வேறு மீன் எதுவும் வாங்க முடியாத நேரத்தில் எப்போதாவது ஒரு சால்மன் மீன் துண்டு வாங்குவேன். குழம்பு வைக்கலாம், வைத்தால் அந்தளவுக்கு சுவை இருக்காது. ஃப்ரை பண்ணும்போது சூப்பராக இருக்கும். மெல்லிய துண்டுகளாக்குவது உங்கள் பொறுப்பு.
தேவையானவை :
மீன் துண்டுகள்
மிளகாய் தூள்/சாம்பார் பொடி _ தேவைக்கு
மஞ்சள் தூள் _ சிறிது
பூண்டு பல் _ விருப்பம்போல்
உப்பு _ தேவைக்கு
எலுமிச்சை _ பாதி பழம்
செய்முறை :
மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கி, நன்றாகக் கழுவி நீரை வடியவிடவும்.
பூண்டுப்பல்லை தோலெடுக்காமல் அப்படியே ஒரு தட்டு தட்டி எடுத்துக்கொள்ளவும். தோலெடுத்துவிட்டு போட்டால் வேகும்போது அடி பிடிக்கும். தோலுடன் இருந்தால் பிரச்சினையில்லை. கடல் உணவுடன் பூண்டு சூப்பராகப் போகும்.
(உருளை, வாழைக்காய் பொரியல் என எல்லாவற்றுக்கும் இப்படியே சேர்த்துப் பாருங்களேன்).
ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மூன்றையும் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.
உப்பு & காரம் சரிபார்க்கவும். குறைந்தாலும் பரவாயில்லை. வேகும்போது கொஞ்சம் தூவிக்கொள்ளலாம்.
இப்போது நீர் வடிந்துவிட்ட மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக மிளகாய்த்தூளில் புரட்டி எடுத்து வேறொரு கிண்ணத்தில் வைக்கவும்.(மிளகாய்த்தூள் மீதமானால் மீன் குழம்பில் சேர்த்துக்கொள்ளலாம்)
எல்லா துண்டுகளையும் இவ்வாறே செய்த பின்பு மீன் துண்டுகளின்மேல் எலுமிச்சையைப் பிழிந்துவிடவும். இதை ஒரு அரை மணி நேரமாவது அப்படியே வைத்திருந்தால்தான் மீனில் மசாலா இறங்கி இருக்கும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு பூண்டு போட்டு அப்படியே நான்கு ஐந்து மீன் துண்டுகளை அதில் போட்டு மேலேயும் கொஞ்சம் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
ஒருபக்கம் வெந்து சிவந்ததும் திருப்பிவிட்டு மீண்டும் மூடி போட்டு வேகவிட்டு வெந்ததும் எடுத்துவிடவும். இவ்வாறே மீதமுள்ள மீன் துண்டுகளையும் வேகவைக்கவும்.
உடனே சாப்பிடுவதென்றால் சாப்பிடலாம். இல்லை பிறகு சாப்பிடுவதென்றால் நன்றாக ஆறிய பிறகு எடுத்து மூடி வைக்கவும்.