இப்போ வேணுங்கறவங்கல்லாம் ஆர்டர் கொடுக்கலாம். அளந்து அளந்து போட்டு பார்சல் அனுப்பிவைக்கிறேன்.
போன வருடம் எங்க பேட்டியோவுக்கு அருகில் இருந்த ஒரு பெரிய மரத்தை வெட்டிட்டு வரிசையா மூன்று நான்கு குட்டிகுட்டி மரங்களாக நட்டுள்ளனர். இதனால் இந்த வருடம் வெயில் படு ஜோராக எங்க பேட்டியோவில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதை விட மனசில்லாமல் இந்த கோடையில் காசுவத்தல் ஊத்தி எடுத்தாச்சு.
தேவையானவை:
பச்சரிசி _ 2 கப்
ஜவ்வரிசி_ 1/2 கப்
காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய்_ 3
சீரகம்_ ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு
பெருங்காயம்_ சிறிது
செய்முறை:
பச்சரிசியை ஊற வைத்து அது நன்றாக ஊறியதும் அதனுடன் மிளகாயை சேர்த்து தாராளமாக தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
ஒரு 5 லிட்டர் குக்கரில் பாதியளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஜவ்வரிசியைப் போட்டு இரண்டுமூன்று சொட்டுகள் நல்லெண்ணெய் விட்டு ஒரு தட்டு போட்டு மூடி அடுப்பில் ஏற்றவும்.
எண்ணெய் விடுவதால் அரைத்த மாவை ஊற்றிக் கிண்டும்போது கட்டி தட்டாமல் இருக்கும். மேலும் பொங்கி வழிவதும் ஓரளவுக்குக் கட்டுப்படும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயம், சீரகம் இரண்டையும் சேர்த்துவிட்டு, அரைத்துவைத்துள்ள பச்சரிசி மாவையும் ஒரு நீளமான மரக்கரண்டி அல்லது whisk ஆல் கிண்டிக்கொண்டே ஊற்றவும்.
மாவு ஊற்றுவதிலிருந்து அடுப்பு வேலை முடியும்வரை கவனம் தேவை. கொதிக்கும் மாவு தெறித்து நம்மேல் விழ வாய்ப்புண்டு.
மாவு முழுவதையும் ஊற்றிவிட்டு தேவையான உப்பு போட்டு, முக்கால் குக்கர் அளவுக்கும் அதிகமாக தண்ணீர் ஊற்றவும்.
கிண்டுவதை நிறுத்தக்கூடாது. விடாமல் கிண்ட வேண்டும். இல்லையென்றால் கட்டி தட்டும். பிறகு மாவு சரியாக வேகாமல் உருண்டை உருண்டையாய் இருந்து கடுப்பேற்றும்.
மேலும் குக்கரை ஒரு அரை மணி நேரத்திற்கு அடுப்பிலேயே மீடியம் ஹீட்டில் மூடி வைத்திருக்கவும். இடையிடையே திறந்து கிண்டிவிடவும்.
மாவு நன்றாக வெந்தபின் நல்ல வாசனை வரும். இப்போது குக்கரை அதன் மூடியால் மூடி வைத்து விடவும்.
காலையில் வெயில் வரும் சமயம் வத்தல் ஊற்ற உகந்த நேரம்.
ஒரு டேபிளில் ப்ளாஸ்டி கவரை அல்லது சுத்தமான ஒரு துணியை நனைத்து ஈரம் இல்லாமல் பிழிந்து விரித்துப்போட்டு, மாவை நன்றாக ஒரு தரம் கலந்துவிட்டு, உப்பு சரிபார்த்து, தேவையானால் சிறிது சேர்த்துக்கொண்டு கரண்டியால் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஊற்றவும்.
(இவ்ளோ கஷ்டபட்டு வத்தல் போட்டுட்டு ஃபோட்டோ எடுக்காம விட்டா எப்படீ !!)
ஒரு நாள் முழுவதும் காய்ந்த பிறகு அப்படியே எடுத்து வைத்து அடுத்த நாள் காலை எல்லா வற்றலையும் திருப்பிவிட்டு மீண்டும் வெயிலில் காயவிடவும்.
(முதல் நாள் இந்த அளவுக்குத்தான் காய்ந்தது.)
நன்றாகக் காய்ந்த பிறகு பெரிய கண்ணாடி பாட்டிலில் அல்லது பெரிய ஸிப்லாக்கில் எடுத்து வைத்து தேவையானபோது வாணலில் எண்ணெய் காய வைத்து பொரித்து சாப்பிடலாம்.
எல்லா சாதத்துக்கும் முக்கியமாக வத்தக்குழம்பு,காரக்குழம்பு, புளிக்குழம்பு இவற்றிற்கெல்லாம் சூப்பராக இருக்கும்.
(முறுக்கு வத்தல் போடல போலிருக்குன்னு நெனச்சிடக் கூடாதில்லையா !!)