மண‌த்தக்காளி கீரை மசியல்

20150825_163709

இக்கீரை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். அதனால் தூக்கிப் போட்டுவிட வேண்டாம். வாய்ப்புண் என்றால் சாறு வாய் முழுவதும் படுமாறு இதை நன்றாக மென்று விழுங்கினால் போதும் சரியாகிவிடும். வயிற்றுப் புண்ணுக்கும் அப்படியே. உடலுக்கும் குளிர்ச்சியானது.

கசக்கும் என்பவர்கள் ஒரு துளிர் கீரையைத் தனியே எடுத்து வைத்துவிட்டு, சமைத்து சாப்பிடும் முன் எடுத்து வைத்த அந்தக் கீரையை மரமரனு மென்று விழுங்கிவிட்டு கடைந்த கீரையை சாப்பிட்டுப் பாருங்க, பருப்புடன் கீரை, சின்ன வெங்காயம், வதக்கிய பூண்டு, எல்லாமும் சேர்ந்து சூப்பரா இருக்கும், கசப்பே தெரியாது.

அளவுகள் தோராயமாக உள்ளன. உங்களின் சுவைக்கேற்ப சேர்ப்பவற்றில் மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள். காரம் அதிகம் என நினைத்தால் தாளிக்கும்போது சேர்க்கும் காய்ந்த மிளகாயே போதும்.

வேண்டியவை:

மணத்தக்காளி கீரை _ ஒரு சிறு கட்டு

உடைத்த பச்சைப் பருப்பு _ ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு

பச்சை மிளகாய் _ 1

பூண்டுப்பல் _ ஆறேழு (பாதியை கீரையுடன் சேர்த்து வேகவைக்கவும், மீதியை தாளிக்கும்போது வதக்கி சேர்க்கவும்)

சின்னவெங்காயம் _ 2

தக்காளி _ பாதி

உப்பு _ தேவைக்கு

தாளிக்க :

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்

செய்முறை:

பச்சைப்பருப்பை அடிகனமான ஒரு சட்டியில் எடுத்து கழுவிட்டு அது வேகுமளவு தண்ணீர் ஊற்றி துளி மஞ்சள்தூள், பெருங்காயம், ஓரிரு சொட்டுகள் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு வேக விடவும்.

20150823_164903

கீரையை ஆய்ந்துகொண்டு கழுவிவிட்டு நீரை வடிய‌விடவும். ஏனோ கீரையை நறுக்கப் பிடிப்பதில்லை.

பருப்பு பாதி வெந்து வரும்போது பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி, பாதி பூண்டு சேர்த்து வேகவிடவும்.

இவையெல்லாம் போட்டு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் கீரையைப் போட்டு துளி உப்பு போட்டு மூடி போடாமல் வேக வைக்க்வும். மூடினால் கீரையின் அழகான பச்சை நிறம் காணாமல் போய்விடும்.

இடையில் ஓரிரு முறை கிண்டி விடவும். இல்லையென்றால் அடியில் உள்ள கீரை குழைந்தும், மேலே உள்ளது வேகாமலும் இருக்கும்.

கீரை வெந்ததும் அடுப்பை நிறுத்திவிடவும். ஒரு கரண்டியில் சிறிது கீரையை எடுத்து கையால் நசுக்கிப் பார்த்தால் வெந்துதா அல்லது வேக‌லையான்னு தெரிந்துவிடும்.

மண் சட்டியில் என்றால் சூடாகவே கடைந்துவிடலாம். மிக்ஸி என்றால் கீரை ஆறியதும் அதில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.

பிறகு தாளிப்பதைத் தாளித்து கடைசியில் பூண்டுப்பல்லை கொஞ்சம் பொடியாகத் தட்டிப் போட்டு வதக்கிக் கொட்டி மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள உருளை அல்லது வாழைக்காய் அல்லது சேப்பங்கிழங்கு போன்றவற்றுடன் அப்பளம் அல்லது வத்தல் பொரித்து சாப்பிட …. ஆ…..ஹா… தான் 🙂

கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 7 Comments »

புளி சேர்த்த பருப்புகீரை மசியல்

20150509_170306

பருப்புடன் கீரையின் சுவையைப் போலவே புளியுடன் சேர்த்து செய்யும்போதும் சுவையாகவே இருக்கும்.

20150508_150555

வீட்டில் பறித்த பருப்புகீரை

கொல்லியில் இருந்து எடுத்து வரும் கலவைக் கீரையில் இதுவும் ஒரு பங்கு இருக்கும். கலவை கீரையை புளி சேர்த்துதான் கடைவார்கள். முன்னெல்லாம் கிராமத்தில் பருப்பு வாங்க முடியாததாலோ என்னவோ, முருங்கை போன்ற ஒரு சிலவற்றைத் தவிர‌ எந்தக் கீரையாக இருந்தாலும் இப்படித்தான் செய்வார்கள்.

அதைப் போலவேதான் இதையும் செய்தேன், சூப்பராகவே இருந்தது.

20150508_145147

வீட்ல பறிச்சேன்னு இப்போ நம்பித்தானே ஆகணும் !

சேர்க்க வேண்டிய பொருட்களைக் கொடுத்துள்ளேன். அளவுகளை எல்லாம் உங்கள் சுவைக்கேற்ப‌ கூட்டிக் குறைத்து சேர்த்துக்கொள்ளவும்.

தேவையானவை:

பருப்பு கீரை _ சிறு கட்டு
சின்ன வெங்காயம் _ 5
தக்காளி _ 1
முழு பூண்டு _1
புளி _ சிறு கோலி அளவு
பச்சை மிளகாய் _ 1

தாளிக்க :

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு _ நான்கைந்து
சீரகம்
காய்ந்தமிளகாய் _ 1
பெருங்காயம்

செய்முறை :

கீரையை ஆய்ந்து நீரில் அலசி எடுத்து வைக்கவும்.

ஒரு கனமான சட்டியில் 1/2 கப் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி கொதி வந்ததும் வெங்காயம், தக்காளி, இரண்டு பூண்டுப்பல், பச்சை மிளகாய், புளி இவற்றையெல்லாம் போட்டு மீண்டும் கொதி வந்ததும் கீரையைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

கீரை சீக்கிரமே வெந்துவிடும். குழைய வேண்டாம்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளித்து, எண்ணெய் நீங்கலாக மீதியைக் கீரையில் கொட்டவும்.

அந்த மீதமான எண்ணெயில் மீதமுள்ள பூண்டு பொடியாகவோ அல்லது தட்டிப்போட்டோ நன்றாக வதக்கிக் கீரையில் கொட்டி ஆறியதும் மிக்ஸியில் போட்டு மைய மசிக்காமல் ஓரளவுக்கு மசித்துக்கொள்ளவும்.

20150509_151123

சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். துவையல் மாதிரி தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

கிராமத்து உணவு, கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 6 Comments »

முருங்கைக்கீரை பிரட்டல் / துவட்டல்

20150219_160734

சித்ரா வீட்ல கீரை வாரமோ !!

வறுத்த வேர்கடலை கையில் இருந்து, கூடவே முருங்கைக்கீரையும் இருந்துவிட்டால் நொடியில் முருங்கைக் கீரைப் பொரியல் ரெடியாயிடும்.

20150219_142217

ஃப்ரெஷ் கீரை

முன்பெல்லாம் தேடித்தேடி ஓடியதுபோக, இப்போ ஃப்ரெஷ்ஷாவே கிடைக்குது. கிடைக்கும்போது வாங்கி அனுபவிச்சிட வேண்டியதுதான்.

தேவையானவை :

20150222_144115

அளவெல்லாம் உங்கள் விருப்பம்தான்

முருங்கைக்கீரை _ இரண்டுமூன்று கிண்ணம் (எவ்வளவு கீரையாக இருந்தாலும் சமைத்த பிறகு கொஞ்சமாகிவிடும்)

வறுத்த‌ வேர்கடலை _ ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் _ 1
உப்பு _ ருசிக்கு

செய்முறை :

வேர்க்கடலையை வறுக்கும்போதே கடைசியில் மிளகாயையும் போட்டு சூடுவர‌ வறுத்துக்கொள்ளவும். அல்லது ஏற்கனவே வறுத்த வேர்கடலை இருக்குமாயின், மிளகாயை மட்டும் வெறும் வாணலில் போட்டு சூடுவர வறுத்து எடுக்கவும்.

இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு இடித்துக்கொள்ளவும். மைய இடிக்க வேண்டாம். வேர்கடலை கொஞ்சம் வாயில் கடிபடுகிற மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்.

பிறகு அடிகனமான சட்டியில் ஒன்றிரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி, தண்ணீர் காய்ந்ததும் அதில் கீரையைப் போட்டு வதக்கவும்.

மெல்லிய பாத்திரம் வேண்டாம், பாத்திரம் மெல்லியதாக இருந்தால் தண்ணீர் சீக்கிரமே சுண்டிவிடும், கீரையும் வேகாது.

வதக்கும்போதே சிறிது உப்பு சேர்க்கவும். கீரை வெந்து தண்ணீர் சுண்டி வந்ததும் பொடித்த பொடியைப் போட்டு ஒரு கிண்டுகிண்டி இறக்கவும்.

எல்லா சாதத்துடனும் சூப்பராக இருக்கும். சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் சூப்பரோ சூப்பராக இருக்கும்.

பருப்புகீரை அடை

20140921_145637

கோடையில் ஊருக்குப் போகுமுன் தொட்டிகளில் அறுவடையான பருப்பு கீரைக் குச்சிகள்தான் இருந்தன. திரும்பி வந்து பார்த்தால் …. வாவ் ! எங்கும் படர்ந்திருந்தது.

20140921_164511

அடுத்தடுத்து சில தடவைகள் பறித்தேன். விதை விழுந்து குட்டிகுட்டிச் செடிகள் முளைத்துக் கொண்டே இருந்தன. சந்தோஷமாக இருந்தது. பின்னே இருக்காதா ? ஒரு சிறு கட்டு $ 2:00 க்கு வாங்குவேனாக்கும்.

IMG_5224

அதன்பிறகு குருவிகள் வந்து குத்தாட்டம் போட்டு, முளைத்து வரும் துளிர்களைக் கொத்தி விடுவதால் இவை வளர்வதேயில்லை. இன்னமும் விதைகள் இருந்து, முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன, குருவியும் விடாமல் கொத்திக் கொண்டேதான் உள்ளது.

வீட்டுக்கு வெளியே பெரியபெரிய புல்தரைகள், ரோஜாக்கூட்டங்கள், ஆஃப்ரிக்கன் லில்லி என எவ்வளவோ இருந்தும் எங்க வீட்டுக்குத்தான் அவர்களின் விஜயம் எனும்போது நானும் நல்ல மனசோடு ‘செடிகள் போய்ட்டு போவுது’ன்னு விட்டுட்டேன்.

இப்போ அடைக்கு வருவோமா !!

தேவையானவை:

20141016_144140

கேழ்வரகு மாவு _ ஒரு பங்கு
பருப்பு கீரை _ இரண்டு பங்கு
சின்ன வெங்காயம் _ இரண்டு
பச்சை மிளகாய் _ காரத்திற்கேற்ப‌
இஞ்சி _ சிறிது
கறிவேப்பிலை _ கொஞ்சம்
உப்பு _ சுவைக்கு
நல்லெண்ணெய் _ தேவைக்கு

செய்முறை :

வழக்கம்போல கீரையை அரியாமல் நன்றாக அலசி நீரை வடியவிட்டு, சின்னசின்னதா இருக்குமாறு தண்டுப் பகுதியில் ஆங்காங்கே ஒடித்துக்கொள்ள‌வும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும்.

மாவை ஒரு பெரிய கிண்ணத்தில் கொட்டி, அதில் உப்பு போட்டு, அதனுடன் அரிந்து வைத்துள்ளவற்றைக் கொட்டி நன்றாகப் பிசையவும்.

20141016_151147

பிசைந்த மாவை உருண்டையாக்கி சிறிது நேரம்(ஒரு 10 நிமி?) ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்.

பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பிலேற்றி காயவிடவும்.

20141016_155410

க‌ல் காய்வதற்குள் மாவிலிருந்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து ஒரு ஈரத்துணியில் வைத்து மெல்லியதாகத் தட்டவும்.

இப்போது கல் காய்ந்ததும் அடையை எடுத்து தோசைக்கல்லில் போட்டு அடையைச் சுற்றிலும் & மேலேயும் எண்ணெய் விட்டு மூடி வேகவிடவும்.

எண்ணெய் கொஞ்சம் தாராளமாக விட்டால்தான் அடை வேகும். இல்லையென்றால் மாவு வேகாமல் வெள்ளையாகவே இருக்கும்.

எண்ணெய் அதிகம் சேர்க்க முடியாதென்றால் ஒரு பேப்பர் டவலில் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு அடையின் மேல் எல்லா இடத்திலும் படுமாறு தடவிவிடலாம்.

20141016_160054

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுத்து சூடாக தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

இட்லித்தூளுடன் சாப்பிட்டுப் பாருங்க. அடையிலுள்ள பச்சைமிளகாயின் காரமும், தூளிலுள்ள மிளகு & காய்ந்தமிளகாயின் காரமும் சேர்ந்து, நீங்களே ‘ஆஹா’ன்னு சொல்லுவிங்க பாருங்க‌.

கிராமத்து உணவு, கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 10 Comments »

முருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்

20150216_144222

சுவையான முருங்கைக்கீரை சூப்

எங்க வீட்டுத் தோட்டத்தில் முருங்கைக்கீரை மரம் எப்போதும் தளதளன்னு சூப்பரா இருக்கும். என்றாவது ஒருநாள் எங்கம்மா முருங்கைக்கீரையில் இந்த தண்ணி சாறு வைப்பாங்க. சுவை சொல்லிமாளாது.

20150216_144513

முருங்கைக்கீரை தண்ணி சாறு

சாதத்துடன் ரசம் மாதிரி சேர்த்து சாப்பிட சூப்பரா இருக்கும். இதிலுள்ள கீரை முதலானவற்றை வடித்துவிட்டு சூப் மாதிரி குடிக்கவும் நன்றாக இருக்கும்.

20140723_082526

இளம் பசுமையான துளிர் கீரை

தேவையானவை:

20150216_135837

தேவையானவை

முருங்கைக்கீரை _ ஒரு கிண்ணம்
சின்னவெங்காயம் _ 1 (ரொம்ப சின்னதா இருந்துச்சுன்னா மூன்றுநான்கு போட்டுக்கொள்ளலாம்)

பூண்டுப்பல் _ ஐந்தாறு . நன்றாகத் தட்டிக்கொள்ளவும்.

நன்கு பழுத்த தக்காளி _ 1
மஞ்சள் தூள் _ துளி
சாம்பார்தூள் _ துளி. மஞ்சள்தூளும், சாம்பார்தூளும் நிறத்திற்காகத்தான்
தேங்காய்ப்பூ(விருப்பமானால்) _ சிறிது
கொத்துமல்லி தழை _ கொஞ்சம்
உப்பு _ தேவைக்கு

தாளிப்புக்கு :

நல்லெண்ணெய்
மிளகு
சீரகம்
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்

செய்முறை :

கீரையைக் கழுவி நீரை வடிய விடவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இங்குள்ள ஒரு சமையல் ஷோவில், “தோலுடன் பூண்டுப்பல்லைத் தட்டிப் போட்டால்தான் முழு ஃப்ளேவர் கிடைக்கும்” என்றதால், அன்றிலிருந்து இன்றுவரை ‘ரொம்ம்ம்ப நல்லதாப் போச்சுன்னு எல்லா சமையலுக்குமே தோலுடனே அப்படியே தட்டிப் போட்டுவிடுவது.

ஒரு சட்டியை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகத்தைப் பொரியவிடவும். அப்போதுதான் மிளகின் காரம் சூப்பில் இறங்கும்.

அடுத்து காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு பூண்டு சேர்த்து பூண்டின் வாசம் வரும்வரை நன்றாக‌ வதக்கவும்.

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

இவை வதங்கியதும் கீரை சேர்த்து துவள வதக்கிவிட்டு இரண்டுமூன்று கிண்ணம் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். இப்போது மஞ்சள்தூள, சாம்பார்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

இரண்டு கொதி வந்த பிறகு தேங்காய்ப்பூ, கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

இனி சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதோ அல்லது சூப் மாதிரி குடிப்பதோ, உங்கள் விருப்பம்.

IMG_1367

முன்பொருமுறை உழவர் சந்தையில் வாங்கியது

 

பருப்புக் கீரை / Paruppu keerai

paruppu keerai

ஊரில் இருக்கும்வரை கலவை கீரை அடிக்கடி கிடைக்கும்.எங்கம்மா அதை புளி சேர்த்து கடைஞ்சிருவாங்க.கதம்ப சாம்பார் மாதிரி இந்தக் கலவை கீரையும் சுவையாக இருக்கும்.

கலவைக் கீரை என்பது சிறுகீரை,முளைக்கீரை,தண்டுக்கீரை,அரைக்கீரை கொய்யாக்கீரை,குப்பைக்கீரை, பசலைக் கீரை, பருப்புக் கீரை என எல்லாக் கீரைகளும் சேர்ந்ததாகும்.அப்படித்தான் இந்தப் பருப்புக் கீரையைப் பார்த்திருக்கிறேன்.தனியாக சமைத்ததில்லை.

சென்ற வருடம் முதன்முறையாக ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் இந்த பருப்புக் கீரையைப் பார்த்ததும் வாங்கிவந்து சமைக்காமலேயே தூக்கிப் போட்டுவிட்டேன்.லேஸான ஒரு கொழகொழப்பு தெரிந்தது.இப்போது இரண்டு வாரங்களாக‌ இக்கீரை வந்துகொண்டிருக்கிறது.

‘நல்லதுமா,சமைத்து சாப்பிடு’, என அம்மா சொல்லியதால் இந்த முறை விடுவதாக இல்லை என வாங்கிவந்து இரண்டு நாட்கள் சமைத்தாயிற்று. சூப்பராக இருந்தது.உங்களுக்குக் கிடைத்தால் நீங்களும் சமைத்துப் பாருங்களேன்.

paruppu keeraiparuppu keerai

இவ்வளவு பசுமையாக இருப்பதை வாங்காமல் விடலாமா!!

(கீழே படத்திலுள்ள கீரை எங்கள் வீட்டு தொட்டியில் வளர்த்தது)

IMG_0489

தேவையானவை:

பருப்புக்கீரை_1/2 கட்டு
பச்சைப் பயறு_1/4 கப்
சின்ன வெங்காயம்_5
தக்காளி_1
பூண்டிதழ்_2

அரைக்க:

தேங்காய் பத்தை_3
காய்ந்த மிளகாய்_1(காரத்திற்கேற்ப)
சீரக‌ம்_கொஞ்சம்

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

பச்சைப் பயறு வேக ஆகும் தண்ணீரின் அளவைவிட ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் கூடுதலாக விட்டு பூண்டிதழ், பெருங்காயம், மஞ்சள்தூள்,இரண்டு துளி விளக்கெண்ணெய் சேர்த்து மலர‌ வேக வைக்கவும்.குழைந்துவிட வேண்டாம்.

பயறு பாதி வேகும்போதே வெங்காயம்,தக்காளி சேர்த்து வேக விடவும்.

தேங்காயுடன்,சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

வெந்து கொண்டிருக்கும் பயறில் அரைத்த விழுது+கீரை இரண்டையும் சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்க விடவும்.

கீரை வெந்து எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்து கீரையில் கொட்டிக் கலக்கவும்.

இதனை சாதத்துடனோ அல்லது சாதத்துக்கு பக்க உணவாகவோ சாப்பிடலாம்.

கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 16 Comments »

கேழ்வரகு & வெந்தயக்கீரை பகோடா / Kezhvaragu & Vendhaya keerai pakoda

raagi pakoda

நான் கேழ்வரகு மாவுடன் வெந்தயக்கீரை சேர்த்து செய்துள்ளேன்.வெந்தயக்கீரைக்குப் பதிலாக முருங்கைக்கீரை சேர்த்தும் செய்யலாம்.

தேவையானவை:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
வெந்தயக்கீரை_ஒரு கப்
பெரிய‌ சின்ன வெங்காயம்_1 (சாதாரண சின்ன வெங்காயம் என்றால் 5 லிருந்து 10 க்குள்)
இஞ்சி_சிறு துண்டு
பச்சைமிளகாய்_1
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

மார்க்கெட்டில் இளம்,துளிர் வெந்தயக்கீரையைப் பார்த்ததும் வாங்காமல் வர மனமில்லை.வாங்கிவந்து சாம்பார்,பகோடா இரண்டும் செய்தாயிற்று.இங்குள்ள‌ பகோடா நன்றாக இருப்பதாகத் தோன்றினால் நீங்களும் செய்து பார்க்கலாமே.

methi leaves

வெந்தயக்கீரையை ஆய்ந்து,தண்ணீரில் அலசி எடுத்து நீரை வடிக்கவும். கீரையை நறுக்காமல் முழுதாகவே போட்டுக்கொள்வோம். நறுக்கினால் கசப்பு அதிகமாகிவிடும்.

சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.பச்சை மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை&கொத்து மல்லி இவற்றைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு கிண்ணத்தில் மாவு முதற்கொண்டு எல்லாவற்றையும் போட்டு,கைகளால் கிளறிவிட்டு,சிறிதுசிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.கிள்ளி எடுத்து போடும் பதமாக இருக்கட்டும்.

raagi pakoda

ஒரு வாணலில் திட்டமாக எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்,மாவைக் கிள்ளினாற்போல் எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு தரம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.

மாலை நேரத்துக்கு கொறிக்க சுவையான,மொறுமொறு கேழ்வரகு பகோடா ரெடி.

அடுத்த நாளும் அந்த மொறுமொறு குறையவேயில்லை.துளி எண்ணெய்கூட குடிக்கவில்லை.

சோம்புக்கீரை வடை/Dill keerai vadai/Fennel leaves vadai

இந்த வடையை முருங்கைக்கீரை வடை மாதிரியேதான் செய்தேன்.நன்றாகவே இருந்தது.கிடைத்தால் செய்து பார்க்கலாமே.

சோம்புக் கீரையில் ஒருவித வாசனை வரும் என்று கேள்விப்பட்டதால் இதுவரை வாங்காமலே இருந்தேன். காமாட்சிமா சமைத்ததாலும்,  ரஞ்ஜனி அவர்கள் ‘எங்க ஊர் கீரை’என்று சொன்னதாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வாங்கிவந்து என்ன செய்வது எனத்தெரியாமல் முதலில் கீரை வடை செய்யலாம்,நன்றாக இருந்தால் அடுத்த தடவை இதைவைத்து வேறு ஏதேனும் செய்யலாம் என முடிவெடுத்து வடை செய்தாச்சு.

வடையைப் பார்ப்பதற்கே அழகாக இருந்தது.சுவையும் அருமையாக இருந்தது.பிடிக்காத எந்த வாசனையும் வரவில்லை.

மகி அறிவது: இனி ஹைக்கிங் போகும்போது மறக்காமல் இந்தக்கீரையைப் பறித்துவந்து தூக்கிப் போடாமல்  எங்க வீட்டில் கொடுத்துவிட்டுப் போகவும்.

தேவையானவை:

கடலைப்பருப்பு_ஒரு கப்
வறுத்துப்பொடித்த ரோல்டு ஓட்ஸ் மாவு_ஒரு கப்
சோம்புக்கீரை_ஒரு செடியிலுள்ளது
சின்ன வெங்காயம்_சுமார் 10
இஞ்சி_சிறு துண்டு
பச்சைமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய்_2
பெருஞ்சீரகம்_சிறிது
பூண்டுப்பல்_2
பெருங்காயம்
கறிவேப்பிலை&கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

தண்டிலிருந்து கீரையைத் தனியாகப் பிரித்தெடுத்து தண்ணீரில் அலசி வைக்கவும்.பார்ப்பதற்கு சவுக்கு இலைகள் போலவே இருக்கிறது.தண்ணீர் வடிந்ததும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கீழேயுள்ள பல்பை வைத்து என்ன சமைக்கலாம் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

       

கடலைப் பருப்பை ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு, மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு அதனுடன் மிளகாய், பெருஞ்சீரகம்,பூண்டு,இஞ்சி சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக,கெட்டியாக‌ அரைத்தெடுக்கவும்.

இந்த மாவுடன் ஓட்ஸ் மாவு,கீரை,பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம்,கறிவேப்பிலை&கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும்.

    

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் மாவிலிருந்த்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் வெந்து சிவந்ததும் எடுத்துவிடவும்.எண்ணெய் கொண்டமட்டும் தட்டிப்போடலாம்.

இவ்வாறே எல்லா மாவையும் வடைகளாகத் தட்டி எடுக்கவும்.இப்போது கமகம,மொறுமொறு,சத்தான,சுவையான சோம்புக்கீரை வடைகள் தயார்.தேங்காய் சட்னி அல்லது கெட்சப்புடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

எங்க வீட்டில் வடையைவிட வடைமாவை உதிர்த்துப் போடுவதற்குத்தான் மவுசு அதிகம்.அவ்வாறு போட்டதுதான் கீழேயுள்ள படத்திலிருப்பது.

கலவை தானிய அடை/Multi grain adai

அடையைக் கேழ்வரகு மாவில் மட்டுமே செய்தால்கூட கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்.இந்த அடையில் கேழ்வரகு மாவுடன் ஓட்ஸ்&பார்லி மாவு சேர்ப்பதால் நல்ல மிருதுவாக இருக்கும்.சத்தானதும்கூட.

கேழ்வரகு&முருங்கைக்கீரை அடைக்கான செய்முறை இங்கேயும்,கேழ்வரகு இனிப்பு அடைக்கான செய்முறை இங்கேயும் உள்ளன.

முருங்கைக்கீரை கிடைப்பதே அரிது.கிடைத்தாலுமே ஐஸில் வைத்து இலைகளெல்லாம் கரும்பச்சை நிறத்தில்தான் இருக்கும்.சம்மரில் ஒருசில வாரங்களில் மட்டும்,ஃபார்மர்ஸ் மார்க்கெட் திறக்கும்போதே (காலை 9:00 மணி)போனால் மட்டுமே புது முருங்கைக்கீரை கிடைக்கும். அதுவும் இரண்டுமூன்று bunches மட்டுமே இருக்கும்.மேலே படத்திலுள்ளது அவ்வாறு வாங்கியதுதான்.அந்த வார சமையல் முழுவதுமே முருங்கைக்கீரை மயமாகத்தான் இருக்கும்.

அடைக்குத் தேவையானவை:

ஓட்ஸ் மாவு_ஒரு கையளவு (வறுத்துப்பொடித்தது)
பார்லி மாவு_ஒரு கையளவு
கேழ்வரகு மாவு_ஒரு கையளவு
முருங்கைக்கீரை_மூன்று கைப்பிடி
சின்ன வெங்காயம்_3
பச்சை மிளகாய்_1
உப்பு_தேவைக்கு
எண்ணெய்_தேவைக்கேற்ப‌
மேலும் உங்களின் விருப்பம்போல் சீரகம்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை என சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை:

கீரையைக் கழுவி சுத்தம் செய்து,தண்ணீரை வடியவைத்து எடுத்துக்கொள்ளவும்.வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு அகலமான தட்டில் மாவுகளுடன் உப்பு,கீரை,வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து கலக்கவும்.

பிறகு சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து அடை தட்டும் பதத்தில் மாவைப் பிசைந்துகொண்டு,ஈரத்துணியால் ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி காயவிடவும்.மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு பிரித்தெடுத்து,ஒரு தட்டைக் கவிழ்த்துப்போட்டு,அதன் மேல் ஈரத்துணியைப்போட்டு,அடையாகத் தட்டவும்.அடையின் எல்லா பகுதியும் சமமாக இருக்கட்டும்.

கல் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள அடையை எடுத்துக் கல்லில் போட்டு, அடையைச் சுற்றிலும்,அடையின் மேலும் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.

எண்ணெயைத் தாராளமாக விட்டால்தான் அடை நன்றாக வெந்தும்& வெண்மையாக இல்லாமலும் வரும்.

தீ மிதமாக இருக்கட்டும்.தீ அதிகமானால் தீய்ந்துவிடும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.

சூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நல்ல மொறுமொறுப்பாகவும், சுவையாகவும்,நல்ல மணமாகவும் இருக்கும்.

ப்ரோக்கலி ரே(ய்)ப் பொரியல்/Broccoli rabe poriyal

இதனை கீரைப் பொரியல் போலவே செய்ய வேண்டியதுதான்.சமைக்கும் நேரமும் குறைவு.சுவையோ சாதாரண கீரையைவிட அதிகம்.

தேவையானவை:

ப்ரோக்கலி ரே(ய்)ப் நறுக்கியது_ஒரு கிண்ணம்
சின்னவெங்காயம்_3
பச்சை மிளகாய்_1
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

தாளிக்க:

எண்ணெய்,கடுகு,உளுந்து,சீரகம்,கடலைப்பருப்பு,காய்ந்த மிளகாய் ஒன்று,பெருங்காயம்,கறிவேப்பிலை.

செய்முறை:

ப்ரோக்கலி ரே(ய்)பை சுத்தம்செய்து,நீரில் அலசிய பிறகு விருப்பமான அளவில் அரிந்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயையும் அரிந்து வைக்கவும்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்த பிறகு வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் ப்ரோக்கலி ரே(ய்)பை சேர்த்து இரண்டு கிளறுகிளறி உப்பு,தேங்காய்ப் பூ,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

ப்ரோக்கலி ரே(ய்)ப் சீக்கிரமே வெந்துவிடும்.மூடி போட்டு,தண்ணீர் தெளித்து மற்ற கீரைகள் மாதிரி வேகவைக்க வேண்டாம்.

இது எளிமையான,சத்தான,சீக்கிரமே செய்யக்கூடிய அருமையான பொரியலாகும்.