ப்ரோக்கலி ஈஸி பொரியல்

 

தேவையானவை:

ப்ரோக்கலி _ ஒரு முழு பூ

பொடித்த மிளகு _ காரத்திற்கேற்ப

பூண்டு _ தேவைக்கேற்ப

எண்ணெய்

உப்பு

இனி எப்படி செய்தால் சுவையாக இருக்கும் என பார்க்கலாம்.

ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து வைத்துக்கொள்ளவும். பூண்டிதழ்களை ஒன்றிரண்டாகத் தட்டி வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பூக்கள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் சிறிது உப்பு போட்டு ப்ரோக்கலி பூக்களையும் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டிவிடவும். நீண்ட நேரம் கொதிக்கவிட வேண்டாம். அதிகமாக வெந்துவிட்டால் அது வதங்கியதுபோல் வலவலவென ஆகிவிடும்.

வெந்த பூவை வேண்டிய அளவில் கையால் அல்லது கத்தியால் சிறுசிறு இதழ்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

ஒரு தோசைக்கல் அல்லது வாணலில் சிறிது எண்ணெய் விட்டு (ஆலிவ் எண்ணெயாக இருந்தால் நல்ல வாசனையாக இருக்கும்) தட்டிய பூண்டுகளைப் போட்டு வதக்கவும். அடுத்து ப்ரோக்கலியைச் சேர்த்து மிளகுத்தூளையும் தூவி  தேவையானால் உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

இது சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடவோ அல்லது சும்மா அப்படியே சாப்பிடவோ அல்லது பொரியலில் சாதம் போட்டு கிளறி சாப்பிட பூண்டின் சுவையுடன் நன்றாக இருக்கும்.

பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 3 Comments »

கோதுமை மாவு இடியாப்பம்

 

கோதுமை மாவில் இடியாப்பமா !! நட்பூ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது முதலில் நானும் இப்படித்தான் ஆச்சரியமாகிப்போனேன்.  பிறகு அவர் சொன்னதை வைத்து முயற்சித்துப் பார்த்தேன். நன்றாக வந்தது. பதிந்து வைத்தால் யாருக்காவது உதவுமே என இங்கே எழுதுகிறேன்.

தேவையானவை :

கோதுமை மாவு _ 2 கப்

உப்பு _ ருசிக்கு ஏற்ப

செய்முறை :

இட்லி பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். கோதுமைமாவை ஒரு துணியில் முடிந்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும்  இட்லி  தட்டில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவிக்கவும்.  நான் சுமார் 25 நிமிடங்களுக்கு அவித்து எடுத்தேன்.

(மாவு கொழகொழனு இருக்குமோ எந பயந்துகொண்டே எடுத்தேன். ஆனால் சூடான கெட்டியான கல்லு மாதிரி இருந்தது.)

அதை ஒரு தட்டில் கொட்டி சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு உள்ளங்கைகளால் புட்டு மாவு பிசைவது மாதிரி செய்தால் பொலபொலவென மாவு உதிர்ந்த்கொள்ளும். தேவையான உப்பை சேர்க்கவும்.

இப்போது கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாக மாவில் தெளித்து கெட்டியாக இடியாப்பம் பிழியும் பதத்திற்கு பிசையவும். ஒரேயடியாக தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டாம்.

(இடியாப்ப அச்சிலிருந்து மாவு வெளியே வருமா என சந்தேகத்துடனே பிழிந்தேன். கடகடவென அரிசிமாவு இடியாப்பம் மாதிரியே வந்தது.)

மீண்டும் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். இடியாப்ப அச்சில் மாவை நிரப்பிக்கொள்ளவும்.  தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு இட்லி தட்டில் ஈரத்துணியைப் போட்டு அதில் இடியாப்பத்தை பிழிந்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுக்கவும்.

சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு சர்க்கரை, தேங்காய் பூ, ஏலப்பொடி சேர்த்து சாப்பிடலாம்.

அல்லது விருப்பமான குருமாவுடன் சாப்பிடலாம்.

கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி இப்படியே சாப்பிடுவதற்கு பதில் இது கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

புஸு புஸு உளுந்து வடை

 

எங்க ஊர் பக்க்ம் உளுந்து வடை என்றாலே உளுந்து அளவுக்கு புழுங்கல் அரிசியும் சேர்ப்பார்கள். அப்போதுதான் வடை வெளியில் மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்டாகவும், கூடவே சுவையாகவும் இருக்கும் என்பதால்.

முன்பெல்லாம் உளுந்து வடை செய்வதென்றாலே மனதளவில் நான்கைந்து நாட்களுக்கு முன்பே தயாராக வேண்டும். உளுந்துகூட அரைச்சிடலாம், ஆனால் அந்த புழுங்கல் அரிசியை கெட்டியாக அரைப்பதுதான் சிரமம்.

ஒருமுறை என் சகோதரி கொடுத்த ஐடியாபடி பச்சரிசியை இடிப்பதுபோல் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, வடிகட்டி மிக்ஸியில் இடித்து மாவாக்கி சேர்த்தேன், சுலபமாக இருந்தது.

அதன்பிறகு கொஞ்சம் நாள் கழித்து இன்னொரு ஐடியா கொடுத்தார். இதுதான் இப்போது நான் செய்வது. எளிதாகவும் உள்ளது. அது அது அது …… வாங்க பார்க்கலாம் :)))

அரைக்கத் தேவையானவை :

உளுந்து _ இரண்டு கப்

பெருஞ்சீரகம்  _ சிறிது

அரைத்த உளுந்து மாவில் கலக்கத் தேவையானவை:

இட்லி மாவு _ இரண்டு கை . ஒரு கப் உளுந்துக்கு ஒரு கை என (புதிதாக அரைத்தது அல்லது பழைய மாவு என்றாலும் பரவாயில்லை)

பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் _ தேவைக்கு

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் _ இரண்டுமூன்று

பொடியாக நறுக்கிய இஞ்சி _ கொஞ்சம்

பெருங்காயம்

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை :

ஊற வைப்பது தோலுடன் கூடிய உளுந்து என்றால் தோல் எளிதாக பிரியும்வரை ஊறவைத்து (எனக்கு இங்கே மூன்றிலிருந்து நான்கு மணி நேரமாவது பிடிக்கும்) கழுவி கொஞ்சம் தண்ணீருடன் (அரைக்கும்போது பயன்படுத்த) ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.

வெள்ளை முழு உளுந்து என்றால் ஊற வைக்கும்போதே கழுவிவிட்டு ஊற வைக்கவும். (இங்கே எனக்கு இரண்டிலிருந்து இரண்டரை  மணி நேரம்வரை பிடிக்கும்). ஊறியதும் கொஞ்சம் தண்ணீருடன் ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.

சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு வெளியில் எடுத்து கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு  கூடவே பெருஞ்சீரகத்தையும் போட்டு நன்றாக அரைக்கவும். தேவைப்படும்போது தண்ணீர் தெளித்து மைய அரைக்கவும். தண்ணீர் அதிகமானால் மாவு நீர்த்துவிடும். நீண்ட நேரம்  அரைத்தாலும் மாவு அமுங்கிவிடும்.

கிரைண்டர் என்றால் தள்ளிவிட்டுவிட்டு அரைக்கணும். மிக்ஸி என்றால் நிறுத்தி நிறுத்தி ஓட விட்டு தள்ளிவிட்டு அரைக்கணும். எதுவாக இருந்தாலும் பதமாக அரைக்கவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து போட்டுக்கொண்டு, அதனுடன் இட்லி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்கி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து கொடப்பினாற்போல் கலக்கவும்.  உப்பு, காரம்  சரி பார்த்துக்கொள்ளவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வலது கையைத் தண்ணீரில் நனைத்துக்கொண்டு, மாவில் கொஞ்சம் எடுத்து, உருட்டி கட்டை விரலால் நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போடவும்.

இதேபோல் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும். இப்படியே எல்லா மாவையும்  வடைகளாக சுடவும்.

இப்படியே செய்தால் துளி எண்ணெயும் குடிக்காமல் வரும். விருப்பமான பாயசத்துடன் சுவைக்கவும்.

கடைசி மாவை கொஞ்சம் போண்டா மாதிரியும் போட்டுக் கொள்ளலாம்.

வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 6 Comments »

அச்சு முறுக்கு / கொத்து முறுக்கு

20160714_170243_Fotor

போன தடவை கடையில் வாங்கிய மாவில் செய்தேன். ஓரளவுக்குப் பரவாயில்லை எனும்படி வந்தது. இந்த முறை பச்சரிசி அரைத்து செய்தேன். முன்புக்கு இப்போது நல்ல முன்னேற்றம் 🙂 ஒருவேளை முட்டை சேர்த்ததாலோ !

சாதாரண முறுக்கு என்றால்கூட அடிக்கடி அச்சைக் கழட்டி மாவு வைத்து மூடி, அழுத்திப் பிழிந்து கைவலியிருந்து முதுகு வலிவரை உண்டு இல்லை என்று பண்ணிவிடும். இதில் முறுக்கு அச்சிலிருந்து எளிதாக கழண்டுகொண்டால் இதுமாதிரி ஈஸி எதுவுமில்லை.

20160714_164517_Fotor

என்ணெயும் வாணல் நிறைய ஊற்றி சுடுபவர்களுக்கு வேலை கடகடவென முடிந்துவிடும். ஒரு முறுக்கு மட்டுமே வேகும் அளவுக்கு எண்ணெய் பயன்படுத்தும் என்னை மாதிரியான ஆட்களுக்கு சிறிது நேரம் எடுக்கும்.

முதலில் மைதா சேர்க்காமல்தான் முயற்சித்தேன். ஆனால் முதல் இரண்டு முறுக்குகளும் அச்சிலேயே பிடித்துக்கொண்டு, அதைப் பிரித்து எடுக்கவே பெரும்பாடாகிவிட்டது.

மாவைக் கொட்டிவிடலாம் என நினைத்து செயல்படுத்துமுன், எதற்கும் சிறிது மைதாவை சேர்த்து செய்து பார்ப்போமே என செய்தபோது …. அழகழகாக, அதிக வேலை வாங்காமல் சமர்த்தாக வந்துவிட்டது 🙂

தேவையானவை:

பச்சரிசி _ ஒரு கப்
தேங்காய்பால் _ 1/2 கப் (அரிசி அரைக்கும் அளவுக்கு இருந்தால் போதுமானது)
மைதா _ ஒரு டேபிள்ஸ்பூன்
முட்டை _ 1
சர்க்கரை _ தேவைக்கு
எள் _ சிறிது
உப்பு _ சிறுது
எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை ஊற வைக்கவும்.

கால் மூடி தேங்காயின் பால் பிழிந்துகொள்ளவும்.

மற்ற சாமான்களையும் தயாராக‌ வைக்கவும்.

அரிசி ஊறியதும் மிக்ஸியில் போட்டு தேங்காய்பால் சேர்த்து மைய அரைக்கவும்.

கடைசியாக முட்டையை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொண்டு அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

பிறகு மைதா,  எள்  &  உப்பு சேர்த்து கரைத்து சுவை சரி பார்த்து,  அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி,அடுப்பிலேற்றி எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சை எண்ணெயில் போட்டு அது சூடேறும்வரை வைக்கவும்.

அச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் பாகம் மூழ்குமாறு செய்து, சூட்டினால் மாவு அச்சில் பிடித்துக்கொள்ளும். அப்படியே அச்சை எண்ணெயில் விடவும்.

சலசலப்பு அடங்கியதும் அச்சில் பிடித்துக்கொண்டிருக்கும் முறுக்கை கம்பியால் பிரித்துவிடவும். இதற்கு நான் சைனீஸ் மார்க்கெட்டில் வாங்கின Chopsticksஐப் பயன்படுத்துவேன்.

பிரித்ததும் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும். இப்படியே மேவு முழுவதையும் செய்து முடிக்கவும்.

20160714_170012_Fotor
இப்போது அழகழகான முறுக்குகள் தயார்.

முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 6 Comments »

வேர்க்கடலை சாதம் / peanut rice

 

20160426_124608_Fotor

அந்தந்த ஊர் பக்கம் விளையும் பொருட்களைக்கொண்டுதானே அவ்வூர் சமையலும் இருக்கும். அப்படித்தான் எங்கள் ஊர் பக்கம் வேர்க்கடலை அதிகமாக விளையும். அதனால் இந்த ‘மல்லாட்டை சோறு’ ரொம்பவே ஃபேமஸ். இதை எப்போதாவது ஒருமுறை செய்வ‌தால் உறவு & தெரிந்தவர் என பங்கு போகும். ஒரு பெரிய பானையில் எங்க வீட்டு chief chef(ஆயா) தான் செய்வாங்க. கெட்டியா இருக்கும். செய்த மறு நாள்தான் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. ஏனோ அப்போது நான் சாப்பிட மாட்டேன். இப்போ ஆசையா இருக்கு  அவங்க செஞ்சி நாம சாப்பிடணும்போல.

என்னென்ன போட்டு செய்வாங்க என்பது அப்போதே தெரியும். ஆனால் அளவுகள் எல்லாம் தெரியாது. அவங்களுமே அரிசியை மட்டும் அளந்துகொண்டு மற்ற பொருட்களை கண்ணாலேயே அளந்துப்பாங்க‌. நல்லவேளை என் அம்மாவிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டு எப்போதாவது செய்து அவர்களை எல்லாம் நினைத்துக்கொண்டே சாப்பிடுகிறேன் 😦

இதெல்லாம் முன்பொரு காலத்தில். இப்போதோ வேலைப்பளு & ஆள்கூலி இவற்றினால் வேர்க்கடலை விளைச்சல் ஏறக்குறைய இல்லாமலே போனது. இந்த சமையலும் காணாமலே போனது.

20150918_142039

இந்த சாதத்தை பச்சரிசியில் செய்வாங்க. நான் தினையில் செஞ்சிருக்கேன். உங்க விருப்பம்போல் எல்லா தானியத்திலும் செய்ய‌லாம்.

தேவையானவை :

தினை : ஒரு கப்
புளி _ கோலி அளவு
வறுத்த வேர்க்கடலை _ 1/2 கப் (இன்னும் அதிகமாகப் போட்டாலும் நன்றாகவே இருக்கும். )
வெறும் வாணலில் வறுத்த‌ காய்ந்த மிளகாய் _ 1 (காரத்திற்கேற்ப)
உப்பு _ சுவைக்கேற்ப‌

செய்முறை :

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, ஊறியதும் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பங்கு தினைக்கு மூன்று கப்புகள் தண்ணீர் வேண்டும். இது எங்க ஊர் அடுப்புக்கு. Gas அடுப்பாக‌ இருந்தால் கூடுதலாக சேர்க்க வேண்டி வரும். புளித்தண்ணீருடன் மூன்று கப்புகள் இருக்குமாறு தேவையான தண்ணீரை சேர்த்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி(அரிசியில் செய்வதாக இருந்தால் ஒரு கப் தண்ணீர் கூட சேர்த்துக்கொள்ளலாம்) அடுப்பில் ஏற்றவும். விருப்பமானால் இதில் துளி மஞ்சள்தூள் சேர்க்கலாம்.

தண்ணீர் நன்றாகக் கொதித்து புளி வாசனை போக இரண்டுமூன்று நிமிடங்கள் ஆகும்.

புளி வாசனை போனதும் தினையைக் கழுவி சேர்த்து, தேவைக்கு உப்பும் போட்டு, தீயைக் குறைத்து, மூடி வேக வைக்கவும்.

தினை சீக்கிரமே வெந்துவிடும் என்பதால் அடி பிடிக்க சான்ஸ் உண்டு. எனவே அடிக்கடி கிண்டி விடவும்.

சாதம் வெந்துகொண்டிருக்கும்போதே வறுத்த வேர்க்கடலை & வறுத்த காய்ந்தமிளகாய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஒன்றும்பாதியுமாக பொடித்துக்கொள்ளவும்.

பொடி மைய இருப்பதைவிட …… அங்கங்கே வேர்க்கடலை கடிபட்டால் நன்றாக இருக்கும்.

சாதம் நன்றாக வெந்து கெட்டியான‌தும் பொடித்த பொடியைப் போட்டு நன்றாகக் கிண்டி,  உப்பு & காரம் சரிபார்த்து, அடுப்பை நிறுத்திவிட்டு மூடி வைத்தால் அப்படியே புழுங்கிவிடும்.

பிறகு எடுத்து சாப்பிட வேண்டியதுதான். எண்ணெய், தாளிப்பு இது எதுவும் இல்லாத சுவையான உணவு !

20160426_124605_Fotor

இதற்கு அவர்கள் ஏதும் தொட்டு சாப்பிட்டதாக நினைவில்லை. நான் வத்தல் அல்லது அப்பளத்துடன் சாப்பிடுவேன்.

ஒருசிலர் பொடி சேர்க்கும்போது கொஞ்சம் முருங்கைக் கீரையும் சேர்ப்பாங்க. ஆனால் அதை அன்றே காலி பண்ணிடுவாங்க. கீரை சேர்ப்பதால் ஊசிப்போயிடுமே, அதனால்தான்.

தண்ணீரின் அளவில் குழப்பம் என்றால் பின்னூட்டத்தில் கேட்போமே !

கிராமத்து உணவு, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 4 Comments »

ஜவ்வரிசி & சேமியா பாயசம்

 

20150501_170725

தேவையானவை :

ஜவ்வரிசி _ கால் கப்
சேமியா _ கால் கப்
சர்க்கரை _ அரை கப் (உங்களின் இனிப்புக்கேற்ப)
பால் _ அரை கப்
ஏலக்காய் _ ஒன்று

அலங்கரிக்க :

நெய் _ முந்திரி & திராட்சையை வறுக்குமளவு
முந்திரி _ 5
திராட்சை _ 5
குங்குமப்பூ _ நான்கைந்து இதழ்கள் (இல்லையென்றாலும் பரவாயில்லை)

செய்முறை :

வெறும் வாணலை அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் ஜவ்வரிசியைப் போட்டு தீய்ந்துவிடாமல் வறுக்கவும். வறுக்கும்போதே நமக்குத்தெரியும் ஜவ்வரிசி உருண்டுருண்டு அளவில் கொஞ்சம் பெரிதாகும். வறுபட்டதும் இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.

அது முடிந்ததும் சேமியாவைப் போட்டு சூடுவர வறுத்துக்கொள்ளவும்.

ஒரு கனமான பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி காய்ந்ததும் ஜவ்வரிசியைக் கழுவி சேர்க்கவும்.

அது நன்றாக‌ வெந்து வரும்போது சேமியாவை சேர்க்கவும். (இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் சேமியா முதலில் வெந்து குழைந்துவிடும்)

இரண்டும் வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்து கரைந்ததும், பாலைச் சேர்த்து கிண்டிவிட்டு, தேவையானால் தண்ணீர் சேர்த்து, குங்குமப்பூ, பொடித்த‌ ஏலக்காய் சேர்த்து இறக்கி, நெய்யில் முந்திரி & திராட்சையை வறுத்து சேர்க்கவும்.

20150501_162557

பாயசத்தைத் தனியாக மட்டுமல்லாமல், உளுந்து வடை அல்லது அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட ஆஹா என்றிருக்கும் !

சூடாக இருக்கும்போது நீர்த்து இருக்கும், ஆற ஆற இறுகி கெட்டியாகும். எனவே கொஞ்சம் நீர்க்க‌ செய்வ‌து நல்லது.

இதனை வெறும் ஜவ்வரிசியை வைத்தோ அல்லது சேமியாவை மட்டுமே வைத்தோகூட செய்யலாம்.

இனிப்பு வகைகள், பாயசம் இல் பதிவிடப்பட்டது . 3 Comments »

சென்னாகுனி தூள்

 

இது இட்லிக்கான தூள். இந்த தூள் இருந்துவிட்டால் இட்லி கணக்கில்லாமல் உள்ளே போகும். அவ்வளவு சுவையாக இருக்கும். உரலில் இடித்து, முடித்து அள்ளும்போது நாங்க எங்க அம்மாவிடம், ” அம்மா அம்மா, கொஞ்சம் தூளை அதிலேயே விட்டுடும்மா” என்று சொல்லி, சுட சுட நான்கைந்து இட்லிகளை உரலில் உள்ள தூளில் போட்டு ஒற்றி எடுத்து சாப்பிடுவோம். அதன் சுவைக்கு ஈடுஇணை ஏதும் கிடையாது. பின்னாளில் உதவுமே என இப்போதைக்கு பதிந்து வைத்துக்கொள்கிறேன்.

காராமணிகுப்பம் சந்தைக்கு போய் இந்த சென்னாகுனியை வாங்கி வருவாங்க. இது இளம் ஆரஞ்சு நிறத்தில் அல்லது வெண்ணிறத்தில் இருக்கும், பொடிஈஈஈ கருவாடு. நைநை’னு யாராவது தொந்தரவு பண்ணினா, ” சென்னாகுனி மாதிரி அரிச்சு எடுக்குற”னு சொல்லுவாங்க 🙂

இங்கு இது கிடைப்பது இல்லை. அதனால் என்னிடம் சென்னாகுனியின் படம் இல்லை. அதனால் பதிவு மட்டுமே 🙂

அளவுகளும் இன்னின்ன அளவுகள் என்று கிடையாது. அப்படியே போட்டுக்கொள்ள வேண்டியதுதான். எங்க அம்மா செய்வதை அப்படியே சொல்லிவிடுகிறேன். நமக்கு ஏற்றார்போல் அளவுகளை மாற்றி போட்டுக்கொள்ள வேண்டியது நாம்தான்.

வீட்டில் சின்னபடி, பெரியபடி என்று இருக்கும். எத்தனை கப்புகள் வரும் என்றெல்லாம் தெரியவில்லை. அதில் ஒரு சின்னபடி அளவுக்கு பொட்டுக்கடலையும், ஒரு கை அளவுக்கு சின்னாகுனியும், காரத்துக்கு காய்ந்த மிளகாயும், சுவைக்கு உப்பும் இருந்துவிட்டால் தூள் ரெடி பண்ணிடுவாங்க.

செய்முறை:

சின்னாகுனியில் மணல் இருக்கலாம். அதனால் அவற்றை முறத்தில் போட்டு லேசாகத் தேய்த்தாற்போல் செய்து புடைத்து பிரிச்சிடுவாங்க.

பிறகு இரும்பு வாணலை அடுப்பில் ஏற்றி, சூடானதும் சின்னாகுனியைப் போட்டு வாசம் வரும்வரை வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொண்டு, அதே வாணலில் மிளகாயைப் போட்டு சூடேறும் வரை நிறம் மாறாமல் வறுத்துக்கொண்டு, தீயை அணைத்துவிட்டு பொட்டுக்கடலையையும் அதே வாணலிலேயேப் போட்டுவிட்டால் அதுவும் சூடேறிவிடும். பிறகு இவை ஆறியதும் உரலில் கொட்டி, உப்பு சேர்த்து இடித்து, சலித்து, காற்று புகா டப்பாவில் வைத்துக்கொண்டால் இட்லிக்கு அருமையான தூள் ரெடி.

இந்தத் தூளும், சாதாரண இட்லித் தூளும், சட்னியும், சாம்பாரும் இருந்தாலும் நாங்க எல்லோரும் இட்லிதோசைக்கு முதலில் எடுப்பது இதுவாகத்தான் இருக்கும். இந்தத் தூளுக்கு நல்லெண்ணெய் எல்லாம் விட்டு சாப்பிடக்கூடாது.

கிடைக்கும் பட்சத்தில் நீங்களும் செய்து பார்க்கலாமே !

மண‌த்தக்காளி கீரை மசியல்

20150825_163709

இக்கீரை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். அதனால் தூக்கிப் போட்டுவிட வேண்டாம். வாய்ப்புண் என்றால் சாறு வாய் முழுவதும் படுமாறு இதை நன்றாக மென்று விழுங்கினால் போதும் சரியாகிவிடும். வயிற்றுப் புண்ணுக்கும் அப்படியே. உடலுக்கும் குளிர்ச்சியானது.

கசக்கும் என்பவர்கள் ஒரு துளிர் கீரையைத் தனியே எடுத்து வைத்துவிட்டு, சமைத்து சாப்பிடும் முன் எடுத்து வைத்த அந்தக் கீரையை மரமரனு மென்று விழுங்கிவிட்டு கடைந்த கீரையை சாப்பிட்டுப் பாருங்க, பருப்புடன் கீரை, சின்ன வெங்காயம், வதக்கிய பூண்டு, எல்லாமும் சேர்ந்து சூப்பரா இருக்கும், கசப்பே தெரியாது.

அளவுகள் தோராயமாக உள்ளன. உங்களின் சுவைக்கேற்ப சேர்ப்பவற்றில் மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள். காரம் அதிகம் என நினைத்தால் தாளிக்கும்போது சேர்க்கும் காய்ந்த மிளகாயே போதும்.

வேண்டியவை:

மணத்தக்காளி கீரை _ ஒரு சிறு கட்டு

உடைத்த பச்சைப் பருப்பு _ ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு

பச்சை மிளகாய் _ 1

பூண்டுப்பல் _ ஆறேழு (பாதியை கீரையுடன் சேர்த்து வேகவைக்கவும், மீதியை தாளிக்கும்போது வதக்கி சேர்க்கவும்)

சின்னவெங்காயம் _ 2

தக்காளி _ பாதி

உப்பு _ தேவைக்கு

தாளிக்க :

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்

செய்முறை:

பச்சைப்பருப்பை அடிகனமான ஒரு சட்டியில் எடுத்து கழுவிட்டு அது வேகுமளவு தண்ணீர் ஊற்றி துளி மஞ்சள்தூள், பெருங்காயம், ஓரிரு சொட்டுகள் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு வேக விடவும்.

20150823_164903

கீரையை ஆய்ந்துகொண்டு கழுவிவிட்டு நீரை வடிய‌விடவும். ஏனோ கீரையை நறுக்கப் பிடிப்பதில்லை.

பருப்பு பாதி வெந்து வரும்போது பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி, பாதி பூண்டு சேர்த்து வேகவிடவும்.

இவையெல்லாம் போட்டு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் கீரையைப் போட்டு துளி உப்பு போட்டு மூடி போடாமல் வேக வைக்க்வும். மூடினால் கீரையின் அழகான பச்சை நிறம் காணாமல் போய்விடும்.

இடையில் ஓரிரு முறை கிண்டி விடவும். இல்லையென்றால் அடியில் உள்ள கீரை குழைந்தும், மேலே உள்ளது வேகாமலும் இருக்கும்.

கீரை வெந்ததும் அடுப்பை நிறுத்திவிடவும். ஒரு கரண்டியில் சிறிது கீரையை எடுத்து கையால் நசுக்கிப் பார்த்தால் வெந்துதா அல்லது வேக‌லையான்னு தெரிந்துவிடும்.

மண் சட்டியில் என்றால் சூடாகவே கடைந்துவிடலாம். மிக்ஸி என்றால் கீரை ஆறியதும் அதில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.

பிறகு தாளிப்பதைத் தாளித்து கடைசியில் பூண்டுப்பல்லை கொஞ்சம் பொடியாகத் தட்டிப் போட்டு வதக்கிக் கொட்டி மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள உருளை அல்லது வாழைக்காய் அல்லது சேப்பங்கிழங்கு போன்றவற்றுடன் அப்பளம் அல்லது வத்தல் பொரித்து சாப்பிட …. ஆ…..ஹா… தான் 🙂

கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 7 Comments »

தினை அதிரசம்

20150915_161044

எங்கள் ஊரில் அதிரசம் இல்லாமல் தீபாவளி இருக்காது. அதிலும் தினை அதிரசம்தான் செய்வார்கள். அப்போதெல்லாம் இதை செய்வது மிகப் பெரிய வேலை. இப்போதுபோல் தோல் நீக்கிய தினை கிடைக்காது.

பம்ப்செட் இல்லாதவர்கள், தங்கள் நிலத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால் சும்மா மானாவாரியாக தினையை விதைத்து அறுவடை செய்திருப்பார்கள். தீபாவளி சமயத்தில் அதிரசம் செய்யவேண்டி அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவர்கள் வீட்டை நோக்கிப் படையெடுப்பார்கள்.

அதை வாங்கிவந்து உரலில் போட்டு மாங்குமாங்குனு குத்தி தோலை நீக்கி, (இதற்கு ஏழு தோல் இருக்குமாம், சொல்லுவாங்க) ஊறவச்சு, பிறகு குத்தி குத்தி சலித்து மாவாக்கி, வெல்லபாகு வச்சு கிண்டி, அதிரசம் செய்வாங்க.

தினையை நாங்களும் குத்தியே தீருவோம்னு நானும் என் தம்பியும் விழுந்து & புரண்டு அழுததையெல்லாம் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

அரிசி போல் இல்லாமல் தினையில் செய்யும்போது கொஞ்சம் சாஃப்டா, பொலபொலனு இருக்கும். இதுல செஞ்சாதான் தீபாவளி தீபாவளியா தெரியும்.

நாட்கள் செல்லச்செல்ல எல்லோரது வீட்டுக்கும் வந்த மருமகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக தினையிலிருந்து அரிசிக்குத் தாவிவிட்டனர்.

சின்ன வயசுல தினையைப் பார்த்ததோடு சரி, மறந்தே போயிட்டேன். இங்கு வந்த புதுசுல இந்த ஊர் கடையில் தானியங்கள் இருக்கும் பகுதியில் தினை மாதிரியே ஒன்று இருக்கவும் வாங்கி வந்து அதிரசம் சுட்டுப் பார்த்தேன், வரவில்லை. பிறகுதான் தெரிந்தது அது கஸ்கஸ் என்று :)))) இந்த பெயரில் இப்படி ஒன்று இருப்பதே அப்போதுதான் தெரியும் !

20150918_142039

நீண்ட நாட்களாகவே சிறுதானியங்களைத் தேடிக்கொண்டே இருந்தேன். இப்போது இங்குள்ள ஒரு கடையில் எல்லா சிறுதானியங்களும் கிடைக்கிறது. அதில் தினை இருக்கவும் வாங்கிவந்து அதிரசம் சுட்டுப் பார்த்தேன், நன்றாக வந்துள்ளது. நீங்களும் ஒன்று எடுத்து சாப்பிட்டுப் பாருங்க !

20150915_163204

தேவையானவை:

தினை _ 2 கப்

வெல்லம்_ சுமார் 2 கப் அல்லது வெல்லத்தின் இனிப்புக்கேற்ப‌

ஏலக்காய் _1

உப்பு _ துளிக்கும் குறைவாக. ருசியைக்கூட்ட போடுகிறோம். விருப்பமில்லை என்றாலும் பரவாயில்லை.

எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

மாவு தயாரிப்பது, செய்முறை எல்லாமும் அரிசிமாவு அதிரசம் மாதிரியேதான்.

தினையை நன்றாகக் கழுவி ஊற வைக்கவும்.

ஊறியதும் நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு ஈர மாவாக மைய பொடித்துக்கொள்ளவும். இப்போதே ஏலக்காயையும் சேர்த்து பொடித்துக்கொள்ளலாம்.

ஒரு கெட்டியான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.

வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு & மண் போக வடிகட்டியில் வடிகட்டி மீண்டும் பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும்.

வெல்லம் கொதித்து கெட்டிப் பாகாக வரும்போது ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் விட்டு, ஒரு துளி பாகை அதில் விட்டு கையால் உருட்டினால் கரையாமல் கெட்டியாக உருட்ட‌  வர‌வேண்டும்.

அந்த நேரத்தில் அப்பாகை எடுத்து தினை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டிக்காம்பால் அல்லது மத்தின் அடிப்பகுதியால் விடாமல் கிண்ட வேண்டும். ஊற்றும்போது கவனம் தேவை.

பாகின் சூட்டிலேயே மாவு வெந்துவிடும்.

கை விடாமல் நன்றாகக் கிண்டி ஆறியதும் மூடி வைத்து, அடுத்த நாளோ, இல்லை அதற்கும் அடுத்த நாளோ அதிரசங்களைச் சுடலாம். அன்றேகூட செய்யலாம். எங்க அம்மா மாவு கிண்டி வைத்து அதிரசம் சுட ஒரு வாரமாவது ஆகும், அதற்குள் பாதி மாவைக் காலி பண்ணிடுவோம் 🙂

எண்ணெயை அடுப்பில் ஏற்றி காய வைக்கவும்.

20150915_161616

ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் அல்லது பேப்பர் டவலில் சிறு உருண்டை அளவிற்கு மாவை எடுத்து படத்தில் உள்ளதுபோல் தட்டிக்கொண்டு எண்ணெய் காய்ந்ததும் போட்டு பொரித்தெடுக்கவும்.

எண்ணெய் ரொம்பவும் சூடாக இருக்கக் கூடாது. தீயுமே தவிர உள்மாவு வேகாது. எண்ணெய் குலோப் ஜாமூன் சுடும் பதமாக இருக்கலாம்.

எடுத்தபின் ஒரு தட்டில் வைத்து அடிப்பக்கம் தட்டையான ஒரு கிண்ணத்தால் அழுத்தினால் உப்பியிருக்கும் அதிரசம் தட்டையாகிவிடும்.

எல்லா மாவையும் இப்படியே செய்ய வேண்டியதுதான்.

20150915_163847

பிறகென்ன, ஆறியதும் எடுத்து சாப்பிட்டு விடுவதோ அல்லது எடுத்து வைத்து பிறகு சாப்பிடுவதோ எல்லாமும் உங்கள் கைகளில்.

சுண்டைக்காய் சாம்பார்

20150823_165106

ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக அதுவும் இந்த ஊரில் சுண்டைக்காயைப் பார்த்ததும் வாங்கி சாம்பார் வைத்து சாப்பிட்ட சந்தோஷத்தில் பதிவாகவும் போட்டுவிட்டேன் .

சின்ன வயசுல விரும்பி சாப்பிட்ட சாம்பாராச்சே !

இந்த சாம்பாருக்கு பெருஞ்சீரகம் சேர்த்து தாளிப்பதும், புளி சேர்க்காமல் செய்வதும்தான் வித்தியாசம்.

தேவையானவை :

துவரம் பருப்பு _ 1/4 கப்
சுண்டைக்காய் _ ஒரு கை
வெங்காயம்
தக்காளி
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
தேங்காய் பூ (விருப்பமானால்)
கொத்துமல்லி தழை
உப்பு

தாளிக்க :

எண்ணெய்
கடுகு
பெருஞ்சீரகம்
வெந்தயம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம்பருப்பை வேகவிடவும்.

வெங்காயம், தக்காளியை அரிந்துகொள்ளவும்.

20150826_072932

பருப்பு நன்றாக வெந்து வரும் சமயத்தில் சுண்டைக்காயைத் தண்ணீரில் நன்றாக அலசிவிட்டு இரண்டிரண்டாக அரிந்து  வெந்துகொண்டிருக்கும் பருப்பில் சேர்த்து வேகவிட்டு கடைந்துகொள்ளவும்.

சாம்பாருக்கான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி தாளித்துவிட்டு வெங்காயம், தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் இதில் கடைந்து வைத்துள்ள பருப்பு & சுண்டைக்காயை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும்.

சாம்பார் நன்றாகக் கொதித்தபின் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி போட்டு இறக்கவும்.

20150826_160540

சாம்பார் வைத்ததும் புகைப்படம் எடுக்க மறந்துபோய் கடைசியில் எடுத்ததால் ஹி ஹி 🙂 சாம்பாரின் அளவு குறைந்திருக்கிறது.

சாதம், இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சூப்பரா இருக்கும்.

சாம்பார் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 2 Comments »