புஸு புஸு உளுந்து வடை

 

எங்க ஊர் பக்க்ம் உளுந்து வடை என்றாலே உளுந்து அளவுக்கு புழுங்கல் அரிசியும் சேர்ப்பார்கள். அப்போதுதான் வடை வெளியில் மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்டாகவும், கூடவே சுவையாகவும் இருக்கும் என்பதால்.

முன்பெல்லாம் உளுந்து வடை செய்வதென்றாலே மனதளவில் நான்கைந்து நாட்களுக்கு முன்பே தயாராக வேண்டும். உளுந்துகூட அரைச்சிடலாம், ஆனால் அந்த புழுங்கல் அரிசியை கெட்டியாக அரைப்பதுதான் சிரமம்.

ஒருமுறை என் சகோதரி கொடுத்த ஐடியாபடி பச்சரிசியை இடிப்பதுபோல் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, வடிகட்டி மிக்ஸியில் இடித்து மாவாக்கி சேர்த்தேன், சுலபமாக இருந்தது.

அதன்பிறகு கொஞ்சம் நாள் கழித்து இன்னொரு ஐடியா கொடுத்தார். இதுதான் இப்போது நான் செய்வது. எளிதாகவும் உள்ளது. அது அது அது …… வாங்க பார்க்கலாம் :)))

அரைக்கத் தேவையானவை :

உளுந்து _ இரண்டு கப்

பெருஞ்சீரகம்  _ சிறிது

அரைத்த உளுந்து மாவில் கலக்கத் தேவையானவை:

இட்லி மாவு _ இரண்டு கை . ஒரு கப் உளுந்துக்கு ஒரு கை என (புதிதாக அரைத்தது அல்லது பழைய மாவு என்றாலும் பரவாயில்லை)

பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் _ தேவைக்கு

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் _ இரண்டுமூன்று

பொடியாக நறுக்கிய இஞ்சி _ கொஞ்சம்

பெருங்காயம்

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை :

ஊற வைப்பது தோலுடன் கூடிய உளுந்து என்றால் தோல் எளிதாக பிரியும்வரை ஊறவைத்து (எனக்கு இங்கே மூன்றிலிருந்து நான்கு மணி நேரமாவது பிடிக்கும்) கழுவி கொஞ்சம் தண்ணீருடன் (அரைக்கும்போது பயன்படுத்த) ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.

வெள்ளை முழு உளுந்து என்றால் ஊற வைக்கும்போதே கழுவிவிட்டு ஊற வைக்கவும். (இங்கே எனக்கு இரண்டிலிருந்து இரண்டரை  மணி நேரம்வரை பிடிக்கும்). ஊறியதும் கொஞ்சம் தண்ணீருடன் ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.

சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு வெளியில் எடுத்து கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு  கூடவே பெருஞ்சீரகத்தையும் போட்டு நன்றாக அரைக்கவும். தேவைப்படும்போது தண்ணீர் தெளித்து மைய அரைக்கவும். தண்ணீர் அதிகமானால் மாவு நீர்த்துவிடும். நீண்ட நேரம்  அரைத்தாலும் மாவு அமுங்கிவிடும்.

கிரைண்டர் என்றால் தள்ளிவிட்டுவிட்டு அரைக்கணும். மிக்ஸி என்றால் நிறுத்தி நிறுத்தி ஓட விட்டு தள்ளிவிட்டு அரைக்கணும். எதுவாக இருந்தாலும் பதமாக அரைக்கவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து போட்டுக்கொண்டு, அதனுடன் இட்லி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்கி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து கொடப்பினாற்போல் கலக்கவும்.  உப்பு, காரம்  சரி பார்த்துக்கொள்ளவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வலது கையைத் தண்ணீரில் நனைத்துக்கொண்டு, மாவில் கொஞ்சம் எடுத்து, உருட்டி கட்டை விரலால் நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போடவும்.

இதேபோல் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும். இப்படியே எல்லா மாவையும்  வடைகளாக சுடவும்.

இப்படியே செய்தால் துளி எண்ணெயும் குடிக்காமல் வரும். விருப்பமான பாயசத்துடன் சுவைக்கவும்.

கடைசி மாவை கொஞ்சம் போண்டா மாதிரியும் போட்டுக் கொள்ளலாம்.

வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 6 Comments »

கொண்டைக்கடலை வடை / Chickpeas vadai

vadai

இங்குள்ள ஒரு பப்ளிக் டிவி சானலில் சமையல் நேரத்தில் எக்ப்ளான்ட் ஃபலாஃபெல் / Eggplant  falafel  செய்து காட்டினர்.அது மாதிரியே நானும் செய்ய முடிவுபண்ணி கொண்டைக் கடலையை ஊற வைத்தேன்.செய்யப் போகும்போது, கத்தரிக்காய் சேர்ப்பதால் சுவை மாறிப்போய் இவர்கள் சாப்பிடாமல் போனால் என்ன செய்வது என தவிர்த்துவிட்டேன். வீட்டில் யாரும் இல்லாதபோது செய்யப் போகும் சமையல் லிஸ்டில் இதையும் சேர்த்தாச்சு.

அந்தக் கடலையை இரவு ஒரு ஈரத்துணியில் கட்டிவைத்தேன்.காலையில் பார்த்தால் எல்லாக் கடலையும் முளை கட்டியிருந்தது.இதனை கடலைப் பருப்பு வடை மாதிரியே செய்தேன்.நன்றாக இருந்தது.முடிந்தால் நீங்களும் செய்து பார்க்கலாமே.

kondai kadalai

தேவையானவை:

கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலை_ஒரு கப்
சின்ன வெங்காயம்_நான்கைந்து
பச்சை மிளகாய்_1
காய்ந்த மிளகாய்_1
இஞ்சி_சிறிது
பூண்டிதழ்_2
பெருஞ்சீரகம்_கொஞ்சம்
பெருங்காயம்
கறிவேப்பிலை & கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக் கடலையை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிடவும்.

மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கடலையைப் எடுத்துக்கொண்டு, அதனுடன் மிளகாய்,இஞ்சி,பூண்டு,பெருஞ்சீரகம் எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல்,இரண்டுமூன்று தடவை மிக்ஸியை நிறுத்தி நிறுத்தி தள்ளிவிட்டு அரைக்கவும்.

ஒன்றிரண்டு கடலை அரைபடாமல் இருந்தால் கரண்டியால் நசுக்கி விட்டுக் கொள்ள‌வும்.

அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை & கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசையவும்.

உப்பு,காரம் சரிபார்த்துக்கொள்ளவும்.காரம் தேவையெனில் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப்போட்டு சேர்த்துக் கொள்ள‌வும்.

 
vadai

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மேலே படத்தில் உள்ளவாறு வடைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

இது கடலைப் பருப்பு வடையைவிட மென்மையாகவும்,சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது.தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை கூடும்.

சோம்புக்கீரை வடை/Dill keerai vadai/Fennel leaves vadai

இந்த வடையை முருங்கைக்கீரை வடை மாதிரியேதான் செய்தேன்.நன்றாகவே இருந்தது.கிடைத்தால் செய்து பார்க்கலாமே.

சோம்புக் கீரையில் ஒருவித வாசனை வரும் என்று கேள்விப்பட்டதால் இதுவரை வாங்காமலே இருந்தேன். காமாட்சிமா சமைத்ததாலும்,  ரஞ்ஜனி அவர்கள் ‘எங்க ஊர் கீரை’என்று சொன்னதாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வாங்கிவந்து என்ன செய்வது எனத்தெரியாமல் முதலில் கீரை வடை செய்யலாம்,நன்றாக இருந்தால் அடுத்த தடவை இதைவைத்து வேறு ஏதேனும் செய்யலாம் என முடிவெடுத்து வடை செய்தாச்சு.

வடையைப் பார்ப்பதற்கே அழகாக இருந்தது.சுவையும் அருமையாக இருந்தது.பிடிக்காத எந்த வாசனையும் வரவில்லை.

மகி அறிவது: இனி ஹைக்கிங் போகும்போது மறக்காமல் இந்தக்கீரையைப் பறித்துவந்து தூக்கிப் போடாமல்  எங்க வீட்டில் கொடுத்துவிட்டுப் போகவும்.

தேவையானவை:

கடலைப்பருப்பு_ஒரு கப்
வறுத்துப்பொடித்த ரோல்டு ஓட்ஸ் மாவு_ஒரு கப்
சோம்புக்கீரை_ஒரு செடியிலுள்ளது
சின்ன வெங்காயம்_சுமார் 10
இஞ்சி_சிறு துண்டு
பச்சைமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய்_2
பெருஞ்சீரகம்_சிறிது
பூண்டுப்பல்_2
பெருங்காயம்
கறிவேப்பிலை&கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

தண்டிலிருந்து கீரையைத் தனியாகப் பிரித்தெடுத்து தண்ணீரில் அலசி வைக்கவும்.பார்ப்பதற்கு சவுக்கு இலைகள் போலவே இருக்கிறது.தண்ணீர் வடிந்ததும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கீழேயுள்ள பல்பை வைத்து என்ன சமைக்கலாம் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

       

கடலைப் பருப்பை ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு, மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு அதனுடன் மிளகாய், பெருஞ்சீரகம்,பூண்டு,இஞ்சி சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக,கெட்டியாக‌ அரைத்தெடுக்கவும்.

இந்த மாவுடன் ஓட்ஸ் மாவு,கீரை,பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம்,கறிவேப்பிலை&கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும்.

    

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் மாவிலிருந்த்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் வெந்து சிவந்ததும் எடுத்துவிடவும்.எண்ணெய் கொண்டமட்டும் தட்டிப்போடலாம்.

இவ்வாறே எல்லா மாவையும் வடைகளாகத் தட்டி எடுக்கவும்.இப்போது கமகம,மொறுமொறு,சத்தான,சுவையான சோம்புக்கீரை வடைகள் தயார்.தேங்காய் சட்னி அல்லது கெட்சப்புடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

எங்க வீட்டில் வடையைவிட வடைமாவை உதிர்த்துப் போடுவதற்குத்தான் மவுசு அதிகம்.அவ்வாறு போட்டதுதான் கீழேயுள்ள படத்திலிருப்பது.

கீரை வடை

 

ரோல்டு ஓட்ஸை நன்கு சூடுவர வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டால் சமயங்களில்  அதை சீரியல், பொங்கல், உப்புமா, கிச்சடி,களி என பலவற்றிற்கும் பயன்படுத்தலாம். நல்ல வாசனையுடன் இருக்கும்.

இந்த மாவை வைத்துத்தான் கீரைவடை செய்தேன்.இதனை முருங்கைக்கீரை என்றில்லாமல் வேறு எந்தக்கீரையிலும் செய்யலாம்.சூப்பர் மொறுமொறுப்புடன், வாசனையாகவும் இருந்தது.நீங்களும் முயற்சிக்கலாமே.

தேவையானவை:

கடலைப்பருப்பு_ஒரு கப்
ரோல்டு ஓட்ஸ்_ஒரு கப்
முருங்கைக்கீரை_ஆய்ந்தது இரண்டு கப்
சின்னவெங்காயம்_சுமார் 10
பச்சைமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய்_1 காரம் விரும்பினால் கூட ஒன்று சேர்த்துக்கொள்ளலாம்.
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்
பூண்டிதழ்_2
கறிவேப்பிலை&கொத்துமல்லி இலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

கடலைப் பருப்பைக் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.கழுவிவிட்டு ஊறவைத்தாலும் சரி,ஊற வைத்துக் கழுவினாலும் சரி.நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிடவேண்டும்.

கடலைப் பருப்பு ஊறிக்கொண்டிருக்கும்போதே ஓட்ஸை முதலில் சொல்லியதுபோல் நைஸாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்.

மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கடலைப்பருப்பைப் போட்டு அதனுடன் மிளகாய்,பெருஞ்சீரகம்,பூண்டு சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

இந்த மாவுடன் ஓட்ஸ் மாவு,சுத்தம் செய்த கீரை,பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை&கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும்.

முதலிலேயே உப்பு சேர்த்தால் கீரையின் அளவை வைத்து அதிகமாக சேர்க்க வாய்ப்புண்டு.எல்லாவற்றையும் பிசைந்தபிறகு கீரை இருக்குமிடமே தெரியாது. இப்போது சேர்த்தால் திட்டமாகச் சேர்க்கலாம்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் மாவிலிருந்த்து பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது சிறு எலுமிச்சை அளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் வெந்து சிவந்ததும் எடுத்துவிடவும்.எண்ணெய் கொண்டமட்டும் தட்டிப்போடலாம்.

இவ்வாறே எல்லா மாவையும் வடைகளாகத் தட்டி எடுக்கவும்.இப்போது கமகம,மொறுமொறு,சத்தான,சுவையான வடைகள் தயார்.

தேங்காய் சட்னி அல்லது கெட்சப்புடன் சாப்பிட மேலும் சுவையாக இருக்கும்.

வாழைப்பூ வடை

பொதுவாக மொந்தன் வாழையிலுள்ள காய்,தண்டு,பூ இவற்றைத்தான்  சமையலுக்குப்  பயன்படுத்துவாங்க. நாமெல்லாம் சமைத்து சாப்பிடுகிறோமே வாழைக்காய் அதுதான் மொந்தன் வாழை.அதன் பூதான் அதிகம் துவர்க்காமல் இருக்கும். வடைக்குப் பொருத்தமாக இருக்கும்.

இல்லையென்றால் வாங்கும் பூவின் மேல் வரிசைகளை (நான்கைந்து) சாம்பார், பொரியல், கூட்டு, உசிலி என ஏதாவது செய்யப் பயன்படுத்திக்கொண்டு உள் வரிசைகளை வடைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இதில் துவர்ப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும்..

வாழைப்பூ புதிதாகக் கிடைத்தால் உடனே வாங்கிவிடுங்கள்.வாங்கியபிறகு என்ன செய்யலாம் என யோசித்து செய்யலாம். இதை செய்ய வேண்டும் என நினைத்து பழைய பூவை வாங்கி வர வேண்டாம்.அதிலுள்ள துவர்ப்பு போய் கசக்க ஆரம்பித்துவிடும்.

தேவையானப் பொருள்கள்:

வாழைப்பூ _பாதி
பொட்டுக்கடலை_ஒரு கப்
சின்ன வெங்காயம்_10
தேங்காய் பத்தை_5
இஞ்சி_சிறு துண்டு
பூண்டு பல்_2
காய்ந்த மிளகாய்_1
பச்சை மிளகாய்_1
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவின் வேண்டாதவைகளை (கள்ளன்,கள்ளி அல்லது நரம்பு, தொப்புள் எனவும் சொல்வாரகள்) நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு அலசி அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து ஒரு கொதி வருமாறு வேக வைக்கவும்.

பிறகு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைக்கவும்.

பொட்டுக்கடலையை முதலில் பொடித்துக்கொண்டு பிறகு அதனுடன் தேங்காய்,மிளகாய்,இஞ்சி,பூண்டு,பெருஞ்சீரகம் இவற்றை ஒன்றாகப் போட்டு கொரகொரவென அரைத்தெடுக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

இறுதியில் வாழைப்பூவை சேர்த்து அரைக்கவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்து மசிந்ததும் வழித்தெடுக்கவும்.

இதில்  பொடியாக நறுக்கிய வெங்காயம்,பெருங்காயம்,கறிவேப்பிலை, கொத்துமல்லி,தேவையான உப்பு சேர்த்து வடைமாவு போலவே பிசைந்துகொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.எண்ணெய் காய்ந்ததும் வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.


இது கூடுதல் மொறுமொறுப்பாகவும்,கூடுதல் சுவையாகவும் இருக்கும்.

தேங்காய் சட்னி,கெட்சப்புடன் சாப்பிட சூப்பர்.

எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.

சேப்பங்கிழங்கு வடை

தேவையானவை:

சேப்பங்கிழங்கு_2
அரிசிமாவு_ஒரு டேபிள்ஸ்பூன்
மைதா_ஒரு டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம்_4
பெப்பர் ஃப்ளேக்ஸ்_சிறிது அல்லது பச்சைமிளகாய்_1
இஞ்சி_சிறிது
பெருங்காயத்தூள்_சிறிது
முட்டை_1 (விருப்பமானால்)
ப்ரெட் தூள்_ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை_ஒன்றிரண்டு இலைகள்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

சேப்ங்கிழங்கின் தோலை சீவிவிட்டு கேரட் துருவியில் துருவி ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.

இதனுடன் சின்ன வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, கொத்துமல்லி இவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டு பிசைந்துகொள்ளவும்.

அடுத்து மைதா,அரிசிமாவு,ப்ரெட் தூள்,உப்பு,பெருங்காயத்தூள் இவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.பெப்பர் ஃப்ளேக்ஸ் போடுவதாக இருந்தால் இவற்றுடன் கலந்துகொள்ளலாம்.இவற்றையும் சேப்பங்கிழங்கு துருவலுடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.இது வடைமாவு பதத்தில் இருக்க வேண்டும்.முட்டை சேர்ப்பதாக இருந்தால் இப்போது சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.முட்டை சேர்ப்பது எண்ணெய் குடிக்காமல் இருப்பதற்குத்தான்.தண்ணீர் எதுவும் சேர்க்க‌ வேண்டாம்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவில் சிறிது எடுத்து உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் போடவும்.

அல்லது போண்டா போல் போடலாம்.

ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு சிவந்ததும் எடுத்துவிடவும்.

இப்போது சுவையான,க்ரிஸ்பியான வடை ரெடி.

டொமெட்டோ கெட்சப்புடன் சூப்பராக இருக்கும்.

ப்ரெட் தூள் சேர்ப்பதால் ஆறியபிறகும் கரகரப்பாக,மொறுமொறுப்பாக இருக்கும்.

இதேபோல் உருளைக்கிழங்கிலும் வடை அல்லது போண்டா செய்யலாம்.

உளுந்து வடை (மற்றொரு வகை)

தேவையானப் பொருள்கள்:

உளுந்து_ 2 கப்

சின்ன வெங்காயம்_ 10

பச்சை மிளகாய்_2

இஞ்சி_ஒரு சிறிய துண்டு

பெருஞ்சீரகம்_சிறிது

பெருங்காயம்_ஒரு துளி

கறிவேப்பிலை_கொஞ்சம்

கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

உப்பு_தேவையான அளவு

கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.

உளுந்து நன்றாக ஊறியதும் கழுவிவிட்டு,நீரை வடித்துவிட்டு குறைந்தது 1/2 மணி நேரமாவது ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

உளுந்து அரைக்க ஃப்ரிட்ஜ் வாட்டரைப் பயன்படுத்தினால் மாவு நிறைய காணும்.

பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டு லேசாகத் தண்ணீர் தெளித்து  அரைக்கவும்.

அரைக்கும்போதே பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும்.

இடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும்.குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.

மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.அதேசமயம் பஞ்சுபோல் இருக்க வேண்டும்.

நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.

இப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி, பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக அடித்து + கொடப்பி  பிசையவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி  சூடேற்றவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.

எண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.

மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடு.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.

இவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு:

வடைக்கு தோல் உளுந்து அல்லது வெள்ளை உளுந்து இரண்டையுமே பயன்படுத்தலாம்.

எனினும் தோல் உளுந்து வெள்ளை உளுந்தைவிட நன்றாக இருக்கும்.

மிக்ஸியைவிட கிரைண்டரில் அரைத்தால்தான் வடை நன்றாக இருக்கும்.

பச்சைப் பருப்புப் பாயசம்

பாயசம் ப‌ல வகைகளில் செய்வதுண்டு.அதில் ஒன்றுதான் பச்சைப் பருப்புப் பாயசம். உளுந்து வடை செய்தால் அதன் பக்க உணவான பாயசம்,சாம்பார் அல்லது தேங்காய் சட்னி இவை இருந்தால்தான் வடை சாப்பிட்ட திருப்தியே வரும்.இன்று பச்சைப் பருப்புப் பாயசம் செய்வதைப் பற்றிப் பார்க்கலாம்.

தேவையானப் பொருள்கள்:

பச்சைப் பருப்பு_1/2 கப்
வெல்லம்_1/2 கப் (அ) சுவைக்கேற்ப‌
பால்_1/2 கப்
ஏலக்காய்_1
முந்திரி_10
திராட்சை_10
நெய்_முந்திரி,திராட்சை வறுக்கும் அளவு
குங்குமப்பூ_10 இதழ்கள்

செய்முறை:

முதலில் பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும்.பிறகு பாயசம் வைக்கும் பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு இரண்டு தரம் தண்ணீரில் கழுவிவிட்டு அதில் இரண்டு கப்புகள் தண்ணீர் ஊற்றி மலர வேக வைக்கவும்.

நன்றாக வெந்ததும் ஒரு கரண்டியால் மசித்துவிட்டு வெல்லத்தைப் பொடித்து அதில் சேர்த்துக் கிளறி விடவும்.வெல்லம் கரைந்த பிறகு பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலத்தூள்,குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாகியதும் முந்திரி,திராட்சை வறுத்து பாயசத்தில் கொட்டவும்.சுவையான பச்சைப் பருப்பு பாயசம் தயார்.

பாயசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஸ்பூனால் சாப்பிடலாம். அல்லது வடையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இன்னும் அப்பளத்துடன் சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும்.

உளுந்து வடையின் செய்முறையைக் காண‌ இங்கே செல்லவும்.

மைசூர் போண்டா

தேவையானப் பொருள்கள்:

உளுந்து_ ஒரு கப்
கடலைப் பருப்பு_1/2(அ) 1 கப்
மிளகு_1 டீஸ்பூன்
தேங்காய்_ஒரு துண்டு (சிறுசிறு பல்லாக நறுக்கிக்கொள்ளவும்)
இஞ்சி_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

உளுந்து,கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊறி இருக்க வேண்டும். நன்றாக ஊறிய பிறகு தோலி இல்லாமல் கழுவி நீரை வடித்து விட்டு உளுந்தை மட்டும் ஃபிரிட்ஜில் ஒரு அரை மணி நேரத்திற்கு வைத்திருந்து, பிறகு வெளியே எடுத்து கிரைண்டரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் சுமார் அரை மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.நல்ல பஞ்சு போல் பந்தாக வரும்.அப்போது  ஒரு பாத்திரத்தில் வழித்து நன்றாக அடித்துக் கொடப்பி வைக்கவும்.அதே கிரண்டரில் கடலைப் பருப்பைப் போட்டு தண்ணீர் ஊற்றாமல் மைய அரைக்கவும்.இந்த மாவை உளுந்து மாவுடன் சேர்த்து, மேலும் மிளகு,தேஙகாய்,இஞ்சி,பெருங்காயம்,உப்பு இவற்றையும் போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து மாவில் இருந்து சிறுசிறு உருண்டை அளவிற்கு எடுத்து லேசாக உருட்டி எண்ணெயில் போடவும். வேகும்போதே கரண்டியால் திருப்பி விட்டு வெந்து சிவந்ததும் எடுத்து விடவும்.இதுபோல் எல்லாவற்றையும் போட்டு எடுத்து சூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

உளுந்து போண்டா

தேவையானப் பொருள்கள்:

உளுந்து_ ஒரு கப்
மிளகு_ஒரு டீஸ்பூன்
தேங்காய்_ஒரு துண்டு (சிறுசிறு பல்லாக நறுக்கிக்கொள்ளவும்)
பெருங்காயம்_துளி
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.உடைத்த கறுப்பு உளுந்துதான் நன்றாக மாவு காணும்.வெள்ளை உளுந்து என்றால் போண்டா அந்த அளவுக்கு சாஃப்டாக இருக்காது.

உளுந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊறியிருக்க வேண்டும்.நன்றாக ஊறிய பிறகு தோலி இல்லாமல் கழுவிவிட்டு சிறிது நீர் விட்டு ஒரு அரை மணி நேரத்திற்குக் குறையாமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.பிறகு உளுந்திலுள்ள  நீரை வடித்துவிட்டு வெறும் உளுந்தை மட்டும் கிரைண்டரில் போட்டு மைய அரைக்கவும்.அவ்வப்போது தண்ணீரைத் தொட்டுக்கொண்டு மாவைத் தள்ளிவிட வேண்டும்.தண்ணீர் சேர்த்தால் மாவு நீர்த்து விடும்.போண்டாவிற்குப் பதிலாக எண்ணெய் குடித்து விட்டு சப்பை வடைகளாகத்தான் வரும்.

குறைந்தது அரை மணி நேரத்திற்கும் மேலாகத்தான் அரைக்க வேண்டும். மாவைக் கையில் எடுத்தால் பஞ்சு போல் லேசாக இருக்க வேண்டும். இப்பொழுது மாவை வழித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்றாக அடித்து கொடப்ப வேண்டும்.அப்போதுதான் மாவு அமுங்காமல் இருக்கும்.இதனுடன் மிளகு,தேங்காய்,பெருங்காயம்,உப்பு இவற்றை சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.அது சூடேறியதும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு மாவில் இருந்து ஒரு பெரிய கோலி அளவிற்கு உருட்டி எண்ணெயில் போடவும்.இது போல் எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.ஒரு பக்கம் வெந்ததும் கரண்டியால் திருப்பி விட்டு மறுபக்கமும் வெந்து சிவந்ததும் எடுத்து விடவும்.இதே போல் எல்லாவற்றையும் செய்து எடுத்து வைக்கவும்.இது மேலே நல்ல மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.இதற்கு தொட்டுக்கொள்ளத் தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

வெண் பொங்கல்&சாம்பார் செய்வதாக இருந்தால் கூடவே போண்டா&தேங்காய் சட்னியும் செய்தால் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

சிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »