முளைகட்டிய பச்சைபயறு சுண்டல்

sundal

படத்திலுள்ள முளைகட்டிய பயறில் பாதியைத்தான் வேக வைத்தேன். எங்க வீட்டில் என்னைத் தவிர பச்சைபயறு சுண்டல் சாப்பிட ஆளில்லை. இரண்டு குட்டிக் கிண்ணங்களில் நிரப்பி வச்சிருக்கேன். முதலில் வரும் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு கிண்ணம் சுண்டல் வழ‌ங்கப்படும்.

நான் எப்போதும் முளைகட்டிய பச்சைபயறை அப்படியே சாப்பிட்டுவிடுவேன்.  இது எனக்கு ரொம்பவே பிடிக்கும். முதல் முறையாக காமாக்ஷிமாவின் முளைகட்டிய பச்சைபயறு சுண்டலை முயற்சித்திருக்கிறேன். நன்றாக இருந்தது. அதிலும் இட்லி தட்டில் வேக வைத்ததால் எந்த சத்துகளும் வீணாகாமல் இருப்பது பிடித்தது. முடிந்தால் நீங்களும் முயற்சிக்கலாமே!

அவர்கள் செய்த மாதிரியேதான் செய்தேன், ஆனால் தாளிப்பு மட்டும் செய்யவில்லை.

sundal

முழு பச்சைபயறை முதல் நாள் இரவு நன்றாகக் கழுவிவிட்டு,மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, நன்றாக ஊறியதும் அடுத்த நாள் இரவு ஒரு பௌளில், ஈரத்துணி அல்லது ஈர பேப்பர் டவலில் மூடி வைத்து, காலையில் பார்த்தால் எல்லா பயறும் முளைகட்டியிருக்கும். இதையே சுண்டலுக்கு பயன்படுத்திக்கொள்வோம்.

தேவையானவை:

முளைகட்டிய பச்சைபயறு _ ஒரு நபருக்கு ஒரு பிடி

உப்பு (நான் சேர்க்கவில்லை.விருப்பமானால் வேகவைக்கும்போது லேஸாக தூவிவிடவும்)

அலங்கரிக்க:

தேங்காய்ப் பூ
கேரட்
இஞ்சி துருவல்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்துமல்லி
வறுத்த முந்திரி, வேக வைத்த கருப்பரிசி போன்று இன்னும் உங்களுக்கு விருப்பமானவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

இட்லி அவிப்பதுபோலவே வேகவைக்க வேண்டும். இட்லி பாத்திரத்தை அடுப்பிலேற்றி, காய்ந்ததும் இட்லி தட்டை வைத்து, அதில் ஈரத்துணியைப் போட்டு, குழிகளில் பயறை நிரப்பி, மூடி வேக வைக்கவும். பயறு அதிகமாக இருந்தால் தட்டு முழுவதும் பரப்பி விடலாம்.

ஐந்தாறு நிமிடங்களிலேயே வெந்துவிட்டது.

sundalsundal

வெந்த பயறை எடுத்துகொட்டி, தாளித்து, அலங்கரிக்கக் கொடுத்துள்ளவைகளைச் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

விருப்பமானால் ஒன்றிரண்டு துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

 

சுண்டல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 18 Comments »

கருப்பரிசி சுண்டல் / Black rice sundal

 

sundalsundal

கருப்பரிசி சாதத்தை அதன் நிறத்தினால் கொஞ்சம் (கொஞ்சம்தானா!!) சாப்பிடப் பிடிக்காதுதான்.அதனால் அதனை படத்திலுள்ளவாறு சுண்டல் / சாலட் மாதிரி செய்து சாப்பிட்டு பார்ப்போமே!

தேவையானவையை மட்டும் எழுதுகிறேன்.அதன் அளவுகளை உங்கள் விருப்பம்போல் கூட்டியோ,குறைத்தோ கலந்துகொள்ளலாம்.

கருப்பரிசி சாதம்
ஊறவைத்து வேக வைத்த ஏதாவதொரு கடலை
வேக வைத்த சோள முத்துகள்
முளைகட்டிய பாசிப்பயறு (இல்லை என்பதால் சேர்க்கவில்லை)

அலங்கரிக்க:

மெல்லிய அளவில் நறுக்கிய கேரட்
பொடியாக நறுக்கிய மாங்காய் (சேர்க்க மறந்தாச்சு)
பொடியாக நறுக்கிய வெங்காயம்
தேங்காய்ப் பூ
பச்சை மிளகாய்
கொத்துமல்லி இலை
உப்பு(தேவையானால்)

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு பௌளில் சாதம்,கடலை,சோளம்  இவற்றை ஒன்றாகக் கலந்து உப்பு தேவையானால் சிறிது தூவிவிட்டு, தாளிக்க வேண்டியதைத் தாளித்து சாதக்கலவையில் கொட்டிக்கிளறி, கடைசியில் அலங்கரிக்கக் கொடுத்துள்ளவற்றை எல்லாம் போட்டுக் கலந்து சாப்பிட வேண்டியதுதான்.

விருப்பமானால் சிறிது எலுமிச்சை சாறு கலந்துகொள்ள‌லாம்.

என்னால் முடிந்தவரை கலந்து கொடுத்திருக்கிறேன்.மேற்கொண்டு சுண்டலை கலர்ஃபுல் ஆக்கி வீட்டில் உள்ள‌வர்களை சாப்பிட வைப்பது உங்கள் பொறுப்பு……..

சுண்டல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 10 Comments »

பெரும்பயறு சுண்டல் (Black eye beans)

தேவையானப் பொருள்கள்:

பெரும்பயறு_மூன்று கையளவு (ஒரு நபருக்கு ஒரு கை)
சின்ன வெங்காயம்_2
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பெரும்பயறை ஊற வைக்க வேண்டுமென்பதில்லை.அப்படியேகூட வேக வைக்கலாம்.தேவையானப் பயறை ஒரு குக்கரில் அல்லது ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி,உப்பு போட்டு வேக வைக்கவும்.

அல்லது ஊற வைத்து செய்வதாக இருந்தால்,நன்றாக ஊறியதும் குக்கரில் வைக்காமல் ஒரு பாத்திரத்தில் பயறு மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி,உப்பு போட்டு வேக வைக்கலாம்.சீக்கிரமே வெந்துவிடும்.

நன்றாக வெந்ததும் (குழைய விட‌ வேண்டாம்) தண்ணீரை வடித்துவிடவும்.

ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.

தாளிப்பு முடிந்ததும் கொத்துமல்லி இலை,சின்ன வெங்காயம் இவற்றைப் பொடியாக நறுக்கிக் கலந்து சாப்பிட வேண்டியதுதான்.

இப்போது பெரும்பயறு சுண்டல் தயார்.

பட்டாணி சுண்டல்

தேவையானப் பொருள்கள்:

பட்டாணி_1 கப் ( Yellow peas  )
உப்பு_தேவையான அளவு
சின்ன வெங்காயம்_2
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

தாளிக்க:

எண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும்.ஊறிய பிறகு நன்றாகக் கழுவி நீரை வடித்துவிட்டு உப்பு போட்டு வேக வைக்கவும்.நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.லேசாக வதக்கினால் போதும்.அடுத்து சுண்டலைக் கொட்டி சூடேறும் வரைக் கிளறிவிட்டு,தேங்காய்ப் பூ,கொத்துமல்லி தூவி இறக்கவும்.மாங்காயைக் கூட சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கிப் போடலாம். (இதில் தேங்காய்,மாங்காய் இரண்டுமே இல்லாததால் போடவில்லை).

மொச்சைப் பொரியல் (அ) மொச்சை காரச் சுண்டல்

தேவையானவை:

மொச்சை_3 கைப்பிடி
சின்ன வெங்காயம்_1
பூண்டு_3 பற்கள்
மிளகாய்த் தூள்_1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
எலுமிச்சை சாறு _1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

மொச்சையை முதல் நாளே ஊற வைக்கவும்.இப்போது சிறிது உப்பு போட்டு வேக வைத்து நீரை வடித்து விடவும்.சின்ன வெங்காயம்,பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்க உள்ளவற்றைத் தாளித்து சின்ன வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு மொச்சையை சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு,சேர்த்துக் கிளறி சிறிதுத் தண்ணீர் தெளித்து  மிதமானத் தீயில் சிறிது நேரம் மூடி வைக்கவும்.பிறகு சிறிது எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

கொண்டைக்கடலை சுண்டல்

 

தேவை:

கொண்டைக்கடலை_1 கப்
உப்பு_தேவையான அளவு
சின்ன வெங்காயம்_1

தாளிக்க:

எண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும்.ஊறிய பிறகு நன்றாகக் கழுவி உப்பு போட்டு வேக வைக்கவும்.நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விடவேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.பிறகு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சுண்டலில் கலந்து சாப்பிட சுவை கூடும்.

மொச்சை சுண்டல்

 

தேவை:

மொச்சை_1 கப்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

மொச்சையை முதல் நாளே ஊற வைத்துவிட வேண்டும்.ஊறிய பிறகு நன்றாகக் கழுவி உப்பு போட்டு வேக வைக்கவும்.நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விட வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.இதை மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ் ஆகக் கொடுக்கலாம்.

சிற்றுண்டி வகைகள், சுண்டல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

வேர்க்கடலை சுண்டல்

 

தேவை:

வேர்க்கடலை_1 கப்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

கடுகு_கொஞ்சம்
உளுந்து_கொஞ்சம்
சீரகம்_கொஞ்சம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
சின்ன வெங்காயம்_1
கறிவேப்பிலை_5 இலைகள்
தேங்காய்ப்பூ_1 டீஸ்பூன்
எண்ணெய்_1/2 டீஸ்பூன்

செய்முறை:

வேர்க் கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும்.அடுத்த நாள் அதை நன்றாக கழுவி  விட்டு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.நன்கு வெந்ததும் நீரை வடித்து விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,சீரகம்,காய்ந்த மிளகாய்,பெருங்காயம்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தாளித்து கடைசியில் சின்ன வெங்காயம் சேர்த்து உடனே சுண்டலில் கொட்டிக் கிளறவும். பரிமாறும்போது தேங்காய்ப் பூ சேர்க்கலாம்.

சுண்டல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »