சுண்டைக்காய் சாம்பார்

20150823_165106

ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக அதுவும் இந்த ஊரில் சுண்டைக்காயைப் பார்த்ததும் வாங்கி சாம்பார் வைத்து சாப்பிட்ட சந்தோஷத்தில் பதிவாகவும் போட்டுவிட்டேன் .

சின்ன வயசுல விரும்பி சாப்பிட்ட சாம்பாராச்சே !

இந்த சாம்பாருக்கு பெருஞ்சீரகம் சேர்த்து தாளிப்பதும், புளி சேர்க்காமல் செய்வதும்தான் வித்தியாசம்.

தேவையானவை :

துவரம் பருப்பு _ 1/4 கப்
சுண்டைக்காய் _ ஒரு கை
வெங்காயம்
தக்காளி
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
தேங்காய் பூ (விருப்பமானால்)
கொத்துமல்லி தழை
உப்பு

தாளிக்க :

எண்ணெய்
கடுகு
பெருஞ்சீரகம்
வெந்தயம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம்பருப்பை வேகவிடவும்.

வெங்காயம், தக்காளியை அரிந்துகொள்ளவும்.

20150826_072932

பருப்பு நன்றாக வெந்து வரும் சமயத்தில் சுண்டைக்காயைத் தண்ணீரில் நன்றாக அலசிவிட்டு இரண்டிரண்டாக அரிந்து  வெந்துகொண்டிருக்கும் பருப்பில் சேர்த்து வேகவிட்டு கடைந்துகொள்ளவும்.

சாம்பாருக்கான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி தாளித்துவிட்டு வெங்காயம், தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் இதில் கடைந்து வைத்துள்ள பருப்பு & சுண்டைக்காயை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும்.

சாம்பார் நன்றாகக் கொதித்தபின் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி போட்டு இறக்கவும்.

20150826_160540

சாம்பார் வைத்ததும் புகைப்படம் எடுக்க மறந்துபோய் கடைசியில் எடுத்ததால் ஹி ஹி 🙂 சாம்பாரின் அளவு குறைந்திருக்கிறது.

சாதம், இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சூப்பரா இருக்கும்.

சாம்பார் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 2 Comments »

முருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்

20150216_144222

சுவையான முருங்கைக்கீரை சூப்

எங்க வீட்டுத் தோட்டத்தில் முருங்கைக்கீரை மரம் எப்போதும் தளதளன்னு சூப்பரா இருக்கும். என்றாவது ஒருநாள் எங்கம்மா முருங்கைக்கீரையில் இந்த தண்ணி சாறு வைப்பாங்க. சுவை சொல்லிமாளாது.

20150216_144513

முருங்கைக்கீரை தண்ணி சாறு

சாதத்துடன் ரசம் மாதிரி சேர்த்து சாப்பிட சூப்பரா இருக்கும். இதிலுள்ள கீரை முதலானவற்றை வடித்துவிட்டு சூப் மாதிரி குடிக்கவும் நன்றாக இருக்கும்.

20140723_082526

இளம் பசுமையான துளிர் கீரை

தேவையானவை:

20150216_135837

தேவையானவை

முருங்கைக்கீரை _ ஒரு கிண்ணம்
சின்னவெங்காயம் _ 1 (ரொம்ப சின்னதா இருந்துச்சுன்னா மூன்றுநான்கு போட்டுக்கொள்ளலாம்)

பூண்டுப்பல் _ ஐந்தாறு . நன்றாகத் தட்டிக்கொள்ளவும்.

நன்கு பழுத்த தக்காளி _ 1
மஞ்சள் தூள் _ துளி
சாம்பார்தூள் _ துளி. மஞ்சள்தூளும், சாம்பார்தூளும் நிறத்திற்காகத்தான்
தேங்காய்ப்பூ(விருப்பமானால்) _ சிறிது
கொத்துமல்லி தழை _ கொஞ்சம்
உப்பு _ தேவைக்கு

தாளிப்புக்கு :

நல்லெண்ணெய்
மிளகு
சீரகம்
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்

செய்முறை :

கீரையைக் கழுவி நீரை வடிய விடவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இங்குள்ள ஒரு சமையல் ஷோவில், “தோலுடன் பூண்டுப்பல்லைத் தட்டிப் போட்டால்தான் முழு ஃப்ளேவர் கிடைக்கும்” என்றதால், அன்றிலிருந்து இன்றுவரை ‘ரொம்ம்ம்ப நல்லதாப் போச்சுன்னு எல்லா சமையலுக்குமே தோலுடனே அப்படியே தட்டிப் போட்டுவிடுவது.

ஒரு சட்டியை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகத்தைப் பொரியவிடவும். அப்போதுதான் மிளகின் காரம் சூப்பில் இறங்கும்.

அடுத்து காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு பூண்டு சேர்த்து பூண்டின் வாசம் வரும்வரை நன்றாக‌ வதக்கவும்.

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

இவை வதங்கியதும் கீரை சேர்த்து துவள வதக்கிவிட்டு இரண்டுமூன்று கிண்ணம் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். இப்போது மஞ்சள்தூள, சாம்பார்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

இரண்டு கொதி வந்த பிறகு தேங்காய்ப்பூ, கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

இனி சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதோ அல்லது சூப் மாதிரி குடிப்பதோ, உங்கள் விருப்பம்.

IMG_1367

முன்பொருமுறை உழவர் சந்தையில் வாங்கியது

 

வெண்டைக்காய் சாம்பார்

20140417_164123

ஒவ்வொரு சாம்பாருக்கும் ஒவ்வொரு சுவை உண்டு. அப்படித்தான் இந்த வெண்டைக்காய் சாம்பாரும். இதன் மண‌மும், சுவையும் அலாதியாக இருக்கும்.  பிஞ்சு வெண்டைக்காயாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும், பச்சையாக சாப்பிடவும்தான்.

வேண்டியவைகள்:

துவரம்பருப்பு _ 1/4 கப் (இரண்டு பேர் என்பதால் குறைத்துப் போட்டுள்ளேன்)

வெண்டைக்காய் _ சுமார் 10

சின்ன வெங்காயம் _ 2 ( ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரி கிடைக்கும். சில சமயங்களில் பெரிய வெங்காயம் அளவிலேயே இருக்கும். )

onion 20140511_162640

தக்காளி _ 1

புளி _ புளியங்கொட்டை அளவுதான் (கரைத்து சேர்க்காமல் அப்படியே எடுத்து சாம்பாரில் போட்டு, சாம்பார் ரெடியானதும் புளியை எடுத்துவிடுவேன்)

மிளகாய்த்தூள் _ 2 டீஸ்பூன் (காரத்திற்கேற்ப)

மஞ்சள்தூள்

சுவைக்காகத் தேங்காய்ப் பூ கொஞ்சம். இல்லையென்றாலும் பரவாயில்லை

கொத்துமல்லி தழை

உப்பு _ தேவைக்கு

தாளிக்க வேண்டியவை :

எண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
வெந்தயம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம் பருப்பை குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு பருப்பு வேகுமளவு தண்ணீர் விட்டு அதில் மஞ்சள்தூள் சிறிது, பூண்டுப்பல் இரண்டு, இரண்டுமூன்று சொட்டுகள் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு பருப்பை மலர வேகவைக்கவும்.

பருப்பு வேகுமுன் சில வேலைகளை முடித்துவைப்போம்.

வெண்டைக்காயைக் கழுவிக்கொண்டு, நேரமிருந்தால் பேப்பர் டவலால் துடைத்தும் வைக்கலாம். அரியும்போது தண்ணீர் துளிகளால் ஏற்படும் வழவழப்பு இல்லாமல் இருக்கும்.

20141108_131034

அதேபோல் வெங்காயம், தக்காளி இவற்றையும் கழுவிவிட்டு தேவையான அளவில் அரிந்துகொள்ளவும்.

அடுப்பில் குழம்புக்கான பாத்திரத்தை ஏற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்துவிட்டு, வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய் என ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.

வதங்கியதும் பருப்பைக் கடைந்து ஊற்றி தேவையான தண்ணீரையும் ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், புளி, உப்பு இவற்றையெல்லாம் சேர்த்து காரம், உப்பு சரியாக இருக்கிறதா என சுவை பார்த்து, வேண்டுமானல் இன்னும் கொஞ்சம் சேர்த்தும், அதிகமானால் ? …… சேர்க்கும்போதே கொஞ்சம் குறைவாக சேர்ப்பது நல்லது.

இப்போது மூடிவைத்து நன்றாகக் கொதித்து சாம்பார் வாசனை கமகம என வந்ததும் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி தழையைக் கிள்ளிப்போட்டும் இறக்கிவிடலாம்.

இப்போது வெண்டைக்காய் சாம்பார் சாதம், இட்லி, தோசை என எல்லாவற்றுக்கும் தயார்.

சாம்பார் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 10 Comments »

இட்லி சாம்பார் / Idli sambar

idli&sambaridli sambar

என்னதான் விதவிதமாக சாம்பார் வைத்து இட்லிக்கு தொட்டு அல்லது ஊற்றி சாப்பிட்டாலும் இட்லிக்கென தனியாக செய்யும் சாம்பார் மாதிரி வராது.பச்சைப் பருப்பை வேகவைத்து,சின்ன வெங்காயத்தை முழுசுமுழுசாகப் போட்டு,காய்கள் எதுவும் போடாமல்,கொஞ்சம் கூடுதலான மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சாம்பார் இட்லி,தோசைக்கு சூப்பர்.

காய் போட்டே தீருவேன் என அடம்பிடித்தால் காயின் வாசனை வராத அளவுக்கு சிறு கேரட் ஒன்று போடலாம்.

தேவையானவை:

பச்சைப்பருப்பு_1/4 கப்
சின்ன வெங்காயம்_சுமார் 10
பழுத்த,சிவந்த தக்காளி_1
பச்சை மிளகாய்_1
பூண்டிதழ்_2
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
அரிசி மாவு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
வெந்தயம்_நான்கைந்து(வாசனைக்கு)
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைப்பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்து,ஆறியதும் கழுவிவிட்டு,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,அதில் விளக்கெண்ணெய் 2 சொட்டு,பெருங்காயம், மஞ்சள்தூள்,பூண்டிதழ்கள் சேர்த்து மலர வேக வைத்து கடைந்து வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் இவற்றை நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை லேசாகத் தட்டி முழுதாகக்கூட போடலாம்.

ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் பருப்பை சேர்த்துவிட்டுத் தேவையானத் தண்ணீர் விட்டு மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலக்கிவிட்டு மூடி கொதிக்க வைக்கவும்.

நன்றாகக் கொதித்தபிறகு அரிசி மாவில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து சாம்பாரில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.

idli sambar

அரிசி மாவு இல்லாவிட்டால் (எங்க அம்மா செய்வது) இட்லி மாவில் சிறிது எடுத்து சாம்பாரில் விட்டு கலக்கிவிட்டும் கொதிக்கவைத்து இறக்க‌லாம்.

இது இட்லி,தோசை,பொங்கல் இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.

வெங்காயத் தாள் சாம்பார்/Green onion sambar/Spring onion sambar

sambar

வெங்காயத் தாள் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் சீஸனில் மட்டுமே வரும்.கீழே படத்திலுள்ளதுபோல் இரண்டு விதமாகக் கிடைக்கும்.மெல்லியதாக,புல் மாதிரியான தாள், இது மிகவும் பிடிக்கும்.இது இல்லை என்றால் மட்டுமே பெரிய தாள் வாங்குவேன்.வெங்காயத் தாளை சாதாரண வெங்காயம் மாதிரியே சாம்பார்,பொரியல்,கூட்டு,குருமா என எல்லாவற்றிலும் சேர்க்கலாம்.

சாம்பார் வைக்கும்போது மட்டும் புளி சேர்க்காமலும்,தாளிப்பில் சிறிது பெருஞ்சீரகமும் சேர்த்தால் சூப்பராக இருக்கும்.

green onion green onion

தேவையானவை:

துவரம் பருப்பு_1/4 கப்
வெங்காயத் தாள்_1/2 கட்டு
சின்ன வெங்காயம்_ஒரு ஏழெட்டு
தக்காளி_1
பச்சை மிளகாய்_1
பூண்டுப்பல்_2
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன் (போட மறந்தாச்சு)
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
வெந்தயம்_நான்கைந்து (வாசனைக்கு)
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம் பருப்பைக் கழுவிவிட்டு,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம்,2 பூண்டிதழ் சேர்த்து மலர வேகவைக்கவும்.

வெங்காயத் தாளின் வேரை மட்டும் நறுக்கித் தள்ளிவிட்டு,மீதமுள்ள பகுதியைக் கழுவிவிட்டு,விருப்பமான நீளத்தில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம்,தக்காளியைப் பொடியாக‌வும்.பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.

குழம்பு வைக்கப்போகும் பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி,வெங்காயத் தாள் என அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் பருப்பைக் கடைந்து ஊற்றவும்.திட்டமாகத் தண்ணீர் ஊற்றி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துக் கொதிக்க விட‌வும்.

நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப்பூ,கொத்துமல்லி தூவி இறக்கவும்.மற்ற சாம்பார்போல் நீண்ட நேரம் கொதிக்கத் தேவையில்லை.

இப்போது நல்ல சுவையான‌ சாம்பார் ரெடி.இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.இட்லி,தோசையுடனும் பொருத்தமாக இருக்கும்.

சாம்பார் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 13 Comments »

கோஸ் சாம்பார்/Cabbage sambar

kos sambar

முருங்கைக்கீரை சாம்பார்,முருங்கைக்கீரை&வாழைப்பூ சாம்பார்,கோஸ் சாம்பார் இவை செய்யும்போது கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்தால் சூப்பரா இருக்கும்.

தாளிக்கும்போது பெருஞ்சீரகம் சிறிது சேர்த்தும்,புளி சேர்க்காமலும் செய்ய வேண்டும்.மேலும் சாம்பார் நீர்த்து இருக்க வேண்டும்.சாதத்துடன் சாதாரன சாம்பார்போல் இல்லாமல் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட வேண்டும்.

தேவையானவை:

துவரம் பருப்பு_1/4 கப்
கோஸ்_ஒரு சிறு பூவில் பாதி
சின்ன வெங்காயம்_ஒரு ஏழெட்டு
தக்காளி_1
பூண்டுப்பல்_2
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம் பருப்பைக் கழுவிவிட்டு,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம்,2 பூண்டிதழ் சேர்த்து மலர வேகவைக்கவும்.

cabbagecabbage

தேவையான கோஸ் இலைகளைப் பிரித்துக் கழுவிவிட்டு,தண்ணீர் வடிய வைத்த பிறகு,மெல்லிய அளவில் நறுக்கிக்கொள்ளவும்.நான் நீளநீளமாக நறுக்கிக்கொள்வேன்.வெங்காயம்,தக்காளி நறுக்கிக்கொள்ளவும்.

குழம்பு வைக்கப்போகும் பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுக்காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,வெங்காயம், தக்காளி அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் பருப்பைக் கடைந்து ஊற்றவும்.தேவையான தண்ணீர் சேர்த்துக்கொண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.

நன்றாகக் கொதித்த பிறகு கோஸ் சேர்த்துக் கிளறிவிடவும்.கோஸ் சீக்கிரமே வெந்துவிடும்.கோஸ் சேர்த்த பிறகு,சாம்பார் கொதிக்க ஆரம்பித்து ஒரு 5 நிமிடம் கழித்து, தேங்காய்ப்பூ, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

கோஸ் சேர்த்த பிறகு மூடி போடாமல் கொதிக்க விட்டால் அதன் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.

இப்போது கமகம வாசனையுள்ள சாம்பார் ரெடி.இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

சாம்பார் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 10 Comments »

அரைத்துவிட்ட சாம்பார்

மிளகாய்த்தூள் அரைக்கப் பயன்படுத்தும் அதே பொருள்களை வைத்து ஒரு நாள் சாம்பாருக்குத் தேவையானதை வறுத்துப் பொடித்து செய்கிறோம். அவ்வளவே. புதிதாக,வறுத்துப் பொடிக்கும்போது அதன் சுவையே தனிதான்.ஒரு காய் அல்லது பல காய்கள்,கிழங்குகள்,காய்ந்த பீன்ஸ் வகைகள் சேர்த்தும் செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

துவரம்பருப்பு_1/2 கப்
விருப்பமான காய்கறிகள்_தேவையான அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டிதழ்_2
புளி_கோலியளவு
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
வெந்தயம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

வறுத்துப் பொடிக்க:

கொத்துமல்லி விதை_2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2 (காரம் விரும்பினால் கூட ஒன்று சேர்த்துக்கொள்ளலாம்)
மிளகு_2
சீரகம்_1/2 டீஸ்பூன்
வெந்தயம்_சிறிது
கடலைப்பருப்பு_சிறிது
உளுந்து_சிறிது
கறிவேப்பிலை_சிறிது
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்_சிறுதுண்டு

செய்முறை:

துவரம் பருப்பில் சிறிது விளக்கெண்ணெய் விட்டு கூடவே பூண்டு,சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்.

வெறும் வாணலியை அடுப்பிலேற்றி வறுத்துப் பொடிக்க‌ வேண்டியவைகளை (மஞ்சள் தவிர) தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொள்ளவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு தூளாக,நைஸாக இடித்துக்கொள்ளலாம். அல்லது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி,காய்கறிகள் இவற்றை விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ளவும்.

புளி கரையும் அளவிற்கு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.

குழம்பு பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியவற்றைத் தாளிக்கவும்.

தாளிப்பு முடிந்ததும் வெங்காயம்,தக்காளி,காய்கறிகளை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி,பொடித்துவைத்துள்ள பொடியைச் சேர்த்துக் கிளறிவிட்டு,உப்பு சேர்த்து,பருப்பைக் கடைந்து ஊற்றி மூடி கொதிக்க வைக்கவும்.

உருளைக்கிழங்கு  போன்ற எளிதாக வேகக்கூடிய காய்களை சேர்ப்பதாக இருந்தால் சாம்பார் ஒரு கொதி வந்தபிறகு போடலாம். புரோக்கலி, கீரைவகைகள் போன்றவற்றை  சாம்பாரை இறக்குமுன் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கலாம். காய்ந்த பீன்ஸ் வகைகள் என்றால் முதல் நாளிரவே ஊறவைத்து,வேகவைத்து சேர்த்துவிடவும்.

சாம்பாரிலுள்ள காய்கள் வெந்ததும் புளித்தண்ணீரைச் சேர்த்து, கொதித்த பிறகு கொத்துமல்லை இலை சேர்த்து இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை,பொங்கல் போன்றவற்றிற்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

வாழைப்பூ & முருங்கைக்கீரை சாம்பார்

சில காய்கறிகளின் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.(உ.ம்) கேரட்,பீன்ஸ் சாம்பார்;மாங்காய்,முருங்கைக்காய் சாம்பார்;கருவாடு,கத்தரிக்காய் போன்று. அந்த வரிசையில் வாழைப்பூ சமையலாக இருந்தால் அதனுடன் அகத்திக்கீரை சேர்த்து சாம்பார்,பொரியல்,கூட்டு என செய்வார்கள்.வாழைப்பூவின் துவர்ப்பும், அகத்திக்கீரையின் கசப்பும் சேர்ந்து சூப்பர் சுவையுடன் இருக்கும்.அகத்திக்கீரை இல்லாமல் போனால் முருங்கைக்கீரை சேர்த்து சமைப்பார்கள்.இங்கு என்றாவது  வாழைப்பூவையாவது பார்க்கலாம்.அகத்திக்கீரையைப் பார்த்ததே இல்லை. ஒருவேளை ஃப்ரோசன்  செக் ஷ‌னில் கிடைக்குமா தெரியவில்லை.

வாழைப்பூ & முருங்கைக்கீரைப் பொரியல் செய்முறைக்கு  இங்கே  செல்லவும்

தேவையானப் பொருள்கள்:

துவரம் பருப்பு_1/2 கப்
வாழைப்பூ_பாதி
முருங்கைக் கீரை_ஒரு கிண்ணம் (அதிகமாகவும் சேர்க்கலாம்)
சின்ன வெங்காயம்_ஒரு ஏழெட்டு
தக்காளி_1
பூண்டுப்பல்_2
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு குக்கரில் (அ) பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு அடுப்பிலேற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்து ஆறியதும் பூவைப் பிழிந்து வைக்கவும்.

கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி,ப.மிளகாய் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.

தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.சாம்பர் நீர்க்க இருக்க வேண்டும்.

சாம்பார் ஒரு கொதி வந்ததும் வாழைப்பூவைப் போட்டு மூடி வேக வைக்கவும்.

சாம்பார் நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு (மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ,கொத்துமல்லி  இலை சேர்த்து இறக்கவும்.

இப்போது வாழைப்பூ & முருங்கைக்கீரை சாம்பார் தயார்.

இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

முருங்கைக்கீரை சாம்பார்

முருங்கைக்கீரை சாம்பாரை நீர்க்க வைத்தால்தான் நன்றாக இருக்கும்.முருங்கைக்கீரையுட‌ன் புளி சேர்த்தால் நன்றாக இருக்காது என்பதால் சேர்க்க வேண்டாம்.காய்கறிகள் சேர்க்காததால் உப்பு,காரம் இவற்றைக் குறைத்துப் போட வேண்டும்.கீரை எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்த்க்கொள்ளலாம்.பெருஞ்சீரகம் முக்கியம்.

தேவையானப் பொருள்கள்:

துவரம்பருப்பு_1/4 கப்
முருங்கைக்கீரை_ஒரு கிண்ணம்
சின்ன வெங்காயம்_5
தக்காளி_பாதி
பச்சைமிளகாய்_1
பூண்டுப்பல்_2
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_ஒன்றரை டீஸ்பூன்
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்_சிறிது
காய்ந்தமிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு குக்கரில்(அ)பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.

தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொள்ளலாம்.

நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு(மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும்.

இப்போது முருங்கைக்கீரை சாம்பார் தயார்.

இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

பொரிச்ச குழம்பு

பொரிச்ச குழம்பை பீர்க்கங்காய்,அவரைக்காய்,பிஞ்சு கத்தரிக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

துவரம்பருப்பு_1/2 கப்
பீர்க்கங்காய்_1
சின்னவெங்காயம்_7
தக்காளி_1
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய்_4 (காரம் விரும்பினால் கூட 1 அல்லது 2 மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்)
உளுந்து_ஒரு டீஸ்பூன்
சீரகம்_ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம்பருப்பை நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

வெறும் வாணலியை அடுப்பில் ஏற்றி மிதமானத் தீயில் வறுத்து அரைக்க வேண்டியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தனித்தனியாக சிவக்க வறுக்கவும். மிளகாய் கருகாமல் இருக்க வேண்டும்.

இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

பீர்க்கங்காயை விரும்பிய வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.பீர்க்கங்காயை நறுக்கும்போது சுவைத்துப் பார்க்க வேண்டும்.நன்றாக இருந்தால் மட்டுமே குழம்பில் சேர்க்க வேண்டும்.ஏனெனில் சில காய்கள் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.அது குழம்பையே கெடுத்துவிடும்.

வெங்காயம்,தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

குழம்பு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்.

எல்லாம் வதங்கியதும் வறுத்து அரைத்து வைத்துள்ளதை சேர்த்து சிறிது வதக்கி பருப்பைக் கரைத்து ஊற்றவும்.

தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.இக்குழம்பு சாம்பாரைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்கட்டும்.

இப்போது மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து மூடி போட்டு காய் வேகும்வரை கொதிக்கவிடவும்.

காய் வெந்து வாசனை வந்த பிறகு இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை,வெண்பொங்கல்,சப்பாத்தி இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.

முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.