கரணைக்கிழங்கு புளிக்குழம்பு

pulikuzhambu

கீழே படத்தில் இருக்கும் கிழங்கைத்தான் நான் கரணைக்கிழங்கு மாதிரி என்று முன்பு ஒரு பதிவில் சொன்னேன். இது அந்தக்கிழங்கு இல்லைதான். இருந்தாலும் கரணைக்கிழங்கு வைத்து செய்யும் சமையலை இதை வைத்தே செய்துவிடுவேன். சாம்பார், பொரியல்கூட சூப்பராக வரும். நான் வாங்கியுள்ளது இருப்பதிலேயே சின்னக் கிழங்கு. மற்றதெல்லாம் பெரிசு பெரிசா இருக்கும்.

இதை வேகவைக்கும் முறையை ஏற்கனவே இங்கே சொல்லியுள்ளேன்.

IMG_1799IMG_0353

தேவையானவை:

கரணைக் கிழங்கு_ படத்தில் இருப்பதில் 1/3 பங்கு
புளி_பெரிய கோலியளவு
சின்ன வெங்காயம்_7
தக்காளி_1
முழு பூண்டு_1
மஞ்சள்தூள்
மிளகாய்த்தூள்_2 டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
காய்ந்தமிளகாய்
கடலைப்பருப்பு
சீரகம்
வெந்தயம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீரில் ஊறவைக்கவும்.

வேகவைத்துள்ள கரணைக்கிழங்கு ஆறியதும் விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ள‌வும்.

பூண்டு உரித்துக்கொண்டு,வெங்காயம்,தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்.

குழம்பு வைக்கப்போகும் சட்டியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துக்கொள்ளவும்.

தாளிப்பு முடிந்ததும் வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

இவை வதங்கியதும் புளியை இரண்டுமூன்று தரம் கரைத்து ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் கரணைக்கிழங்கு துண்டுகளை குழம்பில் சேர்த்துவிட்டு கரண்டியால் ஒரு கிண்டுகிண்டி விடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து வாசனை வந்ததும் இறக்கிவிடலாம். இக்குழம்பு மற்ற புளிக்குழம்பு மாதிரி இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக இருக்கும். எனவே தண்ணீர் கொஞ்சம் கூடுதலாகக்கூட விடலாம்.

சாதத்துடன் இக்குழம்பு + அப்பளம், ம்ஹூம்….இக்குழம்பிலுள்ள காயையேத் தொட்டு சாப்பிட‌லாம்.

தயிர் சாதம், பழைய சாதத்துடன் சூப்பராக இருக்கும்.

குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 16 Comments »

பாவக்காய் புளிக்குழம்பு / Paavakkaai puli kuzhambu

paavakkaai

ஒருசில மாதங்கள் தவிர மற்ற எல்லா காலங்களிலும் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் விதவிதமான பாவக்காய்கள் வரும். நான் வாங்குவது படத்திலுள்ள இந்த பிஞ்சு பாவக்காய்தான்.

paavakkaai

விதைகளை நீக்க வேண்டிய அவசியம்கூட இருக்காது. பிஞ்சு பாவக்காய் நல்லதா அல்லது முற்றல் நல்லதான்னு தெரியவில்லை.

இதில் புளிக்குழம்பு,பொரியல் என எது செய்தாலும் பிடிக்கும்.

தேவையானவை:

பாவக்காய்_3
புளி_பெரிய கோலியளவு
சின்ன வெங்காயம்_7
தக்காளி_1
முழு பூண்டு_1
மஞ்சள்தூள்
மிளகாய்த்தூள்_2 டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
காய்ந்தமிளகாய்
கடலைப்பருப்பு
சீரகம்
வெந்தயம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீரில் ஊறவைக்கவும்.

பாவக்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொண்டு விதை இருந்தால் நீக்கி விடவும்.

பூண்டு உரித்துக்கொண்டு,வெங்காயம்,தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்.

குழம்பு வைக்கப்போகும் சட்டியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துக்கொள்ளவும்.

தாளிப்பு முடிந்ததும் வெங்காயம்,பூண்டு,தக்காளி,பாவக்காய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

காய்கள் வதங்கியதும் புளியை இரண்டுதரம் கரைத்து ஊற்றி,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து பாவக்காய் வெந்து,பொதுவாக‌ எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும்சமயம் இறக்கிவிடலாம். எங்க வீட்டு குழம்பில் எண்ணெய் மிதக்க சான்ஸே இல்லை.

paavakkaai pulikuzhambu

சாதம் & அப்பளம் அல்லது வ‌த்தலுடன் இந்த புளிக்குழம்பு சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
 
குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 12 Comments »

பாவக்காய் புளிக்குழம்பு / Paavakkaai puli kuzhambu

paavakkaai

ஒருசில மாதங்கள் தவிர மற்ற எல்லா காலங்களிலும் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் விதவிதமான பாவக்காய்கள் வரும். நான் வாங்குவது படத்திலுள்ள இந்த பிஞ்சு பாவக்காய்தான்.விதைகளை நீக்க வேண்டிய அவசியம்கூட இருக்காது. பிஞ்சு பாவக்காய் நல்லதா அல்லது முற்றல் நல்லதான்னு தெரியவில்லை.

இதில் புளிக்குழம்பு,பொரியல் என எது செய்தாலும் பிடிக்கும்.

paavakkaai

தேவையானவை:

பாவக்காய்_3
புளி_பெரிய கோலியளவு
சின்ன வெங்காயம்_7
தக்காளி_1
முழு பூண்டு_1
மஞ்சள்தூள்
மிளகாய்த்தூள்_2 டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
காய்ந்தமிளகாய்
கடலைப்பருப்பு
சீரகம்
வெந்தயம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீரில் ஊறவைக்கவும்.

பாவக்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொண்டு விதை இருந்தால் நீக்கி விடவும்.

பூண்டு உரித்துக்கொண்டு,வெங்காயம்,தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்.

குழம்பு வைக்கப்போகும் சட்டியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துக்கொள்ளவும்.

தாளிப்பு முடிந்ததும் வெங்காயம்,பூண்டு,தக்காளி,பாவக்காய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

காய்கள் வதங்கியதும் புளியை இரண்டுதரம் கரைத்து ஊற்றி,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து பாவக்காய் வெந்து,பொதுவாக‌ எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும்சமயம் இறக்கிவிடலாம். எங்க வீட்டு குழம்பில் எண்ணெய் மிதக்க சான்ஸே இல்லை.

paavakkaai pulikuzhambu

சாதம் & அப்பளம் அல்லது வ‌த்தலுடன் இந்த புளிக்குழம்பு சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 1 Comment »

பனீர் & பச்சைப்பட்டாணி குருமா / Paneer mutter masala

kurumakuruma

அவரவர் விருப்பம்போல் பனீரை தனியாகவோ அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்தோ குருமா செய்யலாம்.

தேவையானவை:

பனீர்_சுமார் 100 g
பச்சைப் பட்டாணி_1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1 பெரியது
இஞ்சி_சிறு துண்டு
பூண்டிதழ்_3
மிளகாய்த்தூள்_ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
எலுமிச்சை சாறு
கொத்துமல்லி தழை_ஒரு கொத்து
புதினா_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

அரைக்க:

தேங்காய் பத்தை_3
கசகசா_ஒரு டீஸ்பூன்
முந்திரி_2 (அல்லது) சிறிது பொட்டுக்கடலை

தாளிக்க:

எண்ணெய்
கிராம்பு_3
பட்டை_சிறு துண்டு
சீரகம்
பெருஞ்சீரகம்
வெந்தயம்_4 (வாசனைக்கு)

செய்முறை:

பச்சைப்பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிட‌வும்.

வெங்காயம்,தக்காளி இவற்றை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்..இஞ்சி & பூண்டு தட்டிக்கொள்ள‌வும்.

அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,முதலில் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

பிறகு வெங்காயம் & தக்காளி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம்போக நன்றாக வதக்கவும்.

அடுத்து பட்டாணியை சேர்த்து வதக்கிவிட்டு,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.

குருமா கொதி வருவதற்குள் ஒரு கடாய் அல்லது தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விடவும்.

பனீரை சிறுசிறு துண்டுகளாக்கி,எண்ணெய் சூடானதும் கடாயில் போட்டு,பனீரின் எல்லா பக்கங்களும் லேஸாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.அல்லது நறுக்கிய துண்டுகளை அப்படியேகூட‌ சேர்த்துக்கொள்ள‌லாம்.

குருமா கொதிக்க ஆரம்பித்ததும் பனீர் துண்டுகளை சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்க‌விடவும்.

குருமா நன்றாகக் கொதித்த பிறகு தேங்காய்,கஸகஸா,முந்திரி இவற்றை மைய அரைத்து குருமாவுடன் சேர்த்து கலக்கிவிடவும்.

எல்லாம் சேர்ந்து கொதித்ததும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி,புதினா சேர்த்து இறக்கவும்.

kuruma

இது சாதம்,சப்பாத்தி,பரோட்டா இவற்றிற்கு சூப்பராக இருக்கும்(இருந்தது).

அரைத்துவிட்ட மீன் குழம்பு/வறுத்தரைச்ச மீன் குழம்பு/Araithu vacha fish kuzhambu

மீன் குழம்பிற்கு சிறுசிறு மீன்களாக இருந்தால் நன்றாக இருக்கும்.நான் செய்திருப்பது நடுத்தர அளவிலான வெள்ளை வௌவால் மீனில்(White pomfret).இக்குழம்பை சாதாரண மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.

தேவையானவை:

மீன்_1
புளி_சிறு எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
பூண்டு_பாதி

வறுத்து அரைக்க:

கொத்துமல்லி விதை_2 கைப்பிடி
காய்ந்த மிளகாய்_5 (காரத்திற்கேற்ப கூட்டிக் குறைத்துக்கொள்ளவும்)
மிளகு_5
சீரகம்_1/2 டீஸ்பூன்
மஞ்சள்_சிறு துண்டு
வெந்தயம்_சிறிது
தேங்காய் பூ_2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
வெந்தயம்
கறிவேப்பிலை

செய்முறை:

மீனை சுத்தம் செய்து,துண்டுகளாக்கி,உப்புபோட்டு நன்றாகக் கழுவிவிட்டு நீரை வடிய வைக்கவும்.

புளியை மூழ்கும் அளவு தண்ணிரில் ஊற வைக்கவும்.

வறுத்து அரைக்க வேண்டியதை(மஞ்சள் தவிர்த்து)வெறும் வாணலில் தனித்தனியாக சிவக்க வறுக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடிக்கவும்.அல்லது தண்ணீர்விட்டு மைய அரைத்தெடுக்கவும்.

வெங்காயம்,பூண்டு உரித்து விருப்பம்போல் அரிந்து/தட்டி வைக்கவும்.தக்காளி நறுக்கி வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டு,தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் புளித்தண்ணீரைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றி,பொடித்து வைத்துள்ள பொடி/அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து,உப்பு போட்டு மூடி நன்றாக கொதிக்க வைக்கவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்தாற்போல் வரும்போது மீன் துண்டுகளைச் சேர்த்து,மிதமானத் தீயில் கொதிக்க விடவும்.தீ அதிகமானால் மீன் உடைந்துவிடும்.

ஒரு 5 நிமி கொதித்த பிறகு மீன் துண்டுகளைத் திருப்பிவிட்டு,மேலும் ஒன்றிரண்டு நிமி கொதிக்க விட்டு இறக்கிவிடவும்.

இது சாதம்,இட்லி,தோசை இவற்றுக்கு சூப்பராக இருக்கும்.

அசைவம், குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . 4 Comments »

அரைத்துவிட்ட வத்தக் குழம்பு

 

வத்தக் குழம்பு என்றாலே நினைவுக்கு வருவது சுண்டைக்காயும், மணத்தக்காளியும்தான்.அதேபோல் வத்தக்குழம்பிற்கான காய்கள் எனும்போது வெண்டை,கத்தரி,முருங்கை இவை நன்றாக இருக்கும்.

மசாலாவுக்குத் தேவையானதை வறுத்துப் பொடிப்பதால் நல்ல வாசனையுடன் இருக்கும்.பொடிப்பதற்குப் பதிலாக சிறிது தண்ணீர் தெளித்து அரைத்தும் செய்யலாம்.

தேவையானவை:

வெண்டைக்காய்_10
சின்ன வெங்காயம்_2
முழு பூண்டு_1

வறுத்து அரைக்க:

கொத்துமல்லி விதை_2 கைப்பிடி
சுண்டைக்காய் வத்த‌ல்_10 க்குள் (அ) மணத்தக்காளி வத்தல்_ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_4
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
மஞ்சள்_சிறுதுண்டு
மிளகு_5
சீரக்ம்_சிறிது
வெந்தயம்_சிறிது
துவரம்பருப்பு_சிறிது(விருப்பமானால்)
தேங்காய்ப் பத்தை_2
புளி_பெரிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை_சுமார் 10 இலைகள்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
சீரகம்
கடலைப்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

வெறும் வாணலியை அடுப்பிலேற்றி சூடாகியதும் முதலில் கொத்துமல்லி விதையைப் போட்டு வறுக்கவும்.அது பாதி வறுபடும்போதே  துவரம்பருப்பு, மிளகு சேர்த்து வறுக்கவும்.

இவை வறுபட்டதும் கூடவே காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை  சேர்த்து வறுத்து தனியாக‌ வைக்கவும்.

அதே வாணலில் தேங்காய்த் துருவலைப் போட்டு சிவக்க வறுத்து அதனுடன் புளியைச் சேர்த்து வதக்கி,தனியாக‌ வைக்கவும்.

மீண்டும் வாணலை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு முதலில் வெங்காயம் அடுத்து தக்காளி என சேர்த்து வதங்கியதும் இறக்கவும்.

இவை ஆறியதும் முதலில் கொத்துமல்லிக் கலவையை மிக்ஸியில் போட்டுப்  பொடிக்கவும்.இவை நன்கு பொடிந்ததும் அதனுடன் புளி&தேங்காய்த் துருவல் சேர்த்துப் பொடிக்கவும்.அடுத்து வெங்காயம்,தக்காளியைத் தனியாக அரைத்து வைக்கவும்.அல்லது இவை எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் தெளித்து மைய அரைத்தெடுக்கவும்.

குழம்பு செய்ய‌ வெங்காயம் நறுக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும். வெண்டைக்காயின் இரு முனைகளையும் நறுக்கிவிட்டு வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டு ,வெண்டைக்காயை நன்றாக வதக்கித் தனியாக வைக்கவும்.

பிறகு அந்தப் பாத்திரத்திலேயே மேலும் சிறிது எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து பொடித்துவைத்துள்ள பொடி,அரைத்துவைத்துள்ள வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கி தேவையானத் தண்ணீர் விட்டு,உப்பு போட்டு மூடி கொதிக்க வைக்கவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் மிதக்கும் சமயம் வெண்டைக்காயைச் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

கீழே படத்திலிருப்பது கத்தரிக்காய் சேர்த்த வத்தக்குழம்பு.

வறுத்தரைத்த சிக்கன் & டோஃபு (Tofu) குழம்பு

குறிப்பு:

சாம்பார்,குழம்பு,அசைவம் இவை செய்யும்போது மிளகாய்த்தூள் போட்டு செய்வதைவிட மிளகாய்த்தூளில் சேர்க்கப்படும் பொருள்களை வறுத்தரைத்து செய்யும்போது சுவையும்,மணமும் கூடுதலாக இருக்கும்.இந்தக் குழம்பை வெறும் சிக்கனிலோ அல்லது வெறும் டோஃபுவிலோ அல்லது காய்கறிகளிலோ கூட செய்துகொள்ளலாம்.

தேவையானவை:

சிக்கன் _ 2   chicken thighs  அல்லது 1 chicken breast
டோஃபு _ 1/3 பங்கு
சின்ன வெங்காயம் _சுமார் 10
தக்காளி_1
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_3 பற்கள்
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
கொத்துமல்லி ,புதினா _கொஞ்சம்
உப்பு_தேவைக்கு.

வறுத்தரைக்க:

கொத்துமல்லி விதை_3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
மிளகு_2 லிருந்து 5 க்குள்
சீரகம்_சிறிது
பெருஞ்சீரகம்_சிறிது
மஞ்சள்_ஒரு சிறு துண்டு
கசகசா_ஒரு டீஸ்பூன்
தேங்காய் பூ_ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)

தாளிக்க:

நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் _2 டீஸ்பூன்
கிராம்பு_2
பிரிஞ்சி இலை_1
சீரகம்
பெருஞ்சீரகம்
முந்திரி

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கிக் கழுவிவிட்டு,அதனுடன் சிறிது தயிர்,மஞ்சள் தூள்,சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து பிசறி வைக்கவும்.

வறுத்து அரைக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் நன்றாக அதே சமயம் கருகாமல் வறுத்துக்கொண்டு ஆற வைத்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து இஞ்சி,பூண்டு தட்டிக்கொண்டு,வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.

ஒரு  அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி சூடானதும் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு,இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி,பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

இவை நன்றாக வதங்கியதும் சிக்கனை சேர்த்து வதக்கவும்.

சிக்கன் வதங்கியதும் அதனுடன்,அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு,தேவையான உப்பும் சேர்த்து வதக்கவும்.

மசாலாவின் பச்சை வாசனை போனபிறகு,தேவையான தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க விடவும்.

இப்போது டோஃபுவை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொண்டு ஒரு    non stick pan ல் சிறிது ஆலிவ் ஆயில் விட்டு டோஃபுவின் எல்லா பக்கங்களும் சிவக்குமாறு  வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் டோஃபுவையும் சேர்த்து கிளறி விடவும்.

எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நன்றாகக் கொதித்து வ‌ந்ததும் எலுமிச்சை சாறு விட்டு கிளறி,கொத்துமல்லி,புதினா சேர்த்து இறக்கவும்.

இது சாதம்,சப்பாத்தி,நாண்,பரோட்டா,இடியாப்பம் இவறிற்கு நன்றாக இருக்கும்.

கருவாடு & சர்க்கரை வள்ளிக்கிழங்கு குழம்பு

தேவையானப் பொருள்கள்:

கருவாடு_சுமார் 10 எண்ணிக்கையில் (காரை,நீர்சுதும்பு,சென்னாவரை,சங்கரா,பாறை போன்றவை நன்றாக இருக்கும்)
வள்ளிக்கிழங்கு_2
புளி_பெரிய நெல்லிக் காய் அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_பாதி
முழு பூண்டு_1
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
வெந்தயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் கெட்டியாகக் கரைத்து வைக்கவும்.

கருவாட்டினை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நீரை வடிய வைக்கவும்.

சின்ன வெங்காயம் நறுக்கி(அ)தட்டி வைக்கவும்.தக்காளியை நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

வள்ளிக்கிழங்கை குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளலாம்.முதலிலேயே நறுக்கிவிட்டால் நிறம் மாறிவிடும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி,எண்ணெய் ஊற்றி சூடாகியதும் முதலில் வடகம்,அடுத்து வெந்தயம்,கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி வதக்கி, அடுத்து கருவாடு சேர்த்து வதக்கி,அடுத்து மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும்.பிறகு மூடி போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் கிழங்கை நறுக்கி குழம்பில் போட்டு கிளறி விட்டு மூடி கொதிக்க விடவும்.நன்றாகக் கொதித்து கிழங்கு வெந்த‌ பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.

இதில் காய் வெந்து ,குழைந்துவிடும் என்ற பிரச்சினை இல்லை.எவ்வளவு வெந்தாலும் நன்றாகவே இருக்கும்.

பிறகென்ன; சூடான சாதத்தில் போட்டு சாப்பிட வேண்டியதுதான்.குழம்பு ஆறியபிறகுதான் இன்னும் சுவையாக இருக்கும்.அடுத்த நாள்தான் அதற்கு மேலும் சுவையாக இருக்கும்.

மேலும் இக்குழம்பு இட்லி,தோசை போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.

கத்தரிக்காய் புளிக்குழம்பு

தேவையானப் பொருள்கள்:

கத்தரிக்காய்_7 லிருந்து 10 க்குள்
புளி_சிறு எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டு_பாதி அல்லது முழு பூண்டு
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
சீரகம்
கடலைப் பருப்பு
வெந்தயம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.ஊறியதும் தேவையானத் தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

குழம்பு சட்டியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றி,உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.

கொதி வருவதற்கிடையில் கத்தரிக்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.

கொதி வந்ததும் கத்தரிக்காயை குழம்பில் சேர்த்துக் கலக்கி விட்டு மீண்டும் மூடி கொதிக்க வைக்கவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து,காய் வெந்து,வாசனை வந்து,எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு:

வெங்காயம்,தக்காளி வதக்கிய பிறகு கத்தரிக்காயை சேர்த்து வதக்கியும் குழம்பு செய்யலாம்.

சுக்கு குழம்பு

சுக்கு,இஞ்சி,வெந்தய,சீரகக் குழம்பு போன்றவற்றிற்கு காய்கறி சேர்த்து வைக்கவேண்டாம்.என் அம்மா செய்யும்போது வெங்காயம்,தக்காளிகூட சேர்க்கமாட்டார்.அவ்வாறு செய்தால்தான் ஒவ்வொன்றின் வாசனையும்,சுவையும் கூடுதலாகத் தெரியும்.

தேவையானப் பொருள்கள்:

சுக்கு_ஒரு பெரிய துண்டு
புளி_பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_பாதி
பூண்டு_பாதி அல்லது முழு பூண்டு
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய் _2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் தேவையானத் தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளியை நறுக்கி வைக்கவும்.பூண்டை உரித்து வைக்கவும்.

சுக்கை நன்றாகப் பொடித்து வைக்கவும்.

குழம்பு சட்டியில்  எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு வெங்காயம்,தக்காளி,பூண்டு அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறிவிட்டு புளிக்கரைசல்,உப்பு சேர்த்துக் கிண்டிவிட்டு உப்பு,காரம் சரிபார்த்து மூடி,மிதமானத் தீயில் கொதிக்கவிடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது சுக்குப்பொடியை சேர்த்துக் கிளறிவிட்டு இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.முக்கியமாக பழைய சாதத்திற்கு அருமையாக இருக்கும்.