வேர்க்கடலை சாதம் / peanut rice

 

20160426_124608_Fotor

அந்தந்த ஊர் பக்கம் விளையும் பொருட்களைக்கொண்டுதானே அவ்வூர் சமையலும் இருக்கும். அப்படித்தான் எங்கள் ஊர் பக்கம் வேர்க்கடலை அதிகமாக விளையும். அதனால் இந்த ‘மல்லாட்டை சோறு’ ரொம்பவே ஃபேமஸ். இதை எப்போதாவது ஒருமுறை செய்வ‌தால் உறவு & தெரிந்தவர் என பங்கு போகும். ஒரு பெரிய பானையில் எங்க வீட்டு chief chef(ஆயா) தான் செய்வாங்க. கெட்டியா இருக்கும். செய்த மறு நாள்தான் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. ஏனோ அப்போது நான் சாப்பிட மாட்டேன். இப்போ ஆசையா இருக்கு  அவங்க செஞ்சி நாம சாப்பிடணும்போல.

என்னென்ன போட்டு செய்வாங்க என்பது அப்போதே தெரியும். ஆனால் அளவுகள் எல்லாம் தெரியாது. அவங்களுமே அரிசியை மட்டும் அளந்துகொண்டு மற்ற பொருட்களை கண்ணாலேயே அளந்துப்பாங்க‌. நல்லவேளை என் அம்மாவிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டு எப்போதாவது செய்து அவர்களை எல்லாம் நினைத்துக்கொண்டே சாப்பிடுகிறேன் 😦

இதெல்லாம் முன்பொரு காலத்தில். இப்போதோ வேலைப்பளு & ஆள்கூலி இவற்றினால் வேர்க்கடலை விளைச்சல் ஏறக்குறைய இல்லாமலே போனது. இந்த சமையலும் காணாமலே போனது.

20150918_142039

இந்த சாதத்தை பச்சரிசியில் செய்வாங்க. நான் தினையில் செஞ்சிருக்கேன். உங்க விருப்பம்போல் எல்லா தானியத்திலும் செய்ய‌லாம்.

தேவையானவை :

தினை : ஒரு கப்
புளி _ கோலி அளவு
வறுத்த வேர்க்கடலை _ 1/2 கப் (இன்னும் அதிகமாகப் போட்டாலும் நன்றாகவே இருக்கும். )
வெறும் வாணலில் வறுத்த‌ காய்ந்த மிளகாய் _ 1 (காரத்திற்கேற்ப)
உப்பு _ சுவைக்கேற்ப‌

செய்முறை :

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, ஊறியதும் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பங்கு தினைக்கு மூன்று கப்புகள் தண்ணீர் வேண்டும். இது எங்க ஊர் அடுப்புக்கு. Gas அடுப்பாக‌ இருந்தால் கூடுதலாக சேர்க்க வேண்டி வரும். புளித்தண்ணீருடன் மூன்று கப்புகள் இருக்குமாறு தேவையான தண்ணீரை சேர்த்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி(அரிசியில் செய்வதாக இருந்தால் ஒரு கப் தண்ணீர் கூட சேர்த்துக்கொள்ளலாம்) அடுப்பில் ஏற்றவும். விருப்பமானால் இதில் துளி மஞ்சள்தூள் சேர்க்கலாம்.

தண்ணீர் நன்றாகக் கொதித்து புளி வாசனை போக இரண்டுமூன்று நிமிடங்கள் ஆகும்.

புளி வாசனை போனதும் தினையைக் கழுவி சேர்த்து, தேவைக்கு உப்பும் போட்டு, தீயைக் குறைத்து, மூடி வேக வைக்கவும்.

தினை சீக்கிரமே வெந்துவிடும் என்பதால் அடி பிடிக்க சான்ஸ் உண்டு. எனவே அடிக்கடி கிண்டி விடவும்.

சாதம் வெந்துகொண்டிருக்கும்போதே வறுத்த வேர்க்கடலை & வறுத்த காய்ந்தமிளகாய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஒன்றும்பாதியுமாக பொடித்துக்கொள்ளவும்.

பொடி மைய இருப்பதைவிட …… அங்கங்கே வேர்க்கடலை கடிபட்டால் நன்றாக இருக்கும்.

சாதம் நன்றாக வெந்து கெட்டியான‌தும் பொடித்த பொடியைப் போட்டு நன்றாகக் கிண்டி,  உப்பு & காரம் சரிபார்த்து, அடுப்பை நிறுத்திவிட்டு மூடி வைத்தால் அப்படியே புழுங்கிவிடும்.

பிறகு எடுத்து சாப்பிட வேண்டியதுதான். எண்ணெய், தாளிப்பு இது எதுவும் இல்லாத சுவையான உணவு !

20160426_124605_Fotor

இதற்கு அவர்கள் ஏதும் தொட்டு சாப்பிட்டதாக நினைவில்லை. நான் வத்தல் அல்லது அப்பளத்துடன் சாப்பிடுவேன்.

ஒருசிலர் பொடி சேர்க்கும்போது கொஞ்சம் முருங்கைக் கீரையும் சேர்ப்பாங்க. ஆனால் அதை அன்றே காலி பண்ணிடுவாங்க. கீரை சேர்ப்பதால் ஊசிப்போயிடுமே, அதனால்தான்.

தண்ணீரின் அளவில் குழப்பம் என்றால் பின்னூட்டத்தில் கேட்போமே !

கிராமத்து உணவு, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 4 Comments »

தினை அதிரசம்

20150915_161044

எங்கள் ஊரில் அதிரசம் இல்லாமல் தீபாவளி இருக்காது. அதிலும் தினை அதிரசம்தான் செய்வார்கள். அப்போதெல்லாம் இதை செய்வது மிகப் பெரிய வேலை. இப்போதுபோல் தோல் நீக்கிய தினை கிடைக்காது.

பம்ப்செட் இல்லாதவர்கள், தங்கள் நிலத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால் சும்மா மானாவாரியாக தினையை விதைத்து அறுவடை செய்திருப்பார்கள். தீபாவளி சமயத்தில் அதிரசம் செய்யவேண்டி அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவர்கள் வீட்டை நோக்கிப் படையெடுப்பார்கள்.

அதை வாங்கிவந்து உரலில் போட்டு மாங்குமாங்குனு குத்தி தோலை நீக்கி, (இதற்கு ஏழு தோல் இருக்குமாம், சொல்லுவாங்க) ஊறவச்சு, பிறகு குத்தி குத்தி சலித்து மாவாக்கி, வெல்லபாகு வச்சு கிண்டி, அதிரசம் செய்வாங்க.

தினையை நாங்களும் குத்தியே தீருவோம்னு நானும் என் தம்பியும் விழுந்து & புரண்டு அழுததையெல்லாம் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

அரிசி போல் இல்லாமல் தினையில் செய்யும்போது கொஞ்சம் சாஃப்டா, பொலபொலனு இருக்கும். இதுல செஞ்சாதான் தீபாவளி தீபாவளியா தெரியும்.

நாட்கள் செல்லச்செல்ல எல்லோரது வீட்டுக்கும் வந்த மருமகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக தினையிலிருந்து அரிசிக்குத் தாவிவிட்டனர்.

சின்ன வயசுல தினையைப் பார்த்ததோடு சரி, மறந்தே போயிட்டேன். இங்கு வந்த புதுசுல இந்த ஊர் கடையில் தானியங்கள் இருக்கும் பகுதியில் தினை மாதிரியே ஒன்று இருக்கவும் வாங்கி வந்து அதிரசம் சுட்டுப் பார்த்தேன், வரவில்லை. பிறகுதான் தெரிந்தது அது கஸ்கஸ் என்று :)))) இந்த பெயரில் இப்படி ஒன்று இருப்பதே அப்போதுதான் தெரியும் !

20150918_142039

நீண்ட நாட்களாகவே சிறுதானியங்களைத் தேடிக்கொண்டே இருந்தேன். இப்போது இங்குள்ள ஒரு கடையில் எல்லா சிறுதானியங்களும் கிடைக்கிறது. அதில் தினை இருக்கவும் வாங்கிவந்து அதிரசம் சுட்டுப் பார்த்தேன், நன்றாக வந்துள்ளது. நீங்களும் ஒன்று எடுத்து சாப்பிட்டுப் பாருங்க !

20150915_163204

தேவையானவை:

தினை _ 2 கப்

வெல்லம்_ சுமார் 2 கப் அல்லது வெல்லத்தின் இனிப்புக்கேற்ப‌

ஏலக்காய் _1

உப்பு _ துளிக்கும் குறைவாக. ருசியைக்கூட்ட போடுகிறோம். விருப்பமில்லை என்றாலும் பரவாயில்லை.

எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

மாவு தயாரிப்பது, செய்முறை எல்லாமும் அரிசிமாவு அதிரசம் மாதிரியேதான்.

தினையை நன்றாகக் கழுவி ஊற வைக்கவும்.

ஊறியதும் நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு ஈர மாவாக மைய பொடித்துக்கொள்ளவும். இப்போதே ஏலக்காயையும் சேர்த்து பொடித்துக்கொள்ளலாம்.

ஒரு கெட்டியான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.

வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு & மண் போக வடிகட்டியில் வடிகட்டி மீண்டும் பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும்.

வெல்லம் கொதித்து கெட்டிப் பாகாக வரும்போது ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் விட்டு, ஒரு துளி பாகை அதில் விட்டு கையால் உருட்டினால் கரையாமல் கெட்டியாக உருட்ட‌  வர‌வேண்டும்.

அந்த நேரத்தில் அப்பாகை எடுத்து தினை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டிக்காம்பால் அல்லது மத்தின் அடிப்பகுதியால் விடாமல் கிண்ட வேண்டும். ஊற்றும்போது கவனம் தேவை.

பாகின் சூட்டிலேயே மாவு வெந்துவிடும்.

கை விடாமல் நன்றாகக் கிண்டி ஆறியதும் மூடி வைத்து, அடுத்த நாளோ, இல்லை அதற்கும் அடுத்த நாளோ அதிரசங்களைச் சுடலாம். அன்றேகூட செய்யலாம். எங்க அம்மா மாவு கிண்டி வைத்து அதிரசம் சுட ஒரு வாரமாவது ஆகும், அதற்குள் பாதி மாவைக் காலி பண்ணிடுவோம் 🙂

எண்ணெயை அடுப்பில் ஏற்றி காய வைக்கவும்.

20150915_161616

ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் அல்லது பேப்பர் டவலில் சிறு உருண்டை அளவிற்கு மாவை எடுத்து படத்தில் உள்ளதுபோல் தட்டிக்கொண்டு எண்ணெய் காய்ந்ததும் போட்டு பொரித்தெடுக்கவும்.

எண்ணெய் ரொம்பவும் சூடாக இருக்கக் கூடாது. தீயுமே தவிர உள்மாவு வேகாது. எண்ணெய் குலோப் ஜாமூன் சுடும் பதமாக இருக்கலாம்.

எடுத்தபின் ஒரு தட்டில் வைத்து அடிப்பக்கம் தட்டையான ஒரு கிண்ணத்தால் அழுத்தினால் உப்பியிருக்கும் அதிரசம் தட்டையாகிவிடும்.

எல்லா மாவையும் இப்படியே செய்ய வேண்டியதுதான்.

20150915_163847

பிறகென்ன, ஆறியதும் எடுத்து சாப்பிட்டு விடுவதோ அல்லது எடுத்து வைத்து பிறகு சாப்பிடுவதோ எல்லாமும் உங்கள் கைகளில்.

புளி சேர்த்த பருப்புகீரை மசியல்

20150509_170306

பருப்புடன் கீரையின் சுவையைப் போலவே புளியுடன் சேர்த்து செய்யும்போதும் சுவையாகவே இருக்கும்.

20150508_150555

வீட்டில் பறித்த பருப்புகீரை

கொல்லியில் இருந்து எடுத்து வரும் கலவைக் கீரையில் இதுவும் ஒரு பங்கு இருக்கும். கலவை கீரையை புளி சேர்த்துதான் கடைவார்கள். முன்னெல்லாம் கிராமத்தில் பருப்பு வாங்க முடியாததாலோ என்னவோ, முருங்கை போன்ற ஒரு சிலவற்றைத் தவிர‌ எந்தக் கீரையாக இருந்தாலும் இப்படித்தான் செய்வார்கள்.

அதைப் போலவேதான் இதையும் செய்தேன், சூப்பராகவே இருந்தது.

20150508_145147

வீட்ல பறிச்சேன்னு இப்போ நம்பித்தானே ஆகணும் !

சேர்க்க வேண்டிய பொருட்களைக் கொடுத்துள்ளேன். அளவுகளை எல்லாம் உங்கள் சுவைக்கேற்ப‌ கூட்டிக் குறைத்து சேர்த்துக்கொள்ளவும்.

தேவையானவை:

பருப்பு கீரை _ சிறு கட்டு
சின்ன வெங்காயம் _ 5
தக்காளி _ 1
முழு பூண்டு _1
புளி _ சிறு கோலி அளவு
பச்சை மிளகாய் _ 1

தாளிக்க :

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு _ நான்கைந்து
சீரகம்
காய்ந்தமிளகாய் _ 1
பெருங்காயம்

செய்முறை :

கீரையை ஆய்ந்து நீரில் அலசி எடுத்து வைக்கவும்.

ஒரு கனமான சட்டியில் 1/2 கப் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி கொதி வந்ததும் வெங்காயம், தக்காளி, இரண்டு பூண்டுப்பல், பச்சை மிளகாய், புளி இவற்றையெல்லாம் போட்டு மீண்டும் கொதி வந்ததும் கீரையைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

கீரை சீக்கிரமே வெந்துவிடும். குழைய வேண்டாம்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளித்து, எண்ணெய் நீங்கலாக மீதியைக் கீரையில் கொட்டவும்.

அந்த மீதமான எண்ணெயில் மீதமுள்ள பூண்டு பொடியாகவோ அல்லது தட்டிப்போட்டோ நன்றாக வதக்கிக் கீரையில் கொட்டி ஆறியதும் மிக்ஸியில் போட்டு மைய மசிக்காமல் ஓரளவுக்கு மசித்துக்கொள்ளவும்.

20150509_151123

சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். துவையல் மாதிரி தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

கிராமத்து உணவு, கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 6 Comments »

முருங்கைக்கீரை பிரட்டல் / துவட்டல்

20150219_160734

சித்ரா வீட்ல கீரை வாரமோ !!

வறுத்த வேர்கடலை கையில் இருந்து, கூடவே முருங்கைக்கீரையும் இருந்துவிட்டால் நொடியில் முருங்கைக் கீரைப் பொரியல் ரெடியாயிடும்.

20150219_142217

ஃப்ரெஷ் கீரை

முன்பெல்லாம் தேடித்தேடி ஓடியதுபோக, இப்போ ஃப்ரெஷ்ஷாவே கிடைக்குது. கிடைக்கும்போது வாங்கி அனுபவிச்சிட வேண்டியதுதான்.

தேவையானவை :

20150222_144115

அளவெல்லாம் உங்கள் விருப்பம்தான்

முருங்கைக்கீரை _ இரண்டுமூன்று கிண்ணம் (எவ்வளவு கீரையாக இருந்தாலும் சமைத்த பிறகு கொஞ்சமாகிவிடும்)

வறுத்த‌ வேர்கடலை _ ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் _ 1
உப்பு _ ருசிக்கு

செய்முறை :

வேர்க்கடலையை வறுக்கும்போதே கடைசியில் மிளகாயையும் போட்டு சூடுவர‌ வறுத்துக்கொள்ளவும். அல்லது ஏற்கனவே வறுத்த வேர்கடலை இருக்குமாயின், மிளகாயை மட்டும் வெறும் வாணலில் போட்டு சூடுவர வறுத்து எடுக்கவும்.

இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு இடித்துக்கொள்ளவும். மைய இடிக்க வேண்டாம். வேர்கடலை கொஞ்சம் வாயில் கடிபடுகிற மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்.

பிறகு அடிகனமான சட்டியில் ஒன்றிரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி, தண்ணீர் காய்ந்ததும் அதில் கீரையைப் போட்டு வதக்கவும்.

மெல்லிய பாத்திரம் வேண்டாம், பாத்திரம் மெல்லியதாக இருந்தால் தண்ணீர் சீக்கிரமே சுண்டிவிடும், கீரையும் வேகாது.

வதக்கும்போதே சிறிது உப்பு சேர்க்கவும். கீரை வெந்து தண்ணீர் சுண்டி வந்ததும் பொடித்த பொடியைப் போட்டு ஒரு கிண்டுகிண்டி இறக்கவும்.

எல்லா சாதத்துடனும் சூப்பராக இருக்கும். சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் சூப்பரோ சூப்பராக இருக்கும்.

பருப்புகீரை அடை

20140921_145637

கோடையில் ஊருக்குப் போகுமுன் தொட்டிகளில் அறுவடையான பருப்பு கீரைக் குச்சிகள்தான் இருந்தன. திரும்பி வந்து பார்த்தால் …. வாவ் ! எங்கும் படர்ந்திருந்தது.

20140921_164511

அடுத்தடுத்து சில தடவைகள் பறித்தேன். விதை விழுந்து குட்டிகுட்டிச் செடிகள் முளைத்துக் கொண்டே இருந்தன. சந்தோஷமாக இருந்தது. பின்னே இருக்காதா ? ஒரு சிறு கட்டு $ 2:00 க்கு வாங்குவேனாக்கும்.

IMG_5224

அதன்பிறகு குருவிகள் வந்து குத்தாட்டம் போட்டு, முளைத்து வரும் துளிர்களைக் கொத்தி விடுவதால் இவை வளர்வதேயில்லை. இன்னமும் விதைகள் இருந்து, முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன, குருவியும் விடாமல் கொத்திக் கொண்டேதான் உள்ளது.

வீட்டுக்கு வெளியே பெரியபெரிய புல்தரைகள், ரோஜாக்கூட்டங்கள், ஆஃப்ரிக்கன் லில்லி என எவ்வளவோ இருந்தும் எங்க வீட்டுக்குத்தான் அவர்களின் விஜயம் எனும்போது நானும் நல்ல மனசோடு ‘செடிகள் போய்ட்டு போவுது’ன்னு விட்டுட்டேன்.

இப்போ அடைக்கு வருவோமா !!

தேவையானவை:

20141016_144140

கேழ்வரகு மாவு _ ஒரு பங்கு
பருப்பு கீரை _ இரண்டு பங்கு
சின்ன வெங்காயம் _ இரண்டு
பச்சை மிளகாய் _ காரத்திற்கேற்ப‌
இஞ்சி _ சிறிது
கறிவேப்பிலை _ கொஞ்சம்
உப்பு _ சுவைக்கு
நல்லெண்ணெய் _ தேவைக்கு

செய்முறை :

வழக்கம்போல கீரையை அரியாமல் நன்றாக அலசி நீரை வடியவிட்டு, சின்னசின்னதா இருக்குமாறு தண்டுப் பகுதியில் ஆங்காங்கே ஒடித்துக்கொள்ள‌வும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும்.

மாவை ஒரு பெரிய கிண்ணத்தில் கொட்டி, அதில் உப்பு போட்டு, அதனுடன் அரிந்து வைத்துள்ளவற்றைக் கொட்டி நன்றாகப் பிசையவும்.

20141016_151147

பிசைந்த மாவை உருண்டையாக்கி சிறிது நேரம்(ஒரு 10 நிமி?) ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்.

பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பிலேற்றி காயவிடவும்.

20141016_155410

க‌ல் காய்வதற்குள் மாவிலிருந்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து ஒரு ஈரத்துணியில் வைத்து மெல்லியதாகத் தட்டவும்.

இப்போது கல் காய்ந்ததும் அடையை எடுத்து தோசைக்கல்லில் போட்டு அடையைச் சுற்றிலும் & மேலேயும் எண்ணெய் விட்டு மூடி வேகவிடவும்.

எண்ணெய் கொஞ்சம் தாராளமாக விட்டால்தான் அடை வேகும். இல்லையென்றால் மாவு வேகாமல் வெள்ளையாகவே இருக்கும்.

எண்ணெய் அதிகம் சேர்க்க முடியாதென்றால் ஒரு பேப்பர் டவலில் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு அடையின் மேல் எல்லா இடத்திலும் படுமாறு தடவிவிடலாம்.

20141016_160054

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுத்து சூடாக தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

இட்லித்தூளுடன் சாப்பிட்டுப் பாருங்க. அடையிலுள்ள பச்சைமிளகாயின் காரமும், தூளிலுள்ள மிளகு & காய்ந்தமிளகாயின் காரமும் சேர்ந்து, நீங்களே ‘ஆஹா’ன்னு சொல்லுவிங்க பாருங்க‌.

கிராமத்து உணவு, கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 10 Comments »

முருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்

20150216_144222

சுவையான முருங்கைக்கீரை சூப்

எங்க வீட்டுத் தோட்டத்தில் முருங்கைக்கீரை மரம் எப்போதும் தளதளன்னு சூப்பரா இருக்கும். என்றாவது ஒருநாள் எங்கம்மா முருங்கைக்கீரையில் இந்த தண்ணி சாறு வைப்பாங்க. சுவை சொல்லிமாளாது.

20150216_144513

முருங்கைக்கீரை தண்ணி சாறு

சாதத்துடன் ரசம் மாதிரி சேர்த்து சாப்பிட சூப்பரா இருக்கும். இதிலுள்ள கீரை முதலானவற்றை வடித்துவிட்டு சூப் மாதிரி குடிக்கவும் நன்றாக இருக்கும்.

20140723_082526

இளம் பசுமையான துளிர் கீரை

தேவையானவை:

20150216_135837

தேவையானவை

முருங்கைக்கீரை _ ஒரு கிண்ணம்
சின்னவெங்காயம் _ 1 (ரொம்ப சின்னதா இருந்துச்சுன்னா மூன்றுநான்கு போட்டுக்கொள்ளலாம்)

பூண்டுப்பல் _ ஐந்தாறு . நன்றாகத் தட்டிக்கொள்ளவும்.

நன்கு பழுத்த தக்காளி _ 1
மஞ்சள் தூள் _ துளி
சாம்பார்தூள் _ துளி. மஞ்சள்தூளும், சாம்பார்தூளும் நிறத்திற்காகத்தான்
தேங்காய்ப்பூ(விருப்பமானால்) _ சிறிது
கொத்துமல்லி தழை _ கொஞ்சம்
உப்பு _ தேவைக்கு

தாளிப்புக்கு :

நல்லெண்ணெய்
மிளகு
சீரகம்
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்

செய்முறை :

கீரையைக் கழுவி நீரை வடிய விடவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இங்குள்ள ஒரு சமையல் ஷோவில், “தோலுடன் பூண்டுப்பல்லைத் தட்டிப் போட்டால்தான் முழு ஃப்ளேவர் கிடைக்கும்” என்றதால், அன்றிலிருந்து இன்றுவரை ‘ரொம்ம்ம்ப நல்லதாப் போச்சுன்னு எல்லா சமையலுக்குமே தோலுடனே அப்படியே தட்டிப் போட்டுவிடுவது.

ஒரு சட்டியை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகத்தைப் பொரியவிடவும். அப்போதுதான் மிளகின் காரம் சூப்பில் இறங்கும்.

அடுத்து காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு பூண்டு சேர்த்து பூண்டின் வாசம் வரும்வரை நன்றாக‌ வதக்கவும்.

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

இவை வதங்கியதும் கீரை சேர்த்து துவள வதக்கிவிட்டு இரண்டுமூன்று கிண்ணம் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். இப்போது மஞ்சள்தூள, சாம்பார்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

இரண்டு கொதி வந்த பிறகு தேங்காய்ப்பூ, கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

இனி சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதோ அல்லது சூப் மாதிரி குடிப்பதோ, உங்கள் விருப்பம்.

IMG_1367

முன்பொருமுறை உழவர் சந்தையில் வாங்கியது

 

பொரி மாவு / Pori maavu

pori maavupori maavu

இதை செய்வது சுலபம், சுவையோ அதிகம். எவ்வளவு இனிப்பு வகைகளை சுவைத்தாலும் இதன் சுவையே தனிதான்.

எங்கம்மா ஒரு பெரிய இரும்பு வாணலை வைத்து பொரிப்பாங்க,எல்லா அரிசியும் பூ மாதிரி பொரிந்து இருக்கும். இங்கே நான் பொரித்துள்ள அரிசிகூட சரியாகப் பொரியாமல்தான் உள்ளது.

குட்டீஸ்களுக்கு கொடுக்கும்போது மாவு புரை ஏறும் என்பதால் நெய் அல்லது நல்லெண்ணெயில் பிசைந்து கொடுக்கலாம்.

இதையே மாவாக அரைக்காமல் கொஞ்சம் ரவை பதத்துடன் அரைத்து சூப்பரான அரிசி உருண்டை செய்யலாம்.

தேவையானவை:

புழுங்கல் அரிசி _ ஒரு டம்ளர் அளவிற்கு
சர்க்கரை _ தேவைக்கு
ஏலக்காய் _ 1
உப்பு _ துளிக்கும் குறைவாக (ருசியைக் கூட்டத்தான்)

செய்முறை:

ஒரு அடிகனமான  வாணலை அடுப்பில் ஏற்றி நன்றாக சூடு ஏறியதும் அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு அரிசியைப் போட்டு தோசைத் திருப்பியின் உதவியால் விடாமல் கிண்டிவிடவும்.

சிறிது நேரத்தில் அரிசி படபடவென பொரியும்.விடாமல் கிண்டவும். இப்போது பூ மாதிரி பொரிந்து வரும்.எல்லா அரிசியும் பொரிந்ததுபோல் தெரியும்போது ஒரு அகலமானத் தட்டில் எடுத்துக்கொட்டி ஆறவிடவும்.இங்கு கொஞ்சம் ஏமாந்தால் அரிசி தீய்ந்துவிடும்.அதனால் கவனம் தேவை.

இதேபோல் தொடர்ந்து எல்லா அரிசியையும் பொரித்து தட்டில் கொட்டி ஆறவிடவும்.

அரிசி நன்றாக ஆறியதும் மிக்ஸியில் கொட்டி அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்,உப்பு இவற்றையும் போட்டு மைய மாவாக்கி, இனிப்பு போதுமா என சுவை பார்த்து, தேவையானால் மேலும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து அரைத்து, இனிப்பு அதிகமாக இருந்தால்…கூடுதல் சந்தோஷம்தான்!!  ஒரு அகலமான தட்டில் கொட்டி மீண்டும் ஆறவிட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது சுவைக்கலாம்.

மாங்காய் இனிப்பு பச்சடி / Mango sweet pachadi

mango pachadi

இனிப்பு,காரம்,புளிப்புடன் பச்சைப் பயறும் சேர்ந்திருப்பதால் இந்தப் பச்சடியின் சுவை சூப்பராக இருக்கும்.ஒரு தடவை செய்துதான் பார்ப்போமே!

mango

இங்கு எப்போதும் பழ மாங்காய் மாதிரியேதான் கிடைக்கும். ஒருசில சமய‌ங்களில் மட்டும் நம்ம ஊரில் உள்ளது மாதிரி நல்ல காய் மாங்காவாகக் கிடைக்கும். இவை சாம்பார், fish & dry fish குழம்பு, பச்சடி போன்றவை செய்ய நன்றாக இருக்கும். இப்போது இந்த மாங்காய்கள் வந்துகொண்டிருப்பதால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோமே !!

தேவையானவை:

மாங்காய்_ 1
பச்சைப் பயறு_ 1/4 கப்
பெருங்காயம்_துளிக்கும் குறைவாக‌
வெல்லம்_ ஒரு கப்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_துளியளவு
உப்பு_துளியளவு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து

செய்முறை:

மாங்காயைக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ள‌வும்.

ஒரு பாத்திரத்தில் பச்சைபயறுடன் மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து பயறு வேகுமளவு தண்ணீர் ஊற்றி குழையாமல், மலர வேக வைக்கவும்.

பயறு வெந்ததும் அதில் மாங்காய் துண்டுகள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து கிண்டிவிட்டு மாங்காய் வேகும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது கரையும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.

வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு,மண் இல்லாமல் வடிகட்டி வெந்த மாங்காய் பருப்புடன் சேர்த்துக் கிண்டிவிட்டு எல்லாம் சேர்ந்து இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி, கடுகு,உளுந்து தாளித்துக்கொட்டி கிளறி விடவும்.

 

mango pachadi

 
இப்போது இனிப்பு,புளிப்பு, காரம் கல‌ந்த மாங்காய் பச்சடி சாப்பிடத் தயார்.

 

வெள்ளரிப் பிஞ்சு & மாங்காய்

இது சமையலில் கேஜி_ல் இன்னும் கிராஜுவேஷன் வாங்காதவங்களுக்கான பதிவு.(  ஊரெங்கும் கிராஜுவேஷன் ஃபீவர் இருந்ததால் வந்த பாதிப்பு ).

cucumber

 

வெயில் நேரத்திற்கு வெள்ளரிப் பிஞ்சு சாப்பிட இதமாக இருக்கும்.எனக்கு அப்படியே சாப்பிடப் பிடிக்கும்.வீட்டில் உள்ளவர்களுக்கு தோல் நீக்கி மிளகாய்த்தூள் தடவிக் கொடுத்தால்தான் இறங்கும்.

cucumbercucumber

ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் தனி மிளகாய்த் தூளுடன் சிறிது உப்புத்தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.நபர் ஒருவருக்கு ஒரு வெள்ளரி பிஞ்சு போதும்.அதன் தோலை சீவிவிட்டு,கத்தியால் நீளவாக்கில் விருப்பமான அளவில் கீறிக்கொண்டு, துண்டுகளின்மேல் மிளகாய்த்தூளை தூவிவிட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

mangomango

இதைப் போலவேதான் மாங்காயும்.இதில் மாங்கொட்டை இருப்பதால் சுற்றிலும் கீறிவிட்டு மிளகாய்த்தூள் தூவி சாப்பிட வேண்டியதுதான்.

ஊரில் எங்கள் வீட்டில் மாங்காயை நறுக்கியெல்லாம் சாப்பிட்டதேயில்லை. நறுக்கினால் புளிப்பு அதிகம் தெரியும் என்று முழு மாங்காயை அப்படியே உடைத்துதான் கொடுப்பார்கள்.அது ஒரு தனி சுவைதான்.

கேழ்வரகு & வெந்தயக்கீரை பகோடா / Kezhvaragu & Vendhaya keerai pakoda

raagi pakoda

நான் கேழ்வரகு மாவுடன் வெந்தயக்கீரை சேர்த்து செய்துள்ளேன்.வெந்தயக்கீரைக்குப் பதிலாக முருங்கைக்கீரை சேர்த்தும் செய்யலாம்.

தேவையானவை:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
வெந்தயக்கீரை_ஒரு கப்
பெரிய‌ சின்ன வெங்காயம்_1 (சாதாரண சின்ன வெங்காயம் என்றால் 5 லிருந்து 10 க்குள்)
இஞ்சி_சிறு துண்டு
பச்சைமிளகாய்_1
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

மார்க்கெட்டில் இளம்,துளிர் வெந்தயக்கீரையைப் பார்த்ததும் வாங்காமல் வர மனமில்லை.வாங்கிவந்து சாம்பார்,பகோடா இரண்டும் செய்தாயிற்று.இங்குள்ள‌ பகோடா நன்றாக இருப்பதாகத் தோன்றினால் நீங்களும் செய்து பார்க்கலாமே.

methi leaves

வெந்தயக்கீரையை ஆய்ந்து,தண்ணீரில் அலசி எடுத்து நீரை வடிக்கவும். கீரையை நறுக்காமல் முழுதாகவே போட்டுக்கொள்வோம். நறுக்கினால் கசப்பு அதிகமாகிவிடும்.

சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.பச்சை மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை&கொத்து மல்லி இவற்றைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு கிண்ணத்தில் மாவு முதற்கொண்டு எல்லாவற்றையும் போட்டு,கைகளால் கிளறிவிட்டு,சிறிதுசிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.கிள்ளி எடுத்து போடும் பதமாக இருக்கட்டும்.

raagi pakoda

ஒரு வாணலில் திட்டமாக எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்,மாவைக் கிள்ளினாற்போல் எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு தரம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.

மாலை நேரத்துக்கு கொறிக்க சுவையான,மொறுமொறு கேழ்வரகு பகோடா ரெடி.

அடுத்த நாளும் அந்த மொறுமொறு குறையவேயில்லை.துளி எண்ணெய்கூட குடிக்கவில்லை.