தயிர் பச்சடி / Thayir Pachadi

pachadipachadi

தேவையானவை:

தயிர்_ஒரு கப்
சின்ன வெங்காயம்_5 அல்லது பெரிய வெங்காயம்_பாதி
வெள்ளாரி பிஞ்சு_பாதி
கேரட்_பாதி
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறுதுண்டு
பெருங்காயம்_பெயருக்கு சிறிது
கறிவேப்பிலை_ஒன்றிரண்டு இலைகள்
கொத்துமல்லி தழை_கொஞ்சம்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு

செய்முறை:

தயிரில் சிறிது உப்பு சேர்த்து கட்டிகளில்லாமல் கடைந்துகொள்ளவும்.

அதனுடன் கொடுத்துள்ள எல்லாப் பொருள்களையும் விருப்பமான அளவில் நறுக்கி சேர்த்து கலந்துகொள்ளவும்.

துளியளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கலக்கி பறிமாறவும்.

பிரியாணி,புலாவ்,கலவை சாதம் இவை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.

இந்த வெயில் நாளுக்கு அப்படியேகூட சாப்பிடலாம்.

பச்சடி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , , . 10 Comments »

கேரட் & புரோக்கலி பொரியல் / Carrot & Broccoli poriyal

carrot&broccoli poriyal

தேவையானவை:

நடுத்தர அளவிளான புரோக்கலி_1
கேரட்_1
சின்ன வெங்காயம்_இரண்டு அல்லது மூன்று
பச்சை மிளகாய்_ஒன்றிரண்டு
வெந்து பிழியப்பட்ட‌ துவரம் பருப்பு_ ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய்_ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி இலை_கொஞ்சம்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

சாம்பாருக்கு வேகவைத்த‌ துவரம் பருப்பில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கொஞ்சம் பிழிந்து வைத்துக்கொள்ளவும்.

கேரட்,புரோக்கலி இரண்டையும் நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தையும் அவ்வாறே நறுக்கவும்.பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.காரம் விரும்பினால் பொடியாக்கலாம்.

வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கேரட்,புரோக்கலியைச் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி,லேஸாக உப்பு தூவி,சிறிது தண்ணீர் தெளித்து மூடி மிதமானத் தீயில் வேக வைக்கவும்.

புரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.கேரட்டும்கூட மெல்லிய துண்டுகளாக இருப்பதால் சீக்கிரமே வெந்துவிடும்.

இவை வெந்ததும் பிழிந்து வைத்துள்ள பருப்பை சேர்த்துக் கிளறிவிட்டு சூடேறியதும்,தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை தூவி மேலும் ஒரு கிளறுகிளறி இறக்கவும்.இப்போது எளிதாக செய்யக்கூடிய கேரட் & புரோக்கலி பொரியல் தயார்.

இது எல்லா சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . 9 Comments »

கேரட் & பீன்ஸ் பொரியல்

தேவையானப் பொருள்கள்:

பச்சைப் பயறு_ 1/2 கைப்பிடி
கேரட் _ 1 (சிறியது)
பீன்ஸ்_ ஏறக்குறைய 20 (எண்ணிக்கையில்)
சின்ன வெங்காயம்_2
பச்சைமிளகாய்_ 1 (விருப்பமானால்)
மிளகாய்த்தூள்_ 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பாசிப்பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு, ஒரு வாணலியில் போட்டு அது வேகும் அளவை விட சிறிது கூடுதலாக தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும்.சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து மூடி வேக வைக்கவும்.

வெங்காயம்,பச்சைமிளகாய்,கேரட்,பீன்ஸ் இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.

பருப்பு பாதி வெந்தபிறகு நறுக்கி வைத்துள்ள காய்களை அதனுடன் சேர்த்து,தேவையான உப்பும் சேர்த்து வேக வைக்கவும்.

மூடி போட வேண்டாம்.போட்டால் பீன்ஸின் பச்சை நிறம் மாறிவிடும்.

காய்கள் வெந்துகொண்டிருக்கும்போதே மிளகாய்த்தூளை சேர்த்துக் கிளறி விடவும்.

காய்கள் வெந்து,நீர் வற்றியதும் தேங்காய்ப் பூ,கொத்துமல்லி இலை சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கவும்.

இப்போது ஒரு தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துப் பொரியலில் கொட்டிக்கிளறவும்.

இப்போது அருமையான கேரட்,பீன்ஸ் பொரியல் தயார்.

குறிப்பு:

இந்தக் காய்களில்தான் செய்ய வேன்டுமென்பதில்லை.இதனை விருப்பமான எல்லாக் காய்களிலும் செய்யலாம்.

கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு பொரியல்

தேவையானப் பொருள்கள்:

கேரட்_பாதி
பீன்ஸ்_10
உருளைக்கிழங்கு_1
சின்ன வெங்காயம்_2
மிளகாய்த்தூள்_1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன்
வேக வைத்து பிழிந்த துவரம் பருப்பு_கொஞ்சம் (இல்லையென்றால் பரவாயில்லை)
கொத்துமல்லி இலை_ஒருகொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

காய்களைக் கழுவிவிட்டு அவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

தாளித்து முடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி காய்களைச் சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து பிரட்டிவிட்டு காய் வேகும் அளவு தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

சில உருளைக்கிழங்குகள் சீக்கிரமே வெந்துவிடும்.அவற்றை கேரட்&பீன்ஸ் பாதி வெந்த நிலையில் சேர்த்துக் கிளறிவிடவும்.

எல்லாம் நன்றாக வெந்தபிறகு வெந்த பருப்பு சேர்த்துக் கிளறிவிட்டுக் கலந்ததும் தேங்காய்ப்பூ,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

கேரட் பொரியல்

தேவையானப் பொருள்கள்:

கேரட்_2
சின்ன வெங்காயம்_2
பச்சை மிளகாய்_1
மஞ்சள் தூள்_சிறிது
வேக வைத்த பச்சைப் பருப்பு (அ துவரம்பருப்பு_1/2 கைப்பிடி
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலை பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

கேரட்டைக் கழுவித் துடைத்து வைக்கவும்.

வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.வேக வைத்த பருப்பைப் பிழிந்து வைக்கவும். கேரட்டை கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும். (அடுப்பில் கடாயை வைத்த பிறகே துருவிக் கொள்ளலாம். முதலிலேயே துருவி வைத்தால் கேரட்டின் நிறம் மாறிவிடும்.)

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத்   தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், கேரட்,உப்பு சேர்த்து வதக்கி மிதமானத் தீயில் மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் ஊற்ற வேண்டாம்.காயில் உள்ள தண்ணீரே போதுமானது.வெந்து, பச்சை வாசனை போனதும் பருப்பு,தேங்காய்ப் பூ,கொத்துமல்லி தூவிக் கிளறி இறக்கவும்.

இது எளிமையான,விரைவில் செய்யக் கூடிய ,சுவையான,சத்தான பொரியலாகும்.இது எல்லா சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

இதில் பருப்பு சேர்ப்பதற்கு பதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி முட்டை வெந்ததும் இறக்கலாம்.இதுவும் சுவையாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

கேரட் சாதம்

தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி (அ) புழுங்கல் அரிசி_1 கப்
கேரட்_பாதி
இஞ்சி_ஒரு மிகச்சிறிய துண்டு
பச்சை மிளகாய்_1
சின்ன வெங்காயம்_1
மிளகாய்த்தூள்_1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீச்பூன்
தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_ தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்
முந்திரி_2
கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்
வேர்க்கடலை_2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_5 இலைகள்
பெருங்காயம்_சிறிது

செய்முறை:

முதலில் அரிசியை நன்றாக வேக வைத்து வடித்து உதிர் உதிராக ஆற வைத்துக்  கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாகவும்,பச்சை மிளகாயை இரண்டாகவும்(அ)காரம் விரும்பினால் பொடியாகவும்,இஞ்சியைப் பொடியாகவும் நறுக்கிக்கொள்ளாவும்.கேரட் துருவியில் கேரட்டைத் துருவிக்கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.அடுத்து இஞ்சி,பச்சை மிளகாயை ஒரு வதக்கு வதக்கி பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்.அடுத்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி,தேங்காய்ப்பால்,உப்பு  சேர்த்துக் கிளறி விடவும். இதில் ஆறிய சாதத்தைப் போட்டுக் கிளறி எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

இதற்கு veg, nonveg வறுவல்கள் அனைத்துமே நன்றாகப் பொருந்தும்.

குறிப்பு:

இதற்கென சாதம் தனியாக வடித்துத்தான் செய்ய வேண்டுமென்பதில்லை.மீதமான சாதத்திலும் செய்யலாம்.

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »