கேழ்வரகு & வெந்தயக்கீரை பகோடா / Kezhvaragu & Vendhaya keerai pakoda

raagi pakoda

நான் கேழ்வரகு மாவுடன் வெந்தயக்கீரை சேர்த்து செய்துள்ளேன்.வெந்தயக்கீரைக்குப் பதிலாக முருங்கைக்கீரை சேர்த்தும் செய்யலாம்.

தேவையானவை:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
வெந்தயக்கீரை_ஒரு கப்
பெரிய‌ சின்ன வெங்காயம்_1 (சாதாரண சின்ன வெங்காயம் என்றால் 5 லிருந்து 10 க்குள்)
இஞ்சி_சிறு துண்டு
பச்சைமிளகாய்_1
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

மார்க்கெட்டில் இளம்,துளிர் வெந்தயக்கீரையைப் பார்த்ததும் வாங்காமல் வர மனமில்லை.வாங்கிவந்து சாம்பார்,பகோடா இரண்டும் செய்தாயிற்று.இங்குள்ள‌ பகோடா நன்றாக இருப்பதாகத் தோன்றினால் நீங்களும் செய்து பார்க்கலாமே.

methi leaves

வெந்தயக்கீரையை ஆய்ந்து,தண்ணீரில் அலசி எடுத்து நீரை வடிக்கவும். கீரையை நறுக்காமல் முழுதாகவே போட்டுக்கொள்வோம். நறுக்கினால் கசப்பு அதிகமாகிவிடும்.

சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.பச்சை மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை&கொத்து மல்லி இவற்றைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு கிண்ணத்தில் மாவு முதற்கொண்டு எல்லாவற்றையும் போட்டு,கைகளால் கிளறிவிட்டு,சிறிதுசிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.கிள்ளி எடுத்து போடும் பதமாக இருக்கட்டும்.

raagi pakoda

ஒரு வாணலில் திட்டமாக எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்,மாவைக் கிள்ளினாற்போல் எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு தரம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.

மாலை நேரத்துக்கு கொறிக்க சுவையான,மொறுமொறு கேழ்வரகு பகோடா ரெடி.

அடுத்த நாளும் அந்த மொறுமொறு குறையவேயில்லை.துளி எண்ணெய்கூட குடிக்கவில்லை.

கலவை தானிய அடை/Multi grain adai

அடையைக் கேழ்வரகு மாவில் மட்டுமே செய்தால்கூட கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்.இந்த அடையில் கேழ்வரகு மாவுடன் ஓட்ஸ்&பார்லி மாவு சேர்ப்பதால் நல்ல மிருதுவாக இருக்கும்.சத்தானதும்கூட.

கேழ்வரகு&முருங்கைக்கீரை அடைக்கான செய்முறை இங்கேயும்,கேழ்வரகு இனிப்பு அடைக்கான செய்முறை இங்கேயும் உள்ளன.

முருங்கைக்கீரை கிடைப்பதே அரிது.கிடைத்தாலுமே ஐஸில் வைத்து இலைகளெல்லாம் கரும்பச்சை நிறத்தில்தான் இருக்கும்.சம்மரில் ஒருசில வாரங்களில் மட்டும்,ஃபார்மர்ஸ் மார்க்கெட் திறக்கும்போதே (காலை 9:00 மணி)போனால் மட்டுமே புது முருங்கைக்கீரை கிடைக்கும். அதுவும் இரண்டுமூன்று bunches மட்டுமே இருக்கும்.மேலே படத்திலுள்ளது அவ்வாறு வாங்கியதுதான்.அந்த வார சமையல் முழுவதுமே முருங்கைக்கீரை மயமாகத்தான் இருக்கும்.

அடைக்குத் தேவையானவை:

ஓட்ஸ் மாவு_ஒரு கையளவு (வறுத்துப்பொடித்தது)
பார்லி மாவு_ஒரு கையளவு
கேழ்வரகு மாவு_ஒரு கையளவு
முருங்கைக்கீரை_மூன்று கைப்பிடி
சின்ன வெங்காயம்_3
பச்சை மிளகாய்_1
உப்பு_தேவைக்கு
எண்ணெய்_தேவைக்கேற்ப‌
மேலும் உங்களின் விருப்பம்போல் சீரகம்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை என சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை:

கீரையைக் கழுவி சுத்தம் செய்து,தண்ணீரை வடியவைத்து எடுத்துக்கொள்ளவும்.வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு அகலமான தட்டில் மாவுகளுடன் உப்பு,கீரை,வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து கலக்கவும்.

பிறகு சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து அடை தட்டும் பதத்தில் மாவைப் பிசைந்துகொண்டு,ஈரத்துணியால் ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி காயவிடவும்.மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு பிரித்தெடுத்து,ஒரு தட்டைக் கவிழ்த்துப்போட்டு,அதன் மேல் ஈரத்துணியைப்போட்டு,அடையாகத் தட்டவும்.அடையின் எல்லா பகுதியும் சமமாக இருக்கட்டும்.

கல் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள அடையை எடுத்துக் கல்லில் போட்டு, அடையைச் சுற்றிலும்,அடையின் மேலும் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.

எண்ணெயைத் தாராளமாக விட்டால்தான் அடை நன்றாக வெந்தும்& வெண்மையாக இல்லாமலும் வரும்.

தீ மிதமாக இருக்கட்டும்.தீ அதிகமானால் தீய்ந்துவிடும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.

சூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நல்ல மொறுமொறுப்பாகவும், சுவையாகவும்,நல்ல மணமாகவும் இருக்கும்.

கேழ்வரகு புட்டு

கேழ்வரகு புட்டு இரண்டு வகைகளில் செய்வார்கள்.ஒன்று வேர்க்கடலை, எள், வெல்லம் சேர்த்தது.என்னுடைய ஃபேவரைட்டும்கூட. இதன் செய்முறைக்கு இங்கே நுழையவும்.மற்றொன்று தேங்காய்ப்பூ,சர்க்கரை சேர்த்த‌து.இதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையானவை:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
சர்க்கரை_தேவைக்கு
தேங்காய்ப்பூ_2 டீஸ்பூன்
ஏலக்காய்_1
உப்பு_ துளி அளவு

செய்முறை:

கேழ்வரகு மாவில் துளி  உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத்தான்),தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும் மாவைப் பிசறினார்போல் கிளறவும்.

தண்ணீரைச் சேக்கும்போது கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகிவிட்டால் மாவு புட்டுபோல் இல்லாமல் குழைந்துவிடும்.தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும்.

பிசைந்த மாவைக் மாவைக் கையில் எடுத்து பிடிகொழுக்கட்டைக்குப் பிடிப்பதுபோல் பிடித்தால் பிடிக்க வரவேண்டும்.பிறகு அதையே உதிர்த்தால் உதிரவும் வேண்டும்.இந்தப் பக்குவத்தில் மாவைப் பிசறிய பிறகு ஒரு 10 நிமி மூடி வைக்கவும்.

பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.இல்லையென்றால் பிசறிய மாவை மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து  ஒரு சுற்று சுற்றினால் கட்டிகளில்லாமல் நைஸாகிவிடும்.அதன்பிறகு இட்லி அவிப்பதுபோல் இட்லித் தட்டில் ஈரத்துணி போட்டு மாவை அவிக்கவும்.

ஆவி வந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி, உதிர்த்துவிட்டு தேங்காய்ப்பூ,சர்க்கரை,ஏலத்தூள் சேர்த்துக் கிளறிவிடவும்.இப்போது சத்தான,சுவையான,இனிப்பான‌ கேழ்வரகு புட்டு சாப்பிடத்தயார்.

கேழ்வரகு மாவு உருண்டை/லட்டு

தேவையானவை:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
வெல்லம்_1/2 கப்
முந்திரி_5
ஏலக்காய்_1
நெய்_கொஞ்சம்

செய்முறை:

அடுப்பில் வாணலை வைத்து நெய் விட்டுக் காய்ந்ததும் முந்திரியைப் போட்டு பொன் வறுவலாக வறுத்தெடுத்துக்கொண்டு,மீண்டும் அதே வாணலில் கேழ்வரகு மாவைப்போட்டு தோசைத் திருப்பியால் கிளறவும்.

தீ மிதமாக இருக்கட்டும்.விடாமல் கிளறிவிட்டுக்கொண்டேயிருக்கவும்.

மாவு நன்றாக சூடேறி வாசனை வந்ததும் இறக்கி வைக்கவும்.ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்கும் அளவு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும்.தீ மிதமாகவே இருக்கட்டும். அதிகமானால் வெல்லம் அடியில் பிடித்து தீய்ந்து போகும்.

வெல்லம் முழுவதும் கரைந்து நுரைத்துக்கொண்டு பொங்கிவரும்.அப்போது தீயை நிறுத்திவிட்டு மாவைக் கொட்டிக்கொண்டே விடாமல் கிளறவும்.முந்திரி,ஏலத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.

மாவு கை பொறுக்கும் சூடாக இருக்கும்போது  வேண்டிய அளவு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

இப்போது நல்ல வாசனையுடன் கூடிய,சத்தான,சுவையான கேழ்வரகு மாவு உருண்டைகள்/லட்டுகள் தயார்.

கேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி

கம்பை ஊறவைத்து இடித்துத்தான் இதனை செய்வார்கள்.கம்புமாவு கிடைப்பதால்  அதையே பயன்படுத்திக்கொண்டேன். கேழ்வரகு மாவு & கம்பு மாவு இரண்டையும் கலந்து செய்யும்போது நன்றாக இருக்கும்.அல்லது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும்கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.

கேழ்வரகு மாவை புளிக்க வைத்துச் செய்யும்போது சுவை கூடுதலாக இருக்கும்.அல்லது இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து உடனடியாகவும் தயாரித்துக்கொள்ளலாம்.

தேவையானவை:

கேழ்வரகு மாவு_1/2 கப்
கம்பு மாவு_1/2 கப்
உப்பு_தேவைக்கு

செய்முறை:

முதல் நாளிரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்து,புளிக்க வைக்கவும். காலையில் பார்த்தால் மாவு புளித்து,பொங்கினாற்போல் இருக்க வேண்டும். இட்லி மாவை புளிக்க வைப்பதுபோல் செய்ய வேண்டும்.உப்பு போட வேண்டாம்.

காலையில் ஒரு பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் விட்டு சூடேற்றவும்.

அது கொதி வருவதற்குள் கம்பு மாவில் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து வைக்கவும்.

தண்ணீர் கொதி வந்ததும் கம்பு மாவை ஊற்றிக் கட்டிகளில்லாமல் கிண்டிவிடவும்.Whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளாவது ஒன்றாவது. அடியில் பிடிக்காமலும்,கட்டி விழாமலும் தடுக்க அடிக்கடி கிண்டிவிட வேண்டும்.

சிறிது நேரத்தில்  கம்புமாவு பொங்கி வரும்.அப்போது கேழ்வரகு மாவைக் கரைத்து ஊற்றவும்.தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும்.மீண்டும் கட்டிகள் வராதவாறு விடாமல் கிண்டவேண்டும்.

ஒரு 5 நிமி கழித்து தீயை மிதமாக்கி மூடி மேலும் ஒரு 5 நிமி வைக்கவும். இப்போது  இரண்டு மாவும் கலந்து கொதித்தபிறகு நல்ல வாசனை வரும். கெட்டியாகவும் இருக்கும்.

விருப்பப்படி சூடாகவோ அல்லது ஆறியபிறகோ  சாப்பிடலாம்.ஒன்று செய்யலாம்.குளிர் காலத்தில் சூடாகவும் கோடையில் ஆற வைத்தும் சாப்பிடலாம்.

இதனை சாதம்போல் வைத்து எந்தக் குழம்புடனும் சாப்பிடலாம்.அல்லது சிறிது தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல் வகைகள், ஊறுகாய் வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நல்ல சத்தானதும்கூட.

 

கேழ்வரகு களி

தேவையானப் பொருள்கள்:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,எண்ணெய்விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு ஒரு பங்கு மாவிற்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு,உப்பு போட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.

ஒரு கொதி வந்ததும் மாவை சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டே விடாமல், கட்டித் தட்டாதவாறு கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

மாவு கட்டித் தட்டாமல் இருக்க whisk ஐப் பயன்படுத்தலாம்.

எல்லா மாவையும் கொட்டியபிறகு தீயை மிதமாக வைத்து,கெட்டியாக ஆகும்வரை விடாமல் கிண்டிவிட வேண்டும்.

நன்றாக வெந்து,வாசனை வந்ததும் இறக்கிவிட வேண்டும்.

இதற்கு தேங்காய் சட்னி,மீன் குழம்பு,கருவாட்டுக் குழம்பு போன்றவை பொருத்தமாக இருக்கும்.

இது போன்றே ஓட்ஸ்,கம்பு,பார்லி போன்ற தானியங்களின் மாவிலும் களி செய்யலாம்.

கேழ்வரகு இனிப்பு அடை/Kezhvaragu inippu adai

இந்த அடைக்கு கொழுக்கட்டை,கேழ்வரகு புட்டு செய்யும்போது மீதமாகும் பூரணத்தைப்  பயன்படுத்தலாம்.அல்லது கீழ்க்காணும் முறைப்படி வேர்க்கடலைக் கலவையைத் தயார் செய்தும் செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
வேர்க்கடலை_2 டீஸ்பூன்
எள்_1/2 டீஸ்பூன்
வெல்லம்_2 டீஸ்பூன்(பொடித்தது)
ஏலக்காய்_1 (விருப்பமானால்)
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் வறுத்து தோல்நீக்கிய வேர்க்கடலை,வறுத்த எள், ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் போட்டு  pulse ல் இரண்டு சுற்று சுற்றி இறுதியில் பொடித்த வெல்லத்தைப் போட்டு கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு துளிக்கும் குறைவாக உப்பு (சுவைக்காக),பொடித்து வைத்துள்ள வேர்க்கடலைக் கலவையை சேர்த்துக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்குப்  பிசைந்துகொள்ளவும்.

ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.அது சூடேறுவதற்குள் பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை கல்லில் போட்டு சுற்றிலும், அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு மிதமானத் தீயில் மூடி போட்டு வேகவிடவும்.மாவில் வெல்லம் சேர்த்திருப்பதால் தீ அதிகமாக இருந்தால் அடை தீய்ந்துவிடும்.

அடையின் ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும்.இதற்கு தொட்டு சாப்பிட எதுவும் தேவையில்லை.அப்படியே சாப்பிட வேண்டியதுதான்.

கேழ்வரகு புட்டு

தேவையானப் பொருள்கள்:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
வேர்க்கடலை_1/2 கப்
எள்_ஒரு டீஸ்பூன்
வெல்லம்_1/2 கப்பிற்கும் குறைவாக‌
உப்பு_துளி

செய்முறை:

முதலில் வேர்க்கடலை,எள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.

வேர்க்கடலை ஆறியபிறகு தோலெடுத்துவிட்டு அதனுடன் எள்ளையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி,அடுத்து வெல்லம் சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.மைய அரைக்க வேண்டாம்.சிறிது கொரகொரப்பாக இருக்கட்டும்.

அடுத்து கேழ்வரகு மாவில் துளி  உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத்தான்),தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும் மாவைப் பிசறினார்போல் கிளறவும்.

தண்ணீரைக் கலக்கும்போது கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகிவிட்டால் மாவு புட்டுபோல் இல்லாமல் கொழகொழப்பாகிவிடும். தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும்.ஒரு கப் மாவிற்கு 1/2 கப்பிற்கும் குறைவானத் தண்ணீர் தேவைப்படும்.

தண்ணீர் சேர்த்துப் பிசறிய பிறகு ஒரு 10 நிமி மூடி வைக்கவும்.பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.அதன்பிறகு இட்லி அவிப்பதுபோல் இட்லிக் கொத்தில் ஈரத்துணி போட்டு மாவை அவிக்கவும்.

ஆவி வந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி வேர்க்கடலைக் கலவையைக் கலந்து விடவும். விருப்பமானால் துளி ஏலக்காய்த் தூள் சேர்க்கலாம்.இப்போது சத்தான,சுவையான கேழ்வரகு புட்டு தயார்.சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

கேழ்வரகு கூழ் (அ) கேழ்வரகு கஞ்சி

தேவையானப் பொருள்கள்:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
தண்ணீர்_4 கப்
உப்பு_தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு பங்குக்கு 4 பங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு மூடி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.கேழ்வரகு மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.தண்ணீர் கொதி வந்ததும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கையால் ஊற்றிக் கொண்டே மற்றொரு கையில் ஒரு    egg beater  ன் உதவியால் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அப்போதுதான் கட்டி தட்டாமல் இருக்கும்.தீ மிதமாக இருக்கட்டும்.சிறிது நேரம் மூடி வைத்திருக்கவும். இடையிடையே திறந்து கிண்டி விடவும்.கொஞ்ச நேரத்தில் மாவின் நிறம் மாறி வாசம் வந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.

இக் கஞ்சியை சிறு பௌளில்  ஊற்றி ஸ்பூனைப் பயன்படுத்தி சாப்பிடலாம். கொஞ்சம் நீர்க்க வேண்டுமானால் தேவையான தண்ணிர் ஊற்றி ஸ்பூனால் கலக்கிக்கொள்ளலாம்.

இதற்கு உருளைக் கிழங்கு வற்வல்,கத்தரிக்காய் பொரியல், மாங்காய்& எலுமிச்சை ஊறுகாய் நன்றாக இருக்கும்.எளிதில் ஜீரணமாகக் கூடிyaதுஒரு பாத்திரத்தில் ஒரு பங்குக்கு 4 பங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு மூடி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.கேழ்வரகு மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.தண்ணீர் கொதி வந்ததும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கையால் ஊற்றிக் கொண்டே மற்றொரு கையில் ஒரு  whisk  ன் உதவியால் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அப்போதுதான் கட்டி தட்டாமல் இருக்கும்.தீ மிதமாக இருக்கட்டும்.சிறிது நேரம் மூடி வைத்திருக்கவும். இடையிடையே திறந்து கிண்டி விடவும்.கொஞ்ச நேரத்தில் மாவின் நிறம் மாறி வாசம் வந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.

இக் கஞ்சியை சிறு பௌளில்  ஊற்றி ஸ்பூனைப் பயன்படுத்தி சாப்பிடலாம். கொஞ்சம் நீர்க்க வேண்டுமானால் தேவையான தண்ணிர் ஊற்றி ஸ்பூனால் கலக்கிக்கொள்ளலாம்.

இதற்கு உருளைக் கிழங்கு வற்வல்,கத்தரிக்காய் பொரியல், மாங்காய்& எலுமிச்சை ஊறுகாய் நன்றாக இருக்கும்.எளிதில் ஜீரணமாகக் கூடியது..