நெத்திலிக் கருவாடு வறுவல்

தேவையானப் பொருள்கள்:

நெத்திலிக் கருவாடு_சுமார் 100 கிராம்
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10
தக்காளி_பாதி
பூண்டு_5 லிருந்து 10 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கறிவேப்பிலை
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்

சுத்தம் செய்தல்:

நெத்திலிக் கருவாடை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.அதற்கு முதலில் அதன் தலையையும்,அதன் கீழே உள்ள கருப்பானக் கழிவுப் பகுதியையும் சுத்தமாக நீக்கி விட வேண்டும்.அடுத்து வால் பகுதியையும் நீக்க வேண்டும். இவ்வாறே எல்லாவற்றையும் செய்து வெதுவெதுப்பானத் தண்ணீரை  கருவாடு மூழ்கும் அளவிற்கு அதில் ஊற்றி ஊற வைக்கவும். ஊறினால்தான் சுத்தமாகக் கழுவுவதற்கு வசதியாக இருக்கும்.சுமார் பத்து நிமிடங்கள் கழித்து கருவாடை நன்றாகத் தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

செய்முறை:

இப்போது வெங்காயம்,பூண்டு, தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.இதற்கு சின்ன வெங்காயம் தான் நன்றாக இருக்கும்.அதேபோல் நல்லெண்ணெய்தான் பெஸ்ட்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடுபடுத்தவும்.சூடாகியதும் முதலில் கறிவேப்பிலை தாளித்து,பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கி,அது வதங்கியதும் கருவாடு சேர்த்து வதக்கவும்.பிறகு மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.ஒன்றிரண்டு முறை திறந்து கிளறி விட்டு மூடி வேக வைக்கவும்.தண்ணீர் சுண்டி கருவாடு வெந்ததும் இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.முக்கியமாக ரசம்,கிள்ளிப் போட்ட சாம்பார் சாதத்திற்கு இதைவிடப் பொருத்தமானப் பக்க உணவு எதுவும் இருக்காது.

இந்த முறையிலேயே மற்ற வகைக் கருவாடுகளையும் செய்யலாம்.

கருவாடு,கத்தரிக்காய்,மொச்சைக் குழம்பு

தேவை:

கருவாடு_100 கிராம்
பிஞ்சு கத்தரிக்காய்_5‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ (அ)  வாழைக்காய்_பாதி
மொச்சை_3 கைப்பிடி (ஒரு நபருக்கு ஒரு பிடி)
புளி_எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டு_முழு பூண்டு(அ)பாதி
மிளகாய்த்தூள்_தேவையான அளவு
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_3 டீஸ்பூன்
வடகம்_கொஞ்சம்
வெந்தயம்_1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை_ஒரு கொத்து

செய்முறை:

மொச்சையை முதல் நாளே ஊற வைத்து விட வேண்டும்.இப்போது சிறிது உப்பு போட்டு வேக வைத்து எடுக்கவும்.புளியைத் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும்.கருவாட்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிய வைக்கவும்.பூண்டை உரித்துக்கொண்டு,வெங்காயத்தைத் தட்டி (அ) நறுக்கி வைக்கவும்.தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.

ஒரு மண் சட்டியில்(அ)வாணலியில்  எண்ணெய் ஊற்றிக்  காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயம்,பூண்டு போட்டு வதக்க வேண்டும்.பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து அதனுடன் கருவாடு சேர்த்து வதக்கவும்.பிறகு மொச்சை சேர்த்து வதக்கி,பிறகு மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் புளித்தண்ணீரை ஊற்றி, காரம்,உப்பு சரிபார்த்து,மூடி வைத்து கொதிக்க விடவேண்டும்.

நன்றாகக் கொதிக்கும்போது   கத்தரிக்காயை நறுக்கி (விரும்பிய வடிவத்தில்) குழம்பில் போட்டு கலக்கி விடவும்.நன்றாகக் கொதித்து காய் வெந்த பிறகு குழம்பை இறக்கி மூடி வைக்கவும்.இது முதல் நாளை விட அடுத்த நாள்தான் மிகவும் நன்றாக இருக்கும்.இதை சாதம்,இட்லி,தோசை இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு:

பிஞ்சு கத்தரிக்காயானால் காம்பை மட்டும் எடுத்து விட்டு நாலாகக் கீறி முழுதாகப் போடலாம்.வாழைக்காயானால் வட்டமாக, சற்று பெரிய துண்டுகளாகவே போடலாம்.