முருங்கைக்காய்ப் பொரியல்

 

 

 

 

 

 

 

 

 

 

தேவையானவை:

முருங்கைக்காய்_2
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முருங்கைக்காயை நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி தளிக்க வேண்டியப் பொருள்களைத் தாளித்துவிட்டு முருங்கைக்காயைப் போட்டுக் கிளறவும்.

அதில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து பிரட்டிவிட்டு காய் பாதி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி,மிதமானத் தீயில் வேக விடவும்.

காய் வெந்து வருவதற்குள் இடையிடையேக் கிளறி விடவும்.காய் சீக்கிரமே வெந்துவிடும்.

காய் வெந்து,மஸாலா எல்லாம் ஒன்றாகக் கலந்து, தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும்.

எல்லா சாத வகைகளுக்கும்,முக்கியமாக ரசம்,கிள்ளிப்போட்ட சாம்பார் போன்ற‌வற்றிற்கு நன்றாக இருக்கும்.

விருப்பமானால் தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை சேர்த்துக்கொள்ளலாம்.

 

சுண்டைக்காய் வற்றல் குழம்பு

தேவையானப் பொருள்கள்:

முருங்கைக்காய் _1
(அ)
பிஞ்சு கத்தரிக்காய்_7
புளி_சிறு எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
பூண்டு_10 பற்கள்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
வடகம்
சுண்டைக்காய் வற்றல் (அ) மனத்தக்காளி வற்றல்_1/2 கைப்பிடி
கடலைப் பருப்பு
சீரகம்
பெருங்காயம்
வெந்தயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_ஒரு கொத்து

வறுத்துப் பொடிக்க:

கொத்துமல்லி விதை_ஒரு டீஸ்பூன்
மிளகு_5
சீரகம்_1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு_1/2 டீஸ்பூன்
வெந்தயம்_1/4 டீஸ்பூன்

செய்முறை:

புளியைத் தண்ணீரில் நனைத்துக் கரைத்துக்கொள்.வெங்காயம்,தக்காளி,பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்.முருங்கைக்காயை விருப்பமான நீளத்தில் நறுக்கிக்கொள்.

வெறும் மண் சட்டியில் (அ) வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்க உள்ளப் பொருள்களைத் தனித்தனியாக வறுத்து ஆற வை.அதே சட்டியில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து, பூண்டு,வெங்காயம்,தக்காளி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கு.வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளித்தண்ணீரை ஊற்று.குழம்பு கொஞ்சம் கெட்டியாக இருக்கட்டும்.குழம்பை கலக்கி விட்டு உப்பு,காரம் சரி பார்த்து மூடி கொதிக்க விடு.ஒரு கொதி வந்ததும் முருங்கைக்காயைப் போட்டு மூடி கொதிக்க விடு.காய் நன்றாக வெந்து வாசனை வந்த பிறகு பொடித்தப் பொடியைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கு.

சாதம் & வற்றல் குழம்புடன் அப்பளம் (அ) வடாம் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு:

சுண்டைக்காய் வற்றல் சிறிது கசப்புத் தன்மையுடன் இருக்கும்.எனவே சிலர் சாப்பிடும்போது ஒதுக்கி வைத்து விடுவர்.அதனால் வற்றலை தாளிப்பதற்கு பதில் அதில் பாதியை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து இறுதியில் சேர்க்கலாம்.

முருங்கைக்காய் புளிக்குழம்பு

தேவையானப் பொருள்கள்:

முருங்கைக்காய்_1 (அ) 2
புளி_நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம்_5
தக்காளி_பாதி
பூண்டு_10 பற்கள்
மிளகாய்த்தூள்_1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க:

கொத்துமல்லி விதை_1 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
வெந்தயம்_1/4 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
வடகம்
சீரகம்
கடலைப் பருப்பு
வெந்தயம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_5 இலைகள்

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவுத் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் தோலுரித்து நறுக்கி வைக்கவும்.தக்காளியையும் நறுக்கவும்.

கொத்துமல்லி,சீரகம்,வெந்தயம் இவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆற வைத்து பொடித்துக்கொள்ளவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளியைக் கரைத்து ஊற்றவும்.தேவையானத் தண்னீர் சேர்த்து உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.ஒரு கொதி வந்ததும் முருங்கைக்காயைக் கழுவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் குழம்பில் போட்டுக் கலக்கி விடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து,காய் வெந்து வரும்போது வறுத்துப் பொடித்தப் பொடியைப் போட்டு கலக்கி விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு நன்றாக இருக்கும்.

குறிப்பு:

குழம்பை இறக்கும்போது அரை கைப்பிடி அளவிற்கு வெந்தயக் கீரை போட்டு இறக்கினால் நல்ல வாசனையாகவும்,சுவை அதிகமாகவும் இருக்கும்.முருங்கைக்காய்  fresh    ஆக இருந்தால் குழம்பு ஒரு கொதி வந்த பிறகு போடலாம்.frozen  காயாக இருந்தால் வெங்காயம்,தக்காளி வதக்கும்போது இதையும் சேர்த்து வதக்கினால்தான் காய் வேகும்.

காய்கறி குருமா

 

தேவை:

விருப்பமான காய்கறிகள்_2 கப்

(கேரட்,பீன்ஸ்,காலிஃப்ளவர்,உருளை கிழங்கு,சௌசௌ,வெள்ளை பூசணி,வெங்காயத்தாள்,முருங்கைக்காய்,கத்தரிக்காய் போன்றவை.இவற்றில் ஒரு காயோ அல்லது பல காய்கள் சேர்த்தோ செய்யலாம்.இதில் குறிப்பிட்டுள்ளதைத்தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை.உங்கள் விருப்பப்படி சேர்க்கலாம்)

பச்சை பட்டாணி_1/4 கப்

சின்ன வெங்காயம்_10

தக்காளி_2

பச்சை மிளகாய்_1

இஞ்சி_1 துண்டு

பூண்டு_2 பற்கள்

மிளகாய் தூள்_2 டீஸ்பூன்

மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்

கொத்துமல்லி இலை_2 கொத்து

அரைக்க:

தேங்காய்_3 துண்டுகள்

கசகசா_1 டீஸ்பூன்

தாளிக்க:

சீரகம்_1/2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்

பிரிஞ்சி இலை_1

முந்திரி_5

எண்ணெய்_2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சை பட்டாணி சேர்ப்பதாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும்.கசகசாவை மிதமான சூட்டில் வறுத்து சிறிது வெந்நீர் ஊற்றி ஊறவைக்கவும்.காய்களை விரும்பிய வடிவத்தில் நறுக்கவும்.இஞசி,பூண்டு நசுக்கி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கி அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு காய்கறிகளை வதக்கவும்.பட்டாணி நன்றாக ஊறி இருந்தால் காய்களுடன் அப்படியே சேர்க்கலாம்.இல்லை என்றால் தனியாக வேகவைத்து சேர்க்கலாம்.இப்போது மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி காய் வேகுமளவு தண்ணீர் ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து வேகவிடவும்.

காய் வெந்ததும் கசகசா,தேங்காய் அரைத்து ஊற்றவும்.குருமா கெட்டியாக இருக்கட்டும்.இரண்டு கொதி கொதித்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.புதினா வாசம் பிடிக்குமானால் இரண்டு(அ)மூன்று இலைகள் சேர்க்கலாம்.இப்போது கமகமக்கும் காய்கறி குருமா தயார்.இது சப்பாத்தி,நாண்,இடியாப்பம் இவற்றிற்கு நன்றாகப் பொருந்தும்.

கேரட்,கத்தரிக்காய்,முருங்கைக்காய் சாம்பார்

 

தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு: 1/2 கப்
கேரட்_1
கத்தரிக்காய்_1
முருங்கைக்காய்_1
சின்ன வெங்காயம்_5
தக்காளி_1
பூண்டு_ 2 பற்கள்
புளி_பெரிய கோலிக்குண்டு அளவு
மிளகாய் தூள்_ 21/2 டீஸ்பூன்
மஞள் தூள்_  1/4 டீஸ்பூன்
கொத்துமல்லி தழை_ 1 கொத்து
தாளிக்க:

கடுகு_ 1/4 டீஸ்பூன்
உளுந்து_ 1/4 டீஸ்பூன்
சீரகம்_ 1/4 டீஸ்பூன்
வெந்தயம்_  சிறிது
பெருங்காயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_ 1/2 ஈர்க்கு

செய்முறை:
முதலில் பருப்பை நன்றாக கழுவி நீரை வடித்துவிட்டு அது மூழ்கும் அளவை விட அதிகமாகவே தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள்,  2 சொட்டு விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து பருப்பு குழையும் வரை வேக வைக்கவும். காய்களை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.இதில் உள்ள காய்களைத்தான் போடவேண்டும் என்பதில்லை.பிடித்தமான காய்களை போட்டுக்கொள்ளலாம். வெங்காயத்தை நீள வாக்கில் அரிந்து வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.தக்காளியைத் துண்டுகளாக்கவும்.புளியை நீரில் ஊறவத்து  1/2 கப் அளவிற்கு கரைத்து வைக்கவும்.
பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் கடுகு,உளுந்து, சீரகம்,வெந்தயம்,பெருங்காயம்,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி வதக்கி அதன்பிறகு காய்களை வதக்க வேண்டும்.சிறிது வதங்கியதும் மிள்காய்த் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி புளித்தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும்.காய் வெந்ததும் பருப்பைக் கொட்டி கலந்து உப்பு போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.கடைசியில் கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.