மாங்காய் இனிப்பு பச்சடி / Mango sweet pachadi

mango pachadi

இனிப்பு,காரம்,புளிப்புடன் பச்சைப் பயறும் சேர்ந்திருப்பதால் இந்தப் பச்சடியின் சுவை சூப்பராக இருக்கும்.ஒரு தடவை செய்துதான் பார்ப்போமே!

mango

இங்கு எப்போதும் பழ மாங்காய் மாதிரியேதான் கிடைக்கும். ஒருசில சமய‌ங்களில் மட்டும் நம்ம ஊரில் உள்ளது மாதிரி நல்ல காய் மாங்காவாகக் கிடைக்கும். இவை சாம்பார், fish & dry fish குழம்பு, பச்சடி போன்றவை செய்ய நன்றாக இருக்கும். இப்போது இந்த மாங்காய்கள் வந்துகொண்டிருப்பதால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோமே !!

தேவையானவை:

மாங்காய்_ 1
பச்சைப் பயறு_ 1/4 கப்
பெருங்காயம்_துளிக்கும் குறைவாக‌
வெல்லம்_ ஒரு கப்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_துளியளவு
உப்பு_துளியளவு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து

செய்முறை:

மாங்காயைக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ள‌வும்.

ஒரு பாத்திரத்தில் பச்சைபயறுடன் மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து பயறு வேகுமளவு தண்ணீர் ஊற்றி குழையாமல், மலர வேக வைக்கவும்.

பயறு வெந்ததும் அதில் மாங்காய் துண்டுகள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து கிண்டிவிட்டு மாங்காய் வேகும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது கரையும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.

வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு,மண் இல்லாமல் வடிகட்டி வெந்த மாங்காய் பருப்புடன் சேர்த்துக் கிண்டிவிட்டு எல்லாம் சேர்ந்து இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி, கடுகு,உளுந்து தாளித்துக்கொட்டி கிளறி விடவும்.

 

mango pachadi

 
இப்போது இனிப்பு,புளிப்பு, காரம் கல‌ந்த மாங்காய் பச்சடி சாப்பிடத் தயார்.

 

குவாக்கமோலி / Guacamole

guacamole

இந்த டிப் செய்ய அவகாடோ முக்கியம்.அதனுடன் சேர்க்கும் மற்ற பொருள்கள் எல்லாம் நம் விருப்பமே.

சில கடைகளில் Guacamole kit என்றே கிடைக்கிறது.அந்த box ல்  அவகாடோ, எலுமிச்சை,வெங்காயம்,பச்சை மிளகாய், தக்காளி இவற்றில் ஒவ்வொன்றும், பூண்டிதழ் இரண்டும் உள்ளன‌.இதை வாங்கிக்கூட செய்துகொள்ளலாம்.

தேவையானவை:

அவகாடோ_1
வெங்காயம்_சிறு துண்டு (பெரிய வெங்காயம் எனில் 1/4 பாகம் சேர்க்கலாம்)
தக்காளி_1/4 பாகம்
இனிப்பு மிளகாய்கள்_ஒவ்வொன்றிலிருந்தும் சிறுசிறு துண்டு (பொதுவாக பச்சை மிளகாய் சேர்ப்பாங்க.1.காரத்துக்கு பயந்து, 2.கலர்ஃபுல்லாக இருக்கட்டுமே என்று இனிப்பு மிளகாய்களை சேர்த்திருக்கிறேன்)
கொத்துமல்லி தழை_கொஞ்சம்
வெங்காயத்தாள்_கொஞ்சம்
எலுமிச்சை_ஒரு மூடி
உப்பு_துளியளவு

செய்முறை:

vegetables

வெங்காயம்,தக்காளி,மிளகாய்,கொத்துமல்லி,வெங்காயத்தாள்,இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

avocado

அவகாடோவை இரண்டாக நறுக்கி அதிலுள்ள கொட்டையை நீக்கிவிட்டு சதைப்பகுதியை ஒரு பௌளில் போட்டு,சிறிது எலுமிச்சை சாறுவிட்டு (கருக்காமலிருக்க) ரொம்பவும் நைஸாக இல்லாமல் ஒன்றும்பாதியுமாக‌ பிசைந்துகொள்ளவும்.

பிறகு பொடியாக நறுக்கிய‌வைகளை இதனுடன் சேர்த்து,உப்பு,எலுமிச்சை சாறு விட்டு நன்றாகக் கலந்து ஒரு 10 நிமிடங்கள் மூடி வைத்து பிறகு உபயோகிக்கலாம்.

guacamole

இப்போது சிப்ஸுடன் சேர்த்து சாப்பிட குவாக்கமோலி தயார்.சிப்ஸ் இல்லையென்றாலும் பரவாயில்லை,அப்படியேகூட சாப்பிடலாம்.

guacamole

அவகாடோவின் கொட்டையையும்,தோலையும்(பௌல் மாதிரி இருக்கும்) எடுத்து வைத்து குவாக்கமோலி தயாரானபிறகு படத்தில் உள்ளதுபோல் வைத்துக்கொடுத்தால் பார்க்க அழகாக இருக்கும்.

தேங்காய் சட்னி / Coconut chutney

IMG_4442

இந்த சட்னி சமையலில் ஆரம்பநிலையில் உள்ள‌வர்களுக்கானது.அரைச்சு வையுங்க,ஓட்ஸ் கிச்சடி ரெஸிப்பியுடன் வருகிறேன்.

தேவையானவை:

தேங்காய் பத்தை_10
பச்சை மிளகாய்_2 அல்லது காரத்திற்கேற்ப‌
பொட்டுக்கடலை_1/2 கைப்பிடி
இஞ்சி_சிறு துண்டு
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்,கடுகு,உளுத்தம் பருப்பு,காய்ந்த மிளகாய்_1,பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

தேங்காய்ப் பத்தையின் பின்புறமுள்ள கறுப்புப் பகுதியைக் கத்தியால் நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு,அதனுடன் இஞ்சி,பச்சைமிளகாய்,பொட்டுக்கடலை,உப்பு சேர்த்து இரண்டு சுற்று சுற்றினால் பூபூவாக மசிந்திருக்கும்.

அதில் சிறிது தண்ணீர் விட்டு மேலும் இரண்டு சுற்றுசுற்றி,நிறுத்திவிட்டு சுற்றியுள்ளதை வழித்துவிட்டு,மேலும் சிறிது தண்ணீர்விட்டு இரண்டு சுற்றுசுற்றினால் தேங்காய் சட்னி தயார்.

முதலிலேயே நிறைய தண்ணீரை ஊற்றிவிட்டால் மிக்ஸி ஓடும்போது தண்ணீர் வெளியில் தெறிக்கும்.அதனால் சிறிதுசிறிதாக தேவைக்கேற்றார்போல் ஊற்றி அரைக்கவும்.

அவரவர் விருப்பம்போல் சட்னியை கெட்டியாகவோ அல்லது மேலும் சிறிது தன்ணீர்விட்டு கரைத்தோ வைத்துக்கொள்ளலாம்.

ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய்விட்டு,சூடாக்கித் தாளிக்க வேண்டியப் பொருள்களைத் தாளித்து சட்னியில் கொட்டிக்கலக்கவும்.

இது இட்லி,தோசை,உப்புமா,பொங்கல்,கிச்சடி,அடை,வடை,பஜ்ஜி, போண்டா என எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.

இதையே அம்மியில் வைத்து கெட்டியாக அரைத்து துவையலாகவும் பயன்படுத்தலாம்.அம்மியில் அரைப்பதானால் தேங்காயைத் துருவிக்கொண்டு அரைக்க வேண்டும்.

துவையல்/சட்னி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 22 Comments »

மாம்பருப்பு துவையல்

இது முற்றிய ஊறுகாய் மாங்காயின் கொட்டையை உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை எடுத்து செய்தது.பொதுவாக துவையல் என்றால் புளிப்பும், காரமும் இருக்கும்.இதில் இவற்றுடன் துவர்ப்பும் சேர்ந்திருக்கும்.இதை வைத்து குழம்பும் செய்வார்கள்.அதற்கு இங்கே கிளிக்கவும்.

தேவையானவை:

மாங்கொட்டை_2
புளி_பெரிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய்_5
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு

வறுத்து சேர்க்க:

உளுந்து_ஒரு டீஸ்பூன்
தேங்காய் கீற்று_2

செய்முறை:

மாங்கொட்டையை உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை சிறுசிறு துண்டுகளாக உடைத்து நீரில் ஊற வைக்கவும். குறைந்தது இரண்டுமூன்று மணி நேரம் ஊற வேண்டும்.அம்மி என்றால் பருப்பை ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.

வெறும் வாணலில் உளுந்து,தேங்காய் இவற்றை அடுத்தடுத்து போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். விருப்பமில்லையானால்  தேங்காய் சேர்க்க வேண்டாம்.

பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.

இப்போது மாங்கொட்டை துவையல் தயார்.இது இட்லி,தோசை,சாத வகைகளுக்கு நன்றாக இருக்கும்.

கிராமத்து உணவு, துவையல்/சட்னி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 6 Comments »

தக்காளி ஊறுகாய்/தொக்கு

தேவையானப் பொருள்கள்:

நன்கு பழுத்த தக்காளி_3
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
வெந்தயத்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை(விருப்பமானால்)

செய்முறை:

முதலில் தக்காளிப்பழத்தை நன்றாகக் கழுவித்துடைத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

பிறகு ஒரு கனமான கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கு நன்றாக வதக்கவும்.

தண்ணீர் சேர்க்க வேண்டாம்.தக்காளியில் உள்ள தண்ணீரே போதுமானது.

பாதி வதங்கிய நிலையில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,வெந்தயத்தூள்,உப்பு சேர்த்துக் கிளறி மிதமானத் தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.

தக்காளி நன்கு,தண்ணீர் வற்றி,சுருள வதங்கியதும் இறக்கி ஆற வைத்து எடுத்து வைக்கவும்.

இது எல்லா சாதத்துக்கும் நன்றாக இருக்கும்.

முக்கியமாக இட்லி, தோசை இவற்றிற்கு மிகப்பொருத்தமாக இருக்கும். மேலும் சப்பாத்தி,பரோட்டா,நாண் இவற்றிற்கும் பொருந்தும்.

வேர்க்கடலை சட்னி

தேவையானப் பொருள்கள்:

வேர்க்கடலை_1/2 கப்
தேங்காய் பத்தை_5
பச்சை மிளகாய்/காய்ந்த மிளகாய்_3
இஞ்சி_ஒரு சிறு துண்டு
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் தேங்காயின்  brown  பகுதியை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு   pulse   ல் இரண்டு சுற்று சுற்றினால் பூ மாதிரி ஆகிவிடும்.அதனுடன் பச்சை மிளகாய்,இஞ்சி,வேர்க்கடலை,உப்பு சேர்த்து போதுமான‌ தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.நன்றாக மசிந்ததும் ஒரு கிண்ணத்தில் வழித்தெடுத்து,தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துக் கொட்டிக் கலக்கி வைக்கவும்.

இது இட்லி,தோசை முதலியவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.

இதையே கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து துவையலாகவும் பான்படுத்தலாம்.

பச்சை மிளகாய்க்கு பதிலாக காய்ந்த மிளகாய் வைத்தும் அரைக்கலாம்.இதற்கு தேங்காய்,பொட்டுக்கடலை சட்னிக்கு வைப்பதைவிட ஒரு மிளகாய் அதிகமாக‌ வைத்தால்தான் காரம் சரியாக இருக்கும்.

உளுந்து சட்னி

தேவையானப் பொருள்கள்:

தோல் உளுந்து_ஒரு கைப்பிடி
தேங்காய் கீற்று_3
காய்ந்த மிளகாய்_2
புளி_சிறு கோலி அளவு
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

வெறும் வாணலியில் உளுந்து,மிளகாய் இரண்டையும் கருகாமல் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

பிறகு தேங்காய்,மிளகாய் இரண்டையும் முதலில் அரைத்துவிட்டு பிறகு உளுந்து,புளி,உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

அடுத்து தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து சட்னியில் கொட்டிக் கலக்கி விடவும்.இப்போது வாசனையுள்ள,சுவையான சட்னி தயார்.

இது இட்லி,தோசை,சாதம்  இவற்றிற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

புதினா & கொத்துமல்லி துவையல்

புதினா & கொத்துமல்லியில் துவையல் செய்வது மட்டுமல்லாமல் சாதம் செய்யவும் பயன்படுத்தலாம்.துவையலுக்கு புளியின் அளவைக் கொஞ்சம் குறைத்தும்,சாதம் செய்யும் போது கொஞ்சம் அதிகமாகவும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புதினா,கொத்துமல்லி சாதத்திற்கானக் குறிப்பினைக் காண   இங்கே செல்லவும்.

தேவையானப் பொருள்கள்:

புதினா_ஒரு கட்டு
கொத்துமல்லி இலை_ஒரு கட்டு
புளி_ஒரு கோலி அளவு
பச்சை மிளகாய்_1
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_2
பெருங்காயம்

செய்முறை:

புதினா,கொத்துமல்லியை ஆய்ந்து, தண்ணீரில் அலசி, நீரை வடிய வைக்கவும்.

மிக்ஸியில் புதினா,கொத்துமல்லி இலை,புளி,பச்சை மிளகாய்,உப்பு இவற்றைப் போட்டு நன்றாக‌ அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து துவையலில் கொட்டி ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.இப்போது  புதினா,கொத்துமல்லி துவையல் தயார்.

புதினா வாசனை பிடிக்காதவர்கள் வாணலியில் சிறிது எண்னெய் விட்டுக் காய்ந்ததும் துவையலைப் போட்டு பிரட்டி ஆறவைத்து பயன்படுத்தலாம்.

இதை எல்லா வகையான சாததிற்கும் தொட்டு சாப்பிடலாம்.இட்லி,தோசைக்கும் பொருத்தமாக இருக்கும்.

கத்தரிக்காய் மசியல்

தேவையானப் பொருள்கள்:

பச்சைப்பருப்பு_1/2 கைப்பிடி
கத்தரிக்காய்_4 (சிறியது)
பச்சை மிளகாய்_2
சின்ன வெங்காயம்_3
தக்காளி_பாதி
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_ஒரு பின்ச்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_கொஞ்சம்

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைப் பருப்பை நன்கு சிவக்க வறுத்துப் போதுமானத் தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.பருப்பு பாதி வேகும் போதே அதனுடன் கத்தரிக்காய்,பச்சை மிளகாய்,வெங்காயம் 2,தக்காளி,பூண்டு சேர்த்து வேக விடவும்.எல்லாம் நன்றாக வெந்த பிறகு இறக்கி ஆற வைக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

இதை மீண்டும் அதே பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் உப்பு போட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

மீதமுள்ள ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.ஒரு வாணலியில்  எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி மசியலில் கொட்டிக் கலக்கவும்.

இது இட்லி,தோசை ஆகிய‌வற்றிற்கு சூப்பர் காம்பினேஷன்.

பச்சைப் பருப்பிற்கு பதில் துவரம் பருப்பைக்கூடப் பயன்படுத்தலாம்.

தேங்காய்,பொட்டுக்கடலை,கொத்துமல்லி சட்னி

தேவையானப் பொருள்கள்:

தேங்காய்_1/4 மூடி

பொட்டுக் கடலை_1/4 கப்

கொத்துமல்லி இலை_ஒரு கைப்பிடி  (உருவியது)

பச்சை மிளகாய்_2

முந்திரி_2

இஞ்சி_ஒரு சிறிய துண்டு

உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்

கடுகு

உளுந்து

காய்ந்த மிள்காய்_1

பெருங்காயம்

கறிவேப்பிலை_5 இலைகள்

செய்முறை:

தேவையானப் பொருள்களை எடுத்து வைக்கவும்.தேங்காயை சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பல்ஸில் வைத்து ஒரு சுற்று சுற்றி ,பிறகு அதனுடன் தேவையானப் பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து , தேவையான அளவு தண்ணீரையும்  சேர்த்து மைய‌ அரைத்தெடுக்கவும்.அதை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மூடி வைக்கவும்.இது இட்லி,தோசை,வடை,அடை போன்றவற்றிற்குப் பக்க உணவாகப் பயன்படுத்தலாம்.கெட்டியாக அரைத்தால் துவையலாகவும் உபயோகிக்கலாம்.