பீட்ரூட் வாங்கி வந்தால் முன்பெல்லாம் அதிலுள்ள இலைகளை மனசே வராமல் (நீளமான, கலர்ஃபுல்லான தண்டுடன் கூடிய இலைகள் அழகாக இருப்பதால்) தூக்கிப்போட்டு விடுவேன்.பிறகு நெட்டில் பார்த்து அதை சாலட்டில் சேர்ப்பதைத் தெரிந்துகொண்டு இப்போதெல்லாம் பருப்பு அல்லது புளி சேர்த்து நம்ம ஊர் ஸ்டைலில் மசியல் செய்துவிடுவேன். நல்ல சுவையாகவும் இருக்கிறது.இதற்கு தண்டுப்பகுதியை நீக்கிவிட்டு கீரையை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
தேவையானவை:
பீட்ரூட் கீரை_4 செடிகளின் இலைகள் (நான் செய்தது)
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
பச்சைமிளகாய்_1
புளி_சிறு கோலி அளவு
பூண்டிதழ்_7 எண்ணிக்கை
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு_2
சீரகம்
காய்ந்தமிளகாய்_1
பெருங்காயம்
செய்முறை:
முற்றிய,பூச்சி இலைகளை நீக்கிவிட்டு,மீதமுள்ள கீரையை நன்றாக நீரில் அலசித் தண்ணீரை வடியவைக்கவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அதே வாணலை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி,புளி,கீரை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி இறக்கவும்.
தாளித்தது,வதக்கியது இவை எல்லாம் ஆறியதும் மிக்ஸியில் போட்டு மசித்து எடுக்கவும்.தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
இப்போது சுவையான,சிறிது பிங்க் நிறத்தினாலான பீட்ரூட் கீரை மசியல் தயார்.
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.துவையல் போலவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.