கத்தரிக்காய் சாதம் / Brinjal Rice

20150226_145919

சுவையான கத்தரிக்காய் சாதம் !

கீழே உள்ளவை எல்லாம் எங்க ஊர் சந்தையில் சென்றமுறை வாங்கிய கத்தரிக்காய், நல்லாருக்கா பாருங்க !! இன்னும் கொஞ்ச நாளில் இதுபோன்ற விதவிதமான கத்தரிக்காய்கள் சந்தைக்கு வர ஆரம்பித்துவிடும். பிறகு எஞ்ஜாய்தான் !

20141108_130729

IMG_1307

IMG_8542

தேவையானவை :

அரிசி _ ஒன்றரை கப்

கத்தரிக்காய் _ நான்கைந்து

உப்பு _ தேவைக்கு
கொத்துமல்லி தழை _ கொஞ்சம்
எலுமிச்சை _ சிறு துண்டு

வறுத்து பொடிக்க‌ : காய்ந்த மிளகய், மிளகு, கொத்துமல்லி விதை, எள்,  கசகசா,  தேங்காய்

20150226_144730

எல்லாமும் தோராயமாகக் கொடுத்துள்ளேன். உங்கள் விருப்பம்போல் கூட்டவோ குறைக்கவோ செய்துகொள்ளவும்.

கொத்துமல்லி தூள் கைவசம் இருந்ததால் தூளாகவே எடுத்துக் கொண்டேன். ஆனாலும் ஃப்ரெஷ் கொத்துமல்லியை வறுத்துப் பொடித்து செய்தால் வாசனை இன்னும் சூப்பரா இருக்கும்.

தாளிக்க :

நல்லெண்ணெய்
முந்திரி
உளுந்து
சீரகம்
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

சாதம் குழையாமல், நன்றாக வெந்து, உதிரிஉதிரியாக இருக்குமாறு வடித்து ஆறவிடவும். நான் புழுங்கல் அரிசியில் செய்தேன்.

தற்போதைக்கு சின்ன கத்தரிக்காய் கைவசம் இல்லாததால் பெரிய கத்தரிக்காயின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டேன்.

வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றில் தேங்காய் தவிர மற்றதை வெறும் வாணலில் சூடு வர வறுத்துத் தனியாக வைத்துக் கொண்டு, கடைசியாக தேங்காயைத் துருவி ஈரம்போக வறுத்து, இவை எல்லாம் ஆறியதும் ஒன்றாக சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு, நறுக்கிய கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.

வதங்கும்போதே உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொண்டு, இதில் பொடித்து வைத்துள்ள பொடியைப்போட்டு கிண்டி, எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு, கொத்துமல்லியைத் தூவிவிட்டு, இறுதியில் சாதத்தைக் கொட்டி கிண்டி, உப்பு & காரம் சரிபார்த்து, இளந்தீயில் சிறிது நேரம் மூடிவைத்து, சாதம் சூடு ஏறி மசாலாவுடன் நன்றாகக் கலந்ததும் இறக்கி சாப்பிட்டுப் பார்த்து ……

20150226_120647

……….. எப்படி வந்தச்சுன்னு வந்து சொல்லுங்களேன் !!

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 10 Comments »

அரைத்துவிட்ட வத்தக் குழம்பு

 

வத்தக் குழம்பு என்றாலே நினைவுக்கு வருவது சுண்டைக்காயும், மணத்தக்காளியும்தான்.அதேபோல் வத்தக்குழம்பிற்கான காய்கள் எனும்போது வெண்டை,கத்தரி,முருங்கை இவை நன்றாக இருக்கும்.

மசாலாவுக்குத் தேவையானதை வறுத்துப் பொடிப்பதால் நல்ல வாசனையுடன் இருக்கும்.பொடிப்பதற்குப் பதிலாக சிறிது தண்ணீர் தெளித்து அரைத்தும் செய்யலாம்.

தேவையானவை:

வெண்டைக்காய்_10
சின்ன வெங்காயம்_2
முழு பூண்டு_1

வறுத்து அரைக்க:

கொத்துமல்லி விதை_2 கைப்பிடி
சுண்டைக்காய் வத்த‌ல்_10 க்குள் (அ) மணத்தக்காளி வத்தல்_ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_4
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
மஞ்சள்_சிறுதுண்டு
மிளகு_5
சீரக்ம்_சிறிது
வெந்தயம்_சிறிது
துவரம்பருப்பு_சிறிது(விருப்பமானால்)
தேங்காய்ப் பத்தை_2
புளி_பெரிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை_சுமார் 10 இலைகள்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
சீரகம்
கடலைப்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

வெறும் வாணலியை அடுப்பிலேற்றி சூடாகியதும் முதலில் கொத்துமல்லி விதையைப் போட்டு வறுக்கவும்.அது பாதி வறுபடும்போதே  துவரம்பருப்பு, மிளகு சேர்த்து வறுக்கவும்.

இவை வறுபட்டதும் கூடவே காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை  சேர்த்து வறுத்து தனியாக‌ வைக்கவும்.

அதே வாணலில் தேங்காய்த் துருவலைப் போட்டு சிவக்க வறுத்து அதனுடன் புளியைச் சேர்த்து வதக்கி,தனியாக‌ வைக்கவும்.

மீண்டும் வாணலை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு முதலில் வெங்காயம் அடுத்து தக்காளி என சேர்த்து வதங்கியதும் இறக்கவும்.

இவை ஆறியதும் முதலில் கொத்துமல்லிக் கலவையை மிக்ஸியில் போட்டுப்  பொடிக்கவும்.இவை நன்கு பொடிந்ததும் அதனுடன் புளி&தேங்காய்த் துருவல் சேர்த்துப் பொடிக்கவும்.அடுத்து வெங்காயம்,தக்காளியைத் தனியாக அரைத்து வைக்கவும்.அல்லது இவை எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் தெளித்து மைய அரைத்தெடுக்கவும்.

குழம்பு செய்ய‌ வெங்காயம் நறுக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும். வெண்டைக்காயின் இரு முனைகளையும் நறுக்கிவிட்டு வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டு ,வெண்டைக்காயை நன்றாக வதக்கித் தனியாக வைக்கவும்.

பிறகு அந்தப் பாத்திரத்திலேயே மேலும் சிறிது எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து பொடித்துவைத்துள்ள பொடி,அரைத்துவைத்துள்ள வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கி தேவையானத் தண்ணீர் விட்டு,உப்பு போட்டு மூடி கொதிக்க வைக்கவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் மிதக்கும் சமயம் வெண்டைக்காயைச் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

கீழே படத்திலிருப்பது கத்தரிக்காய் சேர்த்த வத்தக்குழம்பு.

கத்தரிக்காய் புளிக்குழம்பு

தேவையானப் பொருள்கள்:

கத்தரிக்காய்_7 லிருந்து 10 க்குள்
புளி_சிறு எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டு_பாதி அல்லது முழு பூண்டு
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
சீரகம்
கடலைப் பருப்பு
வெந்தயம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.ஊறியதும் தேவையானத் தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

குழம்பு சட்டியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றி,உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.

கொதி வருவதற்கிடையில் கத்தரிக்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.

கொதி வந்ததும் கத்தரிக்காயை குழம்பில் சேர்த்துக் கலக்கி விட்டு மீண்டும் மூடி கொதிக்க வைக்கவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து,காய் வெந்து,வாசனை வந்து,எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு:

வெங்காயம்,தக்காளி வதக்கிய பிறகு கத்தரிக்காயை சேர்த்து வதக்கியும் குழம்பு செய்யலாம்.

பொரிச்ச குழம்பு

பொரிச்ச குழம்பை பீர்க்கங்காய்,அவரைக்காய்,பிஞ்சு கத்தரிக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

துவரம்பருப்பு_1/2 கப்
பீர்க்கங்காய்_1
சின்னவெங்காயம்_7
தக்காளி_1
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய்_4 (காரம் விரும்பினால் கூட 1 அல்லது 2 மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்)
உளுந்து_ஒரு டீஸ்பூன்
சீரகம்_ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம்பருப்பை நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

வெறும் வாணலியை அடுப்பில் ஏற்றி மிதமானத் தீயில் வறுத்து அரைக்க வேண்டியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தனித்தனியாக சிவக்க வறுக்கவும். மிளகாய் கருகாமல் இருக்க வேண்டும்.

இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

பீர்க்கங்காயை விரும்பிய வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.பீர்க்கங்காயை நறுக்கும்போது சுவைத்துப் பார்க்க வேண்டும்.நன்றாக இருந்தால் மட்டுமே குழம்பில் சேர்க்க வேண்டும்.ஏனெனில் சில காய்கள் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.அது குழம்பையே கெடுத்துவிடும்.

வெங்காயம்,தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

குழம்பு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்.

எல்லாம் வதங்கியதும் வறுத்து அரைத்து வைத்துள்ளதை சேர்த்து சிறிது வதக்கி பருப்பைக் கரைத்து ஊற்றவும்.

தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.இக்குழம்பு சாம்பாரைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்கட்டும்.

இப்போது மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து மூடி போட்டு காய் வேகும்வரை கொதிக்கவிடவும்.

காய் வெந்து வாசனை வந்த பிறகு இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை,வெண்பொங்கல்,சப்பாத்தி இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.

முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

சுண்டைக்காய் வற்றல் குழம்பு

தேவையானப் பொருள்கள்:

முருங்கைக்காய் _1
(அ)
பிஞ்சு கத்தரிக்காய்_7
புளி_சிறு எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
பூண்டு_10 பற்கள்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
வடகம்
சுண்டைக்காய் வற்றல் (அ) மனத்தக்காளி வற்றல்_1/2 கைப்பிடி
கடலைப் பருப்பு
சீரகம்
பெருங்காயம்
வெந்தயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_ஒரு கொத்து

வறுத்துப் பொடிக்க:

கொத்துமல்லி விதை_ஒரு டீஸ்பூன்
மிளகு_5
சீரகம்_1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு_1/2 டீஸ்பூன்
வெந்தயம்_1/4 டீஸ்பூன்

செய்முறை:

புளியைத் தண்ணீரில் நனைத்துக் கரைத்துக்கொள்.வெங்காயம்,தக்காளி,பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்.முருங்கைக்காயை விருப்பமான நீளத்தில் நறுக்கிக்கொள்.

வெறும் மண் சட்டியில் (அ) வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்க உள்ளப் பொருள்களைத் தனித்தனியாக வறுத்து ஆற வை.அதே சட்டியில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து, பூண்டு,வெங்காயம்,தக்காளி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கு.வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளித்தண்ணீரை ஊற்று.குழம்பு கொஞ்சம் கெட்டியாக இருக்கட்டும்.குழம்பை கலக்கி விட்டு உப்பு,காரம் சரி பார்த்து மூடி கொதிக்க விடு.ஒரு கொதி வந்ததும் முருங்கைக்காயைப் போட்டு மூடி கொதிக்க விடு.காய் நன்றாக வெந்து வாசனை வந்த பிறகு பொடித்தப் பொடியைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கு.

சாதம் & வற்றல் குழம்புடன் அப்பளம் (அ) வடாம் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு:

சுண்டைக்காய் வற்றல் சிறிது கசப்புத் தன்மையுடன் இருக்கும்.எனவே சிலர் சாப்பிடும்போது ஒதுக்கி வைத்து விடுவர்.அதனால் வற்றலை தாளிப்பதற்கு பதில் அதில் பாதியை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து இறுதியில் சேர்க்கலாம்.

கத்தரிக்காய் சாதம்:

தேவையானப் பொருள்கள்:

அரிசி_2 கப்
கத்தரிக்காய்_5 சிறியது
சின்ன வெங்காயம்_3
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_கொஞ்சம்

செய்முறை:

முதலில் அரிசியை நன்றாக வேக வைத்து ஆற வைக்கவும்.கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும்.வெங்காயம் பொடியாக நறுக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளப் பொருள்களைத் தாளித்து, முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.இவை நன்றாக வதங்கிய பின் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி உப்பு,தேங்காய்ப்பால் சேர்த்து கிளறி,கத்தரிக்காய் வேகும் அளவுக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.காய் வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டு சாதத்தைக் கொட்டிக் கிளறி,கொத்துமல்லி தூவி சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்கவும்.

இதற்கு அப்பளம்,வடாம்,உருளைக் கிழங்கு,முட்டை,சிக்கன் இவை எல்லாமே நன்றாக இருக்கும்.

கத்தரிக்காய் மசியல்

தேவையானப் பொருள்கள்:

பச்சைப்பருப்பு_1/2 கைப்பிடி
கத்தரிக்காய்_4 (சிறியது)
பச்சை மிளகாய்_2
சின்ன வெங்காயம்_3
தக்காளி_பாதி
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_ஒரு பின்ச்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_கொஞ்சம்

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைப் பருப்பை நன்கு சிவக்க வறுத்துப் போதுமானத் தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.பருப்பு பாதி வேகும் போதே அதனுடன் கத்தரிக்காய்,பச்சை மிளகாய்,வெங்காயம் 2,தக்காளி,பூண்டு சேர்த்து வேக விடவும்.எல்லாம் நன்றாக வெந்த பிறகு இறக்கி ஆற வைக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

இதை மீண்டும் அதே பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் உப்பு போட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

மீதமுள்ள ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.ஒரு வாணலியில்  எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி மசியலில் கொட்டிக் கலக்கவும்.

இது இட்லி,தோசை ஆகிய‌வற்றிற்கு சூப்பர் காம்பினேஷன்.

பச்சைப் பருப்பிற்கு பதில் துவரம் பருப்பைக்கூடப் பயன்படுத்தலாம்.

கருவாடு,கத்தரிக்காய்,மொச்சைக் குழம்பு

தேவை:

கருவாடு_100 கிராம்
பிஞ்சு கத்தரிக்காய்_5‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ (அ)  வாழைக்காய்_பாதி
மொச்சை_3 கைப்பிடி (ஒரு நபருக்கு ஒரு பிடி)
புளி_எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டு_முழு பூண்டு(அ)பாதி
மிளகாய்த்தூள்_தேவையான அளவு
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_3 டீஸ்பூன்
வடகம்_கொஞ்சம்
வெந்தயம்_1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை_ஒரு கொத்து

செய்முறை:

மொச்சையை முதல் நாளே ஊற வைத்து விட வேண்டும்.இப்போது சிறிது உப்பு போட்டு வேக வைத்து எடுக்கவும்.புளியைத் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும்.கருவாட்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிய வைக்கவும்.பூண்டை உரித்துக்கொண்டு,வெங்காயத்தைத் தட்டி (அ) நறுக்கி வைக்கவும்.தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.

ஒரு மண் சட்டியில்(அ)வாணலியில்  எண்ணெய் ஊற்றிக்  காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயம்,பூண்டு போட்டு வதக்க வேண்டும்.பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து அதனுடன் கருவாடு சேர்த்து வதக்கவும்.பிறகு மொச்சை சேர்த்து வதக்கி,பிறகு மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் புளித்தண்ணீரை ஊற்றி, காரம்,உப்பு சரிபார்த்து,மூடி வைத்து கொதிக்க விடவேண்டும்.

நன்றாகக் கொதிக்கும்போது   கத்தரிக்காயை நறுக்கி (விரும்பிய வடிவத்தில்) குழம்பில் போட்டு கலக்கி விடவும்.நன்றாகக் கொதித்து காய் வெந்த பிறகு குழம்பை இறக்கி மூடி வைக்கவும்.இது முதல் நாளை விட அடுத்த நாள்தான் மிகவும் நன்றாக இருக்கும்.இதை சாதம்,இட்லி,தோசை இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு:

பிஞ்சு கத்தரிக்காயானால் காம்பை மட்டும் எடுத்து விட்டு நாலாகக் கீறி முழுதாகப் போடலாம்.வாழைக்காயானால் வட்டமாக, சற்று பெரிய துண்டுகளாகவே போடலாம்.

காய்கறி குருமா

 

தேவை:

விருப்பமான காய்கறிகள்_2 கப்

(கேரட்,பீன்ஸ்,காலிஃப்ளவர்,உருளை கிழங்கு,சௌசௌ,வெள்ளை பூசணி,வெங்காயத்தாள்,முருங்கைக்காய்,கத்தரிக்காய் போன்றவை.இவற்றில் ஒரு காயோ அல்லது பல காய்கள் சேர்த்தோ செய்யலாம்.இதில் குறிப்பிட்டுள்ளதைத்தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை.உங்கள் விருப்பப்படி சேர்க்கலாம்)

பச்சை பட்டாணி_1/4 கப்

சின்ன வெங்காயம்_10

தக்காளி_2

பச்சை மிளகாய்_1

இஞ்சி_1 துண்டு

பூண்டு_2 பற்கள்

மிளகாய் தூள்_2 டீஸ்பூன்

மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்

கொத்துமல்லி இலை_2 கொத்து

அரைக்க:

தேங்காய்_3 துண்டுகள்

கசகசா_1 டீஸ்பூன்

தாளிக்க:

சீரகம்_1/2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்

பிரிஞ்சி இலை_1

முந்திரி_5

எண்ணெய்_2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சை பட்டாணி சேர்ப்பதாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும்.கசகசாவை மிதமான சூட்டில் வறுத்து சிறிது வெந்நீர் ஊற்றி ஊறவைக்கவும்.காய்களை விரும்பிய வடிவத்தில் நறுக்கவும்.இஞசி,பூண்டு நசுக்கி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கி அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு காய்கறிகளை வதக்கவும்.பட்டாணி நன்றாக ஊறி இருந்தால் காய்களுடன் அப்படியே சேர்க்கலாம்.இல்லை என்றால் தனியாக வேகவைத்து சேர்க்கலாம்.இப்போது மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி காய் வேகுமளவு தண்ணீர் ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து வேகவிடவும்.

காய் வெந்ததும் கசகசா,தேங்காய் அரைத்து ஊற்றவும்.குருமா கெட்டியாக இருக்கட்டும்.இரண்டு கொதி கொதித்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.புதினா வாசம் பிடிக்குமானால் இரண்டு(அ)மூன்று இலைகள் சேர்க்கலாம்.இப்போது கமகமக்கும் காய்கறி குருமா தயார்.இது சப்பாத்தி,நாண்,இடியாப்பம் இவற்றிற்கு நன்றாகப் பொருந்தும்.

கேரட்,கத்தரிக்காய்,முருங்கைக்காய் சாம்பார்

 

தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு: 1/2 கப்
கேரட்_1
கத்தரிக்காய்_1
முருங்கைக்காய்_1
சின்ன வெங்காயம்_5
தக்காளி_1
பூண்டு_ 2 பற்கள்
புளி_பெரிய கோலிக்குண்டு அளவு
மிளகாய் தூள்_ 21/2 டீஸ்பூன்
மஞள் தூள்_  1/4 டீஸ்பூன்
கொத்துமல்லி தழை_ 1 கொத்து
தாளிக்க:

கடுகு_ 1/4 டீஸ்பூன்
உளுந்து_ 1/4 டீஸ்பூன்
சீரகம்_ 1/4 டீஸ்பூன்
வெந்தயம்_  சிறிது
பெருங்காயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_ 1/2 ஈர்க்கு

செய்முறை:
முதலில் பருப்பை நன்றாக கழுவி நீரை வடித்துவிட்டு அது மூழ்கும் அளவை விட அதிகமாகவே தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள்,  2 சொட்டு விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து பருப்பு குழையும் வரை வேக வைக்கவும். காய்களை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.இதில் உள்ள காய்களைத்தான் போடவேண்டும் என்பதில்லை.பிடித்தமான காய்களை போட்டுக்கொள்ளலாம். வெங்காயத்தை நீள வாக்கில் அரிந்து வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.தக்காளியைத் துண்டுகளாக்கவும்.புளியை நீரில் ஊறவத்து  1/2 கப் அளவிற்கு கரைத்து வைக்கவும்.
பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் கடுகு,உளுந்து, சீரகம்,வெந்தயம்,பெருங்காயம்,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி வதக்கி அதன்பிறகு காய்களை வதக்க வேண்டும்.சிறிது வதங்கியதும் மிள்காய்த் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி புளித்தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும்.காய் வெந்ததும் பருப்பைக் கொட்டி கலந்து உப்பு போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.கடைசியில் கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.