எங்கள் வீட்டு கொல்லியில் அப்போது சிறியதும்,பெரியதுமாக இரண்டு எலுமிச்சை மரங்கள் இருந்தன.நிறைய காய்கள் காய்க்கும்.பழங்களை பறித்து வந்து ஊறுகாய் போடுவாங்க,அக்கம்பக்கம்,எதிர்த்தவீடு என எல்லோருக்கும் கொடுப்பாங்க. கிராமத்தில் பெரும்பாலும் எல்லாப் பொருள்களையும் இப்படித்தான் பறிமாறிக் கொள்வார்கள்.
யாரும் யாரிடமும் காசு கொடுத்து வாங்குவது கிடையாது.யார் வீட்டில் என்ன அறுவடை என்றாலும் உறவுகள், தெரிந்தவர்கள் (ஊர் முழுவதுமே தெரிந்தவர்கள்தான்) என எல்லோருக்கும் கொடுத்தனுப்புவார்கள்.இப்போது இதெல்லாம் இருக்கிற மாதிரி தெரியவில்லை.
எங்கள் ஊரில் பங்குனி உத்திரம் சிறப்பாக,வெகு விமரிசையாக நடைபெறும். நல்ல வெயில் நேரத்தில் காவடி எடுத்து வருவார்கள்.அந்த சமயம் எங்கள் வீட்டில் நிறைய எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து பானகம் செய்து இரண்டுமூன்று பெரியபெரிய அண்டாக்களில் ஊற்றி வைத்து காவடி எடுத்து வருகிற எல்லோருக்கும் கொடுப்பாங்க.அதென்னமோ அன்றுமட்டும் எனக்கு அந்த பானகம் சூப்பர் சுவையாக இருப்பதுபோல் தெரியும்.
நான் எப்போது பானகம் செய்தாலும் இந்த நினைவு வராமல் போகாது. இவை ஆரம்பப் பள்ளி நாட்கள்தான் என்றாலும் இன்னும் பசுமை மாறாமல் இருப்பதுதான் அதன் சிறப்பு.
இன்று இவர் லன்சுக்கு வெளியில் (பிடிக்காமல்தான், வேறு வழியில்லை) சாப்பிடப் போயிருக்கிறார்.நானும் பொண்ணும் மட்டுமே வீட்டில். சாப்பாட்டு வேளையெல்லாம் தலைகீழாகிவிட்டது. இந்த மதிய நேரத்தில் பானகம் போட்டு குடிச்சாச்சு. ம்ம்ம்..சாப்பாடு?…இரண்டு மணிக்குமேல் ஆப்பம் & தேங்கய்ப்பால். மாலைதான் ஃபுல் மீல்ஸ். அதுவரை எஞ்ஜாய் சித்ரா!
நினைவுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு பானகம் செய்வதைப் பார்ப்போமே! படத்திலுள்ள பழத்தில் அந்தளவிற்கு புளிப்பு இருக்காது.எனவே ஒரு பழத்தில் இரண்டு க்ளாஸ் பானகம் செய்தேன்.நம்ம ஊர் பழம் என்றால் புளிப்பு அதிகமாக இருக்கும்.அதனால் புளிப்புக்குத் தகுந்தாற்போல் வெல்லம் & தண்ணீரின் அளவைக் கூட்டிக்கொள்ளவும்.
நான் சேர்த்திருப்பது வெள்ளை வெல்லம் என்பதால் பானகத்தின் நிறம் ப்ரௌன் நிறத்தில் இல்லாமல் கம்மியாக உள்ளது.சாதாரண வெல்லம் அல்லது பனை வெல்லம் சேர்த்தால் சூப்பர் நிறத்தில் இருக்கும்.
தேவையானவை:
எலுமிச்சம் பழம்_ 1
வெல்லம் / பனை வெல்லம் _ ஒரு துண்டு
தண்ணீர்_ இரண்டு டம்ளர் அளவிற்கு
சுக்குத்தூள்_ ஒரு துளிக்கும் குறைவாக
ஏலக்காய் தூள்_ துளிக்கும் குறைவாக
உப்பு _ துளிக்கும் குறைவாக (சும்மா பெயருக்குத்தான், சுவைக்கூட்ட)
செய்முறை:
எலுமிச்சம் பழத்தை விதைகள்,திப்பி இல்லாதவாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும்.
வெல்லத்தைப் பொடித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்து கல், மண் இல்லாமல் வடிகட்டிக்கொள்ளவும்.
இந்த வெல்லத் தண்ணீரில் சுக்குத்தூள்,ஏலத்தூள்,உப்பு,எலுமிச்சை சாறு விட்டு காஃபி ஆத்துவதுபோல் ஆத்தி இரண்டு டம்ளர்களில் ஊற்றி சுவைத்து குடிக்க வேண்டியதுதான்.
வெயிலுக்கு சுகமாக இருக்கும்.