முருங்கைக்கீரை பிரட்டல் / துவட்டல்

20150219_160734

சித்ரா வீட்ல கீரை வாரமோ !!

வறுத்த வேர்கடலை கையில் இருந்து, கூடவே முருங்கைக்கீரையும் இருந்துவிட்டால் நொடியில் முருங்கைக் கீரைப் பொரியல் ரெடியாயிடும்.

20150219_142217

ஃப்ரெஷ் கீரை

முன்பெல்லாம் தேடித்தேடி ஓடியதுபோக, இப்போ ஃப்ரெஷ்ஷாவே கிடைக்குது. கிடைக்கும்போது வாங்கி அனுபவிச்சிட வேண்டியதுதான்.

தேவையானவை :

20150222_144115

அளவெல்லாம் உங்கள் விருப்பம்தான்

முருங்கைக்கீரை _ இரண்டுமூன்று கிண்ணம் (எவ்வளவு கீரையாக இருந்தாலும் சமைத்த பிறகு கொஞ்சமாகிவிடும்)

வறுத்த‌ வேர்கடலை _ ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் _ 1
உப்பு _ ருசிக்கு

செய்முறை :

வேர்க்கடலையை வறுக்கும்போதே கடைசியில் மிளகாயையும் போட்டு சூடுவர‌ வறுத்துக்கொள்ளவும். அல்லது ஏற்கனவே வறுத்த வேர்கடலை இருக்குமாயின், மிளகாயை மட்டும் வெறும் வாணலில் போட்டு சூடுவர வறுத்து எடுக்கவும்.

இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு இடித்துக்கொள்ளவும். மைய இடிக்க வேண்டாம். வேர்கடலை கொஞ்சம் வாயில் கடிபடுகிற மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்.

பிறகு அடிகனமான சட்டியில் ஒன்றிரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி, தண்ணீர் காய்ந்ததும் அதில் கீரையைப் போட்டு வதக்கவும்.

மெல்லிய பாத்திரம் வேண்டாம், பாத்திரம் மெல்லியதாக இருந்தால் தண்ணீர் சீக்கிரமே சுண்டிவிடும், கீரையும் வேகாது.

வதக்கும்போதே சிறிது உப்பு சேர்க்கவும். கீரை வெந்து தண்ணீர் சுண்டி வந்ததும் பொடித்த பொடியைப் போட்டு ஒரு கிண்டுகிண்டி இறக்கவும்.

எல்லா சாதத்துடனும் சூப்பராக இருக்கும். சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் சூப்பரோ சூப்பராக இருக்கும்.

முருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்

20150216_144222

சுவையான முருங்கைக்கீரை சூப்

எங்க வீட்டுத் தோட்டத்தில் முருங்கைக்கீரை மரம் எப்போதும் தளதளன்னு சூப்பரா இருக்கும். என்றாவது ஒருநாள் எங்கம்மா முருங்கைக்கீரையில் இந்த தண்ணி சாறு வைப்பாங்க. சுவை சொல்லிமாளாது.

20150216_144513

முருங்கைக்கீரை தண்ணி சாறு

சாதத்துடன் ரசம் மாதிரி சேர்த்து சாப்பிட சூப்பரா இருக்கும். இதிலுள்ள கீரை முதலானவற்றை வடித்துவிட்டு சூப் மாதிரி குடிக்கவும் நன்றாக இருக்கும்.

20140723_082526

இளம் பசுமையான துளிர் கீரை

தேவையானவை:

20150216_135837

தேவையானவை

முருங்கைக்கீரை _ ஒரு கிண்ணம்
சின்னவெங்காயம் _ 1 (ரொம்ப சின்னதா இருந்துச்சுன்னா மூன்றுநான்கு போட்டுக்கொள்ளலாம்)

பூண்டுப்பல் _ ஐந்தாறு . நன்றாகத் தட்டிக்கொள்ளவும்.

நன்கு பழுத்த தக்காளி _ 1
மஞ்சள் தூள் _ துளி
சாம்பார்தூள் _ துளி. மஞ்சள்தூளும், சாம்பார்தூளும் நிறத்திற்காகத்தான்
தேங்காய்ப்பூ(விருப்பமானால்) _ சிறிது
கொத்துமல்லி தழை _ கொஞ்சம்
உப்பு _ தேவைக்கு

தாளிப்புக்கு :

நல்லெண்ணெய்
மிளகு
சீரகம்
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்

செய்முறை :

கீரையைக் கழுவி நீரை வடிய விடவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இங்குள்ள ஒரு சமையல் ஷோவில், “தோலுடன் பூண்டுப்பல்லைத் தட்டிப் போட்டால்தான் முழு ஃப்ளேவர் கிடைக்கும்” என்றதால், அன்றிலிருந்து இன்றுவரை ‘ரொம்ம்ம்ப நல்லதாப் போச்சுன்னு எல்லா சமையலுக்குமே தோலுடனே அப்படியே தட்டிப் போட்டுவிடுவது.

ஒரு சட்டியை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகத்தைப் பொரியவிடவும். அப்போதுதான் மிளகின் காரம் சூப்பில் இறங்கும்.

அடுத்து காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு பூண்டு சேர்த்து பூண்டின் வாசம் வரும்வரை நன்றாக‌ வதக்கவும்.

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

இவை வதங்கியதும் கீரை சேர்த்து துவள வதக்கிவிட்டு இரண்டுமூன்று கிண்ணம் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். இப்போது மஞ்சள்தூள, சாம்பார்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

இரண்டு கொதி வந்த பிறகு தேங்காய்ப்பூ, கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

இனி சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதோ அல்லது சூப் மாதிரி குடிப்பதோ, உங்கள் விருப்பம்.

IMG_1367

முன்பொருமுறை உழவர் சந்தையில் வாங்கியது

 

கலவை தானிய அடை/Multi grain adai

அடையைக் கேழ்வரகு மாவில் மட்டுமே செய்தால்கூட கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்.இந்த அடையில் கேழ்வரகு மாவுடன் ஓட்ஸ்&பார்லி மாவு சேர்ப்பதால் நல்ல மிருதுவாக இருக்கும்.சத்தானதும்கூட.

கேழ்வரகு&முருங்கைக்கீரை அடைக்கான செய்முறை இங்கேயும்,கேழ்வரகு இனிப்பு அடைக்கான செய்முறை இங்கேயும் உள்ளன.

முருங்கைக்கீரை கிடைப்பதே அரிது.கிடைத்தாலுமே ஐஸில் வைத்து இலைகளெல்லாம் கரும்பச்சை நிறத்தில்தான் இருக்கும்.சம்மரில் ஒருசில வாரங்களில் மட்டும்,ஃபார்மர்ஸ் மார்க்கெட் திறக்கும்போதே (காலை 9:00 மணி)போனால் மட்டுமே புது முருங்கைக்கீரை கிடைக்கும். அதுவும் இரண்டுமூன்று bunches மட்டுமே இருக்கும்.மேலே படத்திலுள்ளது அவ்வாறு வாங்கியதுதான்.அந்த வார சமையல் முழுவதுமே முருங்கைக்கீரை மயமாகத்தான் இருக்கும்.

அடைக்குத் தேவையானவை:

ஓட்ஸ் மாவு_ஒரு கையளவு (வறுத்துப்பொடித்தது)
பார்லி மாவு_ஒரு கையளவு
கேழ்வரகு மாவு_ஒரு கையளவு
முருங்கைக்கீரை_மூன்று கைப்பிடி
சின்ன வெங்காயம்_3
பச்சை மிளகாய்_1
உப்பு_தேவைக்கு
எண்ணெய்_தேவைக்கேற்ப‌
மேலும் உங்களின் விருப்பம்போல் சீரகம்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை என சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை:

கீரையைக் கழுவி சுத்தம் செய்து,தண்ணீரை வடியவைத்து எடுத்துக்கொள்ளவும்.வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு அகலமான தட்டில் மாவுகளுடன் உப்பு,கீரை,வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து கலக்கவும்.

பிறகு சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து அடை தட்டும் பதத்தில் மாவைப் பிசைந்துகொண்டு,ஈரத்துணியால் ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி காயவிடவும்.மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு பிரித்தெடுத்து,ஒரு தட்டைக் கவிழ்த்துப்போட்டு,அதன் மேல் ஈரத்துணியைப்போட்டு,அடையாகத் தட்டவும்.அடையின் எல்லா பகுதியும் சமமாக இருக்கட்டும்.

கல் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள அடையை எடுத்துக் கல்லில் போட்டு, அடையைச் சுற்றிலும்,அடையின் மேலும் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.

எண்ணெயைத் தாராளமாக விட்டால்தான் அடை நன்றாக வெந்தும்& வெண்மையாக இல்லாமலும் வரும்.

தீ மிதமாக இருக்கட்டும்.தீ அதிகமானால் தீய்ந்துவிடும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.

சூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நல்ல மொறுமொறுப்பாகவும், சுவையாகவும்,நல்ல மணமாகவும் இருக்கும்.

கீரை வடை

 

ரோல்டு ஓட்ஸை நன்கு சூடுவர வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டால் சமயங்களில்  அதை சீரியல், பொங்கல், உப்புமா, கிச்சடி,களி என பலவற்றிற்கும் பயன்படுத்தலாம். நல்ல வாசனையுடன் இருக்கும்.

இந்த மாவை வைத்துத்தான் கீரைவடை செய்தேன்.இதனை முருங்கைக்கீரை என்றில்லாமல் வேறு எந்தக்கீரையிலும் செய்யலாம்.சூப்பர் மொறுமொறுப்புடன், வாசனையாகவும் இருந்தது.நீங்களும் முயற்சிக்கலாமே.

தேவையானவை:

கடலைப்பருப்பு_ஒரு கப்
ரோல்டு ஓட்ஸ்_ஒரு கப்
முருங்கைக்கீரை_ஆய்ந்தது இரண்டு கப்
சின்னவெங்காயம்_சுமார் 10
பச்சைமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய்_1 காரம் விரும்பினால் கூட ஒன்று சேர்த்துக்கொள்ளலாம்.
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்
பூண்டிதழ்_2
கறிவேப்பிலை&கொத்துமல்லி இலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

கடலைப் பருப்பைக் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.கழுவிவிட்டு ஊறவைத்தாலும் சரி,ஊற வைத்துக் கழுவினாலும் சரி.நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிடவேண்டும்.

கடலைப் பருப்பு ஊறிக்கொண்டிருக்கும்போதே ஓட்ஸை முதலில் சொல்லியதுபோல் நைஸாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்.

மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கடலைப்பருப்பைப் போட்டு அதனுடன் மிளகாய்,பெருஞ்சீரகம்,பூண்டு சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

இந்த மாவுடன் ஓட்ஸ் மாவு,சுத்தம் செய்த கீரை,பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை&கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும்.

முதலிலேயே உப்பு சேர்த்தால் கீரையின் அளவை வைத்து அதிகமாக சேர்க்க வாய்ப்புண்டு.எல்லாவற்றையும் பிசைந்தபிறகு கீரை இருக்குமிடமே தெரியாது. இப்போது சேர்த்தால் திட்டமாகச் சேர்க்கலாம்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் மாவிலிருந்த்து பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது சிறு எலுமிச்சை அளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் வெந்து சிவந்ததும் எடுத்துவிடவும்.எண்ணெய் கொண்டமட்டும் தட்டிப்போடலாம்.

இவ்வாறே எல்லா மாவையும் வடைகளாகத் தட்டி எடுக்கவும்.இப்போது கமகம,மொறுமொறு,சத்தான,சுவையான வடைகள் தயார்.

தேங்காய் சட்னி அல்லது கெட்சப்புடன் சாப்பிட மேலும் சுவையாக இருக்கும்.

வாழைப்பூ & முருங்கைக்கீரை சாம்பார்

சில காய்கறிகளின் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.(உ.ம்) கேரட்,பீன்ஸ் சாம்பார்;மாங்காய்,முருங்கைக்காய் சாம்பார்;கருவாடு,கத்தரிக்காய் போன்று. அந்த வரிசையில் வாழைப்பூ சமையலாக இருந்தால் அதனுடன் அகத்திக்கீரை சேர்த்து சாம்பார்,பொரியல்,கூட்டு என செய்வார்கள்.வாழைப்பூவின் துவர்ப்பும், அகத்திக்கீரையின் கசப்பும் சேர்ந்து சூப்பர் சுவையுடன் இருக்கும்.அகத்திக்கீரை இல்லாமல் போனால் முருங்கைக்கீரை சேர்த்து சமைப்பார்கள்.இங்கு என்றாவது  வாழைப்பூவையாவது பார்க்கலாம்.அகத்திக்கீரையைப் பார்த்ததே இல்லை. ஒருவேளை ஃப்ரோசன்  செக் ஷ‌னில் கிடைக்குமா தெரியவில்லை.

வாழைப்பூ & முருங்கைக்கீரைப் பொரியல் செய்முறைக்கு  இங்கே  செல்லவும்

தேவையானப் பொருள்கள்:

துவரம் பருப்பு_1/2 கப்
வாழைப்பூ_பாதி
முருங்கைக் கீரை_ஒரு கிண்ணம் (அதிகமாகவும் சேர்க்கலாம்)
சின்ன வெங்காயம்_ஒரு ஏழெட்டு
தக்காளி_1
பூண்டுப்பல்_2
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு குக்கரில் (அ) பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு அடுப்பிலேற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்து ஆறியதும் பூவைப் பிழிந்து வைக்கவும்.

கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி,ப.மிளகாய் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.

தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.சாம்பர் நீர்க்க இருக்க வேண்டும்.

சாம்பார் ஒரு கொதி வந்ததும் வாழைப்பூவைப் போட்டு மூடி வேக வைக்கவும்.

சாம்பார் நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு (மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ,கொத்துமல்லி  இலை சேர்த்து இறக்கவும்.

இப்போது வாழைப்பூ & முருங்கைக்கீரை சாம்பார் தயார்.

இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

முருங்கைக்கீரை சாம்பார்

முருங்கைக்கீரை சாம்பாரை நீர்க்க வைத்தால்தான் நன்றாக இருக்கும்.முருங்கைக்கீரையுட‌ன் புளி சேர்த்தால் நன்றாக இருக்காது என்பதால் சேர்க்க வேண்டாம்.காய்கறிகள் சேர்க்காததால் உப்பு,காரம் இவற்றைக் குறைத்துப் போட வேண்டும்.கீரை எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்த்க்கொள்ளலாம்.பெருஞ்சீரகம் முக்கியம்.

தேவையானப் பொருள்கள்:

துவரம்பருப்பு_1/4 கப்
முருங்கைக்கீரை_ஒரு கிண்ணம்
சின்ன வெங்காயம்_5
தக்காளி_பாதி
பச்சைமிளகாய்_1
பூண்டுப்பல்_2
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_ஒன்றரை டீஸ்பூன்
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்_சிறிது
காய்ந்தமிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு குக்கரில்(அ)பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.

தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொள்ளலாம்.

நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு(மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும்.

இப்போது முருங்கைக்கீரை சாம்பார் தயார்.

இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கேழ்வரகு,முருங்கைக்கீரை அடை

தேவை:

கேழ்வரகு மாவு_1 கப்
முருங்கைக்கீரை_2 கப்
வெங்காயம்_1
பச்சைமிளகாய்_1
உப்பு_தேவையான அளவு
நல்லெண்ணெய்_4 டீஸ்பூன்

செய்முறை:

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும்.வெங்காயம்,பச்சைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும்.மாவு,கீரை 1:2 என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும்.இல்லை என்றால் மாவைப் பிசைந்த பிறகு கீரை இருக்குமிடமே தெரியாது.இப்போது மாவுடன் எல்லாப் பொருள்களையும் போட்டு கலந்து,சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.

ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும்,அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும்.எண்ணெய் விடவில்லை என்றால் அடை வெள்ளையாக இருக்கும்.இப்போது மூடி போட்டு வேகவிடவும்.ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும்  வேகவிடவும். வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாற‌வும்.எல்லா வகையான சட்னியுடனும் சாப்பிடலாம்.

முருங்கைக்கீரை மசியல்

தேவை:
முருங்கைக் கீரை_ 2 கப்
பச்சைப் பருப்பு_ 1/4 கப்
சின்ன வெங்காயம்_2
தக்காளி_1/4
பச்சை மிளகாய்_1
பூண்டு_ 2 பற்கள்

உப்பு_தேவையான அளவு

தாளிக்க:
கடுகு_ 1/4 டீஸ்பூன்
உளுந்து_ 1/4 டீஸ்பூன்
மிளகு_5
சீரகம்_ 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
நல்லெண்ணெய்_ 1 டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து தண்ணீர் விட்டு மலர வேகவைக்கவும்.அது வேகும்போதே சின்ன வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வேகவைக்கவும்.கடைசியில் கீரை சேர்த்து ஒரு கொதி வந்ததும்  இறக்கவும்.நீண்ட நேரம் கீரை அடுப்பில் இருந்தால் கறுத்து விடும்.அதனால் கசக்கும். கீரை போட்ட பிறகு மூட வேண்டாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து கீரையில் கொட்டவும்.நன்றாக ஆறியதும் கடைந்து வைக்கவும்.