எங்க வீட்டில் அடிக்கடி செய்யப்படும் திண்பண்டங்களில் கொழுக்கட்டையும் ஒன்று.விநாயகர் சதுர்த்திக்கு வாங்கிய சிவப்பரிசியில் சர்க்கரைப் பொங்கல், புட்டு,இடியாப்பம் எல்லாம் செய்தபிறகும் மீதமானதில் பிடிகொழுக்கட்டை செய்தேன்.நன்றாக இருந்தது.வாங்கினால் செய்து பார்க்கலாமே.
பல் முளைக்க ஆரம்பித்த குட்டிப் பிள்ளைகளுக்குச் செய்துகொடுத்தால்,அதன் இனிப்புச் சுவையினால்,கைகளில் வைத்துக்கொண்டு,விடாமல் அதைக் கடித்துக் குதப்பிக் கொண்டிருக்கும் அழகே அழகுதான்.
சாதாரண பச்சரிசிக்கும்,சிவப்பரிசியில் செய்வதற்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை.ஆனாலும் பச்சரிசியைவிட மென்மையாக இருக்கிறது. இடிப்பதும் எளிது.
தேவையானவை:
சிவப்புப் பச்சரிசி/மட்டரிசி_2 கப்
வெல்லம்_2 கப்
பச்சைப் பயறு_1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் கீற்று_1 (செய்த அன்று இல்லை என்பதால் சேர்க்கவில்லை)
எள்_1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்_1
உப்பு_துளிக்கும் குறைவாக(ருசிக்கு)
செய்முறை:
அரிசியைத் தண்ணீரில் ஊறவைத்து,நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் போட்டு நைஸான,ஈரமாவாக இடித்துக்கொண்டு, இட்லிப் பானையில் வைத்து அவித்து,ஆறியதும் உதிர்த்துக்கொள்ளவும்.
பச்சைப்பயறை சிவக்க வறுத்து,ஆறியதும் அதனுடன் வேகுமளவு தண்ணீர் விட்டு கிள்ளுப்பதமாக வேகவைத்து வடித்துக்கொள்ளவும்.அல்லது வறுத்த பச்சைப்பயறை அப்படியேகூட சேர்த்துக்கொள்ளலாம்.
தேங்காய் போடுவதாக இருந்தால் அதனை சிறுசிறு பல்லாகக் கீறி வெறும் வாணலிலோ அல்லது நெய் சேர்த்தோ நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
அதேபோல் எள்ளையும் வெறும் வாணலில் சூடுவர வறுத்துக்கொள்ளவும்.ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும்.
அவித்து,உதிர்த்து வைத்துள்ள மாவுடன்,பச்சைப்பயறு,தேங்காய்,எள், ஏலக்காய்,உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்குமளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.வெல்லம் கரைந்ததும் தூசு&மண் போக வடித்துக்கொண்டு மீண்டும் அடுப்பிலேற்றவும்.
வெல்லம் கரைந்து நுரைத்துக்கொண்டு கொதிக்கும்போது மாவுக்கலவையில் சிறிதுசிறிதாக ஊற்றி,மத்தின் அடிப்பகுதியால் நன்றாகக் கிண்டவும்.
நன்றாகக் கிண்டிய பிறகு ஆறும்வரை வைத்திருந்து,ஆறியதும் படத்திலுள்ளதுபோல் செய்துகொள்ளவும்.
சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கைகளில் வைத்து உருட்டி, உருண்டையாகவோ அல்லது உருண்டையை உள்ளங்கையில் வைத்து விரல்களால் அழுத்திப் பிடித்து,பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். இவ்வாறே எல்லா மாவையும் செய்து கொள்ளவும்.
இட்லிப் பாத்திரத்தை அடுப்பிலேற்றி இட்லி அவிப்பதுபோலவே இட்லிக்கொத்தில் ஈரத்துணியைப்போட்டு அது கொண்டமட்டும் கொழுக்கட்டைகளை ஒன்றன்மீது ஒன்று ஒட்டாமல் அடுக்கி வைத்து வேகவைக்கவும்.
மாவு ஏற்கனவே வெந்திருப்பதால் கொழுக்கட்டை சீக்கிரமே வெந்துவிடும். கொழுக்கட்டையைக் கையால் தொட்டுப்பார்த்து,கையில் ஒட்டாமல் இருந்தால் எடுத்துவிடலாம்.
இவ்வாறே எல்லா கொழுக்கட்டைகளையும் வேகவைத்தெடுக்கவும்.சூடாகவோ அல்லது ஆறிய பிறகோ சாப்பிடலாம்.
அளவு குறைவாக (small quantity) இருப்பதாலோ என்னவோ,முதல் நாளைவிட அடுத்த நாள்தான் சூப்பராக இருக்கும்.