தும்பைப் பூ போன்ற இட்லிக்கு !!!

IMG_4639

வெள்ளை நிறத்திற்கு உலகமே மல்லிகைப் பூவை எடுத்துக்காட்டாக சொல்லும்போது எங்கள் ஊர் பக்கம்  தும்பைப் பூவைத்தான் உதாரணத்திற்கு சொல்லுவாங்க‌. இல்லையென்றால் பஞ்சை(பருத்தி) சொல்லுவாங்க‌. அப்படித்தான் இட்லியையும் எல்லோரும் ‘மல்லிகைப்பூ மாதிரி’ என சொல்லும்போது நாங்க மட்டும் ………. என்ன, கண்டுபிடிச்சிட்டீங்களா !!

ஆமாங்க, ‘தும்பைப்பூ மாதிரி இட்லி வெள்ளை வெளேர்னு வந்திருக்கு பாரு’ என்றுதான் சொல்லுவோம். அதனால்தான் தலைப்பைபும் அப்படியே வைத்துவிட்டேன்.

ஒருவேளை அந்தந்த ஊரில் விளையும் பொருட்களை வைத்தே உதாரணமும் வந்திருக்கலாம். மல்லிகைப் பூவுக்காவது காம்பு பகுதி கொஞ்சம் பசுமை கலந்த பழுப்பு நிறம் இருக்கும். ஆனால் தும்பைப்பூ பூ, காம்பு என எல்லாமும் பளீர் வெண்மையில் இருக்கும். பசுமையான செடியில் குட்டிகுட்டி வெள்ளைப்பூக்கள் ……..  பார்க்கவே கொள்ளை அழகாக இருக்கும்.

தும்பைப் பூ மாதிரி இட்லி மட்டுமில்லீங்க, இந்தப் பூவை வைத்து முறுக்குகூட சுடுவோம். ஊருக்குப் போனால் தும்பைப் பூவில் முறுக்கு சுட்டு அதை காமிராவிலும் சுட்டு எடுத்து வருகிறேன். இந்தப் பூவை பார்த்தவர்களுக்கு கட்டாயம் இந்த முறுக்கை எப்படி சுடுவது என்றும் தெரிந்திருக்கும். பார்க்க ‘கை முறுக்கு’ மாதிரியே இருக்கும். இத‌ன் ரெஸிபியெல்லாம் சொல்லக்கூடாது, பரம ரகசியம்.

ஏற்கனவே இட்லி செய்முறை இருந்தாலும் புளித்து(பொங்கி) வந்துள்ள மாவு படம் இல்லையாதலால் அது ஒரு மனக்குறையாகவே இருந்தது. அது இப்பதிவின் மூலம் தீர்ந்துவிட்டது.  நிறைய எழுத வேண்டுமே என்ற சோம்பலால் இவ்வளவு நாளும் எழுதாமலே விட்டிருந்தேன்.

தேவையான பொருள்கள்:

நல்ல புழுங்கல் அரிசி _ 4 கப் தலை வெட்டாமல் (குவித்து)
உளுந்து _  1/4 கப்
வெந்தயம் _ ஒரு டேபிள்ஸ்பூன் (1/2 டீஸ்பூன் கூட சேர்த்துக்கொள்ளலாம்)
அவல் (இருந்தால்) _ ஒரு கைப்பிடி

20140306_143926

செய்முறை:

முதல் நாளிரவே வெந்தயத்தை அது ஊறும் அளவிற்கு தண்ணீர் விட்டு ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் காலை ஊறிய வெந்தயத்தை ஒரு ஸ்பூனால் கிளறி விடவும். இப்போது அடியில் உள்ள ஊறாத வெந்தயமும் ஊறிவிடும்.

அடுத்த நாள் காலை(சுமார் 7:00 மணி) அரிசியைத் தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற விடவும். குறைந்தது நான்கு மணி நேரமாவது ஊற வேண்டும்.

சுமார் 12:00 மணிக்கெல்லாம் ஊறிய வெந்தயம், மாவு அரைக்கத் தேவையான தண்ணீர் இரண்டையும் ஃப்ரிட்ஜினுள் எடுத்து வைத்து விடவும். இப்போதே உளுந்தையும் தோல் இல்லாமல் கழுவி ஃப்ரிட்ஜினுள் வைத்து விடவும். இவற்றை குறைந்தது அரை மணி நேரமாவது அதாவது ‘ஜில்’லுன்னு ஆகும்வரை ஃப்ரிட்ஜினுள் வைத்திருக்கவும். ஒருமணி நேரமானாலும் பரவாயில்லை.

சுமார் 1:00 மணிக்கெல்லாம் கிரைண்டரை துடைத்துவிட்டு உளுந்து & வெந்தயம் இரண்டையும் ஒன்றாகப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஆன் பண்ணவும். கிரைண்டரில் உள்ளவற்றின் அளவு குறைவாக இருப்பதால் முதலில் ஒரு நிமிடத்திற்காவது விடாமல் தள்ளிவிட வேண்டும்.

பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவைத் தள்ளிவிட்டு சுமார் அரை மணி நேரத்திற்கு ஓடவிடவும்(எங்கேன்னு எல்லாம் கேட்கக்கூடாது). மாவு பந்துபோல் பஞ்சு மாதிரி வரவேண்டும்.

பிற‌கு ஒரு பாத்திரத்தில் வழித்து கையால் நன்றாகக் கொடப்பவும். அப்போதுதான் அரிசி அரைத்து எடுப்பதற்குள் உளுந்துமாவு அமுங்காமல் இருக்கும்.

இப்போது கிரைண்டரில் அரிசியில் கொஞ்சம் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு ஓடவிட்டு மீதமுள்ள அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும்.

அரிசி ஓடும்போதே அவலை கழுவி சேர்த்து அரைக்கவும். அவல் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

IMG_8837

அரிசி நன்றாக மசிந்ததும் உளுந்து மாவு உள்ள பாத்திரத்திலேயே வழித்தெடுத்து, தேவையான உப்பு போட்டு நன்றாக கொடப்பு கொடப்பு என கொடப்பவும். கரைக்கும்போதே காற்றுக் குமிழ்கள் தெரியும். மாவு உள்ள பாத்திரத்தை மூடி வெதுவெதுப்பான இடத்தில் வைத்து புளிக்க விடவும்.

நான் இங்கே அரைக்கும் நேரம் இது. நம்ம ஊர் என்றால் மாலையில் அரைத்தால்தான் சரிவரும். இல்லையென்றால் அடுத்த நாள் காலையில் பாத்திரத்தில் துளிமாவு இல்லாமல் எல்லாம் பொங்கிப்போய் தரையில் இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

IMG_8647

ஹை, மாவு பொங்கி வந்தாச்சூஊஊஊ,  ஆனாலும்  கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்போமே !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

idli maavu idli maavu
idli maavu  idli maavu

இனிமேலும் இப்படியே விட்டு வைக்கக்கூடாது. இட்லியை ஊற்றிவிட வேண்டியதுதான் !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காலையில் இட்லி ஊற்றும்போது பொங்கி வந்த மாவைக் கரைத்து ஊற்றாமல் அப்படியே கரண்டியால் இட்லித் தட்டின் குழிகளில் அள்ளி வைக்க‌ வேண்டும். ம்ம்ம்…..இட்லி வேக வைப்பதெல்லாம் தெரியும்தானே !!

தோசை சுடுவதாக இருந்தால் இரண்டு தோசை அளவிற்கு மாவை தனியாக எடுத்து ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் தண்ணீர் சேர்த்து கலந்து ஊற்றலாம்.
IMG_4474

இந்த இட்லியை வெள்ளை நிற தட்டில் வைத்துமட்டும் சாப்பிட ஆரம்பிச்சிடாதீங்க‌. அப்புறம் “ஆட்டை தோளின் மீது வைத்துக்கொன்டே …….. ” என்ற பழமொழிபோல் “தட்டு எது? இட்லி எது?” என தேட ஆரம்பிச்சிடுவீங்க.

ஹலோஓஓஒ …….. எங்கே யாரையுமே காணொம், …… ஓ …… வெந்தயம் ஊற வைக்க கெளம்பிட்டீங்களா !!

ஓட்ஸ் இட்லி

தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ்_ஒரு கப்
இட்லி மாவு_ஒரு இட்லிக் கரண்டி
உப்பு_சிறிது

செய்முறை:

இதற்கு    rolled oats  தான் சிறந்தது.

ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நல்ல மாவாக இடித்துக்கொள்ளவும்.

ஓட்ஸ் மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் இட்லி மாவை சேர்த்து,சிறிது உப்பும் போட்டு தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்கக் கரைத்துக்கொள்ளவும்.

இட்லி மாவு இல்லையெனில் ஒரு 2 டீஸ்பூன் தயிர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளலாம்.

ஒரு 10 நிமிடம் கழித்துப் பார்த்தால் ஓட்ஸ் இட்லி மாவு கெட்டியாக ஆகிவிடும்.தேவையெனில் கொஞ்சம் நீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்குக்  கரைத்துக்கொள்ளவும்.

மாவு புளிக்க வேண்டுமென்பதில்லை.ஒரு 1/2 மணி நேரத்திற்குள்ளேயே மாவு தயாராகிவிடும்.

இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி, பாத்திரம் சூடாகியதும்  அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும்.வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும்.

சூடாக, விருப்பமான,காரமான‌ சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
அல்லது புளிக்குழம்பு,காரக்குழம்பு,கருவாட்டுக்குழம்பு,மீன்குழம்பு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றையும் தொட்டு சாப்பிடலாம்.

ஓட்ஸ் தோசை வேண்டும் எனில் மாவில் மேலும் கொஞ்சம்  நீர் விட்டுக் கரைத்து தோசையாக வார்க்கலாம்.

இட்லிப் பொடி

தேவையானப் பொருள்கள்:

கடலைப் பருப்பு_ஒரு கப்
கறுப்பு உளுந்து_ஒரு கப்
காய்ந்த மிளகாய்_8 (காரத்திற்கேற்ப)
மிளகு_1/4 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_ஒரு கொத்து
பூண்டு_2 பற்கள்
உப்பு_தேவைக்கு

செய்முறை:

உப்பு தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் வெறும் வாணலியில் மிதமானத் தீயில் வறுத்து ஆற வைத்து உப்பு சேர்த்து கரகரப்பாக இடித்துக்கொள்ள வேண்டும்.

கடலைப் பருப்பு,உளுந்து இரண்டையும் சிவக்க வறுக்க வேண்டும்.

மிளகாய் நிறம் மாறாமல் வறுக்க வேண்டும்.இதனை பருப்புகள் வறுக்கும்போது போட்டு சூடேறியதும் எடுத்துவிடலாம்.

மிளகு,சீரகம் சூடுவர வறுக்க வேண்டும்.

காய்ந்த கறிவேப்பிலையாக இருந்தால் லேசாக சூடேறினால் போதும். பச்சையாக இருந்தால் சருகு போல் வரும்வரை வறுக்க வேண்டும்.

பூண்டைப் பொடியாக நறுக்கி நன்றாக வதங்கும் வரை வறுக்க வேண்டும்.

கட்டிப் பெருங்காயமாக இருந்தால் பருப்பு வகைகள் வறுக்கும்போது அதிலேயே சேர்த்து வறுத்துக்கொள்ளலாம்.தூள் பெருங்காயமாக இருந்தால் பொடி இடிக்கும்போது சேர்த்துக்கொள்ளலாம்.

இட்லி,தோசை இவற்றிற்கு வெறும் தூளோ அல்லது தூளுடன் நல்லெண்ணெய் சேர்த்தோ சாப்பிட சுவையாக இருக்கும்.

சிவப்பரிசி இட்லி (Rose matta rice idli)

சிவப்பரிசியில் புழுங்கல் அரிசியாகப் பார்த்து வாங்க வேண்டும்.இதற்கும் புழுங்கல் அரிசி மாதிரியேதான் அளவு,மாவு அரைப்பது,கரைத்து வைப்பது எல்லாம்.ஆனால் அரிசி நன்றாக ஊறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.எனவே முதல் நாளிரவே ஊற வைத்துவிட வேண்டும்.

தேவையானப் பொருள்கள்:

சிவப்பரிசி_4 கப்
உளுந்து_1/4 கப்
வெந்தயம்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

செய்முறை:

அரிசியையும்,வெந்தயத்தையும் தனித்தனியாக‌ முதல் நாளிரவே,தூங்கச் செல்வதற்கு முன் ஊற வைத்து விட வேண்டும்.அடுத்த நாள் காலையில் உளுந்தை ஊற வைக்கவும்.குறைந்தது 4 மணி நேரமாவது ஊற வேண்டும். பிறகு தோலியைக் கழுவிவிட்டு ஃபிரிட்ஜில் சுமார் ஒரு 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும்.மாவு அரைப்பதற்கும் ஃபிரிட்ஜ் வாட்டரைப் பயன்படுத்தினால் உளுந்து நிறைய மாவு காணும்.

மாவு அரைக்கும்போது முதலில் உளுந்தையும்,வெந்தயத்தையும் கிரைண்டரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.குறைந்தது 1/2 மணி நேரமாவது அரைக்க வேண்டும்.இடையிடையே தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு,மாவைக் கையில் எடுத்துப் பார்த்தால் நுரைத்துக் கொண்டு இருக்கும்,அப்போது  ஒரு பாத்திரத்தில் வழித்து கைகளால் நன்றாகக் கொடப்பி வைக்கவும். அப்போதுதான் மாவு அமுங்காமல் இருக்கும்.

அடுத்து அரிசியைப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.மாவு கெட்டியாக இல்லாமலும்,நீர்க்க இல்லாமலும் இருக்க வேண்டும்.புழுங்கல் அரிசிக்கு தேவைப்படும் தண்ணீரை விட இதற்கு கொஞ்சம் அதிகமாகத் தேவைப்படும்.நன்றாக அரைத்த பிறகு (இதற்கும் சுமார் 1/2 மணி நேரம் பிடிக்கும்.) வழித்து உளுந்து மாவுடன் சேர்த்து உப்பு போட்டு நன்றாகக் கொடப்பி கரைத்து வைக்கவும்.

அடுத்த நாள் பார்த்தால் மாவு நன்றாகப் பொங்கி வந்திருக்கும்.இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும்.வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும். சிறிது இளஞ் சிவப்பாக, பஞ்சு போன்ற இட்லிகளாக வரும்.தோசை வேண்டும் எனில் கொஞ்சம் மாவைத் தனியாக எடுத்து, சிறிது நீர் விட்டுக் கரைத்து தோசையாக வார்க்கலாம்.

நமக்கு விருப்பமான சாம்பார்,சட்னி,புளிக் குழம்பு,அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.

இட்லி உப்புமா

தேவை:

இட்லி_5
சின்ன வெங்காயம்_5
கடுகு_ 1/4 டீஸ்பூன்
உளுந்து_1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்
பெருங்காயம்_ துளி
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_சிறிது
உப்பு_துளி
எண்ணெய்_1 டீஸ்பூன்

செய்முறை:

இட்லியை உதிர்த்துக்கொள்ளவும்.சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு,உளுந்து,கடலைப் பருப்பு, பெருங்காயம்,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.

பிறகு சின்ன வெங்காயம்,உப்பு சேர்த்து வதக்கி இட்லி உதிரியைக் கொட்டிக் கிளறி சூடேறியதும் இறக்கவும்.

குறிப்பு:

இட்லியில் ஏற்கனவே உப்பு இருப்பதால் வெங்காயத்திற்கு மட்டும் உப்பு சேர்க்கவும்.இட்லியும் ஏற்கனவே வெந்து இருப்பதால் சூடேறியவுடன் இறக்கிவிடலாம்.

இட்லி

 தேவையானவை

புழுங்கல் அரிசி – 8 கப்புகள்

உளுந்து – 1/2 கப்

வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு_தேவையான அளவு

செய்முறை

வெந்தயத்தை முதல் நாள் இரவே அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிட வேண்டும்.அடுத்த நாள் அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊறவிட வேண்டும்.சுமார் ஆறு மணி நேரம் ஊறவிட வேன்டும்.பின் உளுந்தின் தோலியைக் கழுவி விட்டு ஃபிரிட்ஜில் ஒரு அரை மணி நேரத்திற்கு வைத்து விட வேண்டும்.வெந்தயத்தையும் அவ்வாறே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.பிறகு உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து  கிரைண்டரில் போட்டு நீர் விட்டு கொடகொடவென மைய அரைக்க வேண்டும்.ஒரு 1/2  மணி நேரம் ஆன பிறகு(இடை இடையே சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்)  ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து கொடகொடவென கொடப்பி வைக்கவும்.இல்லை எனில் மாவு அமுங்கிவிடும்.

பிறகு அரிசியைப்போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான உப்பு போட்டு நன்றாகக் கரைத்து வைக்கவும்.அடுத்த நாள் பார்த்தால் மாவு நன்றாக பொங்கி வந்திருக்கும்.இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும். வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும். வெண்மையான பஞ்சு போன்ற இட்லிகளாக வரும்.தோசை வேண்டும் எனில் கொஞ்சம் மாவை தனியாக எடுத்து சிறிது நீர் விட்டு கரைத்து தோசையாக வார்க்கலாம். நமக்கு விருப்பமான சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிடலாம்.