பிடி கொழுக்கட்டை

தேவை:

பச்சரிசி_2 கப்
வெல்லம்_2 கப்
பச்சைப் பயறு_1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப் பல்_1 டீஸ்பூன்(விருப்பமானால்)
எள்_1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்_1

செய்முறை:

பச்சைப் பயறை நன்றாக‌ சிவக்க வறுத்து ஊற வைக்கவும்.பச்சரிசியை ஊற வைத்து ஈர மாவாக இடித்துக் கொள்ளவும்.பின்பு மாவை  இட்லிப் பானையில் வைத்து அவித்தெடுக்கவும்.ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் உதிர்த்து ஆற வைக்கவும்.எள்ளை வெறும் சட்டியில் போட்டு வறுத்து மாவில் கலக்கவும்.பச்சைப் பயறையும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மாவில் சேர்க்கவும்.தேங்காயை சிறிது நெய்யில் வறுத்து மாவில் போடவும். ஏலக்காயைத் தட்டிப் போடவும்.இவை எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.

அடுத்து வெல்லத்தை ஒரு கனமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் எடுத்து மாவில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.பாகுப் பதமெல்லாம் வேண்டாம்.எல்லாம் நன்றாகக் கலந்த பிறகு ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால் அழுத்தி மூடவும். படத்தில் உள்ளது போல் செய்துகொள்ளவும்.மேலும் உருண்டைகளாகவும் பிடித்துக்கொள்ளலாம்.இவ்வாறே எல்லாவற்றையும் செய்துகொண்டு இட்லிப் பானையில் வைத்து இட்லி அவிப்பது போல் அவிக்கவும். இனிப்பாகவும், வித்தியாசமாகவும் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மறுமொழி இடுக‌