அவரவர் விருப்பம்போல் பனீரை தனியாகவோ அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்தோ குருமா செய்யலாம்.
தேவையானவை:
பனீர்_சுமார் 100 g
பச்சைப் பட்டாணி_1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1 பெரியது
இஞ்சி_சிறு துண்டு
பூண்டிதழ்_3
மிளகாய்த்தூள்_ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
எலுமிச்சை சாறு
கொத்துமல்லி தழை_ஒரு கொத்து
புதினா_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு
அரைக்க:
தேங்காய் பத்தை_3
கசகசா_ஒரு டீஸ்பூன்
முந்திரி_2 (அல்லது) சிறிது பொட்டுக்கடலை
தாளிக்க:
எண்ணெய்
கிராம்பு_3
பட்டை_சிறு துண்டு
சீரகம்
பெருஞ்சீரகம்
வெந்தயம்_4 (வாசனைக்கு)
செய்முறை:
பச்சைப்பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிடவும்.
வெங்காயம்,தக்காளி இவற்றை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்..இஞ்சி & பூண்டு தட்டிக்கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,முதலில் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயம் & தக்காளி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம்போக நன்றாக வதக்கவும்.
அடுத்து பட்டாணியை சேர்த்து வதக்கிவிட்டு,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
குருமா கொதி வருவதற்குள் ஒரு கடாய் அல்லது தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விடவும்.
பனீரை சிறுசிறு துண்டுகளாக்கி,எண்ணெய் சூடானதும் கடாயில் போட்டு,பனீரின் எல்லா பக்கங்களும் லேஸாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.அல்லது நறுக்கிய துண்டுகளை அப்படியேகூட சேர்த்துக்கொள்ளலாம்.
குருமா கொதிக்க ஆரம்பித்ததும் பனீர் துண்டுகளை சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்கவிடவும்.
குருமா நன்றாகக் கொதித்த பிறகு தேங்காய்,கஸகஸா,முந்திரி இவற்றை மைய அரைத்து குருமாவுடன் சேர்த்து கலக்கிவிடவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்ததும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி,புதினா சேர்த்து இறக்கவும்.
இது சாதம்,சப்பாத்தி,பரோட்டா இவற்றிற்கு சூப்பராக இருக்கும்(இருந்தது).