தயிர்

IMG_4663

என்னதான் தயிர், மோர் என கடையில் வாங்கினாலும் நாமே வீட்டில் தயாரிக்கும் தயிர்போல வராது. கூழ், பழைய சாதம் இவற்றில் சேர்த்து சாப்பிடும்போது ……… ஆஹா …… இன்னும் சுவை கூடுதலாக இருக்கும் ! குடிக்க நீர் மோர், தாளித்த மோர்   ,   மோர்க் குழம்பு    என கலக்கிடலாம். அடிக்கிற வெயிலுக்கும் இதமாக இருக்கும்.

தேவையானவை:

பால்
உறை

செய்முறை:

பாலை (ஹோல் மில்க் அல்லது 2% மில்க் எதுவாக இருந்தாலும்) நன்றாகக் கொதிக்கவிட்டு காய்ச்சி மிதமான சூடு வரும்வரை ஆறவைத்து உறையை ஊற்றி அல்லது உறை உள்ள கிண்ணத்தில் காய்ச்சிய பாலை ஊற்றி நன்றாகக் கலக்கி மூடி கதகதப்பான இடத்தில் வைக்கவும்.

இரவு வைத்து காலையில் பார்க்கும்போது பால்,  தயிராகி கெட்டியாக இருக்க வேண்டும்.

நம் ஊராக இருந்தால் காலையில் உறை ஊற்றி வைத்தால் மதியமே பால், தயிராகி சாப்பாட்டுக்குத் தயாராக இருக்கும்.

கீழே எங்க வீட்டுப் பால் தயிரானதைப் பார்ப்போமே !!

thayir

அடுப்பில் பால் காய்ந்து ஆறிக்கொண்டிருக்கிறது. தேவையான உறையை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துள்ளேன்.

 

thayir

மிதமான சூட்டில் உள்ள பாலை எடுத்து உறையுள்ள கிண்ணத்தில் ஊற்றி நன்றாகக் கலக்கி விட்டு நன்கு இறுக மூடி கதகதப்பான இடத்தில் வைக்கப் போகிறேன். நம் ஊராக இருந்தால் உறையை விட்டுவிட்டாலே போதும், கலக்கிவிட வேண்டிய அவசியமிருக்காது.

 

thayir

காலையில் கிண்ணத்தை எடுத்துத் ……….

 

thayir

திறந்து பார்த்தால் ……. வாவ் …… தயிர் தயாராயிடுச்சு.

 IMG_4661

பிறகென்ன ….. மதியம் சாதத்தில் போட்டு சாப்பிட வேண்டியதுதான் !

தயிர் & மோர் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 15 Comments »

நீர் மோர்_குடிக்க‌; தாளித்த மோர்_சாதத்துடன் சாப்பிட‌

                                

நீர்மோர்,தாளித்த மோர் இரண்டின் செய்முறையும் ஒன்றுதான்.தாளித்த மோருக்கு எக்ஸ்ட்ராவாக தாளிதம் செய்கிறோம்.அவ்வளவே.முதலில் நீர்மோர் செய்து குடித்துவிட்டு தெம்பாக அடுத்து தாளித்த மோர் பற்றி பார்க்கலாம்.

நீர்மோர்_தேவையானவை:

தயிர்_இரண்டு டேபிள்ஸ்பூன்
தண்ணீர்_இரண்டு டம்ளர்
உப்பு_தேவைக்கு
பெருங்காயத்தூள்_துளிக்கும் குறைவாக‌
வெறும் வாணலில் வறுத்துப்பொடித்த வெந்தயத்தூள்_துளிக்கும் குறைவாக‌
வெறும் வாணலில் வறுத்துப்பொடித்த சீரகத்தூள்_துளிக்கும் குறைவாக‌
இஞ்சி_சிறு துண்டு
கறிவேப்பிலை_ஒன்றிரண்டு இலைகள்
கொத்துமல்லி இலை_ஒன்றிரண்டு இலைகள்

செய்முறை:

தயிரை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் கட்டிகளில்லாமல் வந்துவிடும்.அல்லது கரண்டியைக்கூட பயன்படுத்தலாம். அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நம்ம ஊரில் டீ,காஃபி ஆத்துவோமே அதுமாதிரி இரண்டு ஆத்து ஆத்தவும்.

இதனுடன் மேலே கொடுத்துள்ளத் தேவையானப் பொருள்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இப்போது சுவையான நீர்மோர் குடிக்கத் தயார்.

பிறகு விருப்பமானவற்றில்(கப்,டம்ளர் போன்றவை)ஊற்றி குடிக்கலாம்.

தாளித்த மோர்_தேவையானவை:

நீர்மோர்_ஒரு கப்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்தமிளகாய் அல்லது பச்சை மிளகாய்

(பெருங்காயம்,கறிவேப்பிலை இரண்டும் நீர்மோரிலேயே இருப்பதால் போடவேண்டுமென்பதில்லை.விருப்பமானால் இவற்றையும் சேர்த்துத் தாளித்துக்கொள்ளலாம்)

செய்முறை:

தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து மோரில் கொட்டிக்கலக்கவும்.

இதனை சாதத்துடன் ரசம் மாதிரி ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.உடன் உருளைக்கிழங்கு பொரியல் அல்லது துவையல் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

மோர்க் குழம்பு

தேவையானப் பொருள்கள்:

தயிர்_1/2  கப்

செளசெள_1 கப் (நறுக்கியது)

துவரம் பருப்பு_1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்

சீரகம்_1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய்_1

மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்

பெருங்காயம்_சிறிது

உப்பு_ தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்

கடுகு

உளுந்து

சீரகம்

ஓமம்_கொஞ்சம்(வாசனைக்கு)

மணத்தக்காளி வற்றல்_கொஞ்சம்

காய்ந்த மிளகாய்_1

பெருங்காயம்_சிறிது

கறிவேப்பிலை_1 கொத்து

செய்முறை:

பருப்புகள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் சிவக்க வறுத்து வைக்கவும்.அதே சூட்டில் சீரகத்தைப் போட்டு வறுத்துக்கொள்ளவும். பருப்புகளைத் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.அது ஊறுவதற்குள் செளசெள காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.வெந்ததும் தண்ணீரை வடித்து விடவும்.

பருப்புகள் நன்றாக ஊறியவுடன் மிக்ஸியில் போட்டு தேவையானத் தண்ணீர் சேர்த்து  மைய அரைத்தெடுக்கவும்.கூடவே பச்சை மிளகாய், சீரகம் , கறிவேப்பிலை 2 இலைகள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.தயிரில் 2 கப்புகள் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் நீர்க்க கடைந்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும். அடுத்து அரைத்த பருப்புக் கலவையை ஊற்றி கட்டித் தட்டாமல் கலக்கி விடவும். அடுத்து மஞ்சள் தூள்,உப்பு,செளசெள இவற்றை  அதில் போட்டு மிதமானத் தீயில் கொதிக்கவிடவும்.கொஞ்ச நேரம்  கொதித்த பின் மோரை ஊற்றிக் கலக்கி இறக்கி விடவும்.அடுப்பிலேயே இருந்தால் மோர் திரிந்து கெட்டு விடும்.

இதையே வேறொரு முறையில் வைப்பதானால்  முதலில் குழம்பைக் கொதிக்க விட்டுக் கடைசியில் தாளித்துக் கொட்டியும் இறக்கலாம்.

குறிப்பு:

இக் குழம்பிற்கு செளசெள நீங்கலாக வெண்டைக்காய்,பூசனிக்காய்  போன்ற காய்களையும் பயன்படுத்தலாம்.எந்தக் காயாக இருந்தாலும் முதலில் காயைத் தனியாக வேக வைத்துத்தான் சேர்க்க வேண்டும்.வெண்டைக்காயை மட்டும் எண்ணெயில் நன்றாக வதக்கிச் சேர்க்க வெண்டும்.