மாங்காய் இனிப்பு பச்சடி / Mango sweet pachadi

mango pachadi

இனிப்பு,காரம்,புளிப்புடன் பச்சைப் பயறும் சேர்ந்திருப்பதால் இந்தப் பச்சடியின் சுவை சூப்பராக இருக்கும்.ஒரு தடவை செய்துதான் பார்ப்போமே!

mango

இங்கு எப்போதும் பழ மாங்காய் மாதிரியேதான் கிடைக்கும். ஒருசில சமய‌ங்களில் மட்டும் நம்ம ஊரில் உள்ளது மாதிரி நல்ல காய் மாங்காவாகக் கிடைக்கும். இவை சாம்பார், fish & dry fish குழம்பு, பச்சடி போன்றவை செய்ய நன்றாக இருக்கும். இப்போது இந்த மாங்காய்கள் வந்துகொண்டிருப்பதால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோமே !!

தேவையானவை:

மாங்காய்_ 1
பச்சைப் பயறு_ 1/4 கப்
பெருங்காயம்_துளிக்கும் குறைவாக‌
வெல்லம்_ ஒரு கப்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_துளியளவு
உப்பு_துளியளவு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து

செய்முறை:

மாங்காயைக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ள‌வும்.

ஒரு பாத்திரத்தில் பச்சைபயறுடன் மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து பயறு வேகுமளவு தண்ணீர் ஊற்றி குழையாமல், மலர வேக வைக்கவும்.

பயறு வெந்ததும் அதில் மாங்காய் துண்டுகள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து கிண்டிவிட்டு மாங்காய் வேகும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது கரையும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.

வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு,மண் இல்லாமல் வடிகட்டி வெந்த மாங்காய் பருப்புடன் சேர்த்துக் கிண்டிவிட்டு எல்லாம் சேர்ந்து இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி, கடுகு,உளுந்து தாளித்துக்கொட்டி கிளறி விடவும்.

 

mango pachadi

 
இப்போது இனிப்பு,புளிப்பு, காரம் கல‌ந்த மாங்காய் பச்சடி சாப்பிடத் தயார்.

 

கடலைப்பருப்பு சீயம்

மிகவும் சுவையான இந்த சீயம் தீபாவளியன்று (எங்க வீட்டில்) செய்வாங்க.இதை சாப்பிட ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.என்ன கொஞ்சம் (உண்மையில் அதிகம்) வேலை வாங்கும்.

சிலர் மேல் மாவிற்கு மைதாவிற்கு பதில் புதிதாக அரைத்த இட்லி மாவைப் பயன்படுத்துவார்கள்.புளித்த மாவு என்றால் அதிகமாக எண்ணெய் குடிக்கும்.

மைதாவில் செய்யும்போது சீயம் வெள்ளையாக இருக்கும்.இட்லி மாவில் செய்யும்போது சிவந்து வரும்.

கடலைப் பருப்பிற்கு பதில் பச்சைப் பருப்பிலும் இதைச் செய்யலாம்.எங்கம்மா செய்யும் முறை எனக்குப் பிடிக்கும் என்பதால் அதையே கீழேக் கொடுத்துள்ளேன்.

தேவையானவை:

பூரணத்திற்கு:~

கடலைப்பருப்பு_ஒரு கப்
வெல்லம்_ஒரு கப்
ஏலக்காய்_1

மேல் மாவிற்கு:~

மைதா_2 கப்
அரிசிமாவு_2 டீஸ்பூன்
சமையல் சோடா_துளிக்கும் குறைவாக‌
மஞ்சள்தூள்_ஒரு சிட்டிகை
உப்பு_சுவைக்கு

எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

கடலைப் பருப்பைக் கழுவிவிட்டு,அது மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி மலர வேக வைக்கவும்.ஆனால் குழைந்திருக்கக் கூடாது.பருப்பு வெந்ததும் நீரை வடிக்கவும்.நீரை வடித்தும் நீர் இருப்பதுபோல் தோன்றினால் ஒரு சுத்தமான துணி/பேப்பர் டவலில் பரப்பிவிட்டு உலர வைக்கவும்.

வெல்லத்தை மண்,தூசு நீக்கி சுத்தம் செய்துவிட்டுப் பொடிக்கவும்.ஏலக்காயைப் பொடிக்கவும்.

கடலைப் பருப்பை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடிக்கவும்.பிறகு ஒரு கடாயில் எடுத்து,அதனுடன் வெல்லத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமானத் தீயில் வதக்கவும்.முதலில் சிறிது இளகி பின் கெட்டியாகும். இப்போது ஏலப்பொடியைச் சேர்த்து இறக்கவும்.

இது ஆறியதும் படத்திலுள்ளதுபோல் சிறுசிறு உருண்டைகள் பிடிக்கவும்.

மேல்மாவிற்கு கூறியுள்ள அனைத்தையும் மாவு சலிக்கும் சல்லடையில் போட்டு இரண்டு முறை சலிக்கவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு இட்லி மாவுபோல் கரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடாகியதும் உருண்டைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.எண்ணெய் அதிகமாக சூடாக‌ இருக்கக்கூடாது.

மேலும் உருண்டைகள் உடைந்துவிடாமல் வேக வேண்டும்.உடைந்துவிட்டால் உள்ளேயுள்ள பூரணம் வெளியில் வந்து எண்ணெய் முழுவதும் பரவி கருப்பாகிவிடும்.

அதிக எண்ணிக்கையில் போடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் போடலாம். ஒன்றையொன்று ஒட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது உருண்டைகளைத் திருப்பிவிட்டு (போண்டா போல்) வெந்ததும் எடுத்துவிடவும்.

இப்போது சுவையான சீயம் நொறுக்க‌/சாப்பிடத் தயார்.

கருப்பட்டி ஆப்பம் (அ) வெல்ல ஆப்பம்

நாம்தான் ஏற்கனவே ஆப்பமாவு தயாரித்துவிட்டோமே.அந்த மாவையே இதற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.இல்லையென்றால் இட்லி மாவிலும் செய்யலாம்.

வெல்ல ஆப்பத்தைக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.பெரியவர்களும்தான்.

தேவையானப் பொருள்கள்:

ஆப்ப மாவு_ஒரு கிண்ணம்

பனை வெல்லம் என்கிற கருப்பட்டி_ஒரு கட்டி
(அல்லது)
சாதாரண வெல்லம்

ஏலக்காய்_1

செய்முறை:

வெல்லத்தைப் பொடித்து அது கரையும் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.

தண்ணீர் லேஸாக சூடேறினாலே போதும்.வெல்லத்தை மத்தின் அடிப்பகுதியால் நன்றாக மசித்துவிடவும்.

வெல்லம் கரைந்ததும் கல்,மண்,தூசு இல்லாமல் வெல்லத் தண்ணீரை வடித்து ஆறவிடவும்.

ஆறியதும் ஆப்ப மாவில் ஊற்றி பதமாக கரைத்துவிடவும்.

ஏலப்பொடி சேர்ப்பதானால் இப்போது சேர்த்துக்கொள்ளலாம்.

இப்போது ஆப்ப சட்டியை அடுப்பில் ஏற்றி சூடாகியதும் லேசாக எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை விட்டு இரண்டு கைகளாலும் சட்டியின் கைப்பிடியைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றிவிட்டு மூடிபோட்டு மிதமானத் தீயில் வேக வைக்கவும்.

தீ அதிகமானால் (வெல்லம் சேர்த்திருப்பதால்) அடிப் பிடித்துவிடும் அல்லது தீய்ந்து போகும்.எனவே தீ குறைவாகவே இருக்கட்டும்.

ஆப்பம் வெந்ததும்  தோசைத் திருப்பியால் அல்லது கைகளால்கூட எடுத்துவிடலாம்.ஓரங்கள் தானே பெயர்ந்து வந்துவிடும்.

சாப்பிட சாப்பிட திகட்டாது. தொட்டு சாப்பிட எதுவும் வேண்டாம்.அப்படியே சாப்பிடலாம்.

சர்க்கரைப் பொங்கல்

சூடாக இருக்கும்போது கொஞ்சம் தளர்வாக இருக்கும்.    அதுவே     ஆறியதும்      இறுகிவிடும்.

சர்க்கரைப் பொங்கல் & சாதாரண வெண் பொங்கல்

பொங்கலன்று சாதாரண வெண்பொங்கல்,சர்க்கரைப் பொங்கல் செய்வது வழக்கம்.

இவற்றின் புகைப்படம் தற்சமயம் இல்லையாதலால் செய்முறை மட்டுமே போட்டுள்ளேன்.பொங்கலன்று படத்தை இணைத்துவிடுகிறேன்.

சர்க்கரைப் பொங்கல் செய்யத் தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
பச்சைப் பருப்பு_1/3 கப்
வெல்லம்_ஒரு கப்
பால்_1/2 கப்
ஏலக்காய்_2
குங்குமப்பூ_ஒரு 15 இதழ்கள்
முந்திரி_15
திராட்சை_15
நெய்_1/4 கப்

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுக்கவும்.ஆறிய பிறகு   கழுவிவிட்டு அதில்  4 கப்புகள் அளவிற்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

பருப்பு பாதி வெந்த நிலையில் அரிசியைக் கழுவி அதில் சேர்த்து விடவும். அரிசி,பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேக வைத்தால் அரிசி வெந்து விடும்.பருப்பு வேகாமல் இருக்கும்.எனவே முதலில் பருப்பையும் அடுத்து அரிசியையும் சேர்க்க வேண்டும்.

இரண்டும் ஒன்றாகக் கலந்து நன்றாகக் குழைய வேக வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் கரைந்து இளம் பாகு பதம் வந்ததும் அதை குழைய வெந்துள்ள பொங்கலில் கொட்டிக் கிளறி விடவும். அடுத்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ சேர்க்கவும்.

அடுத்து நெய்யில் முந்திரி,திராட்சையை வறுத்து நெய்யுடன் சேர்த்துக் கொட்டிக் கிளறி இறக்கவும்.

சாதாரண வெண்பொங்கல் செய்யத் தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
பால்_1/4 கப்

செய்முறை:

ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் அளவிற்கு பாலும் தண்ணீருமாகச் சேர்த்து அடுப்பில் ஏற்றவும்.தண்ணீர் கொதித்து பொங்கி வரும்போது அரிசியைப் போட்டு அடிப்பிடிக்காமல் அடிக்கடிக் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.நன்கு குழைய வெந்த பிறகு இறக்கவும்.

இதற்கு பொங்கல் குழம்பு அல்லது கருனைக் கிழங்கு புளிக் குழம்பு நன்றாக இருக்கும்.

பச்சரிசி புட்டு

புட்டு செய்யும் போது ஈர அரிசி மாவைத்தான் பயன்படுத்த வேண்டும்.ஈர அரிசி மாவை வீட்டிலேயே தயாரித்து செய்யும்போது புட்டு பூ போல் வரும்.

தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
வெல்லம்_3/4 கப்
ஏலக்காய்_1
உப்பு_ஒரு துளிக்கும் குறைவாக‌
முந்திரி_5
உலர் திராட்சை_10

செய்முறை:

முதலில் பச்சரிசியைத் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு நீரை வடித்து விடவேண்டும்.அரிசி ஈரமாக இருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் கோர்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.

ஏலக்காய்,வெல்லம் இவற்றைப் பொடித்துக்கொள்ளவும்.ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி,திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.

அரிசியை மிக்ஸியில் போட்டு ஈர மாவாக, niceஆக‌ இடித்துக்கொள்ளவும். அதை இட்லிப் பானையில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுத்துக்கொள்ளவும்.ஆவி வெளியில் வரும்போது சிறிது நேரம் கழித்து நல்ல வாசனை வரும்.அப்போது மாவை இட்லிப் பானையில் இருந்து எடுத்து ஆற வைக்கவும்.நன்றாக வெந்த மாவு கைகளில் ஒட்டாது.ஆறிய பிறகு துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, கட்டிகளில்லாமல் மாவை உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்த மாவை மிக்ஸியில் போட்டு   pulse   ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் பூ போல் ஆகி விடும்.

இந்த மாவை மீண்டும் இட்லிப் பானையில் வைத்து அவிக்கவும்.மாவு ஏற்கனவே வெந்து விட்டதால் இந்த முறை சீக்கிரமே ஆவி வந்துவிடும். எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி ஏலத்தூள்,வெல்லம்,முந்திரி,திராட்சை சேர்த்துக் கிளறி சாப்பிடவேண்டியதுதான்.இப்போது நல்ல சுவையான , சத்தான, குழந்தைகளுக்குப் பிடித்தமான புட்டு தயார்.