வாழைப்பூ & முருங்கைக்கீரை சாம்பார்

சில காய்கறிகளின் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.(உ.ம்) கேரட்,பீன்ஸ் சாம்பார்;மாங்காய்,முருங்கைக்காய் சாம்பார்;கருவாடு,கத்தரிக்காய் போன்று. அந்த வரிசையில் வாழைப்பூ சமையலாக இருந்தால் அதனுடன் அகத்திக்கீரை சேர்த்து சாம்பார்,பொரியல்,கூட்டு என செய்வார்கள்.வாழைப்பூவின் துவர்ப்பும், அகத்திக்கீரையின் கசப்பும் சேர்ந்து சூப்பர் சுவையுடன் இருக்கும்.அகத்திக்கீரை இல்லாமல் போனால் முருங்கைக்கீரை சேர்த்து சமைப்பார்கள்.இங்கு என்றாவது  வாழைப்பூவையாவது பார்க்கலாம்.அகத்திக்கீரையைப் பார்த்ததே இல்லை. ஒருவேளை ஃப்ரோசன்  செக் ஷ‌னில் கிடைக்குமா தெரியவில்லை.

வாழைப்பூ & முருங்கைக்கீரைப் பொரியல் செய்முறைக்கு  இங்கே  செல்லவும்

தேவையானப் பொருள்கள்:

துவரம் பருப்பு_1/2 கப்
வாழைப்பூ_பாதி
முருங்கைக் கீரை_ஒரு கிண்ணம் (அதிகமாகவும் சேர்க்கலாம்)
சின்ன வெங்காயம்_ஒரு ஏழெட்டு
தக்காளி_1
பூண்டுப்பல்_2
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு குக்கரில் (அ) பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு அடுப்பிலேற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்து ஆறியதும் பூவைப் பிழிந்து வைக்கவும்.

கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி,ப.மிளகாய் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.

தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.சாம்பர் நீர்க்க இருக்க வேண்டும்.

சாம்பார் ஒரு கொதி வந்ததும் வாழைப்பூவைப் போட்டு மூடி வேக வைக்கவும்.

சாம்பார் நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு (மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ,கொத்துமல்லி  இலை சேர்த்து இறக்கவும்.

இப்போது வாழைப்பூ & முருங்கைக்கீரை சாம்பார் தயார்.

இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

வாழைப்பூ வடை

பொதுவாக மொந்தன் வாழையிலுள்ள காய்,தண்டு,பூ இவற்றைத்தான்  சமையலுக்குப்  பயன்படுத்துவாங்க. நாமெல்லாம் சமைத்து சாப்பிடுகிறோமே வாழைக்காய் அதுதான் மொந்தன் வாழை.அதன் பூதான் அதிகம் துவர்க்காமல் இருக்கும். வடைக்குப் பொருத்தமாக இருக்கும்.

இல்லையென்றால் வாங்கும் பூவின் மேல் வரிசைகளை (நான்கைந்து) சாம்பார், பொரியல், கூட்டு, உசிலி என ஏதாவது செய்யப் பயன்படுத்திக்கொண்டு உள் வரிசைகளை வடைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இதில் துவர்ப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும்..

வாழைப்பூ புதிதாகக் கிடைத்தால் உடனே வாங்கிவிடுங்கள்.வாங்கியபிறகு என்ன செய்யலாம் என யோசித்து செய்யலாம். இதை செய்ய வேண்டும் என நினைத்து பழைய பூவை வாங்கி வர வேண்டாம்.அதிலுள்ள துவர்ப்பு போய் கசக்க ஆரம்பித்துவிடும்.

தேவையானப் பொருள்கள்:

வாழைப்பூ _பாதி
பொட்டுக்கடலை_ஒரு கப்
சின்ன வெங்காயம்_10
தேங்காய் பத்தை_5
இஞ்சி_சிறு துண்டு
பூண்டு பல்_2
காய்ந்த மிளகாய்_1
பச்சை மிளகாய்_1
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவின் வேண்டாதவைகளை (கள்ளன்,கள்ளி அல்லது நரம்பு, தொப்புள் எனவும் சொல்வாரகள்) நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு அலசி அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து ஒரு கொதி வருமாறு வேக வைக்கவும்.

பிறகு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைக்கவும்.

பொட்டுக்கடலையை முதலில் பொடித்துக்கொண்டு பிறகு அதனுடன் தேங்காய்,மிளகாய்,இஞ்சி,பூண்டு,பெருஞ்சீரகம் இவற்றை ஒன்றாகப் போட்டு கொரகொரவென அரைத்தெடுக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

இறுதியில் வாழைப்பூவை சேர்த்து அரைக்கவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்து மசிந்ததும் வழித்தெடுக்கவும்.

இதில்  பொடியாக நறுக்கிய வெங்காயம்,பெருங்காயம்,கறிவேப்பிலை, கொத்துமல்லி,தேவையான உப்பு சேர்த்து வடைமாவு போலவே பிசைந்துகொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.எண்ணெய் காய்ந்ததும் வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.


இது கூடுதல் மொறுமொறுப்பாகவும்,கூடுதல் சுவையாகவும் இருக்கும்.

தேங்காய் சட்னி,கெட்சப்புடன் சாப்பிட சூப்பர்.

எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.

வாழைப்பூ,முருங்கைக் கீரைப் பொரியல்

தேவையானப் பொருள்கள்:

சிறிய வாழைப்பூ_ஒன்று
முருங்கைக் கீரை_ஒரு கப்(உருவியது)
முக்கால் பதம் வெந்த துவரம் பருப்பு (அ) பாசிப்பருப்பு_ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை

செய்முறை:

வாழைப் பூவை ஆய்ந்து,பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

ஒரு வாணலியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும்.அதில் வாழைப் பூவைப் போட்டு,சிறிது மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும்.சீக்கிரமே வெந்துவிடும்.

வெந்ததும் நீரை வடித்துவிட்டு,ஆறியதும் தண்ணீர் இல்லாமல் ஒட்டப் பிழிந்து எடுத்து வைக்கவும்.

கீரையை உருவி,கழுவி எடுத்து வைக்கவும்.வெந்த பருப்பை தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்.

இப்போது வாணலியை அடுப்பில் ஏற்றி,தாளிக்க உள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு வாழைப்பூவை சேர்த்து வதக்கவும்.

ஏற்கனவே வெந்திருப்பதால் நீண்ட நேரம் வதக்க வேண்டாம்.சூடேறினால் போதும்.அடுத்து வெந்த பருப்பு சேர்த்துக் கிளறவும்.அடுத்து கீரை,உப்பு சேர்த்துக் கிளறவும்.மூட வேண்டாம்.கீரை வெந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இப்படம் கீரை இல்லாமல் செய்தது.கீரை இல்லையெனில் அதை மட்டும் தவிர்த்து மற்றப் பொருள்களை சேர்த்து செய்ய வேண்டும். இரண்டிற்கும் செய்முறை  ஒன்றுதான்.