வலையுலகில் எங்கு பார்த்தாலும் ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தன.திருவாதிரை வரப்போகுதோ என்னவோ “திருவாதிரைக்கு ஒருவாய்க் களி தின்னாதவர் ____”என்ற பழமொயினால் கொஞ்சம் பயம் வந்ததென்னவோ உண்மை.எனவே இந்த வருடம் திருவாதிரை அன்று இந்தக்களி செய்தே தீரவேண்டுமென்று முடிவுகட்டி செய்து சாப்பிட்டாச்சு.இனி இந்த ____ல் பயமில்லை.
இதன் செய்முறைகூட சர்க்கரைப் பொங்கல்,அரிசி உருண்டை போலவே எனக்குத் தோன்றியது.வெள்ளை வெல்லத்தினால் அழகான நிறம் களிக்குக் கிடைக்கவில்லை. (தப்பிப்பதற்கு ஒரு வழி!)தேங்காய்ப்பூ சேர்க்க மறந்தாகிவிட்டது.
களி செய்ய ஆரம்பிக்குமுன் எல்லாப் பொருள்களையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வேலை கடகடவென முடிந்துவிடும்.பிறகு நான் தேங்காய்ப்பூவை மறந்த மாதிரி நீங்களும் எதையாவது மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
தேவையானவை:
பச்சரிசி_ஒரு கப்
பச்சைப்பருப்பு_1/4 கப்
கடலைப்பருப்பு_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)
வெல்லம்_ஒன்னேகால் கப்
தேங்காய்ப்பூ_ஒன்றிரண்டு டீஸ்பூன்
உப்பு_துளிக்கும் குறைவாக
ஏலக்காய்_1
நெய்_1/4 கப்
முந்திரி_10
செய்முறை:
பச்சரிசி,பச்சைப்பருப்பு,கடலைப்பருப்பு மூன்றையும் தனித்தனியாக வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு ஏலக்காயையும் சேர்த்து ரவை பதத்திற்குப் பொடித்துக்கொள்ளவும்.துளி உப்பையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளவும்.
களி கிண்டப்போகும் பாத்திரத்தில் 4 கப்புகள் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்குமளவு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
வெல்லம் கரைந்ததும் தூசு,மண் இல்லாமல் வடித்துவிட்டு மீண்டும் அடுப்பிலேற்றி தீயை மிதாமாக வைத்து லேஸான பாகுப்பதத்திற்கு கொதிக்க விடவும்.
இதற்குள் களிக்கானத் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்.அப்போது தேங்காய்ப் பூவைப்போட்டு,பொடித்து வைத்துள்ள ரவையையும் சிறிதுசிறிதாகக் கொட்டிக்கொண்டே whisk ஆல் விடாமல் கிளறவும்.கட்டிகளில்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
ரவையைக் கொட்டிக் கிளறும்போதே வெந்துவிடும்.தீயை மிதமாக்கிக்கொண்டு,வெல்ல நீரை ஊற்றிக் கிண்டிவிட்டு,எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு மூடி வைக்கவும்.
ஒரு கரண்டியில் நெய்விட்டு முந்திரியை வறுத்துக்கொட்டவும்.
மீண்டும் ஒன்றிரண்டு முறை கிளறிக்கொடுக்க பொலபொலவென்று உதிர்ந்துகொள்ளும்.இப்போது சுவையான திருவாதிரைக் களி தயார்.
5:51 பிப இல் திசெம்பர் 29, 2012
Etho pazhamozhi ellam paathi paathi-yaa solli bayamuruthareenga? Avvvvvvv….I didn’t make this Kali this year, Last year I prepared it though! 🙂
Enga Veedukalil thiruvathirai Kali seyyum pazhakkam illa Chitra Akka. Yours look delicious!
10:52 முப இல் திசெம்பர் 31, 2012
மகி,இதுதான் முதல் தடவ நான் இனிப்பு களி செய்வது.எங்களுக்குமே இது பழக்கமில்லை.சரி ஒருதடவையாவது செஞ்சுடலாமே என்றுதான் செய்தேன்.
முதல் பழமொழி காப்பி அடித்தது.அதை கூகுளில் போட்டுப்பாருங்க,மீதி கிடைத்துவிடும்.இரண்டாவது எனக்கு மட்டுமே புரியும்.
9:44 பிப இல் திசெம்பர் 29, 2012
நான் என் மாமாவைப் பற்றிய பதிவில் இந்தத் திருவாதிரைக் களி பற்றி எழுதி இருக்கிறேன். சின்ன வயதில் சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த போது மார்கழித் திருவாதிரை அன்று அதிகராநந்தி வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வருவார். அம்மா வீட்டில் திவாதிரைக் களி மாமாவின் பிறந்தநாளைக்காகச் செய்வார். நீங்கள் சொல்லி இருப்பது போல உதிர் உதிராக வரும்.
உங்கள் திருவாதிரைகளி பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டது.
10:58 முப இல் திசெம்பர் 31, 2012
ரஞ்ஜனி,
நீங்களாக இந்தக் களி செய்ததில்லையா!இதுதான் எனக்கும் முதல் முயற்சி. உங்க தாய்மாமா பற்றிய பதிவில் நானும் பார்த்தேன்.அம்மா செஞ்சாங்கன்னா அது இத்தனை வருட அனுபவமும் சேர்ந்து தனி ருசிதான்.அதுவும் தம்பிக்காக எனும்போது ஸ்பெஷல்தான்.
“உங்கள் திருவாதிரைகளி பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டது”____உடனே ட்ரெயினுக்கு டிக்கட் புக்காயிடுச்சா!
8:25 பிப இல் திசெம்பர் 30, 2012
சித்ரா,
உங்கள் களி செய்முறை விளக்கம் மிக அருமை.அதை விட அருமை , உங்கள் களி போட்டோ.
ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டுவிடலாமா என்று தோன்றுகிறது.
நல்ல பதிவு,
ராஜி
11:01 முப இல் திசெம்பர் 31, 2012
ராஜி,
நிறையத்தான் செய்தேன்,கவலைப்படாம ஒரு பௌல் நிறைய எடுத்துக்கோங்க!பாராட்டுக்கு நன்றி.