அச்சு முறுக்கு / கொத்து முறுக்கு

20160714_170243_Fotor

போன தடவை கடையில் வாங்கிய மாவில் செய்தேன். ஓரளவுக்குப் பரவாயில்லை எனும்படி வந்தது. இந்த முறை பச்சரிசி அரைத்து செய்தேன். முன்புக்கு இப்போது நல்ல முன்னேற்றம் 🙂 ஒருவேளை முட்டை சேர்த்ததாலோ !

சாதாரண முறுக்கு என்றால்கூட அடிக்கடி அச்சைக் கழட்டி மாவு வைத்து மூடி, அழுத்திப் பிழிந்து கைவலியிருந்து முதுகு வலிவரை உண்டு இல்லை என்று பண்ணிவிடும். இதில் முறுக்கு அச்சிலிருந்து எளிதாக கழண்டுகொண்டால் இதுமாதிரி ஈஸி எதுவுமில்லை.

20160714_164517_Fotor

என்ணெயும் வாணல் நிறைய ஊற்றி சுடுபவர்களுக்கு வேலை கடகடவென முடிந்துவிடும். ஒரு முறுக்கு மட்டுமே வேகும் அளவுக்கு எண்ணெய் பயன்படுத்தும் என்னை மாதிரியான ஆட்களுக்கு சிறிது நேரம் எடுக்கும்.

முதலில் மைதா சேர்க்காமல்தான் முயற்சித்தேன். ஆனால் முதல் இரண்டு முறுக்குகளும் அச்சிலேயே பிடித்துக்கொண்டு, அதைப் பிரித்து எடுக்கவே பெரும்பாடாகிவிட்டது.

மாவைக் கொட்டிவிடலாம் என நினைத்து செயல்படுத்துமுன், எதற்கும் சிறிது மைதாவை சேர்த்து செய்து பார்ப்போமே என செய்தபோது …. அழகழகாக, அதிக வேலை வாங்காமல் சமர்த்தாக வந்துவிட்டது 🙂

தேவையானவை:

பச்சரிசி _ ஒரு கப்
தேங்காய்பால் _ 1/2 கப் (அரிசி அரைக்கும் அளவுக்கு இருந்தால் போதுமானது)
மைதா _ ஒரு டேபிள்ஸ்பூன்
முட்டை _ 1
சர்க்கரை _ தேவைக்கு
எள் _ சிறிது
உப்பு _ சிறுது
எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை ஊற வைக்கவும்.

கால் மூடி தேங்காயின் பால் பிழிந்துகொள்ளவும்.

மற்ற சாமான்களையும் தயாராக‌ வைக்கவும்.

அரிசி ஊறியதும் மிக்ஸியில் போட்டு தேங்காய்பால் சேர்த்து மைய அரைக்கவும்.

கடைசியாக முட்டையை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொண்டு அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

பிறகு மைதா,  எள்  &  உப்பு சேர்த்து கரைத்து சுவை சரி பார்த்து,  அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி,அடுப்பிலேற்றி எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சை எண்ணெயில் போட்டு அது சூடேறும்வரை வைக்கவும்.

அச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் பாகம் மூழ்குமாறு செய்து, சூட்டினால் மாவு அச்சில் பிடித்துக்கொள்ளும். அப்படியே அச்சை எண்ணெயில் விடவும்.

சலசலப்பு அடங்கியதும் அச்சில் பிடித்துக்கொண்டிருக்கும் முறுக்கை கம்பியால் பிரித்துவிடவும். இதற்கு நான் சைனீஸ் மார்க்கெட்டில் வாங்கின Chopsticksஐப் பயன்படுத்துவேன்.

பிரித்ததும் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும். இப்படியே மேவு முழுவதையும் செய்து முடிக்கவும்.

20160714_170012_Fotor
இப்போது அழகழகான முறுக்குகள் தயார்.

முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 6 Comments »

அச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku

     

எல்லோரும் ஸ்வீட் முறுக்கு எடுத்துக்கோங்க.இது எனது முந்நூறாவது பதிவு.

அச்சுமுறுக்கு செய்வது எனக்கு இதுதான் முதல்முறை.வீட்டில் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ஞாயிறன்று அச்சு வாங்கியாச்சு.அம்மாவிடம் செய்முறை வாங்கி செய்தேன்.ஈர பச்சரிசி மாவிற்குபதில் கடையில் வாங்கிய மாவில் செய்தேன். சரியாக வந்தால் பார்க்கலாம்,இல்லையென்றால் தூக்கிப் போட்டுவிடலாம் என்ற தைரியத்தில்.

முதல் இரண்டு முறுக்குகளை அச்சிலிருந்து பிரிக்கவே முடியவில்லை.அச்சை அக்குவேறு,ஆணிவேறாகப் பிரித்து,முறுக்குகளைப் பிய்த்தெடுத்தேன். கோபம்கோபமாக வந்தது.இவர் கொஞ்சம் ஸ்ட்ராங்காக சொல்லியிருந்தால் வாங்காமலேயே வந்திருக்கலாமே என்றுகூடத் தோன்றியது.ஆனால் அடுத்தடுத்து செய்யும்போது அழகாக வந்துவிட்டது.அச்சு புதிதாக இருந்து,முதல்முறை செய்வதாக இருந்தால் கொஞ்சம் (நிறையவே)  பொறுமை அவசியம்.

அச்சு இதுதான்.ஒரு மரக்கைப்பிடியுடன் கிடைக்கிற‌து.

                  

தேவையானவை:

பச்சரிசி மாவு_ஒரு கப்(கடையில் வாங்கியது)
மைதா_ஒரு டேபிள்ஸ்பூன்
வெல்லம்_3/4 கப்
தேங்காய்ப்பால்_3/4 டம்ளர்
எள்_சிறிது
ஏலக்காய்_1 (பொடித்துக்கொள்ளவும்)
உப்பு_துளி
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

 அரிசிமாவு,மைதா,எள்,உப்பு,ஏலக்காய்த்தூள் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.

வெல்லத்தைப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது கரையும் அளவிற்கு சிறிது தண்ணீர் விட்டு,அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் வடிகட்டி ஆறவைத்து மாவில் ஊற்றிக் கரைக்கவும்.

தேங்காய்ப்பாலையும் சேர்த்துக் கரைக்க‌வும்.கரைத்த மாவு தோசைமாவு பதத்தில் இருக்கட்டும்.தேவையானால் சிறிது தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி,அடுப்பிலேற்றி எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சை எண்ணெயில் போட்டு வைக்கவும்.

அச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் பாகம் மூழ்குமாறு செய்து, சூட்டினால் மாவு அச்சில் பிடித்துக்கொள்ளும். அப்படியே அச்சை எண்ணெயில் விடவும்.

முறுக்கு பாதி வேகும்போதே ஒரு மரக்குச்சியால் அச்சிலிருந்து முறுக்கை லேஸாகப் பிரித்துவிடவும்.ஏற்கனவே வெந்திருப்பதால் ஒருமுறைத் திருப்பிவிட்டு உடனே எடுத்துவிடலாம்.

மீண்டும் அச்சை எண்ணெயில் வைத்து சூடேற்றி முன்பு சொன்னது போலவே செய்யவும்.இவ்வாறே ஒவ்வொரு முறையும் செய்யவும்.இரண்டு அச்சு இருந்தால் செய்ய வசதியாக இருக்கும்.

இப்போது சுவையான அச்சு முறுக்கு சாப்பிடத்தயார்.

வெங்காய பகோடா

 

வெங்காய பகோடாவை சின்ன வெங்காயத்தில் செய்தால்தான் நைஸாக மாவும் வெங்காயமும் சேர்ந்தார்போல் வரும். சேர்ந்தார்போல் வேகும்.

பெரிய வெங்காயத்தில் செய்யும்போது  இரண்டுமே கொஞ்சம் பிரிந்து தனித்தனியாக வரும்.அதுவுமில்லாமல் மாவு வெந்து  வெங்காயம் வேகாமல் இருக்கும்.

இங்கு சமயங்களில் சின்ன வெங்காயமே பெரிய வெங்காயம் சைஸில் கிடைக்கும்.விலைதான் கட்டுப்படியாகாது.

 

 

தேவையானவை:

சின்ன வெங்காயம்_3
கடலை மாவு_ஒரு கப்
அரிசி மாவு_ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா_துளிக்கும் குறைவாக‌
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறு துண்டு
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்க‌

செய்முறை:

வெங்காயம்,ப.மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீளவாக்கில் நறுக்கி சிறிது உப்பு சேர்த்து லேஸாக பிசறினாற்போல் வைக்கவும்.

கடலை மாவு,அரிசி மாவு,சமையல் சோடா,சிறிது உப்பு இவற்றை இரண்டு முறை சலித்து வைக்கவும்.இதில் பெருங்காயம் சேர்க்கவும்.

ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் காயவைத்து மாவில் ஊற்றி மாவு முழுவதும் படுமாறு கிளறவும்.

பிறகு மாவைக் கொஞ்சம்கொஞ்சமாக வெங்காயக்கலவையில் தூவினாற்போல் போட்டு அழுத்தி பிசையாமல் பக்குவமாகப் பிசையவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றவும்.அது காய்வதற்குள் மாவை உதிர்த்தாற்போல் செய்து வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் மாவைக் கிள்ளி எடுக்காமல்,அழுத்தாமல் அப்படியே உதிரியாக எடுத்துப் போடவும்.

ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் திருப்பிவிட்டு அடுத்த பக்கமும் லேசாக சிவக்கும்போதே எடுத்துவிடும்.ரொம்ப சிவந்தால் சுவையில் கசப்பு தெரியும்.

இறுதியாக கொஞ்சம் கறிவேப்பிலையை வறுத்து போடவும்.

இப்போது கமகம,கரகர,மொறுமொறு பகோடா கொறிக்கத் தயார்.

 

 

அப்படியேவோ அல்லது கெட்சப்புடனோ அல்லது தேங்காய் சட்னியுடனோ சாப்பிடலாம்.

பகோடா டிபன்,சாதம் என எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.

பொட்டுக்கடலை மாவு முறுக்கு

 

 

ஒரு 3/4 கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக்கி சல்லடையில் போட்டு சலித்து தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை வேறு எதற்காகவாவது பயன்படுத்திக்கொள்ளலாம்.பொட்டுக்கடலை மட்டுமே சேர்ப்பதால் முறுக்கு நல்ல வெள்ளைவெளேர் என்று சூப்பராக இருக்கும்.

கண்டிப்பாக முறுக்கில் சேர்க்கும் மாவுகள் மிக நைசாக‌ இருக்க வேண்டும். இல்லையெனில் முறுக்கு மொறுமொறுப்பாக‌ இல்லாமல் கடிக்கவே கஷ்டமாக இருக்கும்.

முறுக்கு மாவுடன் உங்கள் விருப்பம்போல் ஓமம்,எள்,பெருங்காயம் மட்டுமல்லாமல் சீரகம்,கறிவேப்பிலை,தனி மிளகாய்த்தூள் என சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையானவை:

அரிசி மாவு_2 கப்
பொட்டுக்கடலை மாவு_1/2 கப்
ஓமம்_சிறிது
எள்_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு

செய்முறை:

ஒரு தட்டில் அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவு,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகப்போட்டு நன்றாகக் கலந்து,சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் முறுக்குக் குழலில் மாவைப்போட்டு நேராக வாணலிலோ அல்லது ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளைப் பிழிந்து வைத்தோ எடுத்து எண்ணெயில் போடவும்.

ஒருபக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்து எண்ணெய் சத்தம் அடங்கியதும்  எடுத்துவிடவும்.

இப்போது கரகர,மொறுமொறு முறுக்குகள் தயார்.செய்வதற்கும் எளிது.நினைத்தவுடன் செய்துவிடலாம்.

 

முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 7 Comments »

காராபூந்தி

தேவையானவை:

கடலை மாவு_ஒரு கப்
அரிசிமாவு_2 டீஸ்பூன்
சமையல் சோடா_துளிக்கும் குறைவாக‌
தனி மிளகாய்த்தூள்_1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை_1/2 கைப்பிடி
முந்திரி_5
பெருங்காயம்_சிறிது
பூண்டுப்பல்_நான்கைந்து
கறிவெப்பிலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு

செய்முறை:

கடலைமாவு,அரிசிமாவு,சோடா உப்பு,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு இரண்டு தரம் சலித்து ஒரு கிண்ணத்தில் கொட்டிவைக்கவும்.

இதில் கொஞ்சம்கொஞ்சமாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க,கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.Whisk ஐப் பயன்படுத்தினால் நன்றாக வரும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பூந்தி கரண்டியைப் பயன்படுத்தி பூந்திகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.கரண்டி இல்லையெனில் சாதம் வடிக்கும் தட்டைக்கூடப் பயன்படுத்தலாம்.லட்டு பூந்தியைவிடக் கொஞ்சம் முறுகலாக‌ எடுக்க‌ வேண்டும்.

இவ்வாறே எல்லா பூந்திகளையும் போட்டு எடுத்தபிறகு அந்த எண்ணெயிலேயே கறிவேப்பிலை,பூண்டு (ஒன்றும் பாதியுமாக தட்டியது),வேர்க்கடலை,முந்திரி  இவற்றைப் போட்டுப் பொரித்து பூந்தியில் கொட்டவும்.கொஞ்சம் கவனம் தேவை.சமயங்களில் கடலை வெடிக்கவோ அல்லது வெடித்து  எண்ணெய் தெரித்து விழவோ வாய்ப்புண்டு.

இவற்றின் மீது மிளகாய்த்தூளைத் தூவி கலக்கவும்.இப்போது கரகர மொறுமொறு காராபூந்தி ரெடி.

இது எல்லா வகையான சாதத்திற்கும்,முக்கியமாக பொரியுடன் கலந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

முறுக்கு

முறுக்கு செய்வதில் இது ஒரு முறை.மெஷினில் கொடுத்து அரைக்கும்போது சூட்டினால் முறுக்கின் நிறம் மாறும்.இந்த முறையில் செய்யும்போது நல்ல நிறத்தில் இருக்கும்.

செய்முறையைப் பார்க்கும்போது ஏதோ பெரிய வேலை போல் தோன்றும். பருப்பை நன்றாக‌ வேக வைத்து எடுத்தால் வேலை முடிந்தது.சரியாக வேகாமலிருந்தால் முறுக்கு கடக்முடக் என கடிக்க வேண்டியிருக்கும்.

தேவையானவை:

1) வெள்ளை உளுந்து _ ஒரு பங்கு

(அல்லது)

உடைத்த பச்சைப்பயறு_ஒரு பங்கு

(அல்லது)

இரண்டும் கலந்து ஒரு பங்கு (எந்த விகிதத்தில் வேண்டுமானாலும்)

2)   அரிசிமாவு_5 பங்கு

3)   அடுத்து வழக்கம்போல் முறுக்கிற்கு தேவையான ஓமம், எள், பெருங்காயம், உப்பு என சேர்த்துக்கொள்ளலாம்.

கீழே உள்ள செய்முறையில் நான் சேர்த்தது:

உளுந்து _ 1/2 கப்
பச்சைப்பயறு_ 1/2 கப்
அரிசிமாவு_5 கப்
ஓமம்_சிறிது
எள்_கொஞ்சம்
பெருங்காயம்_சிறிது
உப்பு _தேவைக்கு

செய்முறை:

உளுந்து,பச்சைப்பயறு இரண்டையும் தனித்தனியாக திட்டமாக தண்ணீர் ஊற்றி குழைய வேக வைக்கவும்.

இரண்டின் வேகும் நேரத்தில் வித்தியாசம் இருப்பதால் தனித்தனியாக வேக வைக்க வேண்டும்.ஒரு பருப்பு மட்டும் போட்டல் இந்தப் பிரச்சினை இல்லை.

வெந்ததும் இரண்டையும் கைகளால் நன்றாக மசித்துவிட்டு மாவு கலக்கும் தட்டில் வைக்கவும்.

அதனுடன் அரிசிமாவு,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.

இப்போது தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து முறுக்கு பிழியும் பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

விருப்பமானால் தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தும் பிசையலாம்.நல்ல வாசனையுடன் சுவையாக இருக்கும்.

அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து முறுக்குக்குழலில் விருப்பமான அச்சைப்போட்டு நேராக எண்ணெயிலோ அல்லது உங்கள் விருப்பம் போல் பிழிந்தோ வேக வைத்து எடுக்கவும்.

இப்போது சுவையான, கரகரப்பான,மொறுமொறுப்பான முறுக்குகள் தயார்.

ஓமப்பொடி முறுக்கு

தேவையானவை:

கடலை மாவு_2 கப்
அரிசி மாவு_ஒரு கப்
ஓமம்_சிறிது
தனி மிளகாய்த்தூள்_1/2 டீஸ்பூன்(விருப்பமானால்)
பெருங்காயம்_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_தேவைக்கு

செய்முறை:

கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த்தூள்,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு ஒருமுறை சலித்தெடுக்கவும்.

இவற்றை  ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருங்காயம்,ஓமம் இவற்றைப் போட்டு சிறிதுசிறிதாகத் தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.

எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சில் ஓமப்பொடி வில்லையைப்போட்டு அதில் கொள்ளுமளவிற்கு மாவைப் போட்டு நேராகவே வாணலில் பிழிந்துவிடவும்.

பிழிந்த சிறிது நேரத்திலே வெந்துவிடும்.உடனே மறுபக்கம் திருப்பிவிட்டு எடுத்துவுடவும்.கொஞ்சம் கவனம் தேவை.இல்லையென்றால் ரொம்பவே சிவந்துவிடும்.

ஆறியதும் கண்ணாடி டப்பாவில் அல்லது பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

அல்லது லேஸாக நொறுக்கிவிட்டு கொஞ்சம் கறுவேப்பிலையை எண்ணெயில் பொரித்துப் போட்டுக் கலந்தால் ஓமப்பொடி மிக்ஸர் ரெடி.

இது சிறுபிள்ளைகள் (பெரியவர்களும்தான்)விரும்பி சாப்பிட ஏதுவாக மிகவும் சாஃப்டாக இருக்கும்.

குறிப்பு:

ஓமப்பொடி வில்லையின் துளைகள் பெரிதாக இருந்தால் ஓமத்தைக் கழுவி அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்.அல்லது துளைகள் சிறிதாக இருந்தால் ஓமத்தை மைய அரைத்துச் சேர்க்கலாம்.அல்லது அரைத்த விழுதை தண்ணீர் விட்டுக்கரைத்து வடிகட்டி அந்தத்தண்ணீரை மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்.

பெருங்காயத் தூளாக இருந்தால் அப்படியேயும்,கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் விட்டு கரைத்தும்சேர்க்கலாம்.

மற்ற ஓமப்பொடி அச்சுகளைவிட மரத்தாலான அச்சு பிழிவதற்கு ஏற்றதாக இருக்கும்.

புழுங்கலரிசி முறுக்கு

தேவையானப் பொருள்கள்:

புழுங்கல் அரிசி_2 கப்
பொட்டுக்கடலை_1/4 கப்
காய்ந்த மிளகாய்_5 லிருந்து 8 க்குள்
தேங்காய்ப்பால்_ஒரு கப் (விருப்பமானால்)
எள்_கொஞ்சம்
ஓமம்_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு
கடலையெண்ணெய்_பொரிக்க‌

செய்முறை:

அரிசியை நீரில் நனைத்து நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு கிரைண்டரில் போட்டு,அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு அல்லது தண்ணீர் தெளித்து மைய அரைக்க வேண்டும்.மிகவும் கெட்டியாகவும் இருக்க வேண்டும்.

பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நல்ல‌ மாவாக இடித்துக்கொள்ளவும்.

இப்போது அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு,எள்,ஓமம், பெருங்காயம், உப்பு சேர்த்து பிசைந்துகொள்.

மாவு கெட்டியாக இல்லாமல் இருந்தால் பேப்பர் டவலில் அல்லது ஒரு காட்டன் துணியில் சிறிது நேரம் சுருட்டி வைத்தால் ஈரம் போய்விடும்.

இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் விருப்பமான முறுக்கு அச்சைப் பயன்படுத்தி, பிசைந்த மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும்.(அல்லது அப்படியே வாணலியில்கூட பிழிந்துவிடலாம்.)

எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு(எண்ணெய் கொண்ட மட்டும்) இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும். இப்போது புழுங்கல‌ரிசி முறுக்கு தயார்.

பச்சரிசி முறுக்கைவிட புழுங்கலரிசி முறுக்குதான் சுவையாக இருக்கும்.என்ன,கொஞ்சம் வேலை வாங்கும். அவ்வளவுதான்.

காராசேவு

தேவையானப் பொருள்கள்:

கடலை மாவு_2 கப்
அரிசி மாவு_1/2 கப்
மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன்
மிளகு_10 லிருந்து 15 எண்ணிக்கைக்குள்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு

அரைத்து சேர்க்க:

கிராம்பு_2
பட்டை _சிறிது
கசகசா_1/4 டீஸ்பூன்
பூண்டு_ஒரு பல்

செய்முறை:

முதலில் கடலை மாவு,அரிசிமாவு,மிளகாய்த் தூள் இவ்ற்றை ஒன்றாகக் கலந்து சல்லடையில் சலித்து திப்பிகள் இருந்தால் நீக்கிவிடவும்.பிறகு மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் பெருங்காயம்,உப்பு,மிளகு (முழுதாகவோ அல்லது உடைத்தோ)  சேர்க்கவும்.எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.

அரைக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை மைய அரைக்க முடிந்தால் அரைத்து மாவுடன் சேர்க்க வேண்டும்.இல்லை என்றால் அரைத்து வடிகட்டிய தண்ணீரை சேர்க்கவும்.

சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

ஒரு வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு காய வைக்கவும். கடைகளில் காரா சேவுக்கென்று கரண்டிகள் கிடைக்கும்.(நான் பயன்படுத்தியது கேரட் துருவி).

ஒரு கையால் கரண்டியைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் மாவைத் தேய்க்க வேண்டும். எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் மாவில் இருந்து ஒரு எலுமிச்சை அளவிற்கு எடுத்து கரண்டியின் மேல் மாவை வைத்து எண்ணெய்க்கு மேலாக உள்ளங்கையால் அழுத்தித் தேய்த்து விடவும்.

மாவு விரல் நீளத் துண்டுகளாக எண்ணெயில் விழும்.எண்ணெய் கொண்ட மட்டும் தேய்த்துவிடவும்.நன்றாக வேகும்வரை மற்றொரு கரண்டியால் திருப்பி விடவும்.வெந்ததும் எடுத்து விடவும்.

காராசேவு கரண்டியைப் பயன்படுத்த முடியாதவர்கள் மாவை தேன்குழல் அச்சில் போட்டு எண்ணெய்க்கு மேலாக அச்சைப் பிடித்துக்கொண்டு விரல் நீளத் துண்டுகள் வருமாறு அழுத்தி ஆள்காட்டி விரலால் மாவை அறுத்து விடவும்.இதுபோல் எண்ணெய் கொண்டமட்டும் செய்து நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

நாடா முறுக்கு

தேவையானவை:

கடலை மாவு_ 2 கப்
அரிசி மாவு_ 2 கப்
பெருங்காயம்_கொஞ்சம்
ஓமம்_1/2 டீஸ்பூன்(விருப்பமானால்)
உப்பு_தேவையான அளவு
தனி மிளகாய்த்தூள்_1  டீஸ்பூன்
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

முதலில் கடலை மாவை சலித்துக்கொள்ளவும்.அதனுடன் அரிசி மாவு,பெருங்காயம்,ஓமம்,உப்பு,மிளகாய்த்தூள் இவற்றைக் கலந்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும்.மாவைத் திறந்து வைக்காமல் மூடி வைக்கவும்.இல்லையென்றால் முறுக்கு பிழிவதற்குள் வறண்டுவிடும்.

அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.அது காய்வதற்குள் முறுக்கு அச்சில் நாடா வில்லையைப் போட்டு அது கொள்ளுமளவு மாவை எடுத்துக்கொள்ளவும். அடுத்து எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் நேரிடையாகவே எண்ணெயில் ஒரு பெரிய முறுக்காகப் பிழியலாம்.அல்லது எண்ணெய் கொஞ்சமாக ஊற்றியிருந்தால் முறுக்கு அச்சை சிறிது அழுத்தி வெளியே வரும் மாவைக் கையால் அறுத்து சிறுசிறுத் துண்டுகளாக விடலாம்.அது ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு வெந்து ஓசை அடங்கியதும் எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.இதுபோல் எல்லாவற்றையும் போட்டு எடுத்து ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.

இதனை ஓலை பகோடா என்றும் கூறுவார்கள்.

முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »