தேவையானப் பொருள்கள்:
சாதம்_ஒரு கிண்ணம்
புளி_கோலி அளவு
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
வேர்க்கடலை_கொஞ்சம் (இல்லையெனில் பரவாயில்லை)
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை
வதக்க வேண்டிய பொடிகள்:
கொத்துமல்லி பொடி_ஒரு டீஸ்பூன்
வெந்தயப்பொடி_சிறிது
செய்முறை:
இதனைப் பெரும்பாலும் இரவு மீதமாகும் சாதத்தில்தான் செய்வார்கள்.சாதம் ஒரு கிண்ணம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.
புளியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
ஊறியதும் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.
சாதத்தில் புளித்தண்ணீர்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். இரவு முழுவதும் இருக்கட்டும்.அப்போதுதான் புளி,சாதத்தில் நன்றாக ஊறி இருக்கும்.காலையில் பார்த்தால் சாதம் நீர்விட்டிருக்கக் கூடாது.கெட்டியாக இருக்க வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு,தீயை மிகவும் குறைவாக வைத்துக்கொண்டு கொத்துமல்லிப் பொடி,வெந்தயப் பொடியை சேர்த்து ஒரு கிளறு கிளறிவிட்டு உடனடியாக சாதத்தை சேர்த்துக் கிளறவும்.
இப்போது தீயை மிதமாக்கிக்கொண்டு ஒரு மூடி போட்டு வைக்கவும்.
இடையிடையே கிளறி விடவும்.
சாதம் நன்றாக சூடு ஏறி புளி வாசனை போனதும் இறக்கவும்.
இதற்கு உருளைக்கிழங்கு,சேப்பங்கிழங்கு,முட்டை,சிக்கன் வறுவல்கள் நன்றாக இருக்கும்.
நல்ல பதமாக செய்தால் குழம்பு வைத்து கிண்டும் சாதத்தைவிட இதுதான் அருமையாக இருக்கும்.