_173308

வாணலை அடுப்பிலேற்றி, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மீதமுள்ள ஒரு பங்கு பூண்டு போட்டு வதக்கவும். சிறிது நேரம் வதக்கவும். வதக்கினால்தான் பூண்டு வேகும். பூண்டு நீளவாக்கில் நறுக்கியும் போடலாம்.

கறிவேப்பிலை புதிதாக இருந்ததால் சேர்த்திருக்கிறேன். விருப்பமிருந்தால் சேர்க்கலாம்.

20150722_173632

இப்போது அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்துக் கிண்டவும். பூண்டின் பச்சை வாசம் போகும்வரை வதக்கவும். அவ்வளவு சீக்கிரம் போய்டுமா என்ன ! கொஞ்சம் விடாமல் கிண்டினால்தான் அடியில் பிடிக்காமல் இருக்கும்.

20150722_17390020150722_174057

எண்ணெயும் பிரிந்து வரும். இப்போது மிளகாய்த்தூள் & உப்பு சேர்த்து உப்பு & காரம் சரிபார்த்து , வதக்கி,

20150722_174535

பெருங்காயம் & பொடித்து வைத்துள்ள கடுகு & வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிண்டி அடுப்பிலிருந்து இறக்கவும்.

20150722_175412

நன்றாக ஆறிய பிறகு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

20150722_175446

தயிர் சாதம், இட்லி & தோசை என எல்லாவற்றுக்கும் சூப்பரா இருக்கும்.

ஊறுகாய் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 2 Comments »

கார மாங்காய் / kaara maangai

mango kaara mango

நம்ம ஊர்ல இப்போது ஒட்டு மாங்காய் பிஞ்சுகள் நிறைய கிடைக்கும். அவற்றை அப்படியே சாப்பிட சிறிது துவர்ப்புடன் சூப்பரா இருக்கும்.அதையே நீளவாக்கில் துண்டுகள் போட்டு கொஞ்சம் காரம் சேர்த்து சாப்பிட இன்னும் சூப்பரா இருக்கும்.

இங்கே அவை கிடைக்காது என்பதால் ஒரு பெரிய மாங்காவை வைத்து செய்திருக்கிறேன்.செய்துபார்த்து நன்றாக இருந்தால் ஒரு பை நிறைய ஒட்டு மாங்காய் பிஞ்சுகளை வாங்கி என்னுடைய ப்ளாக் அட்ரஸுக்கு அனுப்பி வையுங்க. நினைக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது.

தேவையானவை:

மாங்காய்_1
உப்பு_சிறிது

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
தனி மிளகாய்த்தூள்_ஒன்றிரண்டு டீஸ்பூன்
பெருங்காயத்தூள்_துளிக்கும் குறைவாக‌
வறுத்த வெந்தயப்பொடி_துளிக்கும் குறைவாக‌

செய்முறை:

மாங்காயைக் கழுவித் துடைத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ள‌வும்.மாம்பிஞ்சாக இருந்தால் மெல்லிய துண்டுகளாக, நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு போட்டு பொரிந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு,அந்த சூட்டிலேயே மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்,வெந்தயப்பொடி,உப்பு சேர்த்து ஒரு கிளறுகிளறி மாங்காய்த் துண்டுகளையும் சேர்த்துக் கிண்டிவிட்டு சூடாகவோ அல்லது ஆறவைத்தோ கண்ணாடி பாட்டிலில் எல்லாம் எடுத்து வைக்க சொல்லமாட்டேன்,அதில் ஒரு டூத்பிக் வைத்துக் கொடுத்துவிட்டால் போதும்,உடனே காலிபண்ணி விடுவார்கள்.

வேண்டுமானால் நிறைய செய்து வைத்துக்கொண்டு சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம்.

ஊறுகாய் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 9 Comments »

மாங்காய் ஊறுகாய் / Dry mango pickle

இது கிராமங்களில் போடும் ஊறுகாயாகும்.இதற்கு நல்ல முற்றிய மாங்காயாக இருந்தால் நல்லது.ஏனெனில் பருப்பின் துவர்ப்பு குறைவாக இருக்கும்.100,200 என (எண்ணிக்கையில்) போடுவாங்க.இவ்வாறு போட்டு வைத்துக்கொண்டால் யார் வீட்டிலாவது உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது மசக்கை சமயத்திலோ வந்து கேட்டு வாங்கிச்செல்வார்கள்.

சதைப்பகுதி மட்டுமல்லாமல் அதன் உள்ளே உள்ள பருப்பு மிகவும் நல்லது. அதைப் பயன்படுத்தி வயிற்றுவலி,வயிற்றுப்போக்கு என்றால்  குழம்பு செய்வாங்க.இந்த பருப்பு மாதவிடாய் பிரச்சினைக்கும் நல்லதுனு சொல்லுவாங்க. பருப்பை அப்படியேகூட சாப்பிடலாம்.இள மாங்காயின் பருப்பாக இருந்தால் துவர்ப்பு அதிகமாக இருக்கும்.முற்றிய மாங்காயெனில் மாவு மாதிரி,சுவையாக‌ இருக்கும்.

என்னிடம் ஊறுகாயின் படங்கள் இல்லை.இங்கே (வெளிநாட்டில்) இந்த ஊறுகாயைப் போடவும் முடியாது. வெயிலும்  பிரச்சினை.மாங்காயும் பழ மாங்காய் போலத்தான் இருக்கும்.ஊருக்குப் போனால்தான் எடுத்துவர வேண்டும்.எங்கம்மா ஊறுகாய் போடும் முறையைக் கீழே கொடுத்துள்ளேன்.

தேவையானவை:

மாங்காய்
உப்பு

செய்முறை:

படத்திலுள்ளதுபோல் எல்லா மாங்காய்களையும் இரண்டு பக்கமும் கீறி வைக்கவும.

பிறகு கீறிய பகுதி நிறைய உப்பை வைத்து அடைத்து வைக்கவும்.இதற்கு உப்பு நிறைய தேவைப்படும். இவ்வாறே எல்லா மாங்காய்களையும் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து மூடவும்.

மூன்றாவது நாள் நல்ல வெயில் விழும் இடத்தில் ஒரு பெரிய தட்டில் ஒவ்வொரு  மாங்காயாக எடுத்து அடுக்கி வைக்கவும்.

இப்போது மாங்காயின் பச்சை நிறம் மாறி மஞ்சள்,ப்ரௌன்,அடுத்து கருப்பு என மாறும்.

பாத்திரத்தில் உப்புநீர் நிறைய இருக்கும்.அதை அப்படியே வெயிலிலேயே வைக்கவும்.

மாலையானதும் மாங்காய்களை மீண்டும் அந்த உப்புநீர் உள்ள பாத்திரத்திலேயே எடுத்து வைத்து மூட‌வும்.

அடுத்த நாளும் இப்படியே அதாவது பாத்திரத்திலுள்ள நீர் முழுவதும் வற்றி, மாங்காயும் நீர் இல்லாமல் வற்றிக் காயும்வரை இதை செய்ய வேண்டும்.

இதற்கு சில வாரங்கள் ஆகலாம்.அதன்பிறகு ஊறுகாயிலுள்ள சதைப் பகுதியை தயிர்சாதம்,கஞ்சி போன்றவற்றிற்கும்,கொட்டையின் உள்ளேயுள்ள பருப்பைக் குழம்பிற்கும் பயன்படுத்தலாம்.

இதில் உப்பு நிறைய சேர்த்து செய்வதால் வருடங்களானாலும் கெட்டுப்போகாது. நன்றாகக் காய்ந்த,சுத்தமான  கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பூண்டு ஊறுகாய்


தேவையானவை:

பூண்டு_3
எலுமிச்சம் பழம்_3 (பெரியது)
உப்பு_தேவைக்கு

வறுத்துப் பொடிக்க:

கடுகு_ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_3
கொத்துமல்லி விதை_2 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
வெந்தயம்_1/2 டீஸ்பூன்
மஞ்சள்_சிறு துண்டு (இதை வறுக்கத் தேவையில்லை)

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
பெருங்காயம்

  

செய்முறை:

பூண்டிதழ்களை உரித்து சுத்தம் செய்து வைக்கவும்.

எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து  வைக்கவும்.

வெறும் வாணலை அடுப்பில் ஏற்றி வறுத்துப் பொடிக்க வேண்டியவற்றைத் தனித்தனியாக வறுத்து ஆற வைத்துப் பொடித்துக்கொள்ளவும்.

அதே வாணலில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு,பெருங்காயம் தாளித்து தீயை மிதமாக்கிக்கொண்டு பூண்டு சேர்த்து வதக்குவும்.

பூண்டு லேசாக வதங்கியதும் எலுமிச்சை சாறு விட்டு அடுப்பை அனைத்துவிடவும்.

பிறகு பொடித்து வைத்துள்ளப் பொடியைச் சேர்த்து,தேவையானால் உப்பும் சேர்த்துக் கிளறி ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

பூண்டு காரமான மிளகாய்த்தூள்,புளிப்பான எலுமிச்சை சாற்றில் ஊற ஊற நன்றாக இருக்கும்.

இது சாத வகைகளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

ஊறுகாய் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 14 Comments »

தக்காளி ஊறுகாய்/தொக்கு

தேவையானப் பொருள்கள்:

நன்கு பழுத்த தக்காளி_3
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
வெந்தயத்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை(விருப்பமானால்)

செய்முறை:

முதலில் தக்காளிப்பழத்தை நன்றாகக் கழுவித்துடைத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

பிறகு ஒரு கனமான கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கு நன்றாக வதக்கவும்.

தண்ணீர் சேர்க்க வேண்டாம்.தக்காளியில் உள்ள தண்ணீரே போதுமானது.

பாதி வதங்கிய நிலையில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,வெந்தயத்தூள்,உப்பு சேர்த்துக் கிளறி மிதமானத் தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.

தக்காளி நன்கு,தண்ணீர் வற்றி,சுருள வதங்கியதும் இறக்கி ஆற வைத்து எடுத்து வைக்கவும்.

இது எல்லா சாதத்துக்கும் நன்றாக இருக்கும்.

முக்கியமாக இட்லி, தோசை இவற்றிற்கு மிகப்பொருத்தமாக இருக்கும். மேலும் சப்பாத்தி,பரோட்டா,நாண் இவற்றிற்கும் பொருந்தும்.

எலுமிச்சை ஊறுகாய்

தேவையானப் பொருள்கள்:

எலுமிச்சம் பழம்_2
தனி மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
வெந்தயத்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு_சிறிது
பெருங்காயம்_சிறிது

செய்முறை:

எலுமிச்சம்பழங்களைக் கழுவித் துடைத்துவிட்டு மிகச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

இத்துண்டுகளை ஒரு அடி கனமான கடாயில் போட்டு அது வேகும் அளவிற்கு சிறிது தண்ணீர்,உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

நன்றாக வெந்தபிறகு ஆற வைக்கவும்.

ஆறியதும் அதில் மிளகாய்த்தூள்,வெந்தயதுதூள் சேர்த்துக் கிளறி (கைபடாமல்) உப்பு,காரம் சரிபார்த்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடேறியதும் கடுகு,பெருங்காயம் தாளித்து கலவையைக் கொட்டி (மிதமானத்தீயில்) கிளறி, சூடேறியதும் இறக்கவும்.

இது ஒரு வாரத்திற்கு வரும்.

இது எல்லா வகையான சாத்த்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

காரம் விருப்பமானால் மிளகாய்த்தூளை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.

ஊறுகாய் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »