தேவையானப் பொருள்கள்:
நெத்திலிக் கருவாடு_சுமார் 100 கிராம்
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10
தக்காளி_பாதி
பூண்டு_5 லிருந்து 10 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கறிவேப்பிலை
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
சுத்தம் செய்தல்:
நெத்திலிக் கருவாடை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.அதற்கு முதலில் அதன் தலையையும்,அதன் கீழே உள்ள கருப்பானக் கழிவுப் பகுதியையும் சுத்தமாக நீக்கி விட வேண்டும்.அடுத்து வால் பகுதியையும் நீக்க வேண்டும். இவ்வாறே எல்லாவற்றையும் செய்து வெதுவெதுப்பானத் தண்ணீரை கருவாடு மூழ்கும் அளவிற்கு அதில் ஊற்றி ஊற வைக்கவும். ஊறினால்தான் சுத்தமாகக் கழுவுவதற்கு வசதியாக இருக்கும்.சுமார் பத்து நிமிடங்கள் கழித்து கருவாடை நன்றாகத் தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.
செய்முறை:
இப்போது வெங்காயம்,பூண்டு, தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.இதற்கு சின்ன வெங்காயம் தான் நன்றாக இருக்கும்.அதேபோல் நல்லெண்ணெய்தான் பெஸ்ட்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடுபடுத்தவும்.சூடாகியதும் முதலில் கறிவேப்பிலை தாளித்து,பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கி,அது வதங்கியதும் கருவாடு சேர்த்து வதக்கவும்.பிறகு மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.ஒன்றிரண்டு முறை திறந்து கிளறி விட்டு மூடி வேக வைக்கவும்.தண்ணீர் சுண்டி கருவாடு வெந்ததும் இறக்கவும்.
இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.முக்கியமாக ரசம்,கிள்ளிப் போட்ட சாம்பார் சாதத்திற்கு இதைவிடப் பொருத்தமானப் பக்க உணவு எதுவும் இருக்காது.
இந்த முறையிலேயே மற்ற வகைக் கருவாடுகளையும் செய்யலாம்.