சென்னாகுனி தூள்

 

இது இட்லிக்கான தூள். இந்த தூள் இருந்துவிட்டால் இட்லி கணக்கில்லாமல் உள்ளே போகும். அவ்வளவு சுவையாக இருக்கும். உரலில் இடித்து, முடித்து அள்ளும்போது நாங்க எங்க அம்மாவிடம், ” அம்மா அம்மா, கொஞ்சம் தூளை அதிலேயே விட்டுடும்மா” என்று சொல்லி, சுட சுட நான்கைந்து இட்லிகளை உரலில் உள்ள தூளில் போட்டு ஒற்றி எடுத்து சாப்பிடுவோம். அதன் சுவைக்கு ஈடுஇணை ஏதும் கிடையாது. பின்னாளில் உதவுமே என இப்போதைக்கு பதிந்து வைத்துக்கொள்கிறேன்.

காராமணிகுப்பம் சந்தைக்கு போய் இந்த சென்னாகுனியை வாங்கி வருவாங்க. இது இளம் ஆரஞ்சு நிறத்தில் அல்லது வெண்ணிறத்தில் இருக்கும், பொடிஈஈஈ கருவாடு. நைநை’னு யாராவது தொந்தரவு பண்ணினா, ” சென்னாகுனி மாதிரி அரிச்சு எடுக்குற”னு சொல்லுவாங்க 🙂

இங்கு இது கிடைப்பது இல்லை. அதனால் என்னிடம் சென்னாகுனியின் படம் இல்லை. அதனால் பதிவு மட்டுமே 🙂

அளவுகளும் இன்னின்ன அளவுகள் என்று கிடையாது. அப்படியே போட்டுக்கொள்ள வேண்டியதுதான். எங்க அம்மா செய்வதை அப்படியே சொல்லிவிடுகிறேன். நமக்கு ஏற்றார்போல் அளவுகளை மாற்றி போட்டுக்கொள்ள வேண்டியது நாம்தான்.

வீட்டில் சின்னபடி, பெரியபடி என்று இருக்கும். எத்தனை கப்புகள் வரும் என்றெல்லாம் தெரியவில்லை. அதில் ஒரு சின்னபடி அளவுக்கு பொட்டுக்கடலையும், ஒரு கை அளவுக்கு சின்னாகுனியும், காரத்துக்கு காய்ந்த மிளகாயும், சுவைக்கு உப்பும் இருந்துவிட்டால் தூள் ரெடி பண்ணிடுவாங்க.

செய்முறை:

சின்னாகுனியில் மணல் இருக்கலாம். அதனால் அவற்றை முறத்தில் போட்டு லேசாகத் தேய்த்தாற்போல் செய்து புடைத்து பிரிச்சிடுவாங்க.

பிறகு இரும்பு வாணலை அடுப்பில் ஏற்றி, சூடானதும் சின்னாகுனியைப் போட்டு வாசம் வரும்வரை வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொண்டு, அதே வாணலில் மிளகாயைப் போட்டு சூடேறும் வரை நிறம் மாறாமல் வறுத்துக்கொண்டு, தீயை அணைத்துவிட்டு பொட்டுக்கடலையையும் அதே வாணலிலேயேப் போட்டுவிட்டால் அதுவும் சூடேறிவிடும். பிறகு இவை ஆறியதும் உரலில் கொட்டி, உப்பு சேர்த்து இடித்து, சலித்து, காற்று புகா டப்பாவில் வைத்துக்கொண்டால் இட்லிக்கு அருமையான தூள் ரெடி.

இந்தத் தூளும், சாதாரண இட்லித் தூளும், சட்னியும், சாம்பாரும் இருந்தாலும் நாங்க எல்லோரும் இட்லிதோசைக்கு முதலில் எடுப்பது இதுவாகத்தான் இருக்கும். இந்தத் தூளுக்கு நல்லெண்ணெய் எல்லாம் விட்டு சாப்பிடக்கூடாது.

கிடைக்கும் பட்சத்தில் நீங்களும் செய்து பார்க்கலாமே !

4 பதில்கள் to “சென்னாகுனி தூள்”

  1. மகிஅருண் Says:

    சென்னாகுனி??? ஹிஹிஹி…எதோ சினிமா பாட்டில கேட்ட நினைவு!! 🙂 கூகுள் ஆண்டவரிடமும் படம் கிடைக்கலையோ?? 🙂

    எங்க வீட்டில சந்தையில் கருவாடு வாங்கிவருவாங்க…நாற்றமடிக்கும், பூனைகள் வந்து திருட திருடப் பார்க்கும் என்பன போன்ற நினைவுகள் மட்டுமே வருகின்றன…அவ்ளோ சின்னப் புள்ளையா இருக்கும்போது நடந்த நிகழ்வுகள் இவை. உரல்ல இடிச்சாலே தனி ருசிதானே!

  2. Mohamed Yasin Says:

    கல்லூரி நாட்களில் காராமணிகுப்பம் சந்தையை கடந்து பேருந்தில் செல்வதுண்டு. இந்த பதிவு என்னை 10/12 ஆண்டுகள் பின்னோக்கி சிந்திக்க வைக்கிறது. சின்னாகுன்னி தூள் அதிக அளவில் விரும்பி சாப்பிடாவிட்டாலும் அதன் மணமே சுவைக்க தோன்றும்.. நாகரீக அரக்கன் நம்மில் பல மாற்றங்களை கொண்டு வந்து விட்டான். இன்னும் சில நாட்களுக்கு பின், வரும் தலைமுறைக்கு சின்னாகுன்னி என்றால் சிரிப்பு மட்டும் பதிலாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    • chitrasundar5 Says:

      Mohamed Yasin,

      முன்பெல்லாம் திங்கள் கிழமையில் அந்த வழியாகக் கடலூர் போகவே பிடிக்காது. எல்லாம் கருவாடு வாசனைதான் 🙂

      இன்னும் கொஞ்சம் நாட்களானால் நமக்கேக்கூட சிரிப்பு வரும்போல்தான் தெரிகிற‌து. நன்றி யாசின்.


மறுமொழி இடுக‌