பொரி மாவு / Pori maavu

pori maavupori maavu

இதை செய்வது சுலபம், சுவையோ அதிகம். எவ்வளவு இனிப்பு வகைகளை சுவைத்தாலும் இதன் சுவையே தனிதான்.

எங்கம்மா ஒரு பெரிய இரும்பு வாணலை வைத்து பொரிப்பாங்க,எல்லா அரிசியும் பூ மாதிரி பொரிந்து இருக்கும். இங்கே நான் பொரித்துள்ள அரிசிகூட சரியாகப் பொரியாமல்தான் உள்ளது.

குட்டீஸ்களுக்கு கொடுக்கும்போது மாவு புரை ஏறும் என்பதால் நெய் அல்லது நல்லெண்ணெயில் பிசைந்து கொடுக்கலாம்.

இதையே மாவாக அரைக்காமல் கொஞ்சம் ரவை பதத்துடன் அரைத்து சூப்பரான அரிசி உருண்டை செய்யலாம்.

தேவையானவை:

புழுங்கல் அரிசி _ ஒரு டம்ளர் அளவிற்கு
சர்க்கரை _ தேவைக்கு
ஏலக்காய் _ 1
உப்பு _ துளிக்கும் குறைவாக (ருசியைக் கூட்டத்தான்)

செய்முறை:

ஒரு அடிகனமான  வாணலை அடுப்பில் ஏற்றி நன்றாக சூடு ஏறியதும் அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு அரிசியைப் போட்டு தோசைத் திருப்பியின் உதவியால் விடாமல் கிண்டிவிடவும்.

சிறிது நேரத்தில் அரிசி படபடவென பொரியும்.விடாமல் கிண்டவும். இப்போது பூ மாதிரி பொரிந்து வரும்.எல்லா அரிசியும் பொரிந்ததுபோல் தெரியும்போது ஒரு அகலமானத் தட்டில் எடுத்துக்கொட்டி ஆறவிடவும்.இங்கு கொஞ்சம் ஏமாந்தால் அரிசி தீய்ந்துவிடும்.அதனால் கவனம் தேவை.

இதேபோல் தொடர்ந்து எல்லா அரிசியையும் பொரித்து தட்டில் கொட்டி ஆறவிடவும்.

அரிசி நன்றாக ஆறியதும் மிக்ஸியில் கொட்டி அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்,உப்பு இவற்றையும் போட்டு மைய மாவாக்கி, இனிப்பு போதுமா என சுவை பார்த்து, தேவையானால் மேலும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து அரைத்து, இனிப்பு அதிகமாக இருந்தால்…கூடுதல் சந்தோஷம்தான்!!  ஒரு அகலமான தட்டில் கொட்டி மீண்டும் ஆறவிட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது சுவைக்கலாம்.

ஓமப்பொடி முறுக்கு

தேவையானவை:

கடலை மாவு_2 கப்
அரிசி மாவு_ஒரு கப்
ஓமம்_சிறிது
தனி மிளகாய்த்தூள்_1/2 டீஸ்பூன்(விருப்பமானால்)
பெருங்காயம்_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_தேவைக்கு

செய்முறை:

கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த்தூள்,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு ஒருமுறை சலித்தெடுக்கவும்.

இவற்றை  ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருங்காயம்,ஓமம் இவற்றைப் போட்டு சிறிதுசிறிதாகத் தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.

எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சில் ஓமப்பொடி வில்லையைப்போட்டு அதில் கொள்ளுமளவிற்கு மாவைப் போட்டு நேராகவே வாணலில் பிழிந்துவிடவும்.

பிழிந்த சிறிது நேரத்திலே வெந்துவிடும்.உடனே மறுபக்கம் திருப்பிவிட்டு எடுத்துவுடவும்.கொஞ்சம் கவனம் தேவை.இல்லையென்றால் ரொம்பவே சிவந்துவிடும்.

ஆறியதும் கண்ணாடி டப்பாவில் அல்லது பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

அல்லது லேஸாக நொறுக்கிவிட்டு கொஞ்சம் கறுவேப்பிலையை எண்ணெயில் பொரித்துப் போட்டுக் கலந்தால் ஓமப்பொடி மிக்ஸர் ரெடி.

இது சிறுபிள்ளைகள் (பெரியவர்களும்தான்)விரும்பி சாப்பிட ஏதுவாக மிகவும் சாஃப்டாக இருக்கும்.

குறிப்பு:

ஓமப்பொடி வில்லையின் துளைகள் பெரிதாக இருந்தால் ஓமத்தைக் கழுவி அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்.அல்லது துளைகள் சிறிதாக இருந்தால் ஓமத்தை மைய அரைத்துச் சேர்க்கலாம்.அல்லது அரைத்த விழுதை தண்ணீர் விட்டுக்கரைத்து வடிகட்டி அந்தத்தண்ணீரை மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்.

பெருங்காயத் தூளாக இருந்தால் அப்படியேயும்,கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் விட்டு கரைத்தும்சேர்க்கலாம்.

மற்ற ஓமப்பொடி அச்சுகளைவிட மரத்தாலான அச்சு பிழிவதற்கு ஏற்றதாக இருக்கும்.

காராசேவு

தேவையானப் பொருள்கள்:

கடலை மாவு_2 கப்
அரிசி மாவு_1/2 கப்
மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன்
மிளகு_10 லிருந்து 15 எண்ணிக்கைக்குள்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு

அரைத்து சேர்க்க:

கிராம்பு_2
பட்டை _சிறிது
கசகசா_1/4 டீஸ்பூன்
பூண்டு_ஒரு பல்

செய்முறை:

முதலில் கடலை மாவு,அரிசிமாவு,மிளகாய்த் தூள் இவ்ற்றை ஒன்றாகக் கலந்து சல்லடையில் சலித்து திப்பிகள் இருந்தால் நீக்கிவிடவும்.பிறகு மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் பெருங்காயம்,உப்பு,மிளகு (முழுதாகவோ அல்லது உடைத்தோ)  சேர்க்கவும்.எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.

அரைக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை மைய அரைக்க முடிந்தால் அரைத்து மாவுடன் சேர்க்க வேண்டும்.இல்லை என்றால் அரைத்து வடிகட்டிய தண்ணீரை சேர்க்கவும்.

சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

ஒரு வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு காய வைக்கவும். கடைகளில் காரா சேவுக்கென்று கரண்டிகள் கிடைக்கும்.(நான் பயன்படுத்தியது கேரட் துருவி).

ஒரு கையால் கரண்டியைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் மாவைத் தேய்க்க வேண்டும். எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் மாவில் இருந்து ஒரு எலுமிச்சை அளவிற்கு எடுத்து கரண்டியின் மேல் மாவை வைத்து எண்ணெய்க்கு மேலாக உள்ளங்கையால் அழுத்தித் தேய்த்து விடவும்.

மாவு விரல் நீளத் துண்டுகளாக எண்ணெயில் விழும்.எண்ணெய் கொண்ட மட்டும் தேய்த்துவிடவும்.நன்றாக வேகும்வரை மற்றொரு கரண்டியால் திருப்பி விடவும்.வெந்ததும் எடுத்து விடவும்.

காராசேவு கரண்டியைப் பயன்படுத்த முடியாதவர்கள் மாவை தேன்குழல் அச்சில் போட்டு எண்ணெய்க்கு மேலாக அச்சைப் பிடித்துக்கொண்டு விரல் நீளத் துண்டுகள் வருமாறு அழுத்தி ஆள்காட்டி விரலால் மாவை அறுத்து விடவும்.இதுபோல் எண்ணெய் கொண்டமட்டும் செய்து நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

பஜ்ஜி

 

 

தேவையானப் பொருள்கள்:

கடலை மாவு_2 கப்
அரிசி மாவு_2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டிஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
ஓமம்_சிறிது
சோடா உப்பு_ஒரு துளிக்கும் குறைவு
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

அரைக்க:

பெருஞ்சீரகம்_சிறிது
பூண்டு_2 பற்கள்

பஜ்ஜிக்கான காய்கள்:

வாழைக்காய்_1
கத்தரிக்காய்_சிறியதாக இருந்தால் 1
பெரிய சிவப்பு வெங்காயம்_1

eggplant ல் செய்வதாக இருந்தால் மாவின் அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

செய்முறை:

கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த் தூள்,பெருங்காயம்,சோடா உப்பு,உப்பு  இவற்றை ஒன்றாகக் கலந்து மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்.அதில் ஓமம் சேர்த்துக்கொள்.மேலும் பெருஞ்சீரகம்,பூண்டு இவற்றை ஒன்றாகச் சேர்த்து மைய அரைத்து மாவுடன் சேர்த்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தை விட சிறிது நீர்க்கக் கரைத்துக்கொள்.

பஜ்ஜிக்கு  வாழைக்காய்,கத்தரிக்காய் ( eggplant),பெரிய சிவப்பு வெங்காயம் இவற்றைப் பயன்படுத்தலாம்.

வாழைக்காயின் தோலை சீவி விட்டு,நுனிப்பகுதியை நறுக்கிவிட்டு,சிப்ஸ் கட்டையைப் பயன்படுத்தி வாழைக்காயை படத்தில் உள்ளது போல் நீள வாக்கில் நறுக்கிக்கொள். அல்லது குறுக்காகவும் சீவிக்கொள்ளலாம்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்து.எண்ணெய் காய்ந்ததும் சீவி வைத்துள்ள வாழைக்காயினை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் இருபுறமும் தோய்த்து எண்ணெயில் போடு.ஒருபக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கம் வெந்ததும் எடுத்து விடு.இதுபோல் எல்லாவற்றையும் செய்துகொள்.

கத்தரிக்காயையும் அவ்வாறே சீவி வைத்துக்கொண்டு எண்ணெயில் போட்டுப் பொரிக்கலாம்.இதற்கு  eggplant     தான் நன்றாக இருக்கும்.அது இல்லாததால் சிறிய கத்தரிக்காயில் செய்துள்ளேன்.

அடுத்து பெரிய வெங்காயத்தை குறுக்காக வட்டமாக நறுக்கி ஒவ்வொரு வளையமாகத் தனித்தனியாகப் பிரித்து மாவில் தோய்த்துப் பொரிக்கலாம்.இது சுவை கூடுதலாக இருக்கும்.

இவை எல்லாவற்றிற்குமே தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.அல்லது   ketchup  உடன் சேர்த்து சாப்பிடலாம்.

தேன்குழல் முறுக்கு

 

தேவை:

அரிசி மாவு_ 2 கப்
உளுந்து மாவு_ 1/2 கப்
(உளுந்தை சுமார் 2  கப் அளவிற்கு எடுத்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து முந்தைய பதிவில் கூறியபடியே நைசாக அரைத்துக் கொள்ளவும்.இந்த மாவை தேன் குழல் முறுக்கிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.)
எள்_ 1 டீஸ்புன்
ஓமம்_1/2 டீஸ்புன்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_தேவையான அளவு

செய்முறை:

அரிசி மாவு,உளுந்து மாவு இவை இரண்டையும் 2 : 1/2    என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதனுடன் எள்,ஒமம்,பெருங்காயம்,உப்பு சேர்த்துக் கிளறி சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.முறுக்கு குழலில் தேன்குழல் அச்சைப் போட்டு பேப்பர் டவலில் முறுக்குகளை பிழிந்து கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போட்டு இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:

இதற்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள உளுந்து மாவை காற்று புகாமல் எடுத்து வைத்துக்கொண்டால் வேண்டும்போது மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்

மகிழம்பூ முறுக்கு

 

தேவை:

அரிசி மாவு_ 2 கப்
முறுக்கு மாவு_1/2 கப்
எள்_1/2 டீஸ்பூன்
ஓமம்_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_ 5 இலைகள்
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_தேவையான அளவு

செய்முறை:

அரிசி மாவு எல்லா இந்தியக்  கடைகளிலும் கிடைக்கும்.அதையே பயன்படுத்தலாம். அரிசி மாவு,சென்ற பதிவில் கூறியபடி தயாரித்த முறுக்கு மாவு இவை இரண்டையும்  2 : 1/2  என்ற விகிதத்தில் கலக்கவும்.

எள்,ஓமம்,கறிவேப்பிலை(கிள்ளிப்போட்டு),பெருங்காயம்,உப்பு போட்டு கையினால் கலக்கவும்.பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

மாவில் இருந்து ஒரு சிறு பகுதியைப் பிரித்தெடுத்தால் எளிதாக வர வேண்டும். இழுவையாக இருக்கக் கூடாது,அதுதான் சரியான பதம்.

இப்போது வானலியில் எண்ணெய் காய வைத்து முறுக்கு குழலில் அச்சு(மகிழம்பூ) போட்டு பிசைந்த மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு(எண்ணெய் கொண்ட மட்டும்) இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.ஆறியதும் ஒரு கண்ணாடி டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு:

இதற்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள முறுக்கு மாவை காற்று புகாமல் எடுத்து வைத்துக்கொண்டால் வேண்டும்போது மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்