தேவை:
வேர்க்கடலை_2 கப்
வெல்லம்_ஒன்றரை கப்
பொட்டுக்கடலை_1/2 கப்
எள்_2 டீஸ்பூன்
அரிசி மாவு_1 கப்
செய்முறை:
வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும். பொட்டுக்கடலை,எள் இவற்றை மிதமான சூட்டில் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.ஏலக்காய் பொடித்துக்கொள்ளவும்.இவை எல்லாவற்றையும் வெறும் வாணலியில்தான் வறுக்க வேண்டும்.வறுத்த பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
பாகு காய்ச்சுதல்: கல்பதம்
கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பொடித்துப்போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பிலேற்றவும். வெல்லம் கரைந்து நுரைத்துக் கொண்டு வரும்.சிறிது கவனமாக இருக்கவேண்டும்.இல்லை என்றால் பாகு தீய்ந்துவிட வாய்ப்புண்டு.
ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு ஒரு ஸ்பூனால் பாகிலிருந்து சிறிது எடுத்து தண்ணீரில் விட்டு கைகளால் உருட்டி எடுத்து ஒரு எவர்சில்வர் தட்டில் போட்டால் டங்கென்று சத்தம் வரவேண்டும்.அதுதான் கல்பதம்.
இப்போது பாகை அடுப்பில் இருந்து இறக்கி கடலை கலவையில் ஊற்றி மத்தின் அடிப்பகுதியால் நன்றாகக் கிளற வேண்டும்.
நல்ல சூடாக இருக்கும்போதே உருண்டை பிடிக்க வேண்டும்.அவ்வாறு பிடிக்கும்போது வெல்லம் பிசுபிசுவென கையில் ஒட்டும்.மேலும் கலவை சூடாகவும் இருக்கும்.எனவே அரிசி மாவை தூவிக்கொண்டே உருண்டை பிடிக்க வேண்டும். இப்போது நல்ல சத்தான, சுவையான சுமார் 15 உருண்டைகள் தயார்.
ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு மாலை வேளையில் சாப்பிடக் கொடுக்கலாம்.
இந்தக் குறிப்பினை ஃபாயிசாவின் ‘Passion On Plate Giveaway Event – Feb 10th – March -20th’க்கு அனுப்புகிறேன்.
3:24 முப இல் மே 23, 2013
இனிய வணக்கம் சகோதரி! அங்கே 4 பெண்கள் வலையில் காமாக்ஷி அம்மாக்கிட்ட உங்க லிங் பார்த்ததும் இங்கே வந்தேன். அசத்தலான உருண்டையா இருக்கே… :).
ருசியும் அற்புதமா இருக்கும். ஆமா… இதற்கு தேங்கா சொட்டு போடுவதில்லையா?.. இதை கடலை உருண்டைன்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க…
நல்ல குறிப்பு. பகிர்விற்கு நன்றி!..
7:14 பிப இல் மே 23, 2013
இனிய வணக்கம் சகோதரி இளமதி,
மேலும் ஒரு சகோதரியின் வரவில் மகிழ்ச்சி.காமாக்ஷி அம்மாவின் பதிவுகளில் நானும் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
எங்கூர்ல இதை மல்லாட்டை (வேர்க்கடலையை அப்படித்தான் சொல்லுவோம்) உருண்டை,பொருளங்கா உருண்டை என்றும் சொல்லுவோம்.தேங்காய் பல்லுபல்லாகக் கீறி வறுத்து போடுவாங்க.நான்தான் போடுவதில்லை.செய்து சாப்பிட்டு பாருங்க,சுவை அற்புதமாகவே இருக்கும்.
“இதை கடலை உருண்டைன்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க…”_____எந்த ஊர் பக்கம் என்று முடிந்தால் சொல்லுங்கள்.உங்கள் வரவுக்கு நன்றிங்க.