பொட்டுக்கடலை மாவு முறுக்கு

 

 

ஒரு 3/4 கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக்கி சல்லடையில் போட்டு சலித்து தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை வேறு எதற்காகவாவது பயன்படுத்திக்கொள்ளலாம்.பொட்டுக்கடலை மட்டுமே சேர்ப்பதால் முறுக்கு நல்ல வெள்ளைவெளேர் என்று சூப்பராக இருக்கும்.

கண்டிப்பாக முறுக்கில் சேர்க்கும் மாவுகள் மிக நைசாக‌ இருக்க வேண்டும். இல்லையெனில் முறுக்கு மொறுமொறுப்பாக‌ இல்லாமல் கடிக்கவே கஷ்டமாக இருக்கும்.

முறுக்கு மாவுடன் உங்கள் விருப்பம்போல் ஓமம்,எள்,பெருங்காயம் மட்டுமல்லாமல் சீரகம்,கறிவேப்பிலை,தனி மிளகாய்த்தூள் என சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையானவை:

அரிசி மாவு_2 கப்
பொட்டுக்கடலை மாவு_1/2 கப்
ஓமம்_சிறிது
எள்_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு

செய்முறை:

ஒரு தட்டில் அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவு,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகப்போட்டு நன்றாகக் கலந்து,சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் முறுக்குக் குழலில் மாவைப்போட்டு நேராக வாணலிலோ அல்லது ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளைப் பிழிந்து வைத்தோ எடுத்து எண்ணெயில் போடவும்.

ஒருபக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்து எண்ணெய் சத்தம் அடங்கியதும்  எடுத்துவிடவும்.

இப்போது கரகர,மொறுமொறு முறுக்குகள் தயார்.செய்வதற்கும் எளிது.நினைத்தவுடன் செய்துவிடலாம்.

 

முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 7 Comments »

வாழைப்பூ வடை

பொதுவாக மொந்தன் வாழையிலுள்ள காய்,தண்டு,பூ இவற்றைத்தான்  சமையலுக்குப்  பயன்படுத்துவாங்க. நாமெல்லாம் சமைத்து சாப்பிடுகிறோமே வாழைக்காய் அதுதான் மொந்தன் வாழை.அதன் பூதான் அதிகம் துவர்க்காமல் இருக்கும். வடைக்குப் பொருத்தமாக இருக்கும்.

இல்லையென்றால் வாங்கும் பூவின் மேல் வரிசைகளை (நான்கைந்து) சாம்பார், பொரியல், கூட்டு, உசிலி என ஏதாவது செய்யப் பயன்படுத்திக்கொண்டு உள் வரிசைகளை வடைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இதில் துவர்ப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும்..

வாழைப்பூ புதிதாகக் கிடைத்தால் உடனே வாங்கிவிடுங்கள்.வாங்கியபிறகு என்ன செய்யலாம் என யோசித்து செய்யலாம். இதை செய்ய வேண்டும் என நினைத்து பழைய பூவை வாங்கி வர வேண்டாம்.அதிலுள்ள துவர்ப்பு போய் கசக்க ஆரம்பித்துவிடும்.

தேவையானப் பொருள்கள்:

வாழைப்பூ _பாதி
பொட்டுக்கடலை_ஒரு கப்
சின்ன வெங்காயம்_10
தேங்காய் பத்தை_5
இஞ்சி_சிறு துண்டு
பூண்டு பல்_2
காய்ந்த மிளகாய்_1
பச்சை மிளகாய்_1
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவின் வேண்டாதவைகளை (கள்ளன்,கள்ளி அல்லது நரம்பு, தொப்புள் எனவும் சொல்வாரகள்) நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு அலசி அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து ஒரு கொதி வருமாறு வேக வைக்கவும்.

பிறகு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைக்கவும்.

பொட்டுக்கடலையை முதலில் பொடித்துக்கொண்டு பிறகு அதனுடன் தேங்காய்,மிளகாய்,இஞ்சி,பூண்டு,பெருஞ்சீரகம் இவற்றை ஒன்றாகப் போட்டு கொரகொரவென அரைத்தெடுக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

இறுதியில் வாழைப்பூவை சேர்த்து அரைக்கவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்து மசிந்ததும் வழித்தெடுக்கவும்.

இதில்  பொடியாக நறுக்கிய வெங்காயம்,பெருங்காயம்,கறிவேப்பிலை, கொத்துமல்லி,தேவையான உப்பு சேர்த்து வடைமாவு போலவே பிசைந்துகொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.எண்ணெய் காய்ந்ததும் வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.


இது கூடுதல் மொறுமொறுப்பாகவும்,கூடுதல் சுவையாகவும் இருக்கும்.

தேங்காய் சட்னி,கெட்சப்புடன் சாப்பிட சூப்பர்.

எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.

தேங்காய்,பொட்டுக்கடலை,கொத்துமல்லி சட்னி

தேவையானப் பொருள்கள்:

தேங்காய்_1/4 மூடி

பொட்டுக் கடலை_1/4 கப்

கொத்துமல்லி இலை_ஒரு கைப்பிடி  (உருவியது)

பச்சை மிளகாய்_2

முந்திரி_2

இஞ்சி_ஒரு சிறிய துண்டு

உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்

கடுகு

உளுந்து

காய்ந்த மிள்காய்_1

பெருங்காயம்

கறிவேப்பிலை_5 இலைகள்

செய்முறை:

தேவையானப் பொருள்களை எடுத்து வைக்கவும்.தேங்காயை சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பல்ஸில் வைத்து ஒரு சுற்று சுற்றி ,பிறகு அதனுடன் தேவையானப் பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து , தேவையான அளவு தண்ணீரையும்  சேர்த்து மைய‌ அரைத்தெடுக்கவும்.அதை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மூடி வைக்கவும்.இது இட்லி,தோசை,வடை,அடை போன்றவற்றிற்குப் பக்க உணவாகப் பயன்படுத்தலாம்.கெட்டியாக அரைத்தால் துவையலாகவும் உபயோகிக்கலாம்.

தட்டை/எள்ளடை/எல்லடை

தேவையானப் பொருள்கள்:

புழுங்கல் அரிசி_2 கப்புகள்

பொட்டுக்கடலை_1/2 கப்

கடலைப் பருப்பு_1 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய்_6(காரத்திற்கேற்ப)

பூண்டு_2 பற்கள்

பெருங்காயம்_சிறிது

உப்பு_தேவையான அளவு

எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அரைக்கும் போதே அதனுடன் பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும்.அதே சமயம் மழமழவென அரைக்க வேண்டும்.அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.இல்லை எனில் கடினமாக இருக்கும்.

பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து மாவாக்கவும்.மாவு மழமழவென இருக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு,பொட்டுக்கடலை மாவு,கடலைப் பருப்பு, பெருங்காயம்,உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.பிசைந்த மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.அதுதான் சரியான மாவு பதம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி சூடேற்றவும்.மாவில் இருந்து ஒரு கோலி அளவு எடுத்து உருண்டையாக்கி பேப்பர் டவலில் வைத்து வட்டமாகத் தட்டவும்.மாவில் உள்ள கடலைப் பருப்பு வெளியில் தெரிய வேண்டும்.அவ்வளவு மெல்லியதாகத் தட்ட வேண்டும்.

எண்ணெய் சூடேறியதும் நான்கைந்தாகப் போட்டு வேக வைக்கவும்.ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் சிவந்ததும் எடுத்து ஆற வைக்கவும்.இதுபோல் எல்லாவற்றையும் போட்டு ஆற வைத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எடுத்து வைக்கவும்.இப்போது சுவையான, மொறுமொறுப்பான எள்ளடைத் தயார்.

குறிப்பு:

விருப்பமானால் மாவு பிசையும் போது எள் 1 டீஸ்பூன்,கறிவேப்பிலை கொஞ்சம் கிள்ளிப் போட்டு தட்டலாம்.எள்ளடையை புழுங்கல் அரிசியில் செய்தால்தான் நல்ல சுவையாக,மொறுமொறுப்பாக இருக்கும்.

சோமாஸ்

 

தேவை:

மேல் மாவிற்கு:

மைதா_ 2 கப்
உப்பு_தேவையான அளவு

பூரணம் செய்வதற்கு:

ரவை_1 கப்
பொட்டுக்கடலை_1/2 கப்
சர்க்கரை_1 கப்
முந்திரி_10
ஏலம்_1
கசகசா_1 டீஸ்பூன்
தேங்காய் பூ_1 டீஸ்பூன்(விருப்பமானால்)
எண்ணெய்_பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மேல் மாவு செய்தல்:

முதலில் மைதா மாவுடன் உப்பைப் போட்டு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும்.பூரி மாவுப் பதத்தில் இருக்க வேண்டும்.

பூரணம் செய்தல்:

வெறும் வாணலியில் ரவை,பொட்டுக்கடலை,முந்திரி,கசகசா இவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். தேங்காய்ப் பூ போடுவதாக இருந்தால் சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.இவை அனைத்தும் ஆறியதும் இவற்றுடன்  சர்க்கரை,பொடித்த ஏலம் போட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.இப்போது பூரணம் தயார்.

இப்போது மாவிலிருந்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து பூரிக்குத் தேய்ப்பது போல் தேய்த்து அதை சோமாஸ் கரண்டியில் வைத்து தேவையான பூரணத்தையும் வைத்து  ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி கரண்டியை அழுத்தி மூட வேண்டும். கரண்டியை மூடிய பிறகு ஓரத்தில் உள்ள அதிகப்படியான மாவை எடுத்து விட வேண்டும்.இப்போது கரண்டியைத் திறந்து சோமாஸை எடுத்து மூடி வைக்கவும்.இது போலவே எல்லா மாவையும் போட்டு  வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து சோமாஸை ஒவ்வொன்றாகவோ(அ)எண்ணெய் கொண்ட மட்டும் போட்டு ஒருபுறம் சிவந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் சிவந்ததும் எடுத்து விடவும்.ஆறியதும் கண்ணாடி டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.