உருளைக்கிழங்கு வறுவல்_2

உருளைக்கிழங்கு வறுவல் இதற்குத்தான் சைட்டிஷ் என்றில்லை. எல்லா வகையான சாதத்திற்கும் பொருந்த்தும். சமயங்களில் உருளையுடன் வெங்காயம்,தக்காளி சேர்த்து செய்வதுண்டு.ஆனால் இப்போது காமாக்ஷி அம்மாவின் உருளைக்கிழங்கு வதக்கலைப் பார்த்து எள்,இஞ்சி என சேர்த்து செய்தேன். அருமையாக வந்தது.

தேவையானவை:

உருளைக்கிழங்கு_2
சின்ன வெங்காயம்_7
இஞ்சி_சிறு துண்டு
பூண்டு_5 பல்
பச்சைமிளகாய்_1
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
எள்_1/2 டீஸ்பூன்
தயிர்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

கிழங்கை வேக வைத்து தோலை உரித்துவிட்டு விருப்பமான வடிவத்தில் அரிந்து வைக்கவும்.

இஞ்சி,பூண்டு தட்டிக்கொண்டு,வெங்காயம் அரிந்து வைக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி சூடேறியதும் எள்ளைப் போட்டு சூடாகியதும் ஒரு கிண்ணத்தில் தனியாக வைக்கவும்.

அடுத்து அதே வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அதற்கடுத்து உருளை,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும். இவை வதங்கும்போதே தயிர் சேர்த்துக் கிளறி மிதமானத் தீயில் மூடி வைக்கவும்.

உருளைக்கிழங்குடன் மசாலா எல்லாம் நன்றாகக் கலந்து சிவந்து வரும்வரை இடையிடையேக் கிளறிக்கொடுத்து,இறுதியாக‌ வறுத்த எள்ளைச் சேர்த்து  இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக‌ இருக்கும்.

நண்டு வறுவல்

தேவையானப் பொருள்கள்:

நண்டு_1 பெரியது
சின்ன வெங்காயம்_7
பூண்டு_பாதி
தக்காளி_1
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்

செய்முறை:

நண்டை சுத்தம் செய்து நீரை வடித்து வைக்கவும்.

வாங்கும் இடத்திலேயே சுத்தம் செய்து நறுக்கி வந்துவிட்டால் வீட்டிற்கு வந்து கழுவி வேலையை சுலபமாக முடித்துவிடலாம்.

வெங்காயம்,தக்காளி,பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு அடி அகலமானக் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும். காரம் விரும்புவோர் மிளகாய்த்தூளை கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.

அடுத்து நண்டு சேர்த்துக் கிளறிவிடவும்.மசாலா நண்டு முழுவதும் படுமாறு  நன்றாகக் கிளறிவிடவும்.

பிறகு 1/2 டம்ளர் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.

இடையிடையே பிரட்டி விடவும்.

தண்ணீர் முழுவதும் வற்றி,நண்டு வெந்து வாசனை வந்த பிறகு இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாகப் பொருந்தும்.

நண்டு கிரேவியாக வேண்டுமானால் மேலும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

நண்டு வறுவலை வெங்காயம்,தக்காளி,பூண்டு இவை சேர்க்காமலும் சுவையாகச் செய்யலாம்.

அதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து நண்டு,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் வற்றும் வரை அடிக்கடி கிளறிவிட்டு வேக வைக்க வேண்டும்.

சேப்பங்கிழங்கு வறுவல் (மற்றொரு முறை)

தேவையானப் பொருள்கள்:

சேப்பங்கிழங்கு_3
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_ஒன்றரை டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சேப்பங்கிழங்கை எடுத்துக்கொண்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு குழையாமல் வேக வைத்து,ஆறியதும் தோலை உரித்துவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமானத் தீயில் சூடாக்கி முதலில் பெருங்காயதையும் அடுத்தடுத்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றைப் போட்டு (கருகாமல்) லேசாக சிவந்ததும் சேப்பங்கிழங்கைப் போட்டுக் கிளறிவிடவும்.

சிறிது உப்பும் சேர்த்துக் கிளறிவிட்டு மூடி வேக வைக்கவும்.தண்ணீர் விட வேண்டாம்.விட்டால் கிழங்கு குழைந்து போய் எல்லாத் துண்டுகளும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும்.வேண்டுமானால் கூடுதலாகக் கொஞ்சம் எண்ணெய் விடலாம்.

மசாலா,கிழங்கு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வெந்து,வாசனை வரும் வரை அடுப்பிலேயே இருக்கட்டும்.அதுவரை இடையிடையே கிளறிவிடவும்.

இப்போது  சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் நல்ல பொருத்தமாக இருக்கும்.

உருளைக் கிழங்கு வறுவல்

தேவையானப் பொருள்கள்:

உருளைக் கிழங்கு_4
பூண்டு_3 பற்கள்
மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

        

இந்த சிறுசிறு உருளைக் கிழங்குகளை (yukon gold)  farmers market லிருந்து வாங்கும்போது புதிதாக,ஈர‌ மண்ணுடன் இருந்தது.மற்ற உருளையை விட இதற்கு கொஞ்சம் அதிகமானத் தண்ணீரும்,வேக கொஞ்சம் கூடுதலான நேரமும் ஆனது.ஆனால் நல்ல சுவையாக இருந்தது.

உருளைக் கிழங்கை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கித் தண்ணீரில் போடவும்.பூண்டை உரித்து நறுக்கியோ அல்லது தட்டியோ வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கி கிழங்கு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.

பாதி வெந்த நிலையில் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பிரட்டி விட்டு மீண்டும் மூடி வேக வைக்கவும்.நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

குறிப்பு:

இதனுடன் வெங்காயம்,தக்காளி சேர்த்தும் செய்யலாம்.தாளித்தவுடன் வெங்காயம்,பூண்டு வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அடுத்து உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி அடுத்ததெல்லாம் மேலே கூறியுள்ளபடி செய்தால் போதும்.காரம் கொஞ்சம் கூடுதலாகத் தேவைப்படுமாதலால் மிளகாய்த் தூள் மட்டும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உருளைக் கிழங்கு,வெந்தயக்கீரைப் பொரியல்

குழந்தைகள் உருளைக் கிழங்கு பொரியல் என்றால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.அதுவே கீரை என்றால் சாப்பிடக் கொஞ்சம் (நிறையவே) அடம் பிடிக்கத்தான் செய்வார்கள்.அப்பொழுது இதுபோல் அவர்களுக்குப் பிடித்தமான காய்களில் கீரையைச் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கலாம்.எந்தக் கீரையை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

தேவையானவை:

உருளைக் கிழங்கு_1 (பெரியது)
வெந்தயக் கீரை_ஒரு கைப்பிடி(உருவியது)
சின்ன வெங்காயம்_1
பூண்டு_3 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.உருளைக் கிழங்கை விருப்பமான வடிவத்தில் சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கித் தண்ணீரில் போடவும்.இல்லை என்றால் உருளையின் நிறம் மாறிவிடும்.அடுத்து வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து முதலில் வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு உருளையைச் சேர்த்து வதக்கவும்.அடுத்து மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு போட்டுக் கிளறித் தேவையானத் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து மிதமானத் தீயில் வேகவிடவும்.

கிழங்கு வெந்த பிறகு கீரையைச் சேர்த்துக் கிளறி விடவும்.மூடி போட வேண்டாம்.கீரை விரைவிலேயே வெந்துவிடும்.கீரை,கிழங்குடன் சேர்ந்து சுருள வதங்கியதும் இறக்கவும்.
இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

 

சிக்கன் வறுவல்

தேவையானப் பொருள்கள்:

சிக்கன்_250 கிராம்
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_3 பற்கள்
சின்ன வெங்காயம்_2
தக்காளி_பாதி
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்_2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு_2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

வறுத்துப் பொடிக்க:

கொத்துமல்லி விதை_1 டீஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
முந்திரி_2
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர்,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக்கொண்டு அதில் சிக்கனைப் போட்டுப் பிரட்டி ஒரு 5 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு தண்னீர் ஊற்றி பச்சை வாடை போகும் வரை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒட்டப் பிழிந்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்,பாதி எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாகப் பிசைந்து சுமார் 1/2 மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

வெறும் வாணலியில் கொத்துமல்லி விதையையும்,சீரகத்தையும் தனித்தனியே வறுத்து, ஆறியதும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். வெங்காயம்,தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.இஞ்சி,பூண்டைத் தட்டி வைக்கவும்.ஒரு  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு சிக்கனைச் சேர்த்து வதக்கவும்.அதுவும் நன்றாக வதங்கியபின் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.இப்போது தேங்காய்ப் பால் சேர்த்து காரம்,உப்பு சரிபார்த்து மூடி மிதமானத் தீயில் வேகவிடவும்.தண்ணீர் சேர்ப்பதாக இருந்தால் ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம்.சிக்கனில் இருந்து வெளிவரும் நீரே அது வேக‌ போதுமானதாக இருக்கும்.சிக்கன் பாதி வெந்த நிலையில் வறுத்துப் பொடித்த கொத்துமல்லிப் பொடியைப் போட்டுக் கிளறவும்.(மிளகாய்த்தூளில் கொத்துமல்லி சேர்த்திருந்தாலும் புதிதாக வறுத்துப் பொடித்துப் போடும்போது வாசனையும்,சுவையும் தூக்கலாக இருக்கும்.)

சிக்கன் நன்றாக வெந்து தண்னீர் எல்லாம் வற்றிய  பிறகு எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி இலைத் தூவிக் கிளறி இறக்கவும்.புதினா வாசனைப் பிடித்தமானால் கொத்துமல்லியுடன் இதையும் சேர்த்துப் போடலாம்.இதை எல்லா வகையான சாதத்திற்கும் பக்க உணவாகப் பரிமாறலாம்.

அசைவம், வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »