கீழே படத்தில் இருக்கும் கிழங்கைத்தான் நான் கரணைக்கிழங்கு மாதிரி என்று முன்பு ஒரு பதிவில் சொன்னேன். இது அந்தக்கிழங்கு இல்லைதான். இருந்தாலும் கரணைக்கிழங்கு வைத்து செய்யும் சமையலை இதை வைத்தே செய்துவிடுவேன். சாம்பார், பொரியல்கூட சூப்பராக வரும். நான் வாங்கியுள்ளது இருப்பதிலேயே சின்னக் கிழங்கு. மற்றதெல்லாம் பெரிசு பெரிசா இருக்கும்.
இதை வேகவைக்கும் முறையை ஏற்கனவே இங்கே சொல்லியுள்ளேன்.
தேவையானவை:
கரணைக் கிழங்கு_ படத்தில் இருப்பதில் 1/3 பங்கு
புளி_பெரிய கோலியளவு
சின்ன வெங்காயம்_7
தக்காளி_1
முழு பூண்டு_1
மஞ்சள்தூள்
மிளகாய்த்தூள்_2 டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
வடகம்
காய்ந்தமிளகாய்
கடலைப்பருப்பு
சீரகம்
வெந்தயம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
புளியை அது மூழ்கும் அளவு தண்ணீரில் ஊறவைக்கவும்.
வேகவைத்துள்ள கரணைக்கிழங்கு ஆறியதும் விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ளவும்.
பூண்டு உரித்துக்கொண்டு,வெங்காயம்,தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்.
குழம்பு வைக்கப்போகும் சட்டியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துக்கொள்ளவும்.
தாளிப்பு முடிந்ததும் வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை வதங்கியதும் புளியை இரண்டுமூன்று தரம் கரைத்து ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.
குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் கரணைக்கிழங்கு துண்டுகளை குழம்பில் சேர்த்துவிட்டு கரண்டியால் ஒரு கிண்டுகிண்டி விடவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து வாசனை வந்ததும் இறக்கிவிடலாம். இக்குழம்பு மற்ற புளிக்குழம்பு மாதிரி இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக இருக்கும். எனவே தண்ணீர் கொஞ்சம் கூடுதலாகக்கூட விடலாம்.
சாதத்துடன் இக்குழம்பு + அப்பளம், ம்ஹூம்….இக்குழம்பிலுள்ள காயையேத் தொட்டு சாப்பிடலாம்.
தயிர் சாதம், பழைய சாதத்துடன் சூப்பராக இருக்கும்.