இது உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு டிஃபன்.ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு தானியம் சாப்பிட வேண்டும் என்பதால் லிஸ்டில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
கேழ்வரகு சேமியா உப்புமா செய்வதில் பாதி வேலைகூட இதற்குத் தேவையில்லை.எண்ணெயும் சேர்க்காததால் மிகுந்த ஆரோக்கியமானதும்கூட.
ஒரு பாக்கெட் சேமியாவில் மூன்று பேருக்குக்குறையாமல் சாப்பிடலாம்.
செய்முறையை ஒரே வரியில் சொல்வதானால் சேமியாவில் உப்பு போட்டு ஊறவைத்து,நீரை வடித்துவிட்டு,இட்லிப் பாத்திரத்தில் வைத்து இட்லிகளாக சுட்டெடுக்கவும்.இதைத்தான் கீழே ஒரு பதிவாகக்கொடுத்துள்ளேன், புதியவர்களுக்கு உதவும் என்பதால்.
தேவையானவை:
அணில் சேமியா பாக்கெட் (200 g )_1
உப்பு_தேவைக்கு
செய்முறை:
கேழ்வரகு சேமியாவைப் பிரித்துக் கொட்டி(பாத்திரத்தில்தான்)இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு,பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறும்வரை ஊறவிடவும்.ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.
சேமியாவில் தண்ணீர் வடிந்ததும் பாத்திரத்தை நிமிர்த்திவிடவும்.சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும். அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.
பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் இட்லித்தட்டை வைத்து, அதன்மீது இட்லித் துணியைப்போடவும்.
இட்லிப் பாத்திரம் காய்ந்ததும் சேமியாவை கையால் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி ஒவ்வொரு குழியிலும் வைத்து மூடி வேக விடவும்.
ஆவி வந்து,வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
இது மிகவும் மிருதுவாகவே இருக்கும்.