மிகவும் சுவையான இந்த சீயம் தீபாவளியன்று (எங்க வீட்டில்) செய்வாங்க.இதை சாப்பிட ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.என்ன கொஞ்சம் (உண்மையில் அதிகம்) வேலை வாங்கும்.
சிலர் மேல் மாவிற்கு மைதாவிற்கு பதில் புதிதாக அரைத்த இட்லி மாவைப் பயன்படுத்துவார்கள்.புளித்த மாவு என்றால் அதிகமாக எண்ணெய் குடிக்கும்.
மைதாவில் செய்யும்போது சீயம் வெள்ளையாக இருக்கும்.இட்லி மாவில் செய்யும்போது சிவந்து வரும்.
கடலைப் பருப்பிற்கு பதில் பச்சைப் பருப்பிலும் இதைச் செய்யலாம்.எங்கம்மா செய்யும் முறை எனக்குப் பிடிக்கும் என்பதால் அதையே கீழேக் கொடுத்துள்ளேன்.
தேவையானவை:
பூரணத்திற்கு:~
கடலைப்பருப்பு_ஒரு கப்
வெல்லம்_ஒரு கப்
ஏலக்காய்_1
மேல் மாவிற்கு:~
மைதா_2 கப்
அரிசிமாவு_2 டீஸ்பூன்
சமையல் சோடா_துளிக்கும் குறைவாக
மஞ்சள்தூள்_ஒரு சிட்டிகை
உப்பு_சுவைக்கு
எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
கடலைப் பருப்பைக் கழுவிவிட்டு,அது மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி மலர வேக வைக்கவும்.ஆனால் குழைந்திருக்கக் கூடாது.பருப்பு வெந்ததும் நீரை வடிக்கவும்.நீரை வடித்தும் நீர் இருப்பதுபோல் தோன்றினால் ஒரு சுத்தமான துணி/பேப்பர் டவலில் பரப்பிவிட்டு உலர வைக்கவும்.
வெல்லத்தை மண்,தூசு நீக்கி சுத்தம் செய்துவிட்டுப் பொடிக்கவும்.ஏலக்காயைப் பொடிக்கவும்.
கடலைப் பருப்பை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடிக்கவும்.பிறகு ஒரு கடாயில் எடுத்து,அதனுடன் வெல்லத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமானத் தீயில் வதக்கவும்.முதலில் சிறிது இளகி பின் கெட்டியாகும். இப்போது ஏலப்பொடியைச் சேர்த்து இறக்கவும்.
இது ஆறியதும் படத்திலுள்ளதுபோல் சிறுசிறு உருண்டைகள் பிடிக்கவும்.
மேல்மாவிற்கு கூறியுள்ள அனைத்தையும் மாவு சலிக்கும் சல்லடையில் போட்டு இரண்டு முறை சலிக்கவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு இட்லி மாவுபோல் கரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடாகியதும் உருண்டைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.எண்ணெய் அதிகமாக சூடாக இருக்கக்கூடாது.
மேலும் உருண்டைகள் உடைந்துவிடாமல் வேக வேண்டும்.உடைந்துவிட்டால் உள்ளேயுள்ள பூரணம் வெளியில் வந்து எண்ணெய் முழுவதும் பரவி கருப்பாகிவிடும்.
அதிக எண்ணிக்கையில் போடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் போடலாம். ஒன்றையொன்று ஒட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இப்போது உருண்டைகளைத் திருப்பிவிட்டு (போண்டா போல்) வெந்ததும் எடுத்துவிடவும்.
இப்போது சுவையான சீயம் நொறுக்க/சாப்பிடத் தயார்.