ப்ரோக்கலி ஈஸி பொரியல்

 

தேவையானவை:

ப்ரோக்கலி _ ஒரு முழு பூ

பொடித்த மிளகு _ காரத்திற்கேற்ப

பூண்டு _ தேவைக்கேற்ப

எண்ணெய்

உப்பு

இனி எப்படி செய்தால் சுவையாக இருக்கும் என பார்க்கலாம்.

ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து வைத்துக்கொள்ளவும். பூண்டிதழ்களை ஒன்றிரண்டாகத் தட்டி வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பூக்கள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் சிறிது உப்பு போட்டு ப்ரோக்கலி பூக்களையும் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டிவிடவும். நீண்ட நேரம் கொதிக்கவிட வேண்டாம். அதிகமாக வெந்துவிட்டால் அது வதங்கியதுபோல் வலவலவென ஆகிவிடும்.

வெந்த பூவை வேண்டிய அளவில் கையால் அல்லது கத்தியால் சிறுசிறு இதழ்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

ஒரு தோசைக்கல் அல்லது வாணலில் சிறிது எண்ணெய் விட்டு (ஆலிவ் எண்ணெயாக இருந்தால் நல்ல வாசனையாக இருக்கும்) தட்டிய பூண்டுகளைப் போட்டு வதக்கவும். அடுத்து ப்ரோக்கலியைச் சேர்த்து மிளகுத்தூளையும் தூவி  தேவையானால் உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

இது சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடவோ அல்லது சும்மா அப்படியே சாப்பிடவோ அல்லது பொரியலில் சாதம் போட்டு கிளறி சாப்பிட பூண்டின் சுவையுடன் நன்றாக இருக்கும்.

பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 3 Comments »

முருங்கைக்கீரை பிரட்டல் / துவட்டல்

20150219_160734

சித்ரா வீட்ல கீரை வாரமோ !!

வறுத்த வேர்கடலை கையில் இருந்து, கூடவே முருங்கைக்கீரையும் இருந்துவிட்டால் நொடியில் முருங்கைக் கீரைப் பொரியல் ரெடியாயிடும்.

20150219_142217

ஃப்ரெஷ் கீரை

முன்பெல்லாம் தேடித்தேடி ஓடியதுபோக, இப்போ ஃப்ரெஷ்ஷாவே கிடைக்குது. கிடைக்கும்போது வாங்கி அனுபவிச்சிட வேண்டியதுதான்.

தேவையானவை :

20150222_144115

அளவெல்லாம் உங்கள் விருப்பம்தான்

முருங்கைக்கீரை _ இரண்டுமூன்று கிண்ணம் (எவ்வளவு கீரையாக இருந்தாலும் சமைத்த பிறகு கொஞ்சமாகிவிடும்)

வறுத்த‌ வேர்கடலை _ ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் _ 1
உப்பு _ ருசிக்கு

செய்முறை :

வேர்க்கடலையை வறுக்கும்போதே கடைசியில் மிளகாயையும் போட்டு சூடுவர‌ வறுத்துக்கொள்ளவும். அல்லது ஏற்கனவே வறுத்த வேர்கடலை இருக்குமாயின், மிளகாயை மட்டும் வெறும் வாணலில் போட்டு சூடுவர வறுத்து எடுக்கவும்.

இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு இடித்துக்கொள்ளவும். மைய இடிக்க வேண்டாம். வேர்கடலை கொஞ்சம் வாயில் கடிபடுகிற மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்.

பிறகு அடிகனமான சட்டியில் ஒன்றிரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி, தண்ணீர் காய்ந்ததும் அதில் கீரையைப் போட்டு வதக்கவும்.

மெல்லிய பாத்திரம் வேண்டாம், பாத்திரம் மெல்லியதாக இருந்தால் தண்ணீர் சீக்கிரமே சுண்டிவிடும், கீரையும் வேகாது.

வதக்கும்போதே சிறிது உப்பு சேர்க்கவும். கீரை வெந்து தண்ணீர் சுண்டி வந்ததும் பொடித்த பொடியைப் போட்டு ஒரு கிண்டுகிண்டி இறக்கவும்.

எல்லா சாதத்துடனும் சூப்பராக இருக்கும். சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் சூப்பரோ சூப்பராக இருக்கும்.

ப்ரோக்கலி , உருளை & வேர்க்கடலை பொரியல்

20150120_124052

ப்ரோக்கலி என்றாலே சிலருக்கு சாப்பிடப் பிடிக்காது. அதனால் அதனுடன் இதுமாதிரி உருளை, கடலை போன்றவற்றை சேர்த்து சமைத்தால் சாப்பிடாதவர்களும் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்

தேவையானவை:

ப்ரோக்கலி _ 1
சிறிய உருளைக்கிழங்கு _ 1
அவித்த வேர்க்கடலை _ ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
பூண்டுப்பல் _ மூன்றுநான்கு
தேங்காய்ப் பூ
கொத்துமல்லி தழை
உப்பு _ தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல்நீக்கியோ அல்லது அப்படியேவோ சிறு துண்டுகளாக்கிக்கொள்ளவும்.

அவித்த வேர்க்கடலையைத் தயாராக வைத்துக்கொள்ளவும்.

ப்ரோக்கலியை நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

பூண்டுப்பல்லை தட்டிக்கொள்ளவும்.

இவை எல்லாம் தயாரானவுடன், அடுப்பில் வாணலை ஏற்றித் தாளித்துவிட்டு, தட்டி வைத்துள்ள பூண்டு போட்டு வதக்கிகொண்டு ப்ரோக்கலி, உருளை, வேர்க்கடலை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது வதக்கிவிட்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீரை தெளித்தாற்போல் விட்டு மூடி வேகவிட‌வும்.

உருளையும், வேர்க்கடலையும் ஏற்கனவே வெந்திருப்பதாலும், ப்ரோக்கலி சூடு பட்டாலே வெந்துவிடும் என்பதாலும் தண்ணீர் அதிகம் தேவையிராது.

தண்ணீர் சுண்டி மிளகாய்த்தூள் வாசனை போனதும் தேங்காய்ப்பூ & கொத்துமல்லி தழை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

கரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal

poriyal

எனக்கு இந்தக் கிழங்கின் பெயர் (Yam) தெரியாது. நல்ல நாளாப் பார்த்து நானே இந்தப் பெயரை (கரணைக் கிழங்கு) சூட்டிட்டேன் . சட்டி கரணைனு பெரியபெரிய‌ கரணைக் கிழங்கு நம்மூரில் கிடைக்கும். அதில் என்னெல்லாம் செய்வோமோ, அதாவது சாம்பார், பொரியல், புளிக்குழம்பு என எல்லாமும் இதை வைத்து செய்வேன். நல்லாவே இருக்கும்.

yam

சில சமயங்களில் மெல்லிய கிழங்குகளும், சில சமயங்களில் பெரியதாகவும் கிடைக்கும். சிறிய கிழங்கானால் முழுதாக ஒன்றும் பெரியதாக இருந்தால் தேவைக்கேற்ப நறுக்கியும் செய்வேன். மீதமுள்ள‌ நறுக்கிய கிழங்கின் வெட்டுப்பட்ட பகுதியை பேப்பர் டவலால் மூடி ஒரு ஸிப்லாக்கில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்வேன்.

இந்தக் கிழங்கு நமிக்குமா எனத் தெரியவில்லை.எதற்கும் கிழங்கை தேவையான அளவில் நறுக்கி (நான் பெரியபெரிய வட்டமாக நறுக்குவேன்) அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறு துண்டு புளி & மஞ்சள்தூள் சிறிது சேர்த்து வேக வைத்து ஆறவிட்டு மேல்தோலை உரித்துவிட்டு தேவையான வடிவத்தில் நறுக்கி பயன்படுத்துவேன்.

தேவையானவை:

வட்டமாக‌ நறுக்கிய‌ துண்டுகள் _ 2
மிளகாய்த்தூள் _ இரண்டு டீஸ்பூன்
மஞ்சள்தூள் _ சிறிது
உப்பு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு வாணலில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு கிழங்கைப்போட்டு ஒரு கிண்டுகிண்டி,அதுனுடன் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.

கிழங்கு ஏற்கனவே வெந்துவிட்டபடியால் ரொம்ப நேரம் வேகத் தேவையில்லை.மிளகாய்த்தூள் கிழங்குடன் நன்றாகக் கலந்து பச்சை வாசனை போய் நன்றாக‌ சிவந்து வந்ததும்  இறக்கிவிடவும்.இடையிடையே கிளறிவிட்டால் போதுமானது.

poriyal

இது எல்லா சாதத்துடனும் நன்றாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 12 Comments »

பொரியல் சாதம்

இதனை பிரட்டிய சாதம், வாணல் சாதம் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.

எங்கம்மா ஒரு பெரிய இரும்பு வாணல் நிறைய பொரியல் செய்வாங்க. எல்லோரும் சாப்பிட்டு முடித்தபிறகு, வாணலில் ஒன்றிரண்டு டீஸ்பூன் அளவிற்கு பொரியல் கொஞ்சம் மீதமிருக்கும். தாளிப்புப் பொருள்களும் கொஞ்சம்போல ஒட்டியிருக்கும். அதில் ஒரு கை சாதம் போட்டு பிரட்டி எடுத்து சாப்பிட்டால் அது சூப்பர் சுவையில் இருக்கும். இதை சாப்பிட்டுப் பழகியவர்கள் விடமாட்டார்கள். வெஜ், நான்வெஜ் எதுவாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.

சில சமயங்களில் பிடித்தமான பொரியலாக இருந்தால், வாணலில் உள்ளதை அப்படியே ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றிவிட்டு, கொஞ்சம் அதிகமாகவே சாதத்தைப் போட்டு ஆளுக்கொரு கையாகக் கொடுப்பான் என் தம்பி. அதை அடித்துப்பிடித்து சாப்பிடுவோம்.

எண்ணெய் வேண்டாம் என்பதால் இப்போது இந்தப் பழக்கத்தில் இருந்து வெளியில் வந்துவிட்டாலும், என்றைக்காவது இது மாதிரி செய்து சாப்பிடுவேன். அப்படி எடுத்த படங்கள்தான் கீழேயுள்ளவை. பழக்கம் இல்லையென்றாலும், ஒருதடவை செய்து பாருங்க, அப்புறம் நீங்களும் விடமாட்டீங்க!

நான்வெஜ் வகைகளில் நண்டு வறுவல், நெத்திலிக் கருவாடு வறுவல், சிக்கன் வறுவல்இவற்றில் பிசைந்த சாதம் சூப்பராக இருக்கும்.

உருளைக்கிழங்கு பொரியல் சாதம்

potato sadham

பீன்ஸ் பொரியல் சாதம்

beans sadham

 

 

 

 

 

 

 

 

 

வெண்டைக்காய் பொரியல் சாதம்

vendai sadham

 

 

 

 

 

 

 

 

 

ரொமானோ பீன்ஸ் பொரியல்   சாதம்

rice

ப்ரோக்கலி ரே(ய்)ப் பொரியல் சாதம்

saadham

பாவக்காய் பொரியல் சாதம்

rice

கொத்தவரங்காய்ப் பொரியல் சாதம்

sadham

கத்தரிக்காய் பொரியல்  சாதம்

saadham

முருங்கைக்கீரை பொரியல்  சாதம்

saadham

முருங்கைக்கீரை பொரியலின் செய்முறை இன்னும் பதிவாகவில்லை, விரைவில் போடுகிறேன்.

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 7 Comments »

ரொமானோ பீன்ஸ் பொரியல் / Romano beans poriyal

beans poriyalbeans poriyal

ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் நிறைய வெரைட்டியில் பீன்ஸ் வருகிறது.அதில் இந்த Romano beans ம் ஒன்று.(ரோமன் பீன்ஸ் அல்லது ரொமானோ பீன்ஸ் ??).கொஞ்சம் தட்டையாக அவரைக்காய் மாதிரியும்,பசுமையாக பீன்ஸ் மாதிரியும் தெரிகிறது.

சுவை எப்படி இருக்கும் எனத் தெரியாமல் வாங்காமலேயே இருந்தேன்.சென்ற வாரம் துணிந்து (என்னா தைரியம்!!) வாங்கிவிட்டேன். இளம் பிஞ்சாக,ஃப்ரெஷ்ஷாக இருந்ததால் வெந்ததும் சீக்கிரம்,சுவையும் அபாரம்.

beansromano beans

தேவையானவை:

பீன்ஸ நறுக்கியது_ஒரு கிண்ணம்
சின்ன வெங்காயம்_மூன்று
மஞ்சள்தூள்_சிறிது
வேகவைத்து பிழியப்பட்ட துவரம்பருப்பு_1/2 கைப்பிடி
கொத்துமல்லி தழை_ஒரு கொத்து

அரைக்க:

தேங்காய் பத்தை_3
காய்ந்தமிளகாய்_1 காரத்திற்கேற்ப‌
சீரகம்_கொஞ்சம்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

சாம்பாருக்கு வேக வைத்த துவரம்பருப்பில் ஒரு அரை கைப்பிடி அளவுக்கு பிழிந்து வைத்துக்கொள்ளவும்.

பீன்ஸை நன்றாகக் கழுவிவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

தேங்காய் பத்தையுடன் சீரகம்,காய்ந்தமிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து பீன்ஸ் சேர்த்து வதக்கி சிறிது மஞ்சள்தூள்,உப்பு,காய் வேக சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

காய் வெந்த பிறகு துவரம் பருப்பு,அரைத்த தேங்காய் கலவை இரண்டையும் சேர்த்து கிண்டிவிடவும்.

புதிதாக சேர்த்தவை எல்லாம் சூடாகி,பீன்ஸுடன் நன்றாகக் கலந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இது எல்லா சாதத்துக்கும் பொருத்தமாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 16 Comments »

கேரட் & புரோக்கலி பொரியல் / Carrot & Broccoli poriyal

carrot&broccoli poriyal

தேவையானவை:

நடுத்தர அளவிளான புரோக்கலி_1
கேரட்_1
சின்ன வெங்காயம்_இரண்டு அல்லது மூன்று
பச்சை மிளகாய்_ஒன்றிரண்டு
வெந்து பிழியப்பட்ட‌ துவரம் பருப்பு_ ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய்_ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி இலை_கொஞ்சம்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

சாம்பாருக்கு வேகவைத்த‌ துவரம் பருப்பில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கொஞ்சம் பிழிந்து வைத்துக்கொள்ளவும்.

கேரட்,புரோக்கலி இரண்டையும் நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தையும் அவ்வாறே நறுக்கவும்.பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.காரம் விரும்பினால் பொடியாக்கலாம்.

வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கேரட்,புரோக்கலியைச் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி,லேஸாக உப்பு தூவி,சிறிது தண்ணீர் தெளித்து மூடி மிதமானத் தீயில் வேக வைக்கவும்.

புரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.கேரட்டும்கூட மெல்லிய துண்டுகளாக இருப்பதால் சீக்கிரமே வெந்துவிடும்.

இவை வெந்ததும் பிழிந்து வைத்துள்ள பருப்பை சேர்த்துக் கிளறிவிட்டு சூடேறியதும்,தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை தூவி மேலும் ஒரு கிளறுகிளறி இறக்கவும்.இப்போது எளிதாக செய்யக்கூடிய கேரட் & புரோக்கலி பொரியல் தயார்.

இது எல்லா சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . 9 Comments »

பீன்ஸ் பொரியல்/Beans poriyal

beans poriyal

நேற்று சுரைக்காய் கூட்டுக்கு இடித்த,வேர்க்கடலை & காய்ந்த மிளகாய் பொடி கொஞ்சம் மீதமிருந்தது.முன்பு போல பெரிய பருப்பாக இல்லாமல் இப்போதெல்லாம் குட்டிக்குட்டியா வருது.இதை ஓவனில் பார்த்துப்பார்த்து வறுக்க வேண்டியுள்ளது. வேர்க்கடலையின் விலையும் மிகமிக அதிகமாகிவிட்டது.

அதனால் இந்தப் பொடியை வீணாக்கக்கூடாது என நினைத்து பீன்ஸ் பொரியலில் சேர்த்தேன்.நன்றாக இருந்தால் சரி , இல்லையென்றால் நானே சாப்பிட்டுவிடுவது என.மிகமிக நன்றாகவே இருந்தது.முடிந்தால் நீங்களும் செஞ்சு பாருங்க.

தேவையானவை:

முழு நீள பீன்ஸ்_ஒரு கை நிறைய
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை_ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2 (காரத்திற்கேற்ப)
தேங்காய்ப் பூ_கொஞ்சம்
கொத்துமல்லி இலை_சிறிது (போட மறந்தாச்சு)
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்,கடுகு,உளுந்து,கடலைப்பருப்பு,சீரகம்,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

பீன்ஸைக் கழுவிவிட்டு,விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ளவும்.

மிளகாயைக் கருகாமல் மிதமானத் தீயில் சூடுவர வறுத்துக்கொள்ளவும்.

வேர்க்கடலையுடன் மிளகாயைச்சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக இடித்துக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பில் ஏற்றித் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,பீன்ஸைப் போட்டு வதக்கவும்.

லேஸாக வதங்கியதும் அது வேகுமளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு,சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும்.

தண்ணீர் வற்றி வெந்ததும் இடித்து வைத்துள்ள வேர்க்கடலை & காய்ந்த மிளகாய்ப் பொடி,தேங்காய்ப் பூ சேர்த்துக் கிளறி,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இந்த சுவையான பீன்ஸ் பொரியல் எல்லா வாகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 10 Comments »

காராமணி பொரியல்/karamani poriyal/Chinese long beans poriyal

கீழே படத்திலுள்ள காயை மார்க்கெட்டில்   chinese long beans னு எழுதியிருந்தாங்க.காராமணினு நினைக்கிறேன்.பச்சையா,நீளமா இருக்கும் இதை வாங்கி பீன்ஸ் மாதிரியே சாம்பார்,பொரியல்,கூட்டு என சமைத்துவிடுவேன்.நல்லாவே இருக்கும்.வாங்கினா செஞ்சு பாருங்க.

தேவையானவை:

காராமணி_படத்திலுள்ளதில் பாதி
சின்ன வெங்காயம்_3
பச்சைமிளகாய்_1
உப்பு_சிறிது

அரைக்க:

தேங்காய்_இரண்டுமூன்று  கீற்றுகள்
சீரகம்_கொஞ்சம்

தாளிக்க:

எண்ணெய்,கடுகு,உளுந்து,கடலைப்பருப்பு,காய்ந்தமிளகாய்_1,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

காராமணியை நன்றாகக் கழுவிவிட்டு விருப்பமான அளவில் நறுக்கவும். வெங்காயம்,பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கவும்.தேங்காய்,சீரகத்தைக் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,முதலில் வெங்காயம்&பச்சைமிளகாய்,அடுத்து காராமணியை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு,சிறிது உப்பு தூவி,காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.

காய் வெந்து தண்ணீர் வற்றிய‌ பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்சீரகத்தைச் சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கவும்.

இது எல்லா சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 2 Comments »

அவரைக்காய் பொரியல்/Purple beans poriyal

கோடையில் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் பல நிறங்களில் பலவிதமான காய்கறிகள் வரும்.அதில் ஒன்றுதான் இந்த கண்ணைப்பறிக்கும் காய்.இது பார்க்க‌ அவரை மாதிரியே இருக்கு,சுவையும்தான்.ஆனால் கொஞ்சம் கடினமான தோல் உள்ளது.குட்டிகுட்டியா purple color ல் பார்க்கவே அழகா இருந்துச்சு.சமைக்கும்போது நிறம் மாறிவிட்டது.சமையலில் அவரைக்காய் போலவே இதையும் செய்துவிடுவேன்.

தேவையானவை:

நறுக்கிய அவரைக்காய்_ஒரு கிண்ணம்
உப்பு_தேவைக்கு

பொடிக்க:

வறுத்த‌ வேர்க்கடலை_ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய்_2

செய்முறை:

அவரைக்காயைக் கழுவி சுத்தம்செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அடிகனமான வாணலில் நறுக்கிய அவரைக்காயைப் போட்டு அது திட்டமாக வேகுமளவு சிறிது தண்ணீர் விட்டு,சிறிது உப்பு தூவி வேக வைக்கவும்.

தண்ணீர் குறைவாக இருப்பதால் அடிப்பிடிக்க வாய்ப்புண்டு.எனவே வேகும்போதே இரண்டு தரம் கிளறிவிடவும்.

இதற்கிடையில் மிளகாயை வெறும் வாணலில் சூடுவர வறுத்து ஆறியதும் வேர்க்கடலையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.

அவரைக்காய் வெந்ததும்(தண்ணீர் இருக்கக்கூடாது,இருந்தால் வடித்துவிடவும்)பொடித்த பொடியைப்போட்டுக் கிளறிவிட்டு இறக்கவும்.

இதை மற்ற பொரியல் போலவே சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.இம்முறையிலேயே சாதாரன அவரைக்காயிலும் செய்யலாம்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 4 Comments »