பருப்புக் கீரை / Paruppu keerai

paruppu keerai

ஊரில் இருக்கும்வரை கலவை கீரை அடிக்கடி கிடைக்கும்.எங்கம்மா அதை புளி சேர்த்து கடைஞ்சிருவாங்க.கதம்ப சாம்பார் மாதிரி இந்தக் கலவை கீரையும் சுவையாக இருக்கும்.

கலவைக் கீரை என்பது சிறுகீரை,முளைக்கீரை,தண்டுக்கீரை,அரைக்கீரை கொய்யாக்கீரை,குப்பைக்கீரை, பசலைக் கீரை, பருப்புக் கீரை என எல்லாக் கீரைகளும் சேர்ந்ததாகும்.அப்படித்தான் இந்தப் பருப்புக் கீரையைப் பார்த்திருக்கிறேன்.தனியாக சமைத்ததில்லை.

சென்ற வருடம் முதன்முறையாக ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் இந்த பருப்புக் கீரையைப் பார்த்ததும் வாங்கிவந்து சமைக்காமலேயே தூக்கிப் போட்டுவிட்டேன்.லேஸான ஒரு கொழகொழப்பு தெரிந்தது.இப்போது இரண்டு வாரங்களாக‌ இக்கீரை வந்துகொண்டிருக்கிறது.

‘நல்லதுமா,சமைத்து சாப்பிடு’, என அம்மா சொல்லியதால் இந்த முறை விடுவதாக இல்லை என வாங்கிவந்து இரண்டு நாட்கள் சமைத்தாயிற்று. சூப்பராக இருந்தது.உங்களுக்குக் கிடைத்தால் நீங்களும் சமைத்துப் பாருங்களேன்.

paruppu keeraiparuppu keerai

இவ்வளவு பசுமையாக இருப்பதை வாங்காமல் விடலாமா!!

(கீழே படத்திலுள்ள கீரை எங்கள் வீட்டு தொட்டியில் வளர்த்தது)

IMG_0489

தேவையானவை:

பருப்புக்கீரை_1/2 கட்டு
பச்சைப் பயறு_1/4 கப்
சின்ன வெங்காயம்_5
தக்காளி_1
பூண்டிதழ்_2

அரைக்க:

தேங்காய் பத்தை_3
காய்ந்த மிளகாய்_1(காரத்திற்கேற்ப)
சீரக‌ம்_கொஞ்சம்

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

பச்சைப் பயறு வேக ஆகும் தண்ணீரின் அளவைவிட ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் கூடுதலாக விட்டு பூண்டிதழ், பெருங்காயம், மஞ்சள்தூள்,இரண்டு துளி விளக்கெண்ணெய் சேர்த்து மலர‌ வேக வைக்கவும்.குழைந்துவிட வேண்டாம்.

பயறு பாதி வேகும்போதே வெங்காயம்,தக்காளி சேர்த்து வேக விடவும்.

தேங்காயுடன்,சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

வெந்து கொண்டிருக்கும் பயறில் அரைத்த விழுது+கீரை இரண்டையும் சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்க விடவும்.

கீரை வெந்து எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்து கீரையில் கொட்டிக் கலக்கவும்.

இதனை சாதத்துடனோ அல்லது சாதத்துக்கு பக்க உணவாகவோ சாப்பிடலாம்.

கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 16 Comments »

கேழ்வரகு & வெந்தயக்கீரை பகோடா / Kezhvaragu & Vendhaya keerai pakoda

raagi pakoda

நான் கேழ்வரகு மாவுடன் வெந்தயக்கீரை சேர்த்து செய்துள்ளேன்.வெந்தயக்கீரைக்குப் பதிலாக முருங்கைக்கீரை சேர்த்தும் செய்யலாம்.

தேவையானவை:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
வெந்தயக்கீரை_ஒரு கப்
பெரிய‌ சின்ன வெங்காயம்_1 (சாதாரண சின்ன வெங்காயம் என்றால் 5 லிருந்து 10 க்குள்)
இஞ்சி_சிறு துண்டு
பச்சைமிளகாய்_1
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

மார்க்கெட்டில் இளம்,துளிர் வெந்தயக்கீரையைப் பார்த்ததும் வாங்காமல் வர மனமில்லை.வாங்கிவந்து சாம்பார்,பகோடா இரண்டும் செய்தாயிற்று.இங்குள்ள‌ பகோடா நன்றாக இருப்பதாகத் தோன்றினால் நீங்களும் செய்து பார்க்கலாமே.

methi leaves

வெந்தயக்கீரையை ஆய்ந்து,தண்ணீரில் அலசி எடுத்து நீரை வடிக்கவும். கீரையை நறுக்காமல் முழுதாகவே போட்டுக்கொள்வோம். நறுக்கினால் கசப்பு அதிகமாகிவிடும்.

சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.பச்சை மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை&கொத்து மல்லி இவற்றைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு கிண்ணத்தில் மாவு முதற்கொண்டு எல்லாவற்றையும் போட்டு,கைகளால் கிளறிவிட்டு,சிறிதுசிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.கிள்ளி எடுத்து போடும் பதமாக இருக்கட்டும்.

raagi pakoda

ஒரு வாணலில் திட்டமாக எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்,மாவைக் கிள்ளினாற்போல் எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு தரம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.

மாலை நேரத்துக்கு கொறிக்க சுவையான,மொறுமொறு கேழ்வரகு பகோடா ரெடி.

அடுத்த நாளும் அந்த மொறுமொறு குறையவேயில்லை.துளி எண்ணெய்கூட குடிக்கவில்லை.

பீட்ரூட் கீரை மசியல்

 

         

பீட்ரூட் வாங்கி வந்தால் முன்பெல்லாம் அதிலுள்ள இலைகளை மனசே வராமல் (நீளமான, கலர்ஃபுல்லான தண்டுடன் கூடிய இலைகள் அழகாக‌ இருப்பதால்) தூக்கிப்போட்டு விடுவேன்.பிறகு நெட்டில் பார்த்து அதை சாலட்டில் சேர்ப்பதைத் தெரிந்துகொண்டு இப்போதெல்லாம் பருப்பு அல்லது புளி சேர்த்து நம்ம ஊர் ஸ்டைலில் மசியல் செய்துவிடுவேன். நல்ல சுவையாகவும் இருக்கிறது.இதற்கு தண்டுப்பகுதியை நீக்கிவிட்டு கீரையை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

தேவையானவை:

பீட்ரூட் கீரை_4 செடிகளின் இலைகள் (நான் செய்தது)
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
பச்சைமிளகாய்_1
புளி_சிறு கோலி அளவு
பூண்டிதழ்_7 எண்ணிக்கை
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு_2
சீரகம்
காய்ந்தமிளகாய்_1
பெருங்காயம்

செய்முறை:

முற்றிய,பூச்சி இலைகளை நீக்கிவிட்டு,மீதமுள்ள கீரையை நன்றாக நீரில் அலசித் தண்ணீரை வடியவைக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அதே வாணலை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி,புளி,கீரை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி இறக்கவும்.

தாளித்தது,வதக்கியது இவை எல்லாம் ஆறியதும் மிக்ஸியில் போட்டு மசித்து எடுக்கவும்.தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

இப்போது சுவையான,சிறிது பிங்க் நிறத்தினாலான பீட்ரூட் கீரை மசியல் தயார்.

இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.துவையல் போலவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வெந்தயக்கீரை மசியல் (புளி சேர்த்து)

வெந்தயக்கீரை மசியல்

கீரையுடன் பருப்பு மட்டும் சேர்த்து செய்யும்போது ஒரு சுவை.அதுபோல் புளி சேர்த்து செய்யும்போது தனிசுவை.இதே செய்முறையில் mustard green னிலும் செய்யலாம்.இனி செய்முறையைப் பார்க்கலாம்.

தேவையானவை:

வெந்தயக்கீரை_ஒரு கட்டு
தோல் உளுந்து_ஒரு கைப்பிடி (இட்லிக்குப்போடும் உளுந்து)
சின்ன வெங்காயம்_3
பச்சை மிளகாய்_1
தக்காளி_சிறு துண்டு
பூண்டிதழ்_3
புளி_சிறு கோலி அளவு
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
மிளகு_2
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
பூண்டிதழ்_2

செய்முறை:

கீரையைச் சுத்தம் செய்து,நீரில் அலசி,தண்ணீர் வடிய‌ வைக்கவும்.

வெறும் வாணலை அடுப்பில் ஏற்றி சூடேறியதும் உளுந்தைப் போட்டு,சிவக்க வறுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்துல் அரை டம்ளர் தண்ணீர் விட்டு,அடுப்பில் ஏற்றவும்.தண்ணீர் கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள உளுந்தைப் போட்டு வேகவிடவும்.

உளுந்து பாதி வெந்து வரும்போதே அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,பூண்டு,புளி சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து கொதித்ததும் கீரையைச் சேர்க்கவும்.

கீரை வெந்ததும் இறக்கி,சிறிது உப்பு சேர்த்து,மிக்ஸியில் போட்டு மசிக்கவும்.

தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து,அதனுடன் கடைசியில் பூண்டிதழைத் தட்டிப்போட்டு வதக்கி கீரையில் சேர்த்து ஒன்றிரண்டு சுற்றுகள் சுற்றி எடுக்கவும்.

இப்போது சாதத்துடன் சேர்த்து சாப்பிட வெந்தயக்கீரை மசியல் தயார்.

கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . 6 Comments »

முருங்கைக்கீரை சாம்பார்

முருங்கைக்கீரை சாம்பாரை நீர்க்க வைத்தால்தான் நன்றாக இருக்கும்.முருங்கைக்கீரையுட‌ன் புளி சேர்த்தால் நன்றாக இருக்காது என்பதால் சேர்க்க வேண்டாம்.காய்கறிகள் சேர்க்காததால் உப்பு,காரம் இவற்றைக் குறைத்துப் போட வேண்டும்.கீரை எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்த்க்கொள்ளலாம்.பெருஞ்சீரகம் முக்கியம்.

தேவையானப் பொருள்கள்:

துவரம்பருப்பு_1/4 கப்
முருங்கைக்கீரை_ஒரு கிண்ணம்
சின்ன வெங்காயம்_5
தக்காளி_பாதி
பச்சைமிளகாய்_1
பூண்டுப்பல்_2
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_ஒன்றரை டீஸ்பூன்
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்_சிறிது
காய்ந்தமிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு குக்கரில்(அ)பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.

தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொள்ளலாம்.

நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு(மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும்.

இப்போது முருங்கைக்கீரை சாம்பார் தயார்.

இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

புளி போட்ட கீரை மசியல்

கீரையில் பருப்பு சேர்த்து செய்வது போல சில கீரைகளில் புளி சேர்த்தும் செய்வார்கள்.

முருங்கைக்கீரை, spinach  போன்ற ஒருசில கீரைகள் தவிர மற்ற கீரைகளில் புளி சேர்த்து செய்யலாம்.சுவையாகவும் இருக்கும்.

தேவையானப் பொருள்கள்:

கீரை_ஒரு கட்டு
புளி_பெரிய கோலி அளவு
பச்சை மிளகாய்_2
பூண்டு_5 பல்
உப்பு_தேவைக்கேற்ப‌

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
பூண்டு_5 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

செய்முறை:

கீரையின் தண்டுப்பகுதி இல்லாமல் கீரையை மட்டும் ஆய்ந்து,சுத்தம் செய்து நீரில் அலசி எடுத்து தண்ணீரை வடிய வைக்கவும்.

ஒரு சட்டியில் ஒரு 1/2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் பச்சை மிளகாய்,பூண்டு சேர்த்து அடுப்பில் ஏற்றி சூடுபடுத்தவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் கீரை,புளி சேர்த்து வேக வைக்கவும்.

கீரை நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,இறுதியில் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி கீரையில் கொட்டவும்.

இவை எல்லாம் நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு   pulse  ல் வைத்து இரண்டு சுற்று சுற்றினால் மசிந்துவிடும்.

மிகவும் நைசாக இல்லாமல் சிறிது கரகரப்பாக இருக்கும்போது வழித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

இது சாதத்தில் பிசைந்து ,வற்றலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

கீரை மசியல் (Watercress)

சைனீஸ் கடைகளில் கிடைக்கும் இந்தக் கீரையில், மற்ற கீரைகளைப் போல  மசியல்,சாம்பார்,பொரியல் எது செய்தாலும் நன்றாகவே உள்ளது.

தேவையானப் பொருள்கள்:

கீரை  ( Watercress) _ ஒரு கட்டு
பச்சைப்பருப்பு (அ) துவரம்பருப்பு _ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய்_1
சின்ன வெங்காயம்_2
பூண்டு_2 பற்கள்
தக்காளி_1/4 பாகம்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்

செய்முறை:

கீரையை ஆய்ந்து அலசி நீரை வடிய வைக்கவும்.

பச்சைப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆறியதும் கழுவிவிட்டு ஒரு பாத்திரத்தில்  எடுத்துக்கொண்டு அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி,துளி மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.ஒரு சொட்டு விளக்கெண்ணெய் விட்டால் பருப்பு சீக்கிரமே குழைய வெந்துவிடும்.

பருப்பு பாதி வேகும் நிலையில் பச்சை மிளகாய், வெங்காயம்,பூண்டு, தக்காளி சேர்த்து வேகவைக்கவும்.எல்லாம் சேர்ந்து வெந்து வரும்போது கீரையைப் போட்டு வேகவைக்கவும்.இப்போது மூட வேண்டாம்.

சிறிது நேரத்திலேயே கீரை வெந்துவிடும்.வெந்ததும் இறக்கி ஆற வைத்து அதில் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மசிந்துவிடும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக்கொடுத்துள்ளப் பொருள்களைத்  தாளித்துக் கீரையில் கொட்டி மேலும் ஒரு சுற்று சுற்றினால் போதும்.

இப்போது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையான கீரை மசியல் தயார்.

கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

கீரைக் கூட்டு (Bok choy)

தேவையானப் பொருள்கள்:

Bok choy கீரை_2 (தண்டுடன்)
பச்சைப் பயறு (அ) கடலைப் பருப்பு_1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம்_2
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_1
உப்பு_தேவைக்கு

அரைக்க:

சீரகம்_1/4 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைப் பருப்பை சிவக்க வறுத்து நன்றாகக் கழுவிவிட்டு ஒரு கடாயில் அது வேகும் அளவு தண்ணீ விட்டு சிறிது மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும்.

கீரையைக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.வெங்காயம்,பூண்டு உரித்து நறுக்கி வைக்கவும்.காரம் வேண்டாம் என்பவர்கள் பச்சை மிளாயை முழுதாகப் போட்டு வெந்ததும் தூக்கிப் போட்டு விடலாம்.(காரம் விருப்பமானால் தேங்காய்,சீரகத்துடன் வைத்து அரைத்து சேர்க்கலாம்).

பருப்பு முக்கால் பதம் வேகும்பொதே வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய், கீரை சேர்த்து சிறிது உப்பு போட்டு மூடி போடாமல் வேகவிடவும்.

எல்லாம் நன்றாக  வெந்ததும் தேங்காய்,சீரகம் அரைத்து சேர்த்துக் கிளறிவிட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து கீரையில் கொட்டி மூடவும்.

இதை சாதத்தில் பிசைந்தோ (அ) சாதத்திற்கு தொட்டுக்கொண்டோ சாப்பிடலாம்.

இதனை எல்லாக் கீரைகளிலும் செய்யலாம்.

கீரை, கூட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

கீரை சாம்பார்

 

 

 

 

 

 

 

 

 

 

 

நான் இங்கு பயன் படுத்தியுள்ள கீரை bok choy. விருப்பமானால் முழு கீரையை சாம்பாருக்குப் பயன்படுத்தலாம்.அல்லது தண்டினைப் பிரித்து  கூட்டு,பொரியல் செய்யப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

தேவையானப் பொருள்கள்:

கீரை_ஒரு கட்டு
துவரம் பருப்பு_1/2 கப்
சின்ன வெங்காயம்_5
தக்காளி_பாதி
பூண்டு_2 பற்கள்
புளி_சிறு கோலி அளவு
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_  ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:


துவரம் பருப்பை நன்றாக மலர வேக வை.கீரையைத் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வை.

 

 

வெங்காயம்,தக்காளி,பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கி வை.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.அடுத்து வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கு.அதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்து வதக்கி  பருப்பைக் கடைந்து ஊற்றி மூடி வேக வை.ஒரு கொதி வந்ததும் கீரை சேர்த்து கலக்கிவிட்டு சிறிது புளித்தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் கொத்துமல்லி,தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கு.நீண்ட நேரம் கொதிக்க வேண்டாம்.

இந்த முறையில் எல்லாக் கீரைகளிலும் செய்யலாம்.

முருங்கைக் கீரையானால் புளி சேர்க்க வேண்டாம்.

கீரை, சாம்பார் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 2 Comments »

கீரை மசியல் & கீரை சாதம் (Mustard Green)

தேவையானப் பொருள்கள்:

கீரை_1 கட்டு

சின்ன வெங்காயம்_3

தக்காளி_1/2

பச்சை மிளகாய்_1

உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

கடுகு

உளுந்து

மிளகு_5

சீரகம்_ 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்_2

பூண்டு_5 பற்கள்

பெருங்காயம்_சிறிது

நல்லெண்ணெய்_ 2 டீஸ்பூன்

இதில் நான் பயன்படுத்தியக் கீரை mustard green  .   இந்த முறையில் எல்லாக் கீரைகளையும் செய்யலாம்.

செய்முறை:

கீரையைக் கழுவி நீரை வடிய வைத்து நறுக்கி வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு கீரை சேர்த்து வதக்கவும.மூட வேண்டாம். சிறிது நேரத்திலேயே வதங்கிவிடும்.இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.

மீண்டும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து மிக்ஸியில் உள்ள கீரையில் கொட்டி சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.தேவையான உப்பு சேர்த்து ஒரு கிண்ண‌த்தில் எடுத்து வைக்கவும்.தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை.இது சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்.

கீரை சாதம் தயார் செய்வதாக இருந்தால் 2 கப் அரிசியை வேக வைத்து சாதத்தை வடித்து ஆற வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடுபடுத்தி பெருங்காயம் தாளித்து கிரை மசியலை அதில் கொட்டி அடுப்பை அணைத்து விடவும்.அதே சூட்டிலேயே சாதத்தைக் கொட்டிக் கிளறி உப்பு சரி பார்க்கவும்.இதற்கு வறுவல், பொரியல், வற்றல் எல்லாமே நன்றாக இருக்கும்.

கீரை, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , , . 2 Comments »