தேவையானப் பொருள்கள்:
உடைத்த கறுப்பு உளுந்து_1 கப்
புழுங்கல் அரிசி_1 கப்
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10
பச்சை மிளகாய்_2
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_ஒரு துளி
கறிவேப்பிலை_5
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
உளுந்து,அரிசி இரண்டையும் தனித்தனியாக நீரில் ஊற வைக்கவும்.உளுந்து நன்றாக ஊறியதும்(சுமார் 3 மணி நேரம்) தோலைக் கழுவிக் களைந்து நீரை வடிகட்டி விட்டு ஃபிரிட்ஜில் சுமார் 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டுத் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். இடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும். குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.கெட்டியாக இருக்க வேண்டும்.நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும்.அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.
அடுத்து அரிசியைக் கழுவிக் களைந்து அதே கிரைண்டரில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றாமல் கெட்டியாக மைய அரைக்கவும்.அதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு வழித்து உளுந்து மாவுடன் சேர்த்துப் பிசையவும்.
இப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி,பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.
எண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.
இவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பக்க உணவாகப் பரிமாரலாம்.
குறிப்பு:
வீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் இஞ்சி,பச்சை மிளகாயை அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.அவர்கள் ஒருமுறை வடையில் உள்ள மிளகாயைக் கடித்து விட்டால் மீண்டும் அதைச் சாப்பிடத் தயங்குவார்கள்.எனவே அரிசியுடன் சேர்த்து அரைத்து விடலாம்.
12:37 பிப இல் ஜூலை 15, 2012
அரிசி சேர்த்து உளுந்து வடையா?! புதிய செய்முறையாக இருக்கு! வடைகள் பார்க்கவே நல்லா இருக்கிறது.
11:01 பிப இல் ஜூலை 15, 2012
மகி,
எங்க ஊர்பக்கம் இப்படித்தான் செய்வாங்க.மேல் பகுதி நல்ல மொறுமொறுப்பாகவும்,உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.அரிசியைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல்,கெட்டியாக,பார்த்து மைய அரைக்க வேண்டும்.தண்ணீர் அதிகமானால் எண்ணெய் குடித்துவிடும்.ஒரு தடவ செஞ்சி பாருங்க.