அச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku

     

எல்லோரும் ஸ்வீட் முறுக்கு எடுத்துக்கோங்க.இது எனது முந்நூறாவது பதிவு.

அச்சுமுறுக்கு செய்வது எனக்கு இதுதான் முதல்முறை.வீட்டில் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ஞாயிறன்று அச்சு வாங்கியாச்சு.அம்மாவிடம் செய்முறை வாங்கி செய்தேன்.ஈர பச்சரிசி மாவிற்குபதில் கடையில் வாங்கிய மாவில் செய்தேன். சரியாக வந்தால் பார்க்கலாம்,இல்லையென்றால் தூக்கிப் போட்டுவிடலாம் என்ற தைரியத்தில்.

முதல் இரண்டு முறுக்குகளை அச்சிலிருந்து பிரிக்கவே முடியவில்லை.அச்சை அக்குவேறு,ஆணிவேறாகப் பிரித்து,முறுக்குகளைப் பிய்த்தெடுத்தேன். கோபம்கோபமாக வந்தது.இவர் கொஞ்சம் ஸ்ட்ராங்காக சொல்லியிருந்தால் வாங்காமலேயே வந்திருக்கலாமே என்றுகூடத் தோன்றியது.ஆனால் அடுத்தடுத்து செய்யும்போது அழகாக வந்துவிட்டது.அச்சு புதிதாக இருந்து,முதல்முறை செய்வதாக இருந்தால் கொஞ்சம் (நிறையவே)  பொறுமை அவசியம்.

அச்சு இதுதான்.ஒரு மரக்கைப்பிடியுடன் கிடைக்கிற‌து.

                  

தேவையானவை:

பச்சரிசி மாவு_ஒரு கப்(கடையில் வாங்கியது)
மைதா_ஒரு டேபிள்ஸ்பூன்
வெல்லம்_3/4 கப்
தேங்காய்ப்பால்_3/4 டம்ளர்
எள்_சிறிது
ஏலக்காய்_1 (பொடித்துக்கொள்ளவும்)
உப்பு_துளி
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

 அரிசிமாவு,மைதா,எள்,உப்பு,ஏலக்காய்த்தூள் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.

வெல்லத்தைப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது கரையும் அளவிற்கு சிறிது தண்ணீர் விட்டு,அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் வடிகட்டி ஆறவைத்து மாவில் ஊற்றிக் கரைக்கவும்.

தேங்காய்ப்பாலையும் சேர்த்துக் கரைக்க‌வும்.கரைத்த மாவு தோசைமாவு பதத்தில் இருக்கட்டும்.தேவையானால் சிறிது தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி,அடுப்பிலேற்றி எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சை எண்ணெயில் போட்டு வைக்கவும்.

அச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் பாகம் மூழ்குமாறு செய்து, சூட்டினால் மாவு அச்சில் பிடித்துக்கொள்ளும். அப்படியே அச்சை எண்ணெயில் விடவும்.

முறுக்கு பாதி வேகும்போதே ஒரு மரக்குச்சியால் அச்சிலிருந்து முறுக்கை லேஸாகப் பிரித்துவிடவும்.ஏற்கனவே வெந்திருப்பதால் ஒருமுறைத் திருப்பிவிட்டு உடனே எடுத்துவிடலாம்.

மீண்டும் அச்சை எண்ணெயில் வைத்து சூடேற்றி முன்பு சொன்னது போலவே செய்யவும்.இவ்வாறே ஒவ்வொரு முறையும் செய்யவும்.இரண்டு அச்சு இருந்தால் செய்ய வசதியாக இருக்கும்.

இப்போது சுவையான அச்சு முறுக்கு சாப்பிடத்தயார்.

பொட்டுக்கடலை மாவு முறுக்கு

 

 

ஒரு 3/4 கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக்கி சல்லடையில் போட்டு சலித்து தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை வேறு எதற்காகவாவது பயன்படுத்திக்கொள்ளலாம்.பொட்டுக்கடலை மட்டுமே சேர்ப்பதால் முறுக்கு நல்ல வெள்ளைவெளேர் என்று சூப்பராக இருக்கும்.

கண்டிப்பாக முறுக்கில் சேர்க்கும் மாவுகள் மிக நைசாக‌ இருக்க வேண்டும். இல்லையெனில் முறுக்கு மொறுமொறுப்பாக‌ இல்லாமல் கடிக்கவே கஷ்டமாக இருக்கும்.

முறுக்கு மாவுடன் உங்கள் விருப்பம்போல் ஓமம்,எள்,பெருங்காயம் மட்டுமல்லாமல் சீரகம்,கறிவேப்பிலை,தனி மிளகாய்த்தூள் என சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையானவை:

அரிசி மாவு_2 கப்
பொட்டுக்கடலை மாவு_1/2 கப்
ஓமம்_சிறிது
எள்_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு

செய்முறை:

ஒரு தட்டில் அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவு,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகப்போட்டு நன்றாகக் கலந்து,சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் முறுக்குக் குழலில் மாவைப்போட்டு நேராக வாணலிலோ அல்லது ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளைப் பிழிந்து வைத்தோ எடுத்து எண்ணெயில் போடவும்.

ஒருபக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்து எண்ணெய் சத்தம் அடங்கியதும்  எடுத்துவிடவும்.

இப்போது கரகர,மொறுமொறு முறுக்குகள் தயார்.செய்வதற்கும் எளிது.நினைத்தவுடன் செய்துவிடலாம்.

 

முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 7 Comments »

முறுக்கு

முறுக்கு செய்வதில் இது ஒரு முறை.மெஷினில் கொடுத்து அரைக்கும்போது சூட்டினால் முறுக்கின் நிறம் மாறும்.இந்த முறையில் செய்யும்போது நல்ல நிறத்தில் இருக்கும்.

செய்முறையைப் பார்க்கும்போது ஏதோ பெரிய வேலை போல் தோன்றும். பருப்பை நன்றாக‌ வேக வைத்து எடுத்தால் வேலை முடிந்தது.சரியாக வேகாமலிருந்தால் முறுக்கு கடக்முடக் என கடிக்க வேண்டியிருக்கும்.

தேவையானவை:

1) வெள்ளை உளுந்து _ ஒரு பங்கு

(அல்லது)

உடைத்த பச்சைப்பயறு_ஒரு பங்கு

(அல்லது)

இரண்டும் கலந்து ஒரு பங்கு (எந்த விகிதத்தில் வேண்டுமானாலும்)

2)   அரிசிமாவு_5 பங்கு

3)   அடுத்து வழக்கம்போல் முறுக்கிற்கு தேவையான ஓமம், எள், பெருங்காயம், உப்பு என சேர்த்துக்கொள்ளலாம்.

கீழே உள்ள செய்முறையில் நான் சேர்த்தது:

உளுந்து _ 1/2 கப்
பச்சைப்பயறு_ 1/2 கப்
அரிசிமாவு_5 கப்
ஓமம்_சிறிது
எள்_கொஞ்சம்
பெருங்காயம்_சிறிது
உப்பு _தேவைக்கு

செய்முறை:

உளுந்து,பச்சைப்பயறு இரண்டையும் தனித்தனியாக திட்டமாக தண்ணீர் ஊற்றி குழைய வேக வைக்கவும்.

இரண்டின் வேகும் நேரத்தில் வித்தியாசம் இருப்பதால் தனித்தனியாக வேக வைக்க வேண்டும்.ஒரு பருப்பு மட்டும் போட்டல் இந்தப் பிரச்சினை இல்லை.

வெந்ததும் இரண்டையும் கைகளால் நன்றாக மசித்துவிட்டு மாவு கலக்கும் தட்டில் வைக்கவும்.

அதனுடன் அரிசிமாவு,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.

இப்போது தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து முறுக்கு பிழியும் பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

விருப்பமானால் தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தும் பிசையலாம்.நல்ல வாசனையுடன் சுவையாக இருக்கும்.

அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து முறுக்குக்குழலில் விருப்பமான அச்சைப்போட்டு நேராக எண்ணெயிலோ அல்லது உங்கள் விருப்பம் போல் பிழிந்தோ வேக வைத்து எடுக்கவும்.

இப்போது சுவையான, கரகரப்பான,மொறுமொறுப்பான முறுக்குகள் தயார்.

ஓமப்பொடி முறுக்கு

தேவையானவை:

கடலை மாவு_2 கப்
அரிசி மாவு_ஒரு கப்
ஓமம்_சிறிது
தனி மிளகாய்த்தூள்_1/2 டீஸ்பூன்(விருப்பமானால்)
பெருங்காயம்_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_தேவைக்கு

செய்முறை:

கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த்தூள்,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு ஒருமுறை சலித்தெடுக்கவும்.

இவற்றை  ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருங்காயம்,ஓமம் இவற்றைப் போட்டு சிறிதுசிறிதாகத் தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.

எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சில் ஓமப்பொடி வில்லையைப்போட்டு அதில் கொள்ளுமளவிற்கு மாவைப் போட்டு நேராகவே வாணலில் பிழிந்துவிடவும்.

பிழிந்த சிறிது நேரத்திலே வெந்துவிடும்.உடனே மறுபக்கம் திருப்பிவிட்டு எடுத்துவுடவும்.கொஞ்சம் கவனம் தேவை.இல்லையென்றால் ரொம்பவே சிவந்துவிடும்.

ஆறியதும் கண்ணாடி டப்பாவில் அல்லது பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

அல்லது லேஸாக நொறுக்கிவிட்டு கொஞ்சம் கறுவேப்பிலையை எண்ணெயில் பொரித்துப் போட்டுக் கலந்தால் ஓமப்பொடி மிக்ஸர் ரெடி.

இது சிறுபிள்ளைகள் (பெரியவர்களும்தான்)விரும்பி சாப்பிட ஏதுவாக மிகவும் சாஃப்டாக இருக்கும்.

குறிப்பு:

ஓமப்பொடி வில்லையின் துளைகள் பெரிதாக இருந்தால் ஓமத்தைக் கழுவி அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்.அல்லது துளைகள் சிறிதாக இருந்தால் ஓமத்தை மைய அரைத்துச் சேர்க்கலாம்.அல்லது அரைத்த விழுதை தண்ணீர் விட்டுக்கரைத்து வடிகட்டி அந்தத்தண்ணீரை மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்.

பெருங்காயத் தூளாக இருந்தால் அப்படியேயும்,கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் விட்டு கரைத்தும்சேர்க்கலாம்.

மற்ற ஓமப்பொடி அச்சுகளைவிட மரத்தாலான அச்சு பிழிவதற்கு ஏற்றதாக இருக்கும்.

தீபாவளி ஸ்பெஷல்

நேற்றைய தீபாவளி;

அதிரசம்,

லட்டு,

மசால் வடை,

சேமியா,ரவா கேசரி

முறுக்கு ,

இவற்றுடன் இனிதே முடிந்தது.

புழுங்கலரிசி முறுக்கு

தேவையானப் பொருள்கள்:

புழுங்கல் அரிசி_2 கப்
பொட்டுக்கடலை_1/4 கப்
காய்ந்த மிளகாய்_5 லிருந்து 8 க்குள்
தேங்காய்ப்பால்_ஒரு கப் (விருப்பமானால்)
எள்_கொஞ்சம்
ஓமம்_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு
கடலையெண்ணெய்_பொரிக்க‌

செய்முறை:

அரிசியை நீரில் நனைத்து நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு கிரைண்டரில் போட்டு,அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு அல்லது தண்ணீர் தெளித்து மைய அரைக்க வேண்டும்.மிகவும் கெட்டியாகவும் இருக்க வேண்டும்.

பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நல்ல‌ மாவாக இடித்துக்கொள்ளவும்.

இப்போது அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு,எள்,ஓமம், பெருங்காயம், உப்பு சேர்த்து பிசைந்துகொள்.

மாவு கெட்டியாக இல்லாமல் இருந்தால் பேப்பர் டவலில் அல்லது ஒரு காட்டன் துணியில் சிறிது நேரம் சுருட்டி வைத்தால் ஈரம் போய்விடும்.

இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் விருப்பமான முறுக்கு அச்சைப் பயன்படுத்தி, பிசைந்த மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும்.(அல்லது அப்படியே வாணலியில்கூட பிழிந்துவிடலாம்.)

எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு(எண்ணெய் கொண்ட மட்டும்) இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும். இப்போது புழுங்கல‌ரிசி முறுக்கு தயார்.

பச்சரிசி முறுக்கைவிட புழுங்கலரிசி முறுக்குதான் சுவையாக இருக்கும்.என்ன,கொஞ்சம் வேலை வாங்கும். அவ்வளவுதான்.

கை முறுக்கு

தேவை:

அரிசி மாவு_2 கப்
வறுத்தரைத்த உளுந்து மாவு_1/2 கப்
சீரகம்_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு,கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து,கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.மாவிலிருந்து ஒரு உருண்டை அளவிற்கு எடுத்து பெருவிரல், ஆள்காட்டி விரல்,நடுவிரல் இவற்றுக்கிடையில் மாவை வைத்து அழுத்தி சுற்ற வேண்டும்.படத்தில் உள்ளது போல் சுற்ற வேண்டும்.முதல் இரண்டு,மூன்று முறுக்குகளுக்கு கை வலிக்கும்.நேரமும் ஆகும்.அடுத்தடுத்து செய்யும் போது கொஞ்சம் பழகிவிடும்.இதுபோல் எல்லாவற்றையும் பேப்பர் டவலில் செய்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் முறுக்குகளைப் போட்டு ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பி விட்டு மறு பக்கம் சிவந்ததும் எடுக்கவும்.இப்போது சுவையான,மொறுமொறுப்பான கை முறுக்குகள் தயார்.

தேன்குழல் முறுக்கு

 

தேவை:

அரிசி மாவு_ 2 கப்
உளுந்து மாவு_ 1/2 கப்
(உளுந்தை சுமார் 2  கப் அளவிற்கு எடுத்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து முந்தைய பதிவில் கூறியபடியே நைசாக அரைத்துக் கொள்ளவும்.இந்த மாவை தேன் குழல் முறுக்கிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.)
எள்_ 1 டீஸ்புன்
ஓமம்_1/2 டீஸ்புன்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_தேவையான அளவு

செய்முறை:

அரிசி மாவு,உளுந்து மாவு இவை இரண்டையும் 2 : 1/2    என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதனுடன் எள்,ஒமம்,பெருங்காயம்,உப்பு சேர்த்துக் கிளறி சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.முறுக்கு குழலில் தேன்குழல் அச்சைப் போட்டு பேப்பர் டவலில் முறுக்குகளை பிழிந்து கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போட்டு இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:

இதற்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள உளுந்து மாவை காற்று புகாமல் எடுத்து வைத்துக்கொண்டால் வேண்டும்போது மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்

மகிழம்பூ முறுக்கு

 

தேவை:

அரிசி மாவு_ 2 கப்
முறுக்கு மாவு_1/2 கப்
எள்_1/2 டீஸ்பூன்
ஓமம்_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_ 5 இலைகள்
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_தேவையான அளவு

செய்முறை:

அரிசி மாவு எல்லா இந்தியக்  கடைகளிலும் கிடைக்கும்.அதையே பயன்படுத்தலாம். அரிசி மாவு,சென்ற பதிவில் கூறியபடி தயாரித்த முறுக்கு மாவு இவை இரண்டையும்  2 : 1/2  என்ற விகிதத்தில் கலக்கவும்.

எள்,ஓமம்,கறிவேப்பிலை(கிள்ளிப்போட்டு),பெருங்காயம்,உப்பு போட்டு கையினால் கலக்கவும்.பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

மாவில் இருந்து ஒரு சிறு பகுதியைப் பிரித்தெடுத்தால் எளிதாக வர வேண்டும். இழுவையாக இருக்கக் கூடாது,அதுதான் சரியான பதம்.

இப்போது வானலியில் எண்ணெய் காய வைத்து முறுக்கு குழலில் அச்சு(மகிழம்பூ) போட்டு பிசைந்த மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு(எண்ணெய் கொண்ட மட்டும்) இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.ஆறியதும் ஒரு கண்ணாடி டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு:

இதற்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள முறுக்கு மாவை காற்று புகாமல் எடுத்து வைத்துக்கொண்டால் வேண்டும்போது மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்

முறுக்கு மாவு தயாரித்தல்

 

 

தேவை:

உளுந்து_ 1 கப்
பச்சைப் பயறு_1/2 கப்
கடலை பருப்பு_1/4 கப்
புழுங்கல் அரிசி_ 1/4 கப்
பொட்டுக் கடலை_ 1/4 கப்

செய்முறை:

மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித் தனியாக சிவக்க வறுத்து ஆற வைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு மழமழவென்று அரைக்க வேண்டும்.(இரண்டு விரல்களுக்கிடையில் மாவை எடுத்து தேய்த்துப் பார்த்தால் மழமழவென்று இருக்க வேண்டும்).இதற்கு நம் ஊர் மிக்ஸி தான் எற்றது.இங்குள்ள மிக்ஸி(USA)சரியாக வராது என்றே நினைக்கிறேன்.மாவை ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து மூடி வைத்துக் கொள்ளவும். மேலே கூறிய விகிதத்தில் எவ்வளவு வேன்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்.அடுத்த பதிவில் முறுக்கு செய்வதைப் பற்றி பார்க்கலாம்.